Friday, May 28, 2021

pesum deivam

 


பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

17.  ''சங்கீத  பேரலைகள் ''

மஹா பெரியவா பற்றிய  அற்புத  விஷயங்கள்  எத்தனையோ  கடல் போல் பரந்து விரிந்து இருக்கிறது. சிலவற்றை தான் நம்மால் படித்து  மகிழ இயலும்.  வாழ்நாள் போதவே போதாதே.   நான் படித்து அனுபவித்த சில  விஷயங் களை  தான் முடிந்தவரை என் வழியில் சொல்கிறேனே தவிர  அத்தனையும் என் கண் முன்னால் நடந்தவை போல் கற்பனை தான் பண்ணிக் கொள்ள முடிகிறது.   

அக்கால  நினைவுகள் பற்றி சிந்திக்கும்போது  அது  நம்மை தூக்கிண்டு  போய் அக்காலத்தி லேயே  விடுகிறது.   அப்போது வாழ்ந்த  அற்புத  மனிதர்களோடு  நாமும் ஒருவராக   மாறி மகிழ முடிகிறது.. 

''இவ்வளவு  சின்ன வயசு  சந்நியாசியை இதற்கு முன்  பார்த்ததில்லை. எவ்வளவு ஞானம், என்ன தேஜஸ்  எவ்வளவு அன்பு,  அரவணைப்பு, தயாள குணம்,  பண்பு'' ,  என்று எல்லோரும்  மஹா பெரியவாளை  பாராட்டி, மகிழ்ந்து கும்ப கோண சங்கர மடத்தை சுற்றி சுற்றி வந்தார்கள்.  தேசம் பூராவும் கும்பகோண பிரதாபம் பரவியி ருந்தது. எல்லாம் அந்த சிறிய 22-23 வயது சன்யாசியால்.

எந்த சங்கீத சாஸ்த்ர நிபுணராக இருந்தாலும் ஒரு முறை






 கும்பகோணம்  காஞ்சிகாமகோடி மடம்  வந்து,  தமது வித்தையை  மஹா பெரியவா முன்பு வெளிப்படுத்தி அவர்  பாராட்டைப் பெற துடித்த காலம்.  அவர்களில் சில நக்ஷத்திரங்கள்  :

சூலமங்கலம் வைத்யநாத பாகவதர், தஞ்சாவூர்  பஞ்சாபகேச பாகவதர், பாலக்காடு  அனந்தராம பாகவதர், ஹரிகேசநல்லூர்  முத்தையா பாகவதர்,(photo attached) (கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவ தர்,(photo attached)  மாங்குடி சிதம்பர பாகவதர்,  ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியார்,  சூலமங்கலம் சௌந்தர்ராஜ பாகவதர்,  மஹா வித்வான் திருவையாறு லக்ஷ்மணாச்சாரியார்,  கீதை ப்ரவசனத்தில் நிபுணர். மஹா பெரியவா முன்  கீதா பிரசங்கம் நடந்தது. அவரை கௌரவித்து  பரிசுகள் கொடுத்தார் மஹா பெரியவா.

சிவாஜி மகாராஜாவின் குரு  சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகளின் சிஷ்யர் ஒருவர்  மஹாராஷ்ட்ரா விலிருந்து கும்பகோணம் மடத்திற்கு வந்தார். மோர்க்கம்கர் மடாதிபதி. மடத்தில் தங்கியிருந்து மூன்று கால க்ஷேபங்கள் நிகழ்த்தினார்.  தமிழ் தெரியாதே. மராத்தியில் பேசினாலும் தமிழ் ஜனங்கள் நன்றாக புரிந்து அனுபவித்தார்கள். 
அதேபோல்  சாமா சாஸ்திரிகளின் கிருதிகளை நன்றாக  முழுதும் அறிந்த ஒரு மாத்வ  புருஷர், மடத்துக்கு வந்து  தேவி மேல் கிருதிகள் பாடினார்.

''ஆஹா  எவ்வளவு திவ்யமாக பாடுகிறீர்கள்.  ஒரு பதினைந்து நாள் இங்கே   மடத்தில் இருங்கள் '' சந்திரமௌலீஸ்வரர்  பூஜையின்  போது  சந்நிதி யில்  பாடுங்கள்'' என்று உபசரித்து அவரை பாராட்டினார் மஹா பெரியவா.

மதுரை கிருஷ்ணய்யங்கார் மடத்துக்கு வந்து  மஹா பெரியவாளை  நமஸ்கரித்து  பாடினார்.   ''பக்கவாத்தியம் எதுவும் வேண்டாம், நீங்கள் மட்டும் பாடுங்கள் '  என்கிறார் பெரியவா.  ஆஹா  அடுத்த ஒரு மணி  தேசாலம்    பேகடா ராகத்தில்  கான மழை. இவர்  பிற்காலத்தில்  பேகடா க்ரிஷ்ணய்யங்கார் என்ற புகழ்  பெற்றவர்.

மற்ற பிரபல வித்வான்கள் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யர், (photo attached) வாளாடி  கிருஷ்ணய்யர்,  மைஸூர்   பிடாரம் கிட்டப்பா,  வீணை சேஷண்ணா,   வீணை சுப்பண்ணா  மடத்துக்கு வந்து பாடியவர்கள். இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் கூட எழுதலாம்,  ஹனுமார் வால்  போல் நீண்டுவிடும். திரு விடை மருதூர்  சகாராம
ராயர், கோட்டு வாத்ய நிபுணர்.  அடிக்கடி அவரை மடத்தில் பார்க்கலாம்.   பெரியவா முன் வாசித்து போற்றப்பட்டவர்.    பம்பாயிலிருந்து பண்டிட்  விஷ்ணு திகம்பர் என்ற ஹிந்துஸ்தானி  பாடகர்,  கந்தர்வ மஹா வித்யா லயாவை சேர்ந்தவர் பெரிய  குழுவோடு கும்பகோணம் வந்துவிட்டார்.   வட இந்திய  பழக்க  பஜனைகள் நிகழ்த்தினார்.    கும்பகோண வாசிகள் எவ்வளவு புண்யசாலிகள் பாருங்கள்.  மிகவும் மகிழ்ந்து ரசித்த மஹா பெரியவா  அந்த வித்வானை  வெகுவாக பாராட்டி பரிசளித்தார்.


சந்யாசிகள் மடத்தில் பெண்களை அப்போதெல் லாம்  பார்க்க முடியாது. இருந்தபோதிலும்  வீணை தனம்மாள், பெங்களூரு நாகரத்தினம் அம்மாள் (photos attached)   மடத்துக்கு வந்து  நிகழ்ச்சிகள் நடத்தியவர்கள். பூஜையின் போது அவர்களை பாட வைத்தார்  மஹா பெரியவா.  இந்த லிஸ்டில்  நமது  D K  பட்டம்மாள்,  M S  சுப்புலக்ஷ்மிஅம்மாளும் உண்டு. மஹா பெரியவா ஆசி பெற்றவர்கள். 

பாபநா சம் சிவனின் (photo attached) பாடல்களை  மெச்சி  அவரது 
சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில்  கௌரவித்து,  ''சிவ புண்ய கான  மணி''  விருதளித்தார்.  காரைக்குடி சகோதரர்களின் வீணைக்கு  தக்ஷிணாமூர்த்தி பிள்ளை  பக்கவாத்தியம் தேவலோக விருந்தாக கும்ப கோணம் பக்தர்களுக்கு கிடைத்தது.மஹா பெரியவா மனதாக அவர்களை  பாராட்டி  அருளாசி வழங்கினார்.பின்னர்  மஹா பெரியவா செட்டிநாடு விஜயத்தின் பொது தக்ஷிணாமூர்த்தி பிள்ளை பெரியவா மீது  பாடல் இயற்றி பக்தியோடு சமர்ப்பித்த போது  அவருக்கு  பாராட்டு தெரிவித்தார்

மைசூர்  வீணை  வித்வான்  வேங்கடகிரியப்பா வும்  கும்பகோணம்  வந்து  பெரியவா முன் சில நிகழ்ச்சிகள்  நடத்தி  இரண்டு சால்வைகள்  ரெண்டு  தோடா   (காதில் அணியும் ஆபரணம்) க்கள் பெற்று    ''வைணிக சிகாமணி'' விருது அளித்து  கௌரவிக்கப்பட்டவர். 

மடத்தில் இருந்த வித்வான்களையும்  விடவில்லை மஹா பெரியவா.   இளம் வயது ஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர ஐயர்  ஆஸ்தான வித்வானாக  நியமிக்கப்பட்டு  ''ஆஸ்தான கீர்த்தனமணி '' பட்டம் அளித்து  கௌரவிக்கப் பட்டார்.

மைசூர்  வாசுதேவாச்சார் (photo attached)  முதியவர், சிறந்த   கன்னட, ஸமஸ்க்ரித  கீர்த்தன  கர்த்தா,  சங்கீத வித்வான். நிறைய சங்கீத ஆராய்ச்சிகள் செய்தவர்.  மஹா பெரியவா அவரை உபசரித்து  அவரிடம்  சம்பாஷித்து  மகிழ்ந்தார். வாசுதேவாச்சார் தான் இயற்றிய கீர்த்தனை களை பாடிக்  காட்டினார்.  மற்ற வித்வான் களிடம் மஹா பெரியவா ''மைசூர்  வாசுதே வாச் சார் இந்த  19ம் நூற்றாண்டின் சிறந்த சங்கீத வித்வான்'' என்று பாராட்டி இருக்கிறார்.

இன்னும் நிறைய  படித்தேன். சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...