Wednesday, March 18, 2020

u ve saa




                           
           உத்தம சம்பாவனை     J K  SIVAN 

அமராவதி ஸ்ரீ சேஷையா சாஸ்திரிகளைத் தெரியாவிட்டால் இதோ தெரிந்து கொள்ளலாம். இத்தனை காலம் தெரியாததால் தண்டனை எதுவும் இல்லை.   அவர் புதுக்கோட்டை ஸமஸ்தான திவான்.  

வெள்ளையர் ஆட்சி காலத்தில்  உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் , அதாவது. நீதி மன்ற  நீதிபதிகள், கலெக்டர்கள், நிர்வாக திறமை கொண்ட திவான்கள் எல்லோரும்  இந்தியர்களாவும் இருந்தார்கள். பொறுப்பை உணர்ந்து அவர்களும்  அரசாங்கத்தின் முழு திருப்திக்கு பாத்திரமாக விளங்கினார்கள். 
குட்டி குட்டி ராஜ்ஜியங்கள் நிறைய இருந்தன. அவற்றை நிர்வாகம் பண்ணியவர்கள் திவான்கள் . ரொம்ப கடினமான உத்யோகம்.  ராஜா முட்டாளாக இருப்பான்  அல்லது இளம் வயசு பாலகனாக இருப்பான். அல்லது  கல்வி அறிவற்ற  ராணிகளாக  இருப்பார்கள். அவர்கள் மனம் கோணாமல் அதே சமயம்  நீதி நெறிமுறையோடு அரசாங்கம் நடத்துவது  சர்க்கஸில் கம்பி மேல் நடப்பது போல.  

சர்  அமராவதி சேஷய்யா  சாஸ்திரி  KCSI (22. 3. 1828 – 29.10.1903) ரொம்ப பேரும் புகழும் பெற்ற  நேர்மையான  நிர்வாகி.  திருவாங்கூர்  சமஸ்தான திவான். பிறகு புதுக்கோட்டை ராஜா தொண்டமான் சமஸ்தானத்தில் திவான்.   ஏழை ப்ரோஹிதர் ப்ராமணக்குடும்பத்தில் பிறந்து படிப்பினால் உயர்ந்தவர்.  புதுகோட்டை சமஸ்தான வருவாய் செலவு துறையை திறம்பட நிர்வகித்தவர். அநேக  அபிவிருத்திகளை புதுக்கோட்டைக்கு பெற்று தந்தவர்.  புதுக்குளம், பல்லவன் குளம்  அவரால் உருவானது.  பஞ்சத்திலிருந்து காப்பாற்றியவர். பல  ஆலயங்கள் புனருத்தாரணம் பெற்றது அவரால். அம்மை தடுப்பு ஊசி எல்லோருக்கும் கிடைத்து பல உயிர்கள் கொள்ளை நோயிலிருந்து மீட்கப்பட்டன. நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டது. 1883ல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உண்டானது.  தெருக்கள், சாலைகள், குடிநீர் வசதி எல்லாம்  திட்டமிட்டு செயல்பட்டன. ரயில் போக்குவரத்து  இணைக்கப்பட்டது.  குற்றங்கள் தவிர்க்கப்பட்டு  தண்டனைகள் குறைக்கப்பட்டன. 
ராமச்சந்திர தொண்டமான் 1886ல் மறைந்ததும், அவர் மகன் இளம் வயகத்தினான் மார்த்தாண்ட பைரவ தொண்டமான் அரசனானான். அவன் பொறுப்பேற்கும் வயது வரை நிர்வாகத்தை  திறம்பட சாஸ்திரிகள் நடத்தி  தொண்டைமானிடம் பொறுப்பை அளித்து  ஒய்வு பெற்றார்  சாஸ்திரிகள். 

இனி  சாஸ்திரிகள் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் சொல்கிறேன்.

புதுக்கோட்டையில் வெகுகாலமாக  வருஷாவருஷம்  நவராத்திரி விழா  சிறப்பாக நடை பெறும். வடமொழி, சங்கீதம் முதலியவற்றில் வல்ல வித்துவான்களும், வேதம், சாஸ்திரங்கள் முதலிய வற்றில் தேர்ந்த அறிஞர்களும் அங்கே சென்று  தமது  சாதுர்யம், வித்தைகளை காட்டி  தக்க சம்மானங்களைப் பெற்றுச் செல்வார்கள், அன்னதானம் விசேஷமாக நடைபெறும். நூற்றுக் கணக்கான வித்துவான்கள் வந்து கூடுவார்கள். விவாதங்கள் வாக்கியார்த்தம் , பிரவசனம், உபந்யாஸங்கள்   நடக்கும்.  வித்துவான்கள் தங்க, உணவு வசதிகள் புதுக்கூட்டை சமஸ்தானம் செய்து தரும். விஜயதசமியன்றோ மறு நாளோ  எல்லா  வித்வான்களும்  கௌரவிக்கப்பட்டு  சன்மானங்கள் பெறுவார்கள். 

சேஷையா ச‌ஸ்திரிக‌ள் திவானாக‌ வ‌ந்த‌தும்  எல்லா வித்துவான்களுடைய தகுதியையும் அறிய  வினாப் ப‌த்திர‌ங்க‌ள் கொடுத்துப் பரீக்ஷித்து அவர்கள் பெறும் அம்சத்தின் தரத்தை அறிந்து அதற்கேற்ற சம்மானம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.  தகுதிக்கேற்ப  சன்மானம்  பத்து ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரை  வழங்கினார். சிரிக்காதீர்கள். அந்தக்கால   நூறு ரூபாய்  இப்போது பல லக்ஷ ரூபாய்கள். உய‌ர்ந்த சம்மானம்; அதற்கு உத்தம சம்பாவனை என்று பெயர்.  சாஸ்திரிகள்  தொகுதிக்கான பரிக்ஷையில் நேரடியாக கலந்துகொண்டு  கவனிப்பார்.  பிரபல வித்வான்களுக்குப் பரீக்ஷை
யில்லாமலே சன்மானம் கிடைத்தது. 

இப்படி  ஒரு ஏற்பாட்டினால்  எல்லா வித்துவான்களும்  சரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதிக்கேற்ற‌ மரியாதைகள், பரிசுகளை பெற்றதில் அவர்களுக்கு சந்தோஷம்.  வருஷத்திற்கு வருஷம் அதிகமான வித்துவான்கள் பங்கேற்றார்கள்.

ஒரு வ‌ருஷ‌ம் ந‌வ‌ராத்திரியில் ஸ‌ர‌ஸ்வ‌தி பூஜைக்கு முத‌ல் நாள் சாஸ்திரிக‌ள் வித்தியா ம‌ண்ட‌ ப‌த்தில் வித்துவான்க‌ளுடைய‌ கூட்ட‌த்தின் ந‌டுவில் அம‌ர்ந்திருந்தார். ம‌றுநாள் இன்னார் இன்னாருக்கு இன்ன‌ இன்ன‌ ச‌ம்மான‌ம் செய்வ‌தென்று நிச்ச‌ய‌ம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவ‌ர் அவ‌ர‌ருகில் வ‌ந்து ஒரு க‌டித‌த்தை நீட்டினார். அதில்     "இதைக் கொண்டு வ‌ருப‌வ‌ரை உத்த‌ம‌ ச‌ம்பாவ‌னை (நூறு ரூபாய்)  வ‌ரிசையில் சேர்த்துக்கொள்ள‌ வேண்டும்" என்று  பரிந்துரை.   அதில்  புதுக்கோட்டை ராஜாவின் முத்திரை.  சாஸ்திரிக‌ள் அதைப் ப‌டித்துப் பார்த்து விய‌ப்புற்றார். ப‌டித்த‌பின்பு க‌டித‌ம் கொண‌ர்ந்த‌வ‌ரை ஒருமுறை ஏற‌ இற‌ங்க‌ப் பார்த் தார்.அ ந்த‌ ம‌னித‌ருடைய‌ முக‌த்தில் சிறித‌ள‌வாவ‌து அறிவின் ஒளியையே காணோமே.  சாஸ்திரிக‌ளுக்கு  சிரிப்பு வந்தது. 

"கடிதத்தை பார்த்தேன்.  ரொம்ப ச‌‌ந்தோஷ‌ம்! நீர் என்ன‌ வேலை பார்த்து வ‌ருகீறீர்?"
'' நான் ம‌காராஜாவுக்கு நீர்மோர் செய்து கொடுப்பேன்''.
'' ஓஹோ  அப்ப‌டியா! நீர் மோரில் என்ன‌ சேர்ப்பீர்?
'' பெருங்காய‌ம், சுக்கு, உப்பு, எலுமிச்ச‌ம்ப‌ழ‌ர‌ஸ‌ம் முத‌லிய‌வ‌ற்றைப் ப‌க்குவ‌மாகச் சேர்த்துத்  கடுகு தாளித்து கொட்டி மகாராஜாவினுடைய விருப்ப மறிந்து வேண்டிய‌தைச் செய்து கொடுப்பேன்.
 "ரொம்ப  ந‌ல்ல‌ காரிய‌ம். ம‌காராஜாவின் ம‌ன‌ம் கோணாம‌ல் செவ்வையாக‌ நட‌‌ந்துவாரும்; ந‌ல்லபேர் எடும்; போய்வாரும்"  என்று சொல்லி அனுப்பிவிட்டார். நீர் மோர்க்காரருக்கு சந்தோஷம். தனக்கு பரிசு கிடைக்கப்போகிறது என்று. 

அவர்  போன  ஐந்து நிமிஷங்களுக்குள்   இன்னொருவர்.  அவர் கையிலும் ஒரு சிபாரிசு கடிதம்.  அதிலும்  100 ரூபாய்  உத்தம சம்பாவனை தர  ராஜா முத்திரை யிட்ட சிபாரிசு .   சாஸ்திரி வியந்தார். என்ன நடக்கிறது?
ரெண்டாவது  ஆசாமியையும்  விசாரித்தார்.

"நீர் மகாராஜவுக்கு என்ன பணி செய்து வருகிறீர்" 
'' நான் நல்ல ரஸம் செய்து கொடுப் பேன். சீரக‌ ரஸம், மைசூர் ரஸம் முதலிய பலவகை களில் மகாராஜாவுக்கு எது பிரீதியோ அதைச் செய்துதருவேன்.
'' அப்படியா!சந்தோஷம்,மகா ராஜாவின் திருவுள்ளத்துக்கு உகந்தபடி தவறாமற் செய்துவாரும்.
 அவரம் தனக்கு பரிசு கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் சென்றார்.

அடுத்து மூன்றாவது ஆசாமி.  அவர் கையிலும் சிபாரிசு கடிதம். அவர்  ராஜாவுக்கு வேப்பிலை கட்டி செயது தருபவர்.  பிரியமாகப் பேசி அவரையும்  சாஸ்திரிகள்  அனுப்பி விட்டார்.
மூக்கு பொடி  செயது தருபவர்,  உடைகளை அணிவிப்பவர்,   வேறு பணி விடை செய்பவர்களுமாக  ஏறக்குறைய  பத்து  பேர்  சிபாரிசு கடிதங்களை சாஸ்திரிகளிடம் கொடுத்து விட்டு சென்றார்கள். 

இதில் ஏதோ சூது இருக்கிறது என்று சாஸ்திரிகளுக்கு ஒரு  சந்தேகம்.   எல்லா சிபாரிசு கடிதங்களையும்  எடுத்துக்கொண்டு மறுநாள் காலை  எட்டுமணிக்கு  புதுக்கோட்டை ராஜாவை சந்தித்தார். 

 "சாஸ்திரிகளே ,  இந்தவருஷமும்  நவராத்திரி உத்ஸவத்தில் தங்களுக்கு அதிக சிரமம்; எல்லாம்  முறைப்படி நன்றாக நடக்கிறதா? கோயில்களில் தர்மங்கள் ஒழுங் காகச் செய்யப்பட்டு வருகின்றனவா? வித்வத்சபை இந்த வருஷம் எப்படி இருக்கிறது?"

" மஹாராஜா, எல்லாம் கச்சிதமாக  நடக்கிறது.  வித்துவான்கள் சென்ற வருஷத்தைக் காட்டிலும் இவ்வருஷம் அதிகமாக வந்திருக்கிறார்கள். சுமங்கலி பூஜை, கோயிற் காரியங்கள்  எல்லாமே  ஒரு குறையுமில்லாமல் ஏற்பாடாகி இருக்கிறது.  எல்லோருக்கும்  திருப்தி" என்றார் சாஸ்திரிகள்.

'' சாஸ்திரிகளே , நீங்கள்  கவனித்துவரும்போது குறைவு நேர்வதற்கு நியாயம் இல்லை. தாங்கள் செய்து வரும் உபகாரங்களை இந்த ஸமஸ்தானம் என்றைக்கும் மறவாது.

சிறிது நேரம் அரசரிடம் இவ்வாறு பேசியிருந்து விட்டு விடைபெற்றுக்கொண்டு சேஷையா சாஸ்திரி கள் பத்து அடி நடந்தார், பிறகு எதையோ நினைத்துக் கொண்டவர் போல   ராஜாவிடம் திரும்பி  வந்தார்.
"என்ன சாஸ்திரிகள், ஏதாவது  சொல்ல, கேட்க  மறந்துவிட்டதா?  ஏதாவது சொல்ல வேண்டுமோ?"
''ஆமாம்  மஹாராஜா,  திடீரென்று  ஞாபகம் வந்தது. அதைச் சொல்லலாமா ?''
'தாராளமாக சொல்லுங்கள்''

 இந்த வருஷம் வந்திருக்கிற வித்துவான்கள் கூட்டம்  என்னை பிரமிக்க வைத்தது.  உள்ளம் பூரிக்கிறது. நம்முடைய ஸமஸ் தானத்துக்கு இந்தப் பெருமை ஒன்றே போதும். விஜயதசமியன்று எல்லா வித்துவான் களையும் ஒரு வரிசையாக வைத்து மகாராஜா அவர்களே பிரதக்ஷி ணம் செய்து மரியாதை செய்யும் இந்த வழக்கம் வேறு எந்த இடத்திலும் இல்லை. இதனால் வேறு இடங்களுக்குச் செல்லாத மகா வித்துவான்கள்கூட இங்கே கௌரவம் பெற,  சம்மானம் பெறுவதைப் பெரிதாக எண்ணி வந்து  போகிறார்கள். வேறு சில ஸமஸ்தானங்களில் கிடைக்கும் சம்மானங்களைக் காட்டிலும் இங்கே கிடைப்பது குறைவு. ஆனாலும் இந்தக  கௌரவத் தையே உயர்வாகக் கருதி வருகிறார்கள். எவ்வளவோ பிரசித்திபெற்ற வித்துவான்கள் வந்திருக்கிறார்கள். எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் இரண்டு தினங்களாக ஏதோ சில வார்த்தைகள் என் காதில் விழுகின்றன.

''என்ன? என்னஅது.  சொல்லுங்கள்? '' 
''
அடுத்த வருஷம் இப்படி நடக்குமா  என்று  சந்தேகமா இருக்கிறது மஹாராஜா ''.
'' ஏன்? என்ன காரணம்?''
'' நான்  நாட்டு நடப்பை அறிந்துகொள்ள  அங்கங்கே இரகசியமாக ஆள் வைத்து  வித்துவான்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்து வந்து சொல்லும்படி செய்வது வழக்கம். அதனால் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது. முன்பே சொல்ல மறந்துவிட்டேன். அவர்கள், 'நாமெல்லாம்  புதுக்கோட்டை சமஸ்தானத்தில்  தாரதம்யம் அறிந்து கௌரவிக்கிறார்களென்று  நம்பி வருகிறோம். சன்மானத்தை உத்தேசித்து வரவில்லை. இந்த வரம்பு இந்த வருஷம் கெட்டுப் போகுமென்று தெரிகிறது.  யாராரோ  சாமான்ய மனிதர்களெல்லாம் நம்முடன் வந்து சரி சமானமாக  உட்காரப் போகிறார்களாம். இந்த வருஷம் ஏதோ வந்து விட்டோம்; நடுவில் திரும்பிப்போவது  உசிதமல்ல, நன்றாக இராது. அடுத்த வருஷம்முதல் வருவதில்லை; வந் தால்  நமது  மதிப்புக் கெட்டுவிடும்' என்று அங்கங்கே கூடிப் பேசி வருகிறார்கள்.'' இதைகேட்டதிலிருந்து  எனக்கு ரொம்ப மனதுக்கு  கவலை மஹாராஜா.

''ஓஹோ.  அப்படியா,  வித்துவான்கள்  இவ்வாறு எண்ணுவதற்கு என்ன காரணம்?

'' உத்தம சம்பாவனை செய்யவேண்டு மென்று மகாராஜாவின் உத்தரவைக் கொண்டு வந்து சிலர் என்னிடம் கொடுத்தார்கள். அவர்களோடு சிறிது நேரம் பேசியிருந்து அனுப்பினேன். அவர்கள் தமக்கு உத்தம சம்பாவனை கிடைக்கப் போவதாகப் பலரிடம் உத்ஸாகத்தோடு சொல்லிக் கொண்டே போய் விட்டார்க ளென்று தோற்றுகின்றது. அதைக் கேட்டதால்  தான்  வித்துவான்களுக்குஎல்லாம் அதிருப்தி''.
'' அடடா! நான் அப்படி ஒருவரையும் உங்களிடம்  சிபாரிசு செய்து அனுப்பவில்லையே!''

சாஸ்திரிகள் தாம்  கொண்டு வந்த  ராஜா முத்திரை பதித்த  சிபாரிசு  கடிதங்களை   எடுத்துக் காட்டினார். அரசர் அதைப் பார்த்துத் திகைத்தார்; "நான் அனுப்பவில்லையே" யாரோ பண்ணிய விஷமமென்றே எண்ணுகிறேன்" என்றார்  தொண்டமான். .
''இவைகளைக் கொண்டுவந்து கொடுக்கும்போது நான் எப்படி  வேறுவிதமாக  நினைக்கமுடியும்? மகாராஜாவிடம் தொண்டுசெய்பவர்கள் கவலை யின்றி இருக்கவேண்டியது அவசியந்தானே? மகா ராஜாவினுடைய வேலைக்காரனாகிய நான் மகாராஜா வின் திருவுள்ளத்தின்படி நடக்கவேண்டியவனல் லவா?

''அப்படி அவசியமொன்றும் நேர வில்லையே சாஸ்திரிகளே ''.
''ராஜாவுக்கு ஒரு வேளை யாருக்கேனும் உதவி செய்யவேண்டுமென்று திருவுள்ளத்தில்  படுமானால் எனக்குத் தனியே சீட்டு அனுப்ப லாம்; நான் உசிதம்போல அவர்களுக்கு அநுகூலம் செய்வேன். வித்துவான்களுடைய வரிசையில் அவர் களைச் சேர்ப்பது நன்றாக இராது.   இப்போது மகாராஜாவின்  உத்தரவின்படி நான் செய்யக் காத்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கும் பணத்தைக் குதிரைக்கான கொள்ளுச்செலவென்று எழுதிக்கொள்ளலாம்; பசுவின் புல்லுக்குரிய செலவில் சேர்த்துக் கொள்ளலாம்; பருத்திக்கொட்டைச் செலவில் எழுதலாம்; வாணமருந்துச் செலவில் கூட்டிக்கொள்ளச் செய் கிறேன். அதனாற் குற்றமில்லை.''

தொண்டமான்  தம்மிடமுள்ள வேலைக்காரர்களைக் கூப் பிட்டு யார் கடிதம் கொடுத்தாரென்று விசாரித்தார். "நான் அல்ல","நான் அல்ல" என்றே சொல்லிவிட்டனர். ஒருவர் மட்டும் தாம் செய்ததாக ஒப்புக் கொண்டார். ராஜா
 அவரைக் கண்டித்து அனுப்பினார்.

சாஸ்திரிகள் ராஜாவிடம் விடை பெற்றுச் சென்றார். வித்துவான்களுடைய சம்பாவனையும் வழக்கம் போலவே  அவரவர்  தகுதியின் அடிப்படையில்   சிறப்பாக எல்லோருக்கும் திருப்தியாக நடந்தது.
++
மேலே  சொன்ன  வரலாற்றை தமிழ் தாத்தா  உ. வே. சாமிநாதய்யரிடம் சாஸ்திரிகளே  பிற்காலத்தில்  சொன்னார்.  அப்பொழுது அவர் "மகாராஜாவை வேலைக்காரர்கள் பலமுறை வற்புறுத்தி யிருக்கலாம்.அவரும்  அவர்களுடைய நச்சுப் பொறுக்க முடியாமல் ஏதாவது அநுகூலமாக விடை கூறியிருப்பார். அதை அறிந்து மகாராஜாவோடு நெருங்கிப் பழகுபவர் யாரோ மகாராஜாவினுடைய முத்திரையை வைத்துக் கடிதங்களைதயாரித்து கொடுத்தனுப்பி விட்டார். நான் ஏமாந்து போகலாமா? இதை ராஜாவுக்குத் தெரிவிக்கவேண்டுமென்றே போய்ச் சொன் னேன். அந்தக் கடிதம் கொண்டு வந்தவர்களை, குதிரை, மாடு முதலியவைகளோடு சேர்க்க வேண்டு மேயன்றி வித்துவான்களோடு சேர்க்கக் கூடா தென்பதைக் குறிப்பாக மகாராஜாவிடம் சொல்லி விட்டேன். மகாராஜாவும்  புரிந்து கொண்டார்.   நான் சொன்ன விஷயங்களில் அநேகம் என் கற் பனை" என்று சொல்லி  சாஸ்திரிகள்  சிரித்தார்''  என்கிறார்  உ.வே.சா. 

இந்த விஷயத்தை  உ.வே.சா. வின்  கட்டுரை ஒன்றில்  இன்று படித்ததும்  அதை என் வழியில் சுருக்கி   உங்களிடமும் பகிர்ந்து கொள்ள  ஆவல் ஏற்பட்டது.  ஜே. கே. சிவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...