Friday, March 27, 2020

pesum dheivam



பேசும் தெய்வம்  - 3ம் பாகம் 


                     

          அதிதி போஜன பலன்

 சிலர்  எழுத்தில் மஹா பெரியவா அனுபவங்கள் படிக்கும் போது ரொம்ப ஆனந்தமாக இருக்கிறதே . அதற்கு என்ன காரணம்  என்றால்   பெரியவாளை  மனதில் நிறுத்திக்கொண்டு எண்ணங்கள் அவரை நமஸ்கரித்து வெளியே கண் முன் தோன்றுகிறது. பரணீதரன், ரா. கணபதி,  ஸ்ரீ ரமணி அண்ணா ஆகியோர் சிலர்  அப்படி எழுதுபவர்கள்.   ஸ்ரீ ரமணி அண்ணாவின்  "ஜெய ஜெய சங்கர" என்கிற தொகுப்பு ஒன்றில்   நான் சொல்லும் இந்த சம்பவம் வருகிறது.   

அதிதி உபசாரம் நம்முடைய தொன்று தொட்ட  பண்பாடு.  யார் வந்தாலும்   ''சாப்பிட்டுட்டு  போங்கோ''  என்று அவர்களை உபசரிக்க வழி இல்லா விட்டாலும்   கொஞ்சம் காபி  டிபன் எதாவது திருப்தியாக கொடுப்பது  தற்காலத்திற்கேற்ற அதிதி உபசாரமாக இருக்கட்டும் .  சிலர்  நண்பர்களை உறவுகளை வரவழைத்து,  வீட்டுக்கு  அல்ல, நேராக  எங்கோ ஒரு ஓட்டல் அட்ரஸ் கொடுத்து, இத்தனை மணிக்கு வாங்கோ என்று சொல்லி அவர்கள்  குழந்தை குட்டியோடு அங்கே வந்து கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு காத்திருந்த பின்  நம்மைப் பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்று புன்னகைக்கும்போது  ''ஒரே  டிராபிக் ஜாம் '' என்று இல்லாத ஒன்றை  நாம் லேட்டாக வந்ததற்கு காரணமாக சொல்கிறோம்   என்பது  அதிதிக்கும் தெரியும்.  ரிஷி இல்லை ஆகவே சாபம் இடமாட்டார்.

ஒரு  ஞாயிறு.   கலவையில் மஹா  பெரியவா  காம்ப.   பக்தர்கள் கூட்டம்  தரிசனத்துக்கு  காத்திருந்து வரிசையில்  வந்து  நமஸ்கரித்து பெரியவா  ஆசி பெற்று நகர்கிறார்கள்.  ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர்.

தெய்வம்  அவரை பார்க்கிறது.
"அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே இல்லியோ 

''ஆமாம்  பெரியவா''

''அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" .  

"பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா'

''அதிதி போஜனம்.... நடக்கிறதா?''

''பெரியவா உத்தரவுபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்)ஏதோ முடிஞ்சா அளவுக்கு   போஜனம் நடந்துண்டு வர்றது பெரியவா ! அதனாலே, வயல்கள்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம்   பெரியவா  அநுக்ரஹம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும்  விடாம  செஞ்சுண்டிருக்கேன்."     கண்களில் நீர் மல்க பாலூர் கோபாலன்.திக்கி திக்கி  மரியாதையோடு சொல்லும்போது . அவர் மனைவி   கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

 "பேஷ்..பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்.
..அது சரி.  இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே..அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?

"அதுக்கு  மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம்.  ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள் அந்த அம்மாள். 

 "ஹும் . அப்படித் தான் பண்ணணும்.  பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்! ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார்,என்கிறது  உனக்கு தெரியுமா ?" 

கோபாலன் தலையை பவ்யமாக ஆட்டி  ஆமோதித்தார்.
பெரியவா குதூகலத்துடன் பேசின  அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.  கும்பல் சேர்ந்துவிட்டதை உணர்ந்த பெரியவா   ஜாடையாக அனைவரையும் கீழே அமரச் சொல்ல பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

 "அதிதி போஜனம் பண்ணி வெக்கற மகிமை பத்தி  பெரியவா உபதேசம் பண்ணனும்''.  ஒரு பக்தர் தைரியமாக  கேட்டார்.

 " அதிதி போஜனம்  பண்றது மோக்ஷ த்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு !  இத  இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்பட்ட ஒசந்த தர்மம் இது!"  -  

ஒரு பக்தர்   நமஸ்கரித்து விட்டு எழுந்து பவ்யமாக, "எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். பெரியவாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணணும் !" என்றார்.

ஜாடையால் அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார்.  சில மௌன கணங்கள்.  அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே  நிசப்தத்தோடு  அனைவரும்  பார்த்துக் கொண்டிருந்தனர். பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம் போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " -
எல்லோரையும் ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு  தொடர்ந்தார் ஸ்வாமிகள்:

கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு . அதிலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி  இருந்தார்.  நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரைச் சேர்ந்தவா.   செட்டியார் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக் கறதுக்கு  ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழைச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.

குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டு  வண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் !

நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் மாட்டு வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே  மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதி. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ..."

 "பல வருஷங்களா அந்தத் தம்பதி   ஆச்சர்யமா ஒரு காரியம் பண்ணுவா.  தினமும்  யாராவது அதிதிகளை  அழைத்து,  உபசாரத்தோடு போஜனம்  பண்ணிண்டு வரவா.  பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா.   சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு  பேருமா  சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழைச்சுண்டு போய் ஒக்காத்துவா.   அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்த செட்டியாரம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா!   அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா !   அப்டி ஒரு ஒசந்த மனசு!    இதெல்லாம்  எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே.  நம்ம  கும்பகோணம் மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? "

" ஒரு நாள் உச்சி வேளை.   மழை கொட்டறது. அந்த நேரத்திலே  ஒரு அதிதி  கூட கிடைக்கல்லே.  செட்டியார்  கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே ஏறி இறங்கி  யாராவது  கிடைப்பாளான்னு பார்த்தார்.  அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார்.

அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா  தம்பதிகள்.. செட்டியாரம்மாள்  சிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார்.  சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொல்லைலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார்.   வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார்.

அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்டை  வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா.

 பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே   வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா.  ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா.

அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே பறிச்சு கொடுத்தோம்.. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி  எதுக்கு தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா  சமையல் பண்றாளே' னு கொழம்பினார்.  சித்த நாழி கழிச்சு, கீரை  வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியார் பறிச்ச  கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா.   இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார்.   இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்."

"போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த  ஆச்சிகிட்டே கேட்டுட்டார்.

 ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 

'''சாமி,  நீங்க கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா    'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.   திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா.

இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித் தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா..."

மகா பெரியவா சொல்வதை நிறுத்தினார் . பக்தர் கூட்டம் பிரமித்தது. வாய் திறக்கவில்லை. பெரியவா  தொடர்ந்தார்: "இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ?

சில வருஷங்கள் கழிச்சு    செட்டியாருக்கு  'சஷ்டியப்த பூர்த்தி'  (60 வயது பூர்த்தி) பண்ணிண்டார் . ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து  ரெண்டு பெரும்  தரிசனம் பண்ணிட்டு  வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா  ''எனக்கு  என்னமோ உடம்பு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா.  பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான்.

 அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யைப் பார்த்தேளா ?

இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதியை  நெனச்சுப்பேன். அப்படி  அதிதிகளுக்கு அன்னம் பரிமாறின  தம்பதி அவா..."

பெரியவா முடித்தபோது  அனைவரின் கண்களிலும் காவேரி.      நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிருக்குமே, எல்லோருக்கும் பசிக்குமே. போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக் கருணையுடன் அனுப்பி வைத்து ஆசி அளித்து உள்ளே நகர்ந்தது.   மடத்துக்கு வந்தவர்களை அதிதியாக  வரவேற்று அன்னம் பாலிக்கும் தெய்வம்....

பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்காக மற்றொன்று  கொடுப்பது இல்லை.  எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அது தான் பக்தி.







 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...