Saturday, March 28, 2020

silpi



பேசும் தெய்வம்:    J K  SIVAN 










                                                               

                                        காகித  சிற்பி

சிற்பி என்பவர்  சிற்பம் வடிப்பவர். அதற்கு கல் வேண்டும். உளி வேண்டும். பல காலம்  காத்திருக்க வேண்டும். சிற்பம்
வேண்டு மானால்  இதைத்  தவிர்க்க முடியுமா?  சுருக்கு வழி இருக்கிறதா?   ஏன் இல்லை, இதோ நான் இருக்கிறேனே? என்று ஒரு சில பேனாக்கள், பென்சில் கல், ரப்பர், தோள்  ஜோல்னா பையில் சில காகித நோட்டுகள் போதுமே என்று கோயில் கோயிலாக நடந்தவர்  ஒரு சிற்பி.

 அழியாத காவியமாக, கவிதையாக, கலைப் பொக்கிஷமாக பல கோவில் சிற்பங்கள்  நமது நாட்டில், முக்கியமாக  தென்னாட்டில் உள்ளது நம் எல்லோருக்குமே தெரியும்.    கல்லில் செதுக்காத  காகித சிற்பி ஒருவர் இருந்தார். கல்லில் படைத்ததை காகிதத்தில் வடித்தார். கல்லாவது நாளாக நாளாக  தேய்மானம் கொண்டு அழியும்.  இந்த சிற்பி காகிதத்தில் செதுக்கியது கருவூலமாக உலகமுழுதும் நொடியில்  பரவி  உள்ளது. கல் சில்பி படைத்தது நகராது. அங்கேயே தான்  ஊர் ஊராக சென்று போய்  பார்க்கவேண்டும். காகித சில்பி படைத்தது கம்ப்யூட்டருக்குள்ளும் வண்ணவண்ணமாக நொடியில் உலகமுழுதும் அந்த கல் சில்பி செய்ததை செதுக்கியதை கண்ணிமைக்கும் நேரத்தில் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

''என்ன சார்  பிரமாதமான லெக்சர்  கொடுக்கிறீர்கள் சிவன் சார் ''  என்றாள்  கமலா டீச்சர். யார் சார் அந்த காகித சில்பி''

''இப்படி கேட்டுட்டியே  அது தான்  மா  பரிதாபம். அந்த காகித  ''சில்பி''யை தெரியாத தமிழன் பாபம் செய்தவன்.     அவர் பேர் ஸ்ரீனிவாசன். 64 வயசுக்குள்ளே அறுபதினாயிர வருஷ ஆலய தரிசன பலனை அள்ளிக் கொடுத்த மஹான். பெரியவாளை அப்படியே காகிதத்தில் பென்சிலையும், இங்க்  பேனாவையும்  வைத்துக்கொண்டே வரைந்து உயிரோவியமாக தந்தவர்.

ஆனந்த விகடனில்  22 வருஷம்  ஆர்டிஸ்ட்டாக இருந்தபோது ஒவ்வொரு வாரமும் ,  தவிர  தீபாவளி சிறப்பிதழ்களில் பிரத்யேகமாக என்று எல்லோரும் ஓடி தேடி பத்திரிகை வாங்கி அவர் தீட்டிய  ஓவியத்தை ரசித்தவர்கள் இன்னும்  மறக்காதவர்கள்  என்னைப்போல அநேகர் எங்கெங்கோ  இருக்கிறோம்.

எத்தனை கோவில்கள், எத்தனை கோபுரங்கள், எத்தனை தூண்கள், மண்டபங்கள், சந்நிதிகள், சிற்பங்கள், சிலைகள், வாகனங்கள்,  மரங்கள், குளங்கள், தேர்கள்,  எல்லாவற்றையும் அதி நுண்ணிய  காமிரா கூட பிடிக்க முடியாத அளவுக்கு கண்ணால் பார்த்து காகிதத்தில் வரைந்த மயன் அந்த  ''சில்பி''.

சில்ப சாஸ்திரத்தை, ஆகம விதியை, சாமுத்திரிகா லக்ஷணத்தை தெரிந்தால் தான்  விக்ரஹங்கள், கோவில்கள் அமைக்க முடியும்.  அந்த கோவில்களை, சிற்பங்களை, சிலைகளை, கலைப்   பொக்கிஷத்தை, அப்படியே  காகிதத்தில் கொண்டு வந்து நமது நடு வீட்டில் தந்தது சில்பி தான்.

கோவில்கள் சென்று கற்பகிரஹ மூர்த்திகளை  காகிதத்தில் வரையும் போது  உபவாசம் இருந்து ஆசாரத்தோடு வரைந்தவர் சில்பி. மணிக்கணக்கில் அசையாமல் ஏகாக்கிரமாக  மனதை செலுத்தி ஒரு பிழையும் இன்றி, சாமுத்திரிகா லக்ஷணத்துக்கு பங்கமில்லாமல் வரைந்தவர்  சில்பி.

தமிழகமெங்கும், பட்டி தொட்டி எல்லாம் ''சில்பி'' கோவில்களுக்கு சென்றார். படம் பிடித்தார்  இல்லை.  படம் வடித்தார்.  சொந்த கற்பனைக்கு, திறமையைக் காட்ட  இங்கு இடமில்லை. எது எப்படி இருக்கிறதோ அப்படியே காகிதத்தில் அள்ளிக் கொண்டு வரப்பட்டது.

''சில்பி''யின் மனைவி பரமாச்சார்யரின் பக்தை.    உடல் உபாதையால்  காஞ்சிக்கு செல்லமுடியாத நிலையில் கணவனை கேட்டாள் :

 ''எனக்கு  பெரியவா படம் ஒன்று நீங்க  வரைந்து கொடுங்கோ, அதை பார்த்து பூஜை பண்ணிண்டிருக்கேன்''
 1956ல் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய  பெரியவாளின் படம் வரைய அனுமதி கேட்டார். முதல் முறையாக  மஹா பெரியவாளை சந்திக்க  ''சில்பி''  க்கு அனுமதி கொடுத்தார் பெரியவர்.

''ராத்திரி வா எல்லா வேலையும் முடிஞ்சப்புறம் ''
 பெரியவாளை படம் வரைவது கடினம்.  ''கொஞ்சம் அசையாமல் அப்படி இருங்கள் என்று அவரிடம் சொல்லமுடியுமா?''  எப்படியோ சில்பி அவரை ''பிடித்து'' விட்டார்.  அதை இணைத்திருக்கிறேன்.

அந்த இருட்டறையில் ஒரு  எண்ணெய்  தீபம் மட்டும்  ஒளி வீசியது.  எதிரே  ஞான ஒளி அமர்ந்திருந்தது. அந்த ஞானப் பிழம்பின் கண்களில் ஆன்ம ஒளி.  பயபக்தியோடு  கைகள் சற்று பக்தியால் மரியாதையால் நடுங்க சில்பி  கண்ணால் அவரை படம் பிடித்து மனதில் இருத்திக் கொண்டார்.

''ஸ்ரீநிவாஸா,   நீ பல ஜென்மங்களில் ஈஸ்வரனை பூஜித்தவன். சிறந்த ஸ்தபதியாக சில்பியாக பல கோவில்களை, மூர்த்திகளை கல்லில் வடித்தவன்.   சாதாரண கல்லை தெய்வீகம் பொருந்திய தெய்வங்களாக  மாற்றிய  புண்யசாலி.  இதுதான் உனக்கு கடைசி ஜென்மம். இனி பிறவி கிடையாது தெரியுமோ உனக்கு?  இனிமே  தெய்வங்களைத்  தவிர வேறே எதையும் படம் எழுத மாட்டேன் என்று விரதமாக வைத்துக்கொள். நீ  சில்ப சாஸ்திரம், சிலா சாஸ்திரம், ஆகமம், எல்லாம் தெரிந்தவன். புதுசா ஒண்ணும் தெரிஞ்சுக்கவேண்டாம்.  நாளைக்காலை  சூரியன் உதயம் ஆனதிலிருந்து முழு மூச்சா  ஒவ்வொரு வீட்டிலேயும். பகவானை, கோவில்களை,   காகிதத்தில் கொண்டு சேர்க்கிற வேலை உனக்கு.  நீ  வரையும்  ஆலயங்கள், மூர்த்திகள்  சித்திரம் தத்ரூபமாக இருக்கு.   நீ  நன்னா இருப்பே !''

மகா பெரியவா ஆசிர்வதித்தார்.  சில்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
1953ல்  மஹா பெரியவாளை  காஞ்சிபுரத்தில் பார்த்தது முதல் அவர் முற்றிலும் மாறிவிட்டார்.  பெரியவாளுக்கு தெரியாதா  யாராலே என்ன ஆகணும் என்று!

பெரியவாளை  தனது  இல்லத்துக்கு அழைத்து பாத பூஜை பண்ண சில்பிக்கு ஒரு ஆசை. சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம். பெரியவாளை வேண்டிக்கொண்டே இருந்தவர்க்கு  ''சரி அதுக்கென்ன  அப்படியே ஆகட்டும்'' என்று சிரித்து தலையசைத்தார் பெரியவா.

 ஒரு நாள் அதிகாலையில் சாந்தோம் கடற்கரையில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, பெரியவா மைலாப்பூர் கச்சேரி ரோடில் நடந்து  வந்து கொண்டிருந்தார்.   திடீரென்று அருண்டேல் ரோடு திருப்பத்தில் நின்று,  ‘இங்கேதானே ‘சில்பி’ வீடு  எங்கியோ இருக்கிறது?’ என்று கேட்க  அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு ? விசாரி ‘ என்று கூறவே,  பரணீதரனும் மற்றவர்களும்  ஒவ்வொரு வீடாக சென்று  விசாரித்தனர் .
.
அதற்குள்  பெரியவா ஒரு வீட்டுக்கு முன் வந்து நின்று  ‘இதுவா பாரு ?’ என்றதும், உள்ளே சென்று விசாரித்ததில்
ஆம். அதுவேதான்! அப்போது  ‘சில்பி’யின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர். ‘சில்பி’  எங்கோ கோவில்களுக்கு படம் வரைய  வெளியூர் சென்றிருந்தார்.

சில்பியின் வயதான அம்மாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பெரியவா நேரே பூஜையறைக்குச் சென்றார்.  பின்னர், கூடத்தில் வந்து அங்கு மாட்டியிருந்த படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு புறப்பட்டார்.  அப்போது ‘சில்பி’யின் அம்மா, ‘எனக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருக்கு. ரொம்பக் கஷ்டப்படறேன்’ என்று கூறினார்.

 ‘தினம் இரண்டு வில்வ தளம் சாப்பிட்டுண்டு வாங்கோ’ என்று பெரியவா  வைத்தியம் சொன்னார்.

சில்பி ஊரிலிருந்து திரும்பியதும், ‘பெரியவா வீட்டுக்கு வந்த போது தாம் இல்லாமல்  போய்விட்டோமே’ என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.   பெரியவாளைத்தரிசித்தபோது,

''பெரியவா,  இந்த சிறியேன் கிரகத்துக்கு வந்திருந்தீர்கள் என்று கேட்டு பரம சந்தோஷம் எனக்கு.  ஆனால் எனக்கு பாக்யம் இல்லை  நான்  வீட்டிலே இல்லாம போய்ட்டேனே ''

அப்போது பெரியவா சிரித்துக் கொண்டே,   ‘நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும்’ னுதானேடா  கூப்பிட்டுண்டிருந்தே.   ''நான்''  ஆத்திலே இருக்கறப்ப வாங்கன்னு கூப்பிட  நீ  இல்லையே ’  என்றார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...