Friday, March 27, 2020

THEVITTADHA VITTALA



தெவிட்டாத விட்டலா    J K SIVAN 
 
                                                                       
                            விட்டலன் பேசினான் 
                                                                                   
 வாட்ஸாப்ப்   யூ ட்யூப் என்று ஒரு சில விஷயங்கள் வீட்டுக்குள் படுக்கையில், சமைக்கும்போது, குளிக்கும்போது கூட  கூடவே  மனிதனின் நிழலாக வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.  அதில் அக்கப்போர் விஷயங்கள் தான் அதிகமாக நிஜம் போல் நம்ப வைக்கிறது.   எல்லோருமே  தான்  பேசுவது தான் உண்மை என்று பொய் பேசுகிறார்களோ? எது உண்மை எது பொய் ?  ரெண்டுமே ஒன்று தான் போல் இருக்கிறதே.

சிலர் ஒன்றும்  செய்யாமலேயே தனக்கு  பேரும் புகழும்  வேண்டும் என்று தேடி அலையும்  இந்த உலகிலே  அமைதியாக  பல அதிசயங்களைச் செய்துகொண்டு  வெளியே காட்டிக்கொள்ளாமல் வாழ்பவர்களும் உண்டே.  நூற்றில் ஒன்றா ஆயிரத்தில் ஒன்றா,   லக்ஷத்தில் ஒன்றா  கோடியில்  அல்லது  யுகத்திற்கு ஒரு புருஷனா. என்று  அறியமுடியாமல் எங்கோ இருக்கத்தான்  செய்கிறார்கள். அவர்களில்  ஒருவர் துக்காராம்  சுவாமிகள் என்றால் தவறாகாது.

படிக்காதவர்.   ஸம்ஸ்க்ரிதம் தெரியாது  மராத்தி என்ற தாய்மொழி ஒன்றே அறிந்தவர் ஆனால் விட்டலனின் மனத்தில் இடம் பெற்றவர்.  விட்டலனை தனது மனத்தில்  சிறை வைத்துக்கொண்டவர்.   ஏற்கனவே  சொல்லியிருந்தாலும் சில விஷயங்களைத் திரும்ப திரும்ப  சொல்வதால் சந்தோஷம் அதிகமாவதால்  சொல்கிறேன்.  சுவாரசியமாக இருக்கிறது.

சிவாஜி மகாராஜாவுக்கு   துக்காராம்  சுவாமிகளை அவரது குரு  சமர்த்த ராமதாசர் அறிமுகப்படுத்தியதால்  நேரில் சென்று தேஹூ  கிராமத்தில் துக்காராமைச் சந்தித்தார்.  

 வறுமை, எளிமை,  ஆனால்  பரந்த உயர்ந்த உள்ளம்,  அனைவரிடமும் அன்பு, பாசம்,  காணும் யாவரும்  விட்டலஸ்வரூபம் என்ற உயரிய நோக்கம்,   எல்லாமே  துக்காராமை  மற்றவரிடமிருந்து  தனிப்படுத்தி காட்டியது.

சிவாஜிக்கு   துக்காராம் ஸ்வாமிகளின்  வறுமையை   போக்கவேண்டும் என்று தோன்றியதால் பொன்னும்  பொருளும் கொண்டு வந்து துக்காராம்  சுவாமிகள்  எதிரே   கொட்டினார் . அதை எல்லாம்  தொடவே இல்லை துக்காராம்.  மிக்க கோபம் அடைந்தார்.  

'' சிவாஜி  இனி நீ இங்கே வராதே.  உனைப் பார்க்க மாட்டேன்''
  சிவாஜி அவரை விடவில்லை. நேரே சென்றார்
"குருநாதா,  ஏன் என் மீது வருத்தம்?.  நான் என்ன  தவறிழைத்தேன்?
"நான் உன்னை பொன்னும் பொருளும் கேட்டேனா?  ஏன் கொண்டுவந்தாய் இங்கு?"
" க்ஷமிக்கவேண்டும் குருநாதரே, உங்களது  அன்றாட  அன்னதானத்துக்கு உதவட்டுமே. உங்களது  ஆஸ்ரமத்தில்  சுபிக்ஷம்  நிலவட்டுமே என்று அவ்வாறு செய்துவிட்டேன் "
"என்னை உனக்கு எவ்வளவு காலமாகத் தெரியும்?"
"சமீபமாகத்தான்"
''சரியாகச்சொல்  சிவாஜி.  எத்தனை வருஷங்களாக  என்னை  நீ  அறிவாய்?''
'' சுவாமி,  வருஷங்கள்  எல்லாம்  இல்லை.   சில மாதங்களுக்கு  முன்பு தான்  உங்களைப்பற்றி  தெரிந்து கொண்டேன் ''
" இவ்வளவு குறுகிய  காலத்தில் என்னைத் தெரிந்த  நீயே எனக்கு உதவ வந்தபோது,  பல எண்ணற்ற  ஜன்மங்களாக என்னைப்  படைத்த அந்த விட்டலன்  எனக்கு  உதவாமலா நான்  வாழ்ந்து  வருகிறேன்?.  நான்  வாழும்  ஒவ்வொரு  நிமிஷமும் அவன்  போட்ட பிச்சை  அல்லவா?. நீ ஒரு சிறிய  இடத்துக்கு ராஜா வாக இருப்பவனே  இப்படி  நினைத்தபோது  மூவுலகும் ஆளும்  அந்த  பெருந்தகை என்னை கைவிடுவானா? அவனை மதிக்காமல்  நானுன்னை  நாடினால் நான் ஒரு மனிதனா? பக்தனா?"    சொல்.''
 பதில் தெரியாத  சிவாஜியின்   கண்களில் காவேரி பெருகி துக்காராமின்   கால்களை நனைத்தது. அப்படி ஒரு அபூர்வ பக்தர் துக்காராம்.

துக்காராம்  ஒருமுறை புண்ய  ஸ்தல யாத்ரை சென்றபோது பக்தர்களும்  அவரோடு  ஊர்  ஊராக நடந்தார்கள்.  வழியெங்கும் அநேகர் அவரது விட்டல  நாம சங்கீர்த்தன  மழையில் நனைந்தனர். பஜனை   பிரவாஹமாக அவர்கள் சென்ற  தெருவெல்லாம்  ஓடி வழிந்து  குளிர்வித்தது
ரஞ்சனா என்று  சிறிய அழகிய  கிராமத்தை அடைந்தார்கள்.   அங்கு  மூலா என்ற நதியும்  பிருவா  என்ற  நதியும்  இணைந்து சங்கமமாகிறது.  அந்த  புண்ய  நதியில் ஸ்நானம் செய்து விட்டு  அவர்கள்   அன்றைக்கு  பிக்ஷைக்கு  உஞ்சவ்ரித்தி எடுத்தார்கள்.
துக்காராம்  மறுநாளைக்கு  என்று மட்டுமல்ல  மறு வேளைக்குக்கூட  எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர்.  எனவே  அன்றாட பிக்ஷை உஞ்சவ்ரித்தி மூலம் தான்.   அவர்கள் விட்டல   சங்கீர்த்தனம் பண்ணிக்கொண்டு அந்த கிராமத்தின் ஒரு பிரதான வீதியில் வந்து கொண்டிருந்தார்கள்.  அங்கங்கு நின்று பிக்ஷாவந்தனம் பெற்றுக்கொள்வார்கள்.   குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு  மேற்கொண்டு செல்லமாட்டார்கள்.  அன்றையப் பொழுதின் ஆகாரம் அவ்வளவு தான்.
அவர்கள்  ஒரு வீட்டின் முன்  நின்று கொண்டிருந்தார்கள். அந்த   வீட்டில் ஒரு  ஆசாரமான பிராமண  குடும்பம்  வெகுகாலமாக வாழ்ந்து வந்தது.  நித்ய அக்னிஹோத்ரம்,  நித்ய ஸ்ராத்தம் செய்யும்  பழக்கம் உள்ளவர்கள்.   வெளியே எங்கும்  ஆகாரம்  எடுக்க மாட்டார்கள்.  இது பரம்பரை  பரம்பரையாக   அந்த  வீட்டில் நடந்து வருகிறது.   அந்த வீட்டின்   பிராமணர் ஒரு  விட்டல பக்தரும் கூட என்பதால்  வாசலில் விட்டல நாம சங்கீர்த்தனம்  ஒலிக்கும்போது  வீட்டில் உள்ளே  அப்போது  தான் பூர்ணாஹுதி முடிந்தது.  அனைத்து த்ரவியங்களும் வஸ்த்ரமும் பக்ஷணங்களும்,  நெய்யோடு  ஆஹூதி  ஹோமத்தில்  போடப்பட்டு தேவ  ப்ரீத்தி  குடும்ப  பிரார்த்தனையோடு முடிந்திருந்தது. ஹோமம் பிரார்த்தனை நடந்து முடியும்  நேரத்தில் வாசலில்  விட்டல பஜனையும்  சேர்ந்தது நல்ல  சகுனம் என்று அந்த பிராமணருக்கு பரம திருப்தி.   வெளியே  வந்தார். யார் என்று பார்த்தவர் பிரமித்தார்.  ஏனென்றால் அவர் அடிக்கடி பண்டரிபுரம் செல்வார். துக்காராம் ஸ்வாமிகளை பார்த்திருக்கிறார்.   ஒரு  ஆடி கிருத்திகை  அன்று   பண்டரிநாதன்  சந்நிதியில் துக்காராம்  சுவாமிகளின் விட்டல நாம  சங்கீர்த்தனங்கள்,  அபங்கங்கள் எல்லாம்  காது  குளிரக்  கேட்டவர்.  துக்காராமை  மானசீக குருவாக  ஏற்றவர்.  அப்படிப்பட்ட  துக்காராம்  சுவாமிகள்   நம் வீட்டு   வாசலில் நிற்கிறாரே.   என்ன பாக்கியம்.   வெளியே வந்து வாசலிலேயே குருஜியின் காலில் விழுந்து வணங்கினார்.  உள்ளே  வரவேற்றார்.  குடும்பமே  மகிழ்ந்தது அந்த  பூஜ்யர் வரவால்.   துக்காராம்  அனைவருக்கும் விட்டல  பிரசாதம் கொடுத்தார்.

தூரத்தில் ஒரு  பையன்   கண்கொட்டாமல்  அவரையே  பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததை பார்த்து விட்டு அவனை   ஜாடையாக அருகே வா என்று அழைத்தார் துக்காராம்.

ஒரு  நிமிஷம் அவரையே  கவனித்து விட்டு  பையன்  உள்ளே  ஓடிவிட்டான். சிரித்தார் துக்காராம்.

பிராமணர்  குடும்ப விஷயங்கள்  எல்லாம் சொல்லும்போது  துக்காராம் அந்தப் பையனைப்  பற்றி கேட்டார்.

"ஒரு சிறிய  அழகிய  விட்டலன் இங்கிருந்தானே  அவன்  யார்?"

அவர் இதைக்கேட்டது தான் தாமதம்.   மடை திறந்தால்  போல பிராமணர்  கண்களில் கங்கா ப்ரவாஹம்.  சோகம் மனதைப்பிழிய அவர்  ஓ வென்று  அழுதார்;
அவரை ஆச்வாசப்படுத்திவிட்டு துக்காராம்  "என்ன  துக்கம்  உங்களுக்கு" என்றார்

"அவன் என் மகன். ஒரே மகன்.  எட்டு வயதாகியும் இன்னும்  உபநயனம்  நடக்கவில்லையே"
" தக்க வேளையில் நடக்கும். இதற்கு  ஏன் கவலை?

" அவனுக்கு  பிறவியிலிருந்தே வாய் பேசாது.   பிறவி ஊமை.  எப்படி உபநயனம் செய்வது?  எப்படி அவனால் காயத்ரி  மந்த்ரம் சொல்லமுடியும்?

" விட்டலா இது  என்ன  கொடுமை?"  என்று   மனம்  வருந்தினார் துக்காராம்.
"அந்தக் குழந்தையைக்  கொஞ்சம்  அழைக்கிறீர்களா இங்கே"
பயத்தோடு பையன்  நெருங்கினான். ஏன் பயம் என்றால் பல பேர் இதுவரை மந்திரம்  செய்கிறேன்,  மருந்து  கொடுக்கிறேன் என்றெல்லாம் அவனைச் சித்ரவதை செய்திருக்கிறார்கள். ஆதலால்  அவனுக்கு  யாராவது வந்தால் தனக்கு  துன்பம் என்று கருதி தப்பிக்கப் பார்ப்பான். துக்காராமையும்  அப்படியே எடைபோட்டான்.

அருகே  வந்த   பையனை  அன்போடு உச்சிமுகர்ந்து  உடம்பு  பூரா ஆசையாக தடவிக் கொடுத்தார்.  அவனுக்கு  ரொம்ப பிடித்து விட்டது அவரை.  அவர் அவனை  அணைத்துக்கொண்டார்.  விட்டல   பிரசாதமாக ஒரு   சில துளசி தளங்களை அவன்  வாயில் போட்டார்.

"விட்டலா, உன்  பெயரை "விட்டலா"  என்று  சொல்லு  பார்க்கலாம் " என்றார்.  பையன்  வாயைத் திறந்து   என்னென்னவோ செய்தான். பேச  முயன்றான்  வாய் திறந்தது ஒரு சில  வினாடிகளில் அவன்  குரல்  "விட்டலா,  விட்டலா"   என்று  கணீர்  என்று   அந்த  வீட்டில் முதல் முதலாக  ஒலித்தது.  அனைவரும்   அதிசயத்தில் மூழ்கினார்கள்.

ஊமைப் பையன் பேசினான்.  கேட்ட  அனைத்து  குடும்பத்தினரும் ஆச்சர்யத்திலும்  ஆனந்தத்திலும் பேச்சின்றி ஊமையானார்கள்.

முதல்  வார்த்தை  "விட்டலா" வுக்குப் பிறகு  அந்தப்பையன்  கொள்ளை  பேச்சு பேசினான்   இரவெல்லாம் பேசினான். அன்றிரவு அங்கு  தங்கிய  துக்காராமிடம் எண்ணற்ற  கேள்விகள் எல்லாம்  கேட்டான்.  அவர்   சந்தோஷமாக அவனுக்கு எல்லாவற்றையும்  விவரித்து பதில் சொன்னார்.  இரவு  அவர்   பக்கத்திலேயே படுத்துத் தூங்கினான்

மறுநாள்  அந்த வீட்டிலே அவனுக்கு  உபநயனம்  நடந்தது. அவனுக்கு விட்டல பிரசாதம்  கொடுத்து  ஆசிர்வதித்து விட்டு யாத்திரை தொடங்கினார்  ஸ்வாமிகள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...