Monday, March 23, 2020

GITANJALI



கீதாஞ்சலி                             J.K. SIVAN 
ரவீந்திரநாத் தாகூர் 

                                
                     36.  உன்  அருளால்  உன்  தாள்  வணங்கி....


 36.  This is my prayer to thee, my lord---strike, strike at the root of penury in my heart.
Give me the strength lightly to bear my joys and sorrows.
Give me the strength to make my love fruitful in service.
Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.
Give me the strength to raise my mind high above daily trifles.
And give me the strength to surrender my strength to thy will with love.


கண்ணுக்கு தெரிந்த  எவ்வளவு பெரிய  பலவானையும்  சமயோசிதமாக ஜெயித்துவிடலாம். கண்ணுக்கு தெரியாத அணுவுக்கு சக்தி அதிகம். இப்போது  உலகத்தையே  புரட்டிப்போடும்  கொரோனா கிருமிக்கு பயந்து கைகழுவாமல் இருப்பவனே  இல்லை.  நிமிஷத்தில் பல உயிர்களை தின்கிறதே?  இதை அறிகின்ற நாம் கண்ணுக்கு தெரியாத  பகவானின் சக்தியை ஏன் அறியவில்லை?. தீய சக்தியை உணரும் நாம் நல்ல சக்தியை நம்பவேண்டாமா? அது காப்பாற்றுமே .

பகவானே கிருஷ்ணா, நான் உன்னை என்ன கேட்பேன்? எனக்கென்ன வேண்டும் என்று தானே? எனக்கு உன்னிடம் இருந்து என்ன வேண்டும் தெரியுமா?

நீ எதை எனக்கு தரவேண்டும் அறிவாயா?

என் மனதில்,  என் இதயத்தில் வறுமை,   ஏழ்மை இருக்கிறதே,  அதை அகற்று.  அந்த வெற்றிடத்தில் உன் சக்தியை எனக்கு  பலமாக கொடு. எதற்கு என்று கேட்கிறாயா வரிசையாக சொல்கிறேன் எண்ணிக்கொள்.

சுகம் துக்கம் எதையும் சரி சமானமாக  நான் எந்த வித  பயமும் அதிர்ச்சியும் இன்றி ஏற்கவேண்டும். அந்த  சக்தியைத்  தா.

உலகமே என் காலடியில் கிடைத்த சுகம் வந்தாலும்  உலகமே இடிந்து  பேரிடியாக துன்பம் என்னை சூழ்ந்தபோதும், அவைகளால்  எந்த வித பாதிப்பு இல்லாத, ரெண்டையும்  ஒன்றாக,  ஏற்றுக்கொள்ளும்  மனப்பாங்கு வரவேண்டும். நீ தான் அதைக் கொடுக்கக்கூடியவன். 

என் மனத்தில் உன்மேல், நீ படைத்த  என்  சக உயிர்கள் மேல் அன்பு ஊறவேண்டும். ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். அவை அனைத்திற்கும்  அன்போடு நான் பயனுள்ள  சேவை செய்யவேண்டும். செய்து கொண்டே  இருக்கவேண்டும்.  அதில் அளவற்ற  சந்தோஷம் எனக்கு கிடைக்க  வேண்டும்.

பொழுது விடிந்தால் ஆரம்பித்து, இரவு மண்டையை படுக்கையில் சாய்த்து தூங்கும் வரை அப்பப்பா எத்தனை இன்னல்கள், தடங்கல்கள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கோபம் தாபம். என் மனம் இதையெல்லாம் தாண்டி ஒரே சீராக அமைதியாக ஆனந்தமாக இருக்க தேவையான சக்தி உன்னிடம் தான் இருக்கிறது.  அதிகாரம், ஆணவம் இவற்றைக்  கண்டு  அஞ்சும்  பயத்தை போக்கி   தைரியத்தோடு எதிர்கொள்ளும்  சக்தியைத்  தா.

கிருஷ்ணா,    அவன்  அருளால்  அவன் தாளை வணங்க என்று ஒரு அற்புதமாக சொல் எங்கள் தமிழில் உண்டு. அந்த அர்த்தத்தில் சொல்கிறேன். உன் திருவடிகளில் சரணடைய எனக்கு சக்தி வேண்டுமல்லவா, அந்த சக்தியை உன்னைச் சரணடைய  என்னை முழுமையாக  மனமார்ந்த அன்போடு  உனக்கு அர்ப்பணிக்க  ஒரு சக்தி வேண்டாமா, அந்த சக்தியை நீயே எனக்கு கொடு.  நான் பம்பரம், என்னை சுற்றி ஆடவிடுவது நீ அல்லவா. ஆட்டுவித்தால்  ஓயும் வரை ஆடுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...