Thursday, March 26, 2020

URANGA VILLI DASAN



              வில்லியை விழுங்கிய  விழிகள்    J K SIVAN            
                                          
யோகிகள் மற்றும்  ஆன்மீக  ஈடுபாடு கொண்டவர்கள் தேகத்தை லக்ஷியம் பண்ணமாட்டார்கள் என்றால் அதை சீர் குலைப்பார்கள் என்று அர்த்தம் இல்லை.   ஆத்மா தங்குவதற்கு அவசியமாக  உடல் எப்படி எந்த அளவுக்கு பாதுகாக்க படவேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் அதை பற்றிய சிந்தனை இருக்கும்.

சிலர்  இரவும் பகலும் உடல் பலத்தை, அதன் போஷாக்கையே  லட்சியமாக கொண்டு வாழ்வார்கள். உடலைப்பற்றியே எப்போதும் சிந்தனை. அதுவே அவர்களுக்கு ஆத்மா.  சிறந்த மல்லர்கள்  அப்படி தங்கள் தேகபலத்தை வளர்க்க இரவும் பகலும்  பாடுபடுவார்கள். மற்றவர்களை மல்யுத்தத்தில் ஜெயித்து தன்னிகரில்லாதவன் என்று காட்டிக்கொள்ள ப்ரம்ம பிரயத்தனம் செய்பவர்கள்.   இளம் வயதில்  கிங்  காங், தாராசிங், போன்றவர்கள்  எவ்வளவு சாப்பிடுவார்கள் என்ன என்ன சாப்பிடுவார்கள் என்பது பற்றி நிறைய செய்திகள்  கல்கண்டு பத்திரிகையில்  படித்திருக்கிறேன்.

அப்படி ஒருவன் தான்  தனுர் தாசன். சோழராஜா அரண்மனையில்  சிறந்த மல்லன். அப்போது உறையூர் தலைநகர்.  அவன் மனைவி அழகி. பொன்னாச்சி. அவள் தான் அவனுக்கு தெய்வம். அவள் கண்கள் உலகிலேயே அழகானவை.   அவள் அவனைப் பொறுத்தவரை கிளியோபாட்ரா. வசீகரி. அவன் புஜபல பராக்ரமம், வீரம் அவனுக்கு ராஜாவிடம் இருந்து பெரும் செல்வத்தை பெற்று தந்தது.

ஒருமுறை ராமானுஜர் சிஷ்யகோடிகளுடன்  ஸ்ரீரங்கம் ரங்கநாத தரிசனம் பெற சென்றார்.  நல்ல வெயில் நேரம். கால் மணலில்  அப்பளமாகிக்கொண்டிருந்தது. அவருக்கு முன்னால்  ஒரு சிறு கூட்டம் . ஒரு தடியன், ஒரு கையில் பெரிய  குடையை பிடித்துக்கொண்டு ஒரு பெண்ணை வெயிலிலிருந்து பாதுகாத்தவாறு, அவள் நடக்க  பட்டுத்துணிகளை நடைபாவியாக தரையில் விரித்துக்கொண்டு அவள் பாதங்கள் வெயிலில் சுடாமல்  நடக்க  செய்து கொண்டு சென்றான்.

துறவி ராமானுஜருக்கு இதைக் கண்டதும் சிரிப்பு வந்தது.  என்ன அவ்வளவு பரிவு பாசம் அந்த பெண் மேல் அவனுக்கு. தனது பாதங்கள், உடல் வெயிலில் சூடு கண்டாலும் அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு சிச்ருஷை செயகிறானே யார் அவன்?

''அப்பனே  இங்கே வா அப்பா?   நீ யார்?


''சாமி  நான்  தனுர்தாசன், சோழ ராஜ அரண்மனையில்  மல்லன். வில்லிகள்  எனப்படும்  அரசனின்  மெய்காப்பாளர் தலைவன். கரம்பனுரில் இருந்து  இங்கே  சித்திரை உத்சவம் தரிசனத்துக்கு வந்தேன்.''

''அது யார் ?''

''என் மனைவி பொன்னாச்சி''

''ஏன் அவள் மேல் அத்தனை கரிசனமாக  கால் சுடாமல்   நடை பாவாடை துணி  விரித்து  அவள்  உடலில் சித்திரை கொளுத்தும் வெயில்  கொள்ளிடம் மண்ணில் சூடு தெரியாமல் ஒரு குடை வேறு பெரிதாக  அவள் தலைக்கு மேல்  பிடித்து  சேவை செயகிறாய்?''

''ஐயா,  அவள் கண்கள் விலைமதிப்பில்லாதவை. சூரிய ஒளியில் அவை கருகி அழகு குண்டி விடுமே  என்கிற கவலை எனக்கு. அவள்  கண்களின், உடலின்  அழகுக்கு நான் அடிமை. அவள் அழகை பாதுகாக்க நான் எதுவும் தியாகம் செய்வேன்''

ராமானுஜர்  அவனை பார்க்கும்போதே  தனுர்தாசன் ஒரு சாதாரண மனிதன் அல்ல,   ஸ்ரீ வைஷ்ணவ சேவைக் கென்று அவதரித்த  ஒரு  ஜீவன். அஞ்ஞானத்தில் உழல்கிறான், தூசு தட்டவேண்டிய கண்ணாடி என்று புரிந்துவிட்டது.  

''தனுர்தாசா , உன் பொன்னாச்சியின் கண்களை விட அழகான கண்கள் இந்த உலகில் கிடையாது என்கிறாயே, எனக்கு வேறு இருக்கிறது என்று தோன்றுகிறதே.''

''சுவாமி நான்  எத்தனையோ ஊர்கள் சென்றவன், எத்தனையோ பெண்களின் கண்களை பார்த்தவன். எங்குமே இது போன்ற அழகிய கண்கள் கிடையாது''

''உனக்கு  பொன்னாச்சியின் கண்களைவிட அழகான கண்களை காட்டுகிறேன் பார்க்கிறாயா?

''சுவாமி, அப்படி ஒரு ஜோடி அழகிய கண்கள் இருக்குமானால்  அதற்கு உடனே சரணடைவேன். ஏனெனில் என் மனைவி கண்களை விட வேறெவர்க்கும்  இவ்வளவு அழகிய கண்கள் இருக்கமுடியாது என எனக்கு தெரியும் ''

''வா  என் பின்னாடி,   
காட்டுகிறேன்.  பார்த்துவிட்டு பிறகு சொல்  யார் கண்கள் அழகானவை என்று, சரியா?''  என்று அவனை ஈர்த்தார் உடையவர்.

''அப்படியானால் என் பின்னே வா.  உலகிலேயே  மிக அழகான  கண்களை நாம் இருவருமே சேர்ந்து பார்ப்போம்'' என்று அவன் கையைப் பிடித்து   அரங்கன் ஆலயத்தின் உள்ளே அழைத்துச் சென்றார் ராமானுஜர். இருவரும்  ஸ்ரீரங்கம் கோயிலை அடைந்து, பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும்  ஆதிபுருஷனான ஸ்ரீரங்க ராஜனின் எதிரில் நின்றபோது

"அழகிய மணவாளா ,  திருப்பாணாழ்வார் போல்வாருக்குக் காட்டிய அக்கண்ணழகை, இதோ வந்திருக்கும் இந்த வில்லிக்கும் நீ காட்டி அருள வேண்டும் " என்று ராமானுஜர் மனம்  பிரார்த்தித்தது.

என்ன கண்கொள்ளாக் காட்சி.  முழந்தாள் வரை நீண்ட திருக்கைகளை உடையவராய் தாமரையிதழ் போல் நீண்டு பரந்த திருக்கண்களை உடையவனாய், புன்முறுவலோடு மிக இனிய மிருதுவான கன்னங்களை உடையவனாய்,  மாணிக்கங்கள் அழுத்தப்பெற்ற திருவாபரணங்களால் அலங்கரிக்கப்பெற்றவனாய், அழகிய திருமேனியை உடையவனான ரங்கநாதனான விஷ்ணுவின் கண்கள்  தனுர் தாசனின் கண்களை காந்த சக்தியோடு கவர்ந்தன.

''கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய  கண்களை " அரங்கன் காட்ட......

''அப்பா தனுர்தாஸா, ! இவரே உலகுக்குத் தலைவனான, லக்ஷ்மி நாதனான ஸ்ரீரங்கநாதன்; இவரது ஒப்பற்ற கண்களின் பரப்பை நீ நன்றாக நேரில் பார்த்தாயா?  . கண்களை ஏன் அங்கு இங்கு திருப்பாமல் அவற்றையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்? என்னையும் சற்று பாரேன்?'' என்றார் ராமானுஜர்.

தனுர் தாசன் இந்த லோகத்திலேயே இல்லை.

கண் அழகன்  கண்ணனின் அருள் நோக்கில் அகப்பட்ட மல்லன் மெய் மறந்து , மனம் ஒடுங்கி, ஆவி குளிர்ந்து " என் அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே " என்ற நிலையை எய்தி விட்டான். ஆனந்தக் கண்ணீர் பெருக மெய் சிலிர்த்து நின்றான்.'' 

அரங்கனின்  அருளா? ஆசார்யனின் அநுக்ரஹமா?    காமம் முதலான உட்பகைகள் நீங்கப் பெற்ற மல்லன் தனுர் தாசன் இனி எம்பெருமானையே எல்லாமாகக் கொண்ட மஹாத்மா.    உடையவர்  வில்லி தனுர்தாசனுக்கும் அவன் மனை பொன்னா ச்சிக்கும்  திருவிலச்சினை அளிக்க,  உடையவருக்கு அடியவனாகி , அரங்கனின் கண் அழகுக்கு பாதுகாவலனாகி, உடைவாளை உருவி எடுத்துக் கையில் பிடித்த வண்ணம்  இனி உறங்கா வில்லி தாசன் பகவத் கைங்கர்யத்தில்  படப்போகிறான்


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...