Friday, March 20, 2020

NOSTALGIA



தேனில்  தோய்ந்த  ஒரு  குரல்   J K  SIVAN 


நான் கொஞ்ச  நாளாக  தானே  எழுதுகிறேன். பெரிய  எழுத்தாளன்  என்ற கர்வம் வர வழியே இல்லையே. எனக்கு எழுத சந்தோஷமாக இருக்கிறது.    இருக்கும்  நேரத்தை இந்த வழியில் செலவு செயகிறேன். அவ்வளவு தான். ஆனால்  இதில் ஒரு சந்தோஷம் என்ன தெரியுமா?  எழுத  ஆரம்பித்ததிலிருந்தே  எனக்கு  நண்பர்கள்  பெருகி விட்டனர்.   நேரம் போவதே  தெரியாமல்  ஏறக்குறைய  ஒரு நாளைக்கு   18 மணி நேரம்  நண்பர்களோடு   எழுத்தால்,  டெலிபோனில், நேரில்  அளவளாவுவது ஆனந்தமாக இருக்கிறதே.

ஆரம்பத்தில்  கொஞ்சம் சந்தேகம். நமக்கு ஏன்  இப்படி  புத்தி  போகிறது?   நான்  எழுத  ஆரம்பிப்பதால் எனக்கு  இருக்கும்  கொஞ்ச  நண்பர்களும்  குறைந்து விடுவார்களோ  என்று உள்ளூர  உதைத்தது.  இருந்தது.    ஒரு  அசட்டு  தைர்யம்  '' பரவாயில்லை.  அப்படி  இறைவன்  விதித்தால்  இருக்கவே  இருக்கிறது  புத்தகங்கள்  அவற்றை  ''படிக்கலாம்'' என்று சமாதானம் சொல்லியது. ஆனால்   -  படிக்கலாம்  என்றால் என் போன்ற  80+க்கு  தூக்கம்  என்று  பொருள். எந்த  புத்தகத்தை  கையில் எடுத்தாலும்   ஐந்து  நிமிஷம்  புரட்டியபிறகு எங்கிருந்தோ ஒரு  மாயமான  பூச்சி வந்து  பறக்கும்.  கண்  படிக்கும்  ஆனால்  அர்த்தம்  அதாவது  என்ன  படிக்கிறோம்  என்பது  உள்ளே  செல்லாது.  கண் லேசாக லசெருகி   மூடும்.  புத்தகம்  தொப்பென்று  கீழே  விழும்.  நித்ராதேவி  ஆட்கொள்வாள் .   ஆமாவா   இல்லையா?

அடுத்தது  என்ன செய்யலாம்.  ஆஹா  இருக்கிறதே  இன்னொரு பொழுது போக்கு.  பாட்டு.   கர்நாடக  சங்கீதம்  கேட்கலாம்.   ராகத்தை,  பாவத்தை,   தாளத்தை ரசிக்க முடியும்.   பாட்டின்  அர்த்தத்தை.  பாடகரின்  கற்பனா வளத்தை.  ஸ்வர்ப்ரச்தாரத்தை.  அழகிய  ஆலாபனையை,  ஆரோகண  அவரோகண   சர்க்கஸை அனுபவிக்க  கொஞ்சம் சங்கீத ஞானம் வேண்டும்.  அதுவும்  எவ்வளவு  நேரம்?   ஒன்று  ரெண்டு  கீர்த்தனையை கேட்டுக்கொண்டிருக்கும்போதே  நித்ரா தேவி ஆட்கொண்டுவிடுவாள்.

சிலரது  பாடல்களை  கேட்கவே முடியாது. ஞானம்  இருக்கும்  அளவுக்கு  சாரீரம்  இல்லையென்றால்  ரம்பம்  தான்.  நிறைய  பலகை  அறுக்கலாம்.  காசில்லாமல்   ஜன்னல்  செய்ய  உதவும்.

தூங்கிக்  கொண்டே பாட்டுக்  கேட்க முடியுமா?  பாட்டே  தூக்கம் வரச்செய்யும்  வகையில்  இருந்தால்  முடிகிறது.   மென்மையான  குரலாக  இருந்தால்.  மனத்தை  வருடினால்.அந்த  சுகமே  சுகம்.  அதற்கு  கர்நாடக  சங்கீதம்  அவசியமா.?   தேனில்  பலா  அது.  ஜேசுதாஸ்,  பாலமுரளி,  MSS, MLV , GNB    கேட்டுக் கொண்டே  இருக்கலாம்.  ரொம்ப  ஸ்வரம்  போடக்கூடாது. நமக்கு  தெரியாது ரசிக்க.

குரல் பிடிக்கும்.  பாடும்  விதம்  பிடிக்கும்.  பாட்டு  பிடிக்கும்.  அர்த்தம்  தெரியாவிட்டால்  பரவில்லை.  எங்கோ  நடுவில்  கிருஷ்ணா,  ராமா,    ''நீ தய ராதா, பாரோ க்ரிஷ்ணய்யா ,    'தய  சேசி''  ,  இதெல்லாம்  புரியுமே.  போதும்.

தமிழ்  தெரிந்து,  தமிழில்  பல  இசை  மேதைகள்  பாடி கேட்டது  இன்னும் நினைவில்  இருக்கிறது.

சூளைமேட்டில் இருந்து  ஆர்க்காடு  ரோடு  கலக்கும்  இடத்தில்  மசூதிக்கு  அருகே  கேசவன்  நாயர்  டீ  கடை வைத்திருந்தார்.  அப்போதெல்லாம்  கோடம்பாக்கம்  ஓவர் பிரிட்ஜ் இல்லையே.  ரயில்வே  கேட்  மணி அடித்துக்கொண்டே  இருக்கும்.  ரெண்டு  பெரிய  கதவுகளை  காக்கி சட்டை  ஆசாமி  ஒவ்வொன்றாக இழுத்து  சாத்தும்போது  அவனையே நசுக்குவது போல்  வாகனங்கள்  கிழக்கு  மேற்காக ஓடிக் கொண்டே இருக்கும்.  அவனை  கேட்   சாத்த  விட்டால்  குறைந்தது அரைமணி  முக்கால்மணி நேரமாவது வண்டிகள்  ரெண்டு  பக்கமும்   நிற்கவேண்டும்.  இது  குறைவான  நேரம்.   நிறைய கூட்டம்  சேரும்.  ஆர்காட்  ரோடில்  அப்போதெல்லாம்  நிறைய  கூட்டம்  மூன்று  இடத்தில்  தான்.  ஒன்று  ரயில்வே கேட்டில்.  மற்றொன்று  சீதாராம விலாஸ்  எதிரே  வேப்ப  மரத்தடியில்.  அங்கு  தான்  25  என்கிற  பஸ் எ வடபழனி- திருவல்லிக்கேணி  ரூட் , எப்பவாவது  நீல கலரில்  வரும்.  பொறுமை யாக  வெகுநேரம்  நின்றுகொண்டு  இருந்தால்  அது  திருவல்லிக்கேணி வரை  உட்கார வைத்து  கொண்டு போய்   காட்டும்.  அதில்  ஏற  தவமிருப்பவர்கள் ஒரு  கூட்டம்..  மூன்றாம் கூட்டம்  கேசவ  நாயர்  கடையில்.  அங்கு  டீ  குடிக்க  வருபவர்களை விட   அவர்  வாங்கிப்போடும்  தமிழ்  பத்திரிகை  படிக்க  ஒரு  கூட்டம்  வழக்கமாக  வரும்.  நாயருக்கு  தமிழ் படிக்க தெரியாது.  பேசுவார்.  தங்க  நிற மேனி.  வெள்ளை வெளேர் என்று  மலையாள முண்டு.  அதன் மேல்  அரைக்கை  காலரில்லாத  ஜிப்பா மாதிரி ஒன்று.  தலையில்  கன்னங்கரேர் என்ற  முடியை  பின்னால்  தள்ளி  கழுத்துவரை  அனுமதித்திருப்பார்.  எளிமையாக  புன்சிரிப்போடு எப்போதும் இருப்பார்.  பள  பளவென்ற வெண் பல் வரிசை  சிரித்து  ஆளை  மயக்கும்.  நெற்றியில்  கொஞ்சம்  குருவாயூரப்பன்  களபம்.  தனக்கு படிப்பதற்கு என்று  ஜாங்கிரி ஜாங்கிரியாக ஒரு  மலையாள  பத்திரிக்கை  மேஜையில் வைத்திருப்பார்.  என்றோ வந்த  பத்திரிகை.    கல்லாவில்  இல்லாத  நேரம்  தானே   டீ  ஆற்றி கொடுப்பார். 


  மற்று மொரு  கும்பல்  எங்களைப்  போன்ற சிறுவர்கள். அவரது டீ  கடை   மர்பி  ரேடியோ  பாட்டு பாடும்.  சாயந்திரமானதும்    அவர்  கடைக்கருகில், எதிரில், வெளியில்  நின்றுகொண்டே அவர்  பெரிதாக  வைக்கும்  ரேடியோ  சிலோன்  சினிமா பாட்டு கேட்க  காத்து  நிற்போம்.  கொர  கொர வென்று  அவரது  AC DC   வால்வ்  ரேடியோ  சத்தம் போட்டுக்கொண்டே  பாடும்.  சிலோனிலிருந்து  பாட்டு வருவதால் இடையிடையே  இந்து மகா சமுத்ர அலை  ஓசையும் சேர்ந்து  வரும்.   மயில் வாகனன்  லேசில் பாடு  கேக்க  விடமாட்டார்.  நிறைய  பேர்களை  சொல்வார். குட்ட்ம்பட்டி கோபு,   ராமன், கோபாலன், மனோஹரன், கோகிலா  குடும்பத்தினர், அதிராமபட்டணம்  அன்பு  சகோதரர்கள்,  மீனாக்ஷி, ராணி, வாஹினி  இன்னும்  அவரது  நண்பர்கள்  அனைவரும்  ஆவலாக  விரும்பிக்கேட்கும் இந்த  பாடலை  பாடியவர்  A .M. ராஜா  படம்  .................   இதற்கே   ஐந்து ஆறு  நிமிஷங்கள்  ஓடும். நகத்தைக் கடித்துக்  கொண்டே ''பழகத்தெரிய வேணும் '' பாட்டை கேட்க   காத்து கொண்டிருப்பேன்.

  ராஜாவுக்கு   பதிலாக கண்டசாலாவின்  பாட்டு  வரும்.  ''ஓ  வெண்ணிலாவே''   என்ற  அருமையான  பாட்டு  எங்கோ வானத்தில்  வெண்ணிலாவிடம்  என்னை  கொண்டு சேர்க்கும்.   அது  முடிந்தபின்  ''நேயர்களே  இப்போது  வெளியான  பாடலை பாடியவர்  கண்டசாலா . இனி  நீங்கள்  விரும்பிக்கேட்ட 
 A .M  ராஜாவின்  மிஸ்ஸியம்மா  பாடல்  தொடரும்''   

'' சுசித்ராவின்  குடும்பம்''   விளம்பரம் கேட்டுவிட்டு  ராஜாவின்  குரல்  ஒலிக்கும்  ''பழகத் தெரியவேணும்  பெண்கள் பார்த்து நடக்க வேணும்'''  என்ன இனிமையான  குரல், பாடும்  லாவகம்.  தேனை குடம் குடமாக  ஒருவர்  குடித்துவிட்டு  துளித்துளியாக பாடலாக  வெளிப்படுத்தும்  சொகுசு.  A M  ராஜா  பாட்டு கேக்க   பாண்டிபஜார்  ராஜகுமாரி  தியேட்டர் க்யூலே  மத்தியானம்  வெய்யில்லே  நின்னு  6  1/2  அணா   டிக்கெட் வாங்கி  கருப்பு  வெளுப்பு  ''மல்லிகா'' படம்  பார்த்தேன்.  அதில் ''வருவேன்  நான்  உனது  மாளிகைக்கு ''ன்னு   ஒரு பாட்டு  வரும்.  இப்போது    கேட்டால்  கூட    அமெரிக்காவுக்கு  ஆகாயவிமானத்தில்   போனாலும்  பாதிலே   குதித்து இறங்கி விடுவேன். அந்த குரல்  காந்தம் போல்  கவரும்  தன்மை  உள்ளது.  ''துயிலாத  பெண்''  என்று  ஒரு பாட்டு.  ''காலையும் நீயே'' , ''கலையே உன்  வாழ்க்கை,   ''மயக்கும் மாலை''.   இது கொஞ்சம் தான்.   இன்னும்  எத்தனையோ  பாட்டுக்கள்.  இதை  யெல்லாம்  கேட்டு அப்படியே  தூங்கி விடுவேன்.   இந்த  பாட்டெல்லாம்  ஜெமினி கனேசனுக்காக நிறைய  பாடினதாக  இருக்கும்.    ஜெமினி  கனவில்  வந்து  அவர் வழியில் தொந்தரவு  பண்ணாமல்  இருந்தால் நல்லது.  இனிமேல் தாங்காது.  ராஜாவின்  குரல் மட்டும்  தான்  அல்லவுடு.

அப்புறம்  PBS  குரல்  கேட்க  ஆரம்பித்தேன்.  அவர்  போல்  பாட  ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கொஞ்சமாக  ராஜாவின்  இடத்தை  பல்லி   காத்திருந்து  இரும்பை, பூச்சிகளை  பிடித்து விழுங்குவது போல்  ராஜா காணாமல்  போய்விட்டார்.   PBS குரல்  ஒரு  தனி   இடத்தை மனதில் பிடித்தது  ராஜாவின்  இனிமையில்  கொஞ்சம்   கண்டசாலாவின்  கம்பீரத்தில்  கொஞ்சம்.  பாகற்காய்  கசந்தாலும்  பிட்லை  யின் ருசியே  தனி  அல்லவா.  தெளுவான  ரசத்தோடு  அதை  எடைபோடலாமா?

  ஒருநாள்  கேரளா  பிரயாணம்  செய்ய  சென்ட்ரலில்  ஓடும்   வண்டியில் ஏறும்போது  தவறி  கீழே  விழுந்து  அவர்மேல்  சக்கரம் ஏறியது. சக்கரம்  ராஜாவை மட்டும் அரைக்கவில்லை   கோடானுகோடி  ராஜாவின்  குரலின்  அடிமைகளின்  (என்னைப் போல ), மனங்களை  அரைத்து  பொடிப் பொடியாக் கியது.

 பல  வருஷங்களுக்கு  பின்  ஒரு நாள்  அவர் மனைவி  ஜிக்கி  டிவியில்  அழுது கொண்டே '' ஊரெங்கும்  தேடினேன்  ஒருவரைக் கண்டேன்''  என்று  பாடும்போது  டிவியில் அவரை  மேற்கொண்டு என்னால்  பார்க்க முடியவில்லை.   அவர் கண்களில் வழிந்த கண்ணீர் டிவி வழியாக   என் கண்களையம் நிரப்பி  பார்வையை  மறைத்து விட்டதே ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...