Friday, March 27, 2020

STORIES

என் வாழ்க்கை (யில்) கதை - J K SIVAN

கரோனா எல்லோரையும் உலகமுழுதும் கட்டிப்போட்டு விட்டது. வேலை வெட்டி எதுவுமில்லை, தெருவெல்லாம் வெறிச். மோட்டார், வாகனங்கள் சத்தமே. முடிச்சு முடிச்சாக நாலு பேருக்கு மேல் சேராமல் கையில் மொபைல் வாட்ஸாப்ப், காதில் பாட்டோடு பொழுது போகாமல் புதிர் போட்டுக்கொண்டிருக்கும் புதிராக ஆகிவிட்டது வாழ்க்கை.

இந்த நேரத்தில் கதைகள் வரப்பிரசாதம் கவலை தீர்க்கும் மருந்து. கதை கேட்டு வளராத குழந்தைகள் கிடையவே கிடையாது. அவர்களை வசப்படுத்தும் வசிய மந்திரம் கதை. கதை கேட்கும்போது குழந்தைகளின் முகங்களை பார்க்கவேண்டுமே. அப்பப்பா என்ன உற்சாகம், என்ன உணர்ச்சி மயம். என் அண்ணா குழந்தைகள், என் மனைவியின் சகோதரி அடுத்த தெருவில் இருந்ததால். அவர்கள் குழந்தைகள், தெருவில் அண்டை அசல் வீட்டு குழந்தைகள் என்னை எப்போதுமே சுற்றிக்கொண்டிருக்கும். நான் கதை சொல்லும் மாமா, சித்தப்பா, பெரியப்பா அப்போது, தாத்தாவாக வில்லை.

எத்தனையோ மறக்கமுடியாத நாட்கள் அவை. என்னைக் கண்டால் கதை சொல்லு என்று அவர்கள் கேட்டபோதெல்லாம் நான் உலகிலேயே மிகப்பெரிய கதை சிருஷ்டி கர்த்தா என்ற எண்ணம் தோன்றியது.

ஏதோ ஒரு தோன்றிய கதையை ஆரம்பிப்பேன் அதில் எதையெதையோ கலந்து ஒரு காக்டெயில் பண்ண அவசியம் ஏற்படும். கதை வரண்டபோது கற்பனை கை கொடுக்கும் ''தாக்கலா மோக்கலா '' (ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் சொல்வதை இப்படி ஒரு வார்த்தையால் வர்ணிப்பது எங்கள் குடும்பத்தில் வழக்கம். இந்த சொல்லின் ஆதி பூர்வோத்தரமோ, ஜனன விபரமோ எனக்கு இன்றும் தெரியாது. இன்னும் எத்தனை வீடுகளில் இது?).

ஐந்தாவது படிக்கும்போது எங்கள் வகுப்பில் சரோஜினி டீச்சர் சொன்ன மிகப்பெரிய கதை எது தெரியுமா? எங்களை எல்லாம் மௌனமாக இருந்தால் ஒரு பெரிய கதை சொல்லப் போகிறேன் என்பாள். நாங்கள் ஆவலுடன் கப் சிப். தொண்டையை கனைத்துக்கொண்டு எங்கள் எல்லோரையும் ஒரு முறை வெற்றிகரமாக பார்த்துவிட்டு ஆரம்பிப்பாள். இப்படியே ஐந்து நிமிடங்களுக்கு ஒட்டிவிடுவாள். கடைசியில் ஒரு கனைப்பு கலைத்துவிட்டு ...... ''ஒரே ஒரு ஊரிலே ஒரு நரி. அதோடு கதை சரி''.

நான் கேட்ட கதைகளில் எல்லாம் முக்கால்வாசி நரி தான் ஏமாறும். ஆனால் இந்த சரோஜினி டீச்சர் கதையில் நரி எங்களை ஏமாற்றியது.

ஹோமர் கதையில் தேவைப்பட்டால் பாரதத்தின் சில நிகழ்வுகள், துப்பறியும் கதைகளில் தேவன், தமிழ்வாணன், கொஞ்சம் ஷெர்லக் ஹோம்ஸ், தெனாலிராமன், விக்கிரமாதித்தன், வேறு எங்கோ எப்பவோ தெரிந்துகொண்டது எல்லாவற்றையும் கற்பனையால் சாந்து பூசி என்ன தோன்றுகிறதோ அப்படியெல்லாம் ஒரு கலக்கு கலக்கி குழப்பி கதையைக் கொண்டு போவேன். இதில் மயங்கி அந்த சிறுவர் குழாம் என்னைச்சுற்றி மகுடி நாகமாக வளைய வரும்.

நான் கதை சொன்னதை விடுங்கள். சொன்ன கதைகளை விட நான் ரசித்த கதைகளைப் பற்றி சரக்கை இப்போது அவிழித்து விடுகிறேன்.

பன்னியூர் படாடோப சர்மா, கருங்குயில் குன்றத்துக் கொலை என்று எல்லாம் வடுவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் கதை எழுதுவார். ஒரே மேடையில் அமர்ந்து திருடனும் ஜமீந்தாரும் காப்பி குடித்தார்கள் என்பார். நீள நீளமாக பெயர் எல்லாம் வைப்பார். கொலை கொள்ளை குத்து, விஷயங்களை வைத்து என் போன்றோர்களை சிறு வயதில் மடக்கிப்போட்டவர்.
ஆரணி குப்புஸ்வாமி முதலியார் கதைகள் சாதுவாக இருக்கும். ஆனால் அதில் வருபவர்கள் சண்டை சச்சரவுக்கு எல்லாம்
துரைசாமி அய்யங்கார் ஆட்கள் மாதிரி போக மாட்டார்கள். ரொம்ப நேரம் ஆ.கு. முதலியார் புஸ்தகம் சேர்ந்தால் போல் படிக்க பிடிக்காது. அவரை மாதிரி ராஜம் அய்யர், லட்சுமி கதைகளில் நிறைய பெண்கள் அழுவார்கள். முழுதாக கடைசிவரை படிக்க தாங்காது . மாயூரம் வேத நாயகம் பிள்ளை. வித்யாசமான மாஜிஸ்திரேட். அவரது 'பிரதாப முதலியார் சரித்திரம்' எதோ உண்மையிலே ஒரு சரித்திர பாட புஸ்தகம் படிப்பது போலவே இருக்கும். நிறைய ஒவ்வொரு பாராவிலும் பக்கத்திலும் கதா பாத்திரங்கள் வாயிலாக மாஜிஸ்திரேட் நீதிகள் சொல்வார். மாயூரம் வேதநாயகம்பிள்ளையை எல்லோரும் கட்டாயப்படுத்தி படித்தால் அதன்படி நடந்தால் நாட்டில் போலீஸ் இலக்காவுக்கு கோவிலில் பூக்கட்டிக்கொடுக்கிற வேலை கொடுக்கலாம். கோர்ட் வேண்டாம்.

பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்கள் விறுவிறுப்பாக இருக்கும். அதில் வருபவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கும். ஒரு சின்ன கேள்விக்கு தாம்பரத்திலிருந்து பீச் வரை நீளமாக பதில் சொல்வார்கள். ஆனாலும் கதை விறுவிறுப்பு திருப்பங்கள் எல்லாமே சுவாரசியம் குறையா து.

நாலணா ஒரு வாரத்திற்கு ஒரு புத்தகத்துக்கு படிக்க வாடகை என்று மாம்பலம் ஸ்டேஷனில் இருந்து எதிரே ஒரு மாடியில் லெண்டிங் லைப்ரரியில் புத்தகம் எடுப்பேன். அதிகம் ஆங்கில புத்தகம் தான் வைத்திருந்தார்கள். எர்ல் ஸ்டேன்லி கார்டினர் பெர்ரி மேசன் கதைகள் நிறைய படித்தேன். நூறுக்கு மேல் இருக்கும். அப்பப்போ A A FAIR என்று பேர் மாத்தி எழுதுவார். ஜேம்ஸ் ஹெட்லி சேஸ் ஏனோ வரிக்கு வரிக்கு யாரையாவது துப்பாக்கி, கத்தி, கையால் கழுத்தை திருகி கொல்வார். அதில் வருவது எல்லாம் காசுக்காக கொல்பவர்கள் தான்.
தமிழ் வாணனின் சங்கர்லால் பெர்ரி மேசனிலிருந்து காப்பியோ என்று நினைக்கும்போதே அவருக்கு அடிக்கடி மாது என்பவன் டீ போட்டுக்கொண்டுவந்து கொடுப்பான். லெப்டினண்ட் கர்னல் ட்ரக் LT .COL.TRAGG என்ற போலிஸ் அதிகாரி பெர்ரிமேசன் கதையில் இருந்து தமிழ்வாணனிடம் இன்ஸ்பெக்டர் வஹாபாக மாறி வருவார். யோக்யமான போலிஸ் அதிகாரி. பால் ட்ரேக் என்று துப்பறிவாளன் சமய சஞ்சீவியாக மேசனுக்கு துப்பு கொடுப்பான். தமிழ்வாணனிடமும் மாணிக்கம் கத்திரிக்காய் இருந்தார்கள். டெல்லா ஸ்ட்ரீட் DELLA STREET தான் தமிழ்வாணனின் இந்திரா என் இளமைக்கால கனவு ஓவியங்கள் இவர்கள். இன்னும் மறக்க முடியவில்லை.

பெர்ரிமேசன் கேள்விகள் அற்புதம். பாதிக்கு மேல் நீதிமன்ற காட்சிகள் தான் கதைக்கே உயிர் நாடி. நிறைய விஷயங்கள் நான் தெரிந்துகொள்ள அவனே காரணம். பெர்ரிமேசன்கட்சி காரர்கள் உண்மையை பேசாத மழுங்குணிகள் . அவர்களை வைத்துக்கொண்டு உண்மையை நிலைநாட்ட படாத படுவான். முக்கால்வாசி கட்சிக்காரிகள் பெண்கள்தான். தானே கழுத்தில் சுருக்கு மாட்டிக்கொண்டு வந்து அவனிடம் நிற்பார்கள். காப்பாற்றுவான். ஹேமில்டன் பர்ஜர் எனும் அரசாங்க வக்கீல் நிறைய சாட்சியங்களை வைத்துக்கொண்டு இருந்தாலும் எப்படியோ கடைசியில்மேசனிடம் ஒவ்வொரு கதையிலும் தோற்றுப் போவதற்கென்றே வருவார். சரியான கெடுபிடி ஆசாமி. மேசனுக்கு ஜன்ம வைரியாகவே தன்னை அவதாரம் செய்து கொண்டவர். இந்த புத்தகங்கள் இன்னும் நிறைய படித்திருந்தேனானால் நான் போலீசில் சேர்ந்திருக்கலாம். இல்லையென்றால் கோர்ட் குமாஸ்தா உத்தியோகமாவது விருப்பத்தோடு செய்திருக்கலாம். ஆனால் என் கிருஷ்ணனை கோட்டை விட்டிருப்பேனோ? நல்லவேளை தப்பித்தேன்.
அகாதா கிறிஸ்டி கதைகள் ரொம்ப பிடித்தது. எத்தனையோ இரவுகள் கதை முடியும் வரை இரவில் அரிக்கன் லைட்டில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்னை தூக்கத்தை இழக்க வைத்தவர். அம்மாவிடம் என்னை திட்டு வாங்க செய்தவன் . காட்டாறு மாதிரி விறு விறுவென்று ஒடி நிறுத்தாமல் படிக்கச் செய்த அற்புத எழுத்தாளர்கள் கல்கி, தேவன், நாடோடி, சசி, லா.ச.ரா. சாவி, சுஜாதா போன்றவர்கள். இவர்களைப்பற்றி தனியாக பிறகு எழுதுவது தான் மரியாதை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...