Monday, September 18, 2017

மஹா பெரியவா வாக்கு





மஹா பெரியவா வாக்கு j.K. SIVAN

மஹா பெரியவாவின் வார்த்தைகளை புத்தகத்தில் படிக்கிறோம். சில பேர் அப்புறம் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்து கடைசிவரை படிப்பதே இல்லை. சிலர் நமஸ்காரம் செய்துவிட்டு புத்தகத்தை மூடிவிடுகிறார்கள். சிலர் படிக்கிறார்கள், ஆனால் வாய் வேர்க்கடலை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. காது டிவியில் ஏதோ ஒரு '' மீனாக்ஷி டிங் கிரி டிங்காலே '' கேட்டுக்கொண்டு பெரியவா அருள் வாக்குகளை படிக்கிறார்கள். ஒரு அக்ஷரமாவது உள்ளே போயிருந்தால் அபூர்வம் அதிசயம்.

ஒரு புதுமாதிரி உத்தியில் கற்பனையில் பெரியவாளோடு பேசுவதாகவும் அவரது அற்புத அருள் வாக்கினை பதிலாக பெறுவதாக இந்த கட்டுரை தருகிறேன். நீங்கள் எப்படி இதை ரசிக்கிறீர்கள் என்று பார்த்து மேலும் தொடரலாம் என்று உத்தேசம்.

காஞ்சியில் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு ஒரு பின் மாலை நேரத்தில் மகா பெரியவாவை தரிசிக்கிறேன். அவர் பார்வை என் மேல் படுகிறது. மெதுவாக அருகே சென்று சாஷ்டாங்க நமஸ்காரம்.

பெரியவா: ''கையில் என்ன பேனா நோட்டுபுஸ்தகத்தோடு வந்திருக்கே ''

''சில சந்தேகங்களை பெரியவா கிட்டே கேட்டு நிவர்த்தி செய்துக்கொள்ள உத்தேசம்''

பெ: '' நீ விடமாட்டியே. சரி கேளு. எல்லோருக்கும் சொல்லு''

''அதுக்குதான் பெரியவா நான் கேக்கறதே''

பெ: ''சரி கேளு.''

''பெரியவா, மனிதன் ஆறு அறிவு படைத்தவன், பேசும் எழுதும் பாடும் சக்தி இருக்கிறது. அதிகம் படிச்ச மனிதன் மற்ற ஜந்துக்களை விட எப்படி வித்யாசமானவன்?''

பெ: ''எத்தனையோ விதமான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனுக்கு மட்டுமே பரமேஸ்வரன் பேசும் சக்தியைத் தந்திருக்கிறான். உலகத்தில் அநேக பாஷைகள் இருக்கின்றன. பேச்சிலிருந்து எழுத்துப் பிறந்து, உலகம் முழுவதும் பல லிபிகளும் இருக்கின்றன. வாக்கை மூலதனமாக வைத்தே எங்கு பார்த்தாலும் பள்ளிக்கூடம், காலேஜ், லைப்ரரி பத்திரிகைகள் எல்லாம் பரவியிருக்கின்றன.
மிருகங்களின் உலகில் காலேஜ் இல்லை. லைப்ரரி இல்லை. பிரிண்டிங் இல்லை. அவற்றுக்கு வாக்குக் கிடையாது. ஆனால் இவையெல்லாம் இல்லாததால் அவை மனிதனைவிட கஷ்ட நிலையில் இருக்கின்றனவா?. அப்படித் தோன்றவில்லை. நமக்கு இருக்குமளவுக்கு அவற்றுக்கு வியாதியில்லை. அவை சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டு தவிக்கிறதில்லை. நேற்று என்ன செய்தோம். நாளைக்கு என்ன செய்வோம் என்ற விசாரம் அவற்றுக்கு இல்லை. அதற்கும் எப்படியோ ஆகாரம் கிடைக்கிறது. ஏதோ விதத்தில் வாழ்ந்து பிழைத்துப் போகிறது. ஒன்றையொன்று அடித்துச் சாப்பிட்டாலும் எல்லா விலங்கு இனங்களும் விருத்தியாகிக்கொண்டே தானிருக்கின்றன.

''பெரியவா, அப்படினா, படிக்காத நம்முடைய மூதாதையர் ஆதிவாசிகள் நம்மைவிட நல்லவர்கள், உயர்ந்தவர்களா?''

பெ: '' மனிதப் பிரபஞ்சத்துக்கே வந்தாலும்கூட காலேஜும் லைப்ரரியும், பிரிண்டிங் பிரஸும் இல்லாத ஆதிவாசிகளைப் பார்த்தால் அவர்கள் நம்மைவிட நிம்மதியாகவும் நல்லவர்களாகவும் இருப்பதாகவே தெரிகிறது. ஆப்பிரிக்கக் காடுகளிலும், அமெரிக்காவில் செவ்விந்தியக் காடுகளிலும் காலேஜும், லைப்ரரியும் இல்லாதது போலவே கோர்ட்டுகளையும் காணோம். அதாவது எழுத்தறிவற்ற காட்டுக்குடிகள், நாகரீகமடைந்த நம் போல் இவ்வளவு குற்றம் செய்வதில்லை.''

' பெரியவா என்ன நினைக்கிறீர்கள், நாகரிகமும் படிப்பும் நல்லது செய்ய உதவ வில்லையா?

பெ: ''நாகரீகமும், அதிக புத்தியும் படைத்த நாம் செய்யத் தகாத செயல்களில் அகாரியங்களில் நூதன கற்பனையுடன் விருத்தியடைந்து கொண்டேயிருக்கிறோம். படிப்பு எத்தனைக்கெத்தனை அவசியமோ அத்தனைக்கத்தனை பாபமும் அதிகமாகயிருக்கிறது. நாகரீகத்தால் எத்தனக்கெத்தனை செல்வத்தைப் பெருக்கிக் கொண்டோமோ, அத்தனைக்கத்தனை அநவரதமும் அதிருப்திப்படும் மனோபாவமும் பெருகியிருக்கிறது. எத்தனை வந்தும் போதவில்லை. தேவை அதிகமாகவே இருக்கிறது. வாக்கும் எழுத்தும் எல்லாவித அகாரியங்களையும் பரப்புவதிலேயே தடபுடலாகப் பிரயோஜனமாகிவருகின்றன. படிப்பு முறை, பத்திரிக்கைகள், புஸ்தகங்கள் எல்லாம் மனிதனுக்கு நிம்மதியும், நிறைவும் தருவதற்குப் பதில் அவனை அதிருப்தியிலும் அகாரியத்திலும் கொண்டு விடுவதாகவே உள்ளன. மனிதனுகக்கு மட்டும் ஸ்பெஷலாக ஸ்வாமி தந்திருக்கும் வாக்குச் சக்தி அநுக்கிரகமா, சாபமா என்றே புரியவில்லை.

இதை யோசித்துப் பார்க்கும்போது ஏன் வாயில்லாத மிருக ஜன்மா தாழ்வானது, மனித ஜன்மா உயர்வானது என்று சொல்லிவந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு மிருகம் பிறந்ததிலிருந்து இறக்கிற வரையில் உள்ளுணர்ச்சி (INSTINCT) மீதே நடப்பதால் அதற்குப் புத்தி பூர்வமாகச் செய்கிற பாபம் எதுவும் இல்லை. மனிதன்தான் அவனை ஒயாமல் கணக்கெழுத வைக்கிறான். எவ்வளவுக்கவ்வளவு படிப்பும் நாகரீகமும் அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு வஞ்சனை, மோசம், பொய் வேஷம் எல்லாவற்றிலும் நிபுணர்களாகி, சித்ரகுப்தனுக்கு நிறைய வேலை வைக்கிறோம்.

''ஒளவையார் ''அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது '' என்று பாடியிருப்பது... பற்றி என்ன நினைக்கிறீர்கள் பெரியவா?''

பெ: 'நர ஜன்மம் துர்லபம்'. அதுவே உயர்ந்தது. என்பது ஏன் என்று யோசித்தேன். யோசனை செய்ததில் மிருக ஜன்மத்தில் உள்ள பெரிய ஒரு குறை தெரிய வந்தது. மிருகங்களுக்குப் பாபம் இல்லாவிட்டாலும் பயம் இருக்கிறது. எப்போது யார் தன்னைக் கொல்வார்களோ என்ற பிராணபயம் கொடிய மிருகத்துக்கூட நிறைய உண்டு. ஆனால் பயமில்லாமல் செய்து கொள்ள மனிதனுக்கு மட்டுமே வழி இருக்கிறது. மிருகத்துக்கு இந்த வழி இல்லை. பயமில்லாமல் செய்து கொள்வது எப்படி? பிறவி இல்லாமல் செய்து கொண்டால்தான் பயம் இல்லாமல் இருக்கலாம். எல்லாம் நாம்தான் என்கிற ஞானம் வந்துவிட்டால் எதனிடமும் பயம் இராது. அந்த ஞானத்துக்குப் பின் சரீரம் விழுந்தால் இன்னொரு சரீரம் எடுக்க மாட்டோம். இந்த ஞானத்தை, அபய நிலையை ஜன்ம நிவிருத்தியை அடையவே மகான்கள் வாக்கைப் பயன்பற்றினார்கள். வேத, வேதாந்த, இதிஹாஸ, புராண, தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வாக்கு இருப்பதால்தானே உண்டாயின.

''படிப்பு, மொழி, அறிவு, இதன் பயனாக மனிதன் என்ன செய்யவேண்டும் என்று பெரியவா அறிவுரை கூற வேண்டும்:
பெ: ''பாஷை, புத்தி இவற்றுக்கு இப்பேர்ப்பட்ட உயர்ந்த பிரயோஜனம் இருப்பதைப் புரிந்து கொண்டபின் ஆறுதலாக இருந்தது. பகவான் தந்திருக்கும் புத்தியால், வாக்கால், பிறருக்கோ தனக்கோ கெடுதல் உண்டாகாமல் எவ்வளவோ நல்லது செய்யலாம். பாபமும், துக்கமும், பயமும் நீங்க வாக்கை ப்பயன்படுத்தலாம். நாம் அப்படியே செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படை பக்தி வாக்கு தெய்வ சம்பந்தமாகப் பயனாக வேண்டும். இதனால்தான் அக்ஷராப்யாச காலத்தில், ஆரம்பிக்கும்போதே நமோ நாராயணாய என்று விரலைப் பிடித்து எழுத வைக்கிறார்கள். பகவான் தான் கொடுத்திருக்கும் வாக்கை இவன் எப்படிப் பிரயோஜனம் செய்கிறான் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறான். லோக க்ஷேமத்துக்கும் ஆத்ம க்ஷேமத்துக்கும் அதைப் பயன் செய்யாவிட்டால், அடுத்த ஜன்மாவில் வாக்கைப் பிடுங்கிக் கொண்டுவிடுவார். அதாவது மிருகமாய்ப் படைப்பார்.''

சரி அப்புறம் வா என்று பெரியவா ஜாடை காட்ட மீண்டும் சந்திக்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...