Friday, September 29, 2017

பஞ்ச ராம க்ஷேத்ரம் - அதம்பார்




யாத்ரா விபரம் - J.K. SIVAN

பஞ்ச ராம க்ஷேத்ரம் - அதம்பார்

சாலையில் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்கள் என்பது சென்னையில் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.

அறுபது வருஷங்களுக்கு முன்பு சென்னை தெருக்களும் அப்படி தான் இருந்தது. பனகல் பார்க்குக்கு எதிரே மூன்று தெருக்கள் கோபதி நாரயணஸ்வாமி செட்டி தெரு, பாண்டி பஜார் தெரு, வேங்கடநாராயணா ரோட் மூன்றுமே அடர்ந்த மர இலை பந்தல் போட்ட தெருக்கள். வெயிலே தெரியாது.
இப்போது சாலையில் நடக்கவே இடமில்லை மரத்துக்கு ஏது இடம்?

அச்சுத மங்கலத்திலிருந்து 5 அல்லது 6 கிலோ மீட்டர் தூரத்தில் இப்படி அழகான மரங்கள் நெரிசலாக இரு மருங்கிலும் இருக்கும் தெருவில் ஸ்ரீ வாஞ்சியம் சென்றோம். அங்கே வாஞ்சிநாதர் ஆலயம் சென்று தரிசித்தோம். இந்த ஆலய தரிசனத்தை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். கோவிலுக்கு எதிரே ஒரு பிராமணர் குடும்பத்தோடு மெஸ் நடத்துகிறார். யாரைக்கேட்டாலும் அய்யர் மெஸ் என்றால் சொல்வார்கள். அவரிடம் சூடான கனமான புளிக்காத மாவு தோசை ஒன்று சாப்பிட்டாலே சென்னை ஹோட்டல்களில் 3 காகித தோசை சாப்பிட்ட கணக்கு ஆகிவிடும். காபி போட்டு கொடுத்தார். காலை பசி அடங்கியது. அங்கிருந்து அதம்பார் சென்றோம்.

அச்சுதமங்கலத்திலிருந்து 7 கி.மீ. நன்னிலத்திலிருந்து சுமார் 8 கி.மி தூரத்தில் இருக்கிறது அதம்பார் .

ஒரு விஷயம் தெரிந்திருக்குமா உங்களுக்கு?

எத்தனையோ ராமர் கோவில்கள் இந்தியாவில் இருந்தாலும் திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து ராமர் கோவில்கள் அதி விசேஷமானவை. அவை பஞ்ச ராம க்ஷேத்ரங்கள் எனப்படும். அவற்றில் ஒன்று தான் நாங்கள் சென்ற அதம்பார் கோதண்ட ராமர் ஆலயம். மற்ற நான்கு ராம க்ஷேத்ரங்கள்: தில்லை விளாகம் (வீர கோதண்ட ராமர்) , வடுவூர் கோதண்ட வில்லேந்திய அழகிய ராமன்), பருத்தியூர்(ஸ்ரீ ராமர்), முடிகொண்டான்(ராமர் கிரீடத்துடன் காணப்படுவதால் முடி கொண்டான்) என்னும் ஊர்களில் இருக்கும் ராமர் ஆலயங்கள்.

ராமர் சம்பந்தப்பட்ட ராமாயண நிகழ்வுகள் நடந்த ஊர்கள் அருகே அருகே இங்கு இருக்கின்றன. உதாரணமாக

அதம்பார் : (ஹதம் பார்) - ராமர் பொன்மானாக வந்தது மாரிசன் என்ற ராக்ஷஸன் என்று தெரிந்து அவனை ''ஹதம் செய்கிறேன் பார் '' என்று சொல்லியது தான் இப்போது அதம்பார்.

கொல்லுமாங்குடி - மாரிச்ச மானை கொன்றது (கொல்லு மான் குடி)

நல்லமாங்குடி -- சீதைக்கு மாரிச்சன் பொன் மானாக வந்தது ''ஆஹா இந்த நல்ல மான் என்று சீதை மயங்கிய இடம் ''நல்ல மான் குடி''

வலங்கை மான் : ராமன் தன்னை பிடிக்க வருகிறான் என்று மாரிசன் வலப்பக்கமாக ஓடியது ''வலம் கை மான்'' -- சோத்து கை பக்கம் சென்னை பாஷையில்.
பாடகச்சேரி -- ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது சீதை தனது ஆபரணமாகிய பாதகத்தை கீழே எறிந்தது ''பாடக சேரி''

தாடகந்தபுரம் : தாடகை ராமனிடமிருந்து லக்ஷ்மணனிடமிருந்து தப்பி ஓடி ஒளிந்த இந்த இடம் தாடகாந்த புரம்.

இது போல் ராமர் சம்பந்தப்பட்ட ஊர்கள் ஏகப்பட்டது இருக்கிறது. யாராவது ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ?

17ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அதம்பார் கோதண்டராமஸ்வாமி கோவில் புதுசாக இருக்கிறது. 2002ல் ஸ்ரீ க்ரிஷ்ணப்ரேமி வந்து புணருத்தாரணம் பண்ணி மஹா ஸம்ப்ரோக்ஷணம் ஆகியிருக்கிறது. வைகானச ஆகம முறை வழிபாடு. ரங்கநாதர் ஆலயம். அனால் ராமர் கோவில் என்றால் தான் எல்லோருக்கும் தெரிகிறது.

கோதண்ட ராமர் இங்கே வடுவூர் ராமன் போலவே அழகன். கிழக்கே பார்த்து அருள் பாலிக்கிறார். ராமர், சீதை, லக்ஷ்மணன், ஹனுமான். மாரீச மான் காட்சி அளிக்கிறார்கள். ரங்கநாயகி தாயார் ரங்கநாதர் சந்நிதி இருக்கிறது. குட்டியாக கருடாழ்வார் சந்நிதியும் பிரகாரத்தில் பார்க்கலாம்.

உள்ளூரில் போஸ்ட்மாஸ்டர் ஆக பணி புரியும் ஒரு நல்லாத்மா இந்த ஆலயத்திற்கும் பொறுப்பேற்று தினசரி வழிபாடுகளை கவனித்துக் கொள்கிறார். நாங்கள் அவரைத் தேடி சென்ற போது அவரே வழியில் எதிர்பட்டார். வீட்டிலிருந்து பிரசாதங்களை தயார்செயது கொண்டு வந்து தினமும் ராமருக்கு ரங்கநாதருக்கு மற்ற தெய்வங்களுக்கு ஆராதனை செய்கிறார்.

ராமர் நல்ல சில ஜீவன்களை இன்னும் ஆங்காங்கே விட்டு வைத்திருக்கிறார்



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...