Thursday, September 14, 2017

பாட்டி சொல் தட்டாதே




பாட்டி சொல் தட்டாதே  - 4  J.K. SIVAN 

சில பேர் சொன்னால் சொன்னதுதான். செய்தால்  செய்ததுதான்.  துளியும் மற்றவர்கள் அபிப்ராயத்தை பற்றி  கவலை கொள்ளமாட்டார்கள். துளியும் வளைந்து கொடுக்க மாட்டார்கள். பிடித்த பிடியிலிருந்து  கொஞ்சமும் அசையமாட்டார்கள். ராஜாவுக்காக,  எஜமானுக்காக  அப்படிப்பட்ட சில உண்மை ஊழியர்கள்  இருந்தார்கள். என்னதான் துன்பம் எதிர்ப்பு வந்தாலும் அதை தாங்கி  தனது உயிரையே கொடுத்து அவனுக்கு உழைப்பார்களே  தவிர  எதிரிக்கு  இடம் கொடுக்கமாட்டார்கள். பணிந்து போகமாட்டார்கள். இது அவர்கள் நேர்மை, தியாக உணர்ச்சியை காட்டும்.  இது எதுபோலவாம் தெரியுமா?   பாட்டி சொல்கிறாள் கேளுங்கள்: எப்படி ஒரு பெரிய கல் தூண்,  அதன் மீது எத்தனை தான் பாரத்தை, சுமையை வைத்தாலும் வளையாது தாங்குமோ,  முடியவில்லையென்றால் உடைந்து நொறுங்குமோ  தவிர பணிந்து வளையாது அல்லவா. அதுபோல் மேலே சொன்ன மக்கள்.

எப்படி பாட்டியால் இவ்வளவு அருமையாக சிந்திக்க முடிந்தது?

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான்.

இன்னும் ஒரு அற்புதமானபாட்டியின்  சிந்தனையை ரசிப்போமா?  ஒரு குளம்  குட்டை இருக்கிறது. நீர் வற்றிவிட்டது.  அதில் வளரும் ஆம்பல் செடி எந்த அளவுக்கு படரும் என்றால் தண்ணீர் மட்டம் அளவுக்கு தான். ஆறு அடி  ஏழு அடி  உயரம் அதனிடம் எதிர்பார்க்கக்கூடாது. நீர் உயர்ந்தால் வேண்டுமானால் அந்த அளவுக்கு தானும்  படரும்.   இதை பார்த்த பாட்டிக்கு என்ன தோன்றியது?   வாஸ்தவம்.  ஒருவன் கற்றுணர்ந்த ஞானம் அவன் எதை கற்றானோ அந்த அளவுக்கு தான் இருக்கும். தனது வாழ் நாள் முழுதும் குமுதம் தினத்தந்தி தந்த ஞானத்தோடு நிறுத்திக் கொண்டவனிடம் என்ன உயர்ந்த தத்துவம் பேசமுடியும், அறியமுடியும்.  ஏதோ முன் ஜென்மங்களில் புண்யம் பண்ணி இருந்தால் அந்த அளவுக்கு இந்த ஜென்மத்தில் பொருட்செல்வம், அருட்செல்வம் இருக்கும். தந்தை தாய் முன்னோர் நற்குணம் பொருந்தியவர்களாக இருந்தால் அந்த அளவுக்கு அவனுக்கும் நற்குணங்கள் வாய்க்கும் என்கிறாள் பாட்டி.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.7


பஜ கோவிந்தத்தில் ஆதி சங்கரர் எப்படி நல்லோர் நட்பு நம்மை உயர்த்துகிறது என்பதை சத்சங்கத்வே என்ற ஸ்லோகத்தில் சொல்வாரே அதை நினைத்து தான் பாட்டி ஒரு  அற்புதமான பாடல் எழுதி இருக்கிறாள் மூதுரையில்.

எங்கிருந்தாலும் தேடி நல்லவர்களை கூடு. அவர்களை தரிசிப்பதே நன்மை பயக்கும். அவர்கள் பேச்சு, உபதேசங்களை கேட்பது  இன்னும் சிறந்தது. அவர்களை பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது சந்தோஷம் இன்னும்  அதிகமாக கூடுகிறது அல்லவா?  அவர்களோடு சேர்ந்தே இருந்தால்??  ஆஹா இதை விட அருமையான பாக்கியம் வேறு ஏதாவது உண்டா?   கெட்டவர்கள் ஸ்நேஹம், தீயவர் நட்பு பற்றி ஒரு எழுத்தோ வார்த்தையோ கூட பாட்டி சொல்லவில்லை என்பதிலிருந்தே தெரியுமே அது தேவையற்றது என்று. அதற்கென்றே தனியாக இதோடு சேர்க்காமல் ஒரு பாடல் அடுத்து எழுதியிருக்கிறாளே.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.8


வேண்டவே வேண்டாம் அந்த ஆள்  சிநேகிதம்.  கண்ணாலே பார்த்தாலே பத்து ஜன்மத்துக்கு பாபம் . அவன் பேச்சை வேறு கேட்கவேண்டுமா. உடனே டி வியை அணை த்து விடு. இந்த மாதிரி ஆசாமிகளை பற்றி ஒரு வார்த்தை மற்றோரிடம் பேசுவதே பாபத்தை  நம் மீது ஒட்டி விடும்.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.9

இனி அடுத்து பாட்டி சொல்வதையும் கேட்போமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...