Thursday, August 3, 2017

நின்னை சரணடைந்தேன்.



நின்னை சரணடைந்தேன்....J.K. SIVAN .

என்னமோ உங்களோட ''அவனை''ப் பற்றி ஒரு சில நிமிஷம் பேச ஒரு எண்ணம் வந்ததால் இது உங்கள் கண்களில் இப்போது படுகிறது.

இதுவும் அவனுடைய திருவிளையாடல் என்றே ஏற்றுக்கொள்ளலாம்.

நிறைய பேர் சொல்லி, நீங்களே படித்து, கேட்ட விஷயம் தான். அதனால் என்ன. நாம் தான் அதன் படி நடப்பதே இல்லையே. எனவே திரும்ப திரும்ப சொல்வதனால் என்றாவது ஒருநாள் யாருக்காவது ''உள்ளே'' போகாதா.

வாசலில் ''துடைப்பம் துடைப்பம்'' என்று படை படைக்கும் வெயிலில் இடுப்பில் குழந்தையும், தலையில் துடைப்ப கட்டும்,காலில் செருப்பு இல்லாமல் கத்திக்கொண்டே போகிறாளே. எல்லாருமா அதை கேட்டு உடனே வாங்குகிறார்கள். யாருக்கு துடைப்பம் தேவையோ அவர்கள் அவளை நிறுத்தி கூப்பிட்டு தேவையான துடைப்பம் பொறுக்கி எடுத்துக்கொண்டு, எவ்வளவு குறைந்த காசு அவளுக்கு கொடுக்க முடியுமோ அதைக்கொடுத்து பேரம் பேசி வாங்கிய சந்தோஷம் அடைகிறோம். பாவம் ரெண்டு ரூபாய் அவளுக்கு கேட்டதற்கு மேல் கொடுத்தால் என்ன? சரவண பவனில் அரைவயிற்றுக்கு சாப்பிட்டுவிட்டு ஒட்டிக்கு ரெட்டியாக சந்தோஷத்தோடு யூனிபார்ம் ஆசாமி கொண்டுவந்து வைத்த அட்டைக்குள் இருக்கும் பில்லுக்கும் மேலாக சில பத்துரூபாய்களை வைக்கவில்லையா ? என்று திருந்துவோம்?


உன்னுடைய சுமை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக அவன் மேல் போடு. அனைத்தையும் அவன் தாங்குவான். அத்தனை சக்தி அவனுக்கு உண்டே.

மானா மதுரைக்கு டிக்கெட் வாங்கி மாடு சுமக்கும் மூட்டையைக் கொண்டு வந்துவிட்டாய். எப்படியோ மூச்சைப்பிடித்து அதை ரயில் வண்டிக்குள்ளும் கொண்டு தள்ளி விட்டாய். மானா மதுரைக்கு யார் அதை சுமந்தது. நீயா. ரயிலா? அது போலவே உன் சுமையை இறக்கிவிட்டால் ' அவன்' தூக்கிக் கொண்டு வருவான்.

''இப்படிச்செய்ய வேண்டும், அதைச்செய்'' என்று நீ பிளான் போட்டதெல்லாம் நடப்பது அவன் முடிவு. வண்டிக்குள் உட்கார்ந்து ஏன் தலையில் பாரத்தை ஏற்றிக்கொள்கிறாய்? உன்னையே தூக்கிச்செல்லும் அவன் உன் பாரத்தையுமா சுமக்க மாட்டான்?

எல்லாம் அவன் செயல் என்று நம் முன்னோர் அதனால் தான் ''பாரத்தை அவன் மேல் போடு''என்பார்கள்.
அப்படி, எல்லாமே நம்மால் ஆவது ஒன்றுமே இல்லை. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பரிபூர்ண நம்பிக்கை வந்துவிட்டால் தெளிவு மனதில் பிறக்கும். உண்மை விளங்கும்.

இப்படி சரணடைய ரெண்டுவிதமான வழிகள் உண்டு. ஒன்று, ''நான்'' என்பது தனியாக இயங்கும் ஒரு சக்தி இல்லை. அவனிடமிருந்தே வரும் தூண்டுதல், இயக்கப்படும் ஒரு வஸ்து என்று புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ''அன்பே சிவ'' மாக இரண்டறக்கலந்துவிடுவது, மாறிவிடுவது. இது எளிதல்ல. எல்லார்க்கும் முடிந்ததுமில்லை. மிகுந்த பிரயாசை வேண்டும். மனம் பக்குவமடையவேண்டும். அது என்றோ?

மற்றொன்று, சதா சர்வகாலமும் அவனால் தானே நானே இயங்குகிறேன். என்னை ஆட்டுவிப்பவன் அவனல்லவோ என்று சிந்தையைத் தேக்கி அவனைச் சார்ந்திருப்பது.

அவனே வழிகாட்டி. என் முயற்சிகள் அவன் அருளால் வெற்றிபெறட்டும் என்ற அசையாத நம்பிக்கை. இதால் அகம்பாவம் அடங்கி விரைவில் மறையும்.

ரெண்டு வழியுமே கொஞ்சம் கரடு முரடான பாதை தான். மனக் கட்டுப்பாடு தான் இதற்கு முள் குத்தாமல் இருக்கும் பாத ரக்ஷை.

ரெண்டு வழியிலும் கடைசியில் பலனாகப் பெறுவதே ஞானம். முக்தி எனப்படும். அப்படி அதைப் பெறுபவன் ஞானி. முக்தன்.

படிப்பு, அந்தஸ்து, குலம் எல்லாம் இதில் சேர்க்கையில்லை.

பக்தி வேறு முக்தி வேறு அல்ல. பக்தன் எப்போதும் தான் வேறு, பகவான் வேறு என்ற உணர்வுடையவன்.

இறைவனை வேறு நினைவின்றி சிந்திப்பவன். அவனை நாடுபவன். தேடி அடைபவன். மற்ற எண்ணங்களை இந்த ஒரு எண்ணத்தால் அழுத்தி அமுக்கி அழிப்பவன்.

அந்த பக்தி முத்திப்போய் இறைவன் தான் தன்னுள்ளே ''தானா'' னவன் என பின்னர் அவனை உணரவைகிறது. அவன் தானே எப்போதும் என்னை கண்காணிக்கிறான், பாதுகாப்பவன் என்ற உணர்வு மேலிட்டு ஆனந்தம் பெற வைக்கிறது.

''யாமிருக்க பயமேன்?'' என்று அந்த சக்தி அவனை அறிவுறுத்தி செயல் பட வைக்கும். பின் எதைக்கண்டும் அஞ்சத்தேவையில்லையே.

எனவே ஞானத்தின் தாயே பக்தி தான். உலகத்தில் எதற்காக இவ்வளவு துக்கங்கள், சோகங்கள், துன்பங்கள் நம்மை பாதிக்கின்றன? காரணத்தை உன்னிப்பாக பார்த்தால், நமது எண்ணங்கள், முடிவுகள்,செயல்கள் இவை ஒன்றே தான் அனைத்துக்கும் காரணம் என புரியும். மாயை கண்ணை மூடுகிறது, மதியை மயக்குகிறது. இறைவன் ''உனக்கு எதை வேண்டுமானாலும் எடுத்துக்கோ'' என்று கொடுத்ததில் நாம் எதை எதிர் பார்த்து ஆசையாக எடுத்துக்கொண்டது தான் நம்மை வாட்டுகிறது என்பது புரியும்.

எதிர்பார்ப்பு, விருப்பம், சுயநலம், தன்னிச்சை இவையின்றி எல்லாம் அவன் விருப்பபடியே நடக்கும் என்று விட்டது தான் அந்த சர்வ வல்லமை பொருந்திய ஜகத் ரக்ஷகன் செயலால் நம்மை தூக்கி நிலை நாட்டுகிறது.

சுதந்திரமாக செயல் படும் யாவும் அவன் பார்வையில் தான் நடக்கின்றன. வீடு பற்றியெரிகிறது. தீயணைக்கும் படை அதை நாடினால் தான் தீ அணைக்கப்படும். செயல்படும். என்னால் முடியுமே என்ற முடிவு இறைவனை வேறு படுத்துகிறது.

செயல் பாடுகள் எல்லாமே அதற்குப்பின்னால் காரணமாக நிற்கும் அந்த சூத்ரதாரியின் எண்ணப்படி தான் என்ற உணர்வு அவனை நமக்கு அருகே கொணர்கிறது. திறம்பட அந்த செயல் நடக்கிறது. பொறுப்பு ''அவன'' தாகி விட்டதல்லவா?

பகவான் ரமண மகரிஷியிடம் ஒரு முறை ஒரு ராணி கேட்டாள் : '' பகவானே எனக்கு எல்லாமே இருக்கிறது, எதெல்லாம் தேவையோ அவற்றை அடைந்தேன். மன நிம்மதி மட்டும் இல்லையே சுவாமி! ஏதோ அதை வர விடாமல் தடுக்கிறதே அது என் விதிதானே? ''

''உனக்கு நீ விரும்பியதெல்லாம் கிடைத்து விட்டது என்றாயே.''

''விதி என்பது என்ன? சுவாமி ''

அப்படி ஒன்றுமே இல்லையே. அவனிடம் சரணடை. எல்லாம் சரியாகிவிடும். அவன் பார்த்துக்கொள்வான். உனக்கு பளு இருக்காதே. விதி அப்பறம் எது, அது என்ன செய்யும்?''

''என்னால் முழுதும் அவனிடம் சரணடைய இயல வில்லையே?''

''முழுமையாக முடியாவிட்டால் என்ன. சிறிது சிறிதாக பழக்கப்படுத்திக்கொள்ளேன்.. போகப்போக முழுமையும் உன்னை இழந்து அவனை அடைவாய்.

அதுவரை நிம்மதி இருக்காதே. மன அமைதி இருக்காதே. கொஞ்சம் கொஞ்சமாக சரணடைந்தால் விதியை வெல்ல முடியுமா சுவாமி?'

''முடியுமே. உனக்கே தெரிய வருமே.

'' விதி பூர்வ ஜன்ம கர்ம பலனால் தான் வருகிறதா சுவாமி'?''

''அவனை சரணடைந்தால் விதியை நிர்ணயிப்பது அவன் வேலையாகிவிடும்''

''அது அவரால் முடியும் என்றபோது, அது ஏன் தலை தூக்குகிறது?''

'' விதியும் அவனிலேயே அடக்கம் என்பதை புரிந்துகொள். எதுவும் தலை தூக்காது . பூனைக்குட்டியாக இரு. தாய்க்குத் தெரியும் உன்னை எப்படி வலிக்காமல் கவ்வ வேண்டும், எங்கெல்லாம் தூக்கிச்செல்ல வேண்டும் என்று. நீ தொங்கிக்கொண்டு இரு அது போதும்''

ஒரு பக்தை கேட்டாள் ரமண மகரிஷியை. '' சுவாமி, எனக்கு அடிக்கடி சிவன் தரிசனம் கிடைக்க வேண்டும்"

''ஆஹா தாராளமாக இறைவனை வேண்டி சரணடைந்து கேள். அப்படிச் செய்வதும்


செய்யாததும் அவன் முடிவு. புரிந்துகொள். இறைவனை சரணடைவது அவனை அதிகாரம் பண்ணுவதற்கல்ல . நீ கேட்டதை அவன் கொடுக்க அல்ல. உனக்கு எது தேவை, எது உனக்கு வேண்டும் என்பதை உன்னைவிட அவன் தெளிவாக அறிவான். அம்மா பூனை பார்த்து பார்த்து செய்யவேண்டியதை செய்யும். குட்டிப்பூனை பேசாமல் பால் குடித்துவிட்டு தூங்கிக்கொண்டு நிம்மதியாக இருக்கும். நீ சுகமாக இரு. இது தான் பக்தி''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...