Friday, August 11, 2017

​சந்தேகம் தீர்ந்ததா ?




​சந்தேகம் தீர்ந்ததா ? J.K. SIVAN

''நம்மை ஆளுவதற்கு இத்தனை பேர் ஆவலாக துடிக்கிறார்களா?' தாத்தா'
' கோபாலசாமி பேப்பரை படித்துக்கொண்டே என்னை பார்த்தான்

.'நம்மை வைத்து அவர்கள் ஆண்டு அனுபவிக்க தம்பி'' என்கிறார் தாத்தா
''எப்படி தாத்தா?

''இலை இல்லாமல் எப்படிடா சாப்பிட முடியும்? சாப்பிட்ட பிறகு இலை ​ எதற்கு?

​தாத்தா சத்சங்கம் என்கிறீர்களே அது என்னது? கோபாலசாமி தாத்தாவை கேட்டான்.

''சொல்கிறேன் கேள்.​​

மனத்தின் பிரதி பிம்பம் தான் மனிதன். மனசு தான் மனுசன். மனதை நல்வழியில் நல்ல சிந்தனைக்கு தூண்ட சத் சங்கம் மிகவும் அவசியம். சேர்க்கை என்போமே அது. நல்லவனோடு சேர்ந்தால் நல்ல பழக்கம். தீயவனோடு சேர்ந்தால் கேட்கவே வேண்டாம்.

இரும்புத் துண்டு சிறிது நேரம் காந்தத்தின் பக்கம் இருந்தால் அதற்கும் காந்த சக்தி வந்துவிடும். கொதிக்கும் நீரை பனிக்கட்டியின் மேல் ஊற்றினால் பனி உருகி ரெண்டுமே சாதாரண குளிர் நீராகிறது.

கதைகளில் ஒரு மந்திரக்கல் வருமே அது எதன் மேல் பட்டாலும் அந்த வஸ்து பொன்னாகும். ​இது சத் சங்கம்.​ அழுகிய ஒரு பழம் இருந்தால் போதும் கூடையில் அத்தனை பழமும் அழுக ஆரம்பிக்கும். ​இது தீயவர் நட்பு.​
​​
மனிதர்களும் இதற்கெல்லாம் சோடை போனவர்கள் இல்லையே. ஆங்கிலத்தில் சொல்வார்களே உன் நண்பனை காட்டு நீ யார் என்று சொல்கிறேன் என்று. அது வாஸ்தவமானது. கூட்டத்தில் ஒரு நல்லவன் இருந்தால் அனைவரும் நல்லவனாக மாற சான்ஸ் உண்டு. ரெண்டு பேர் கொஞ்சநாள் சேர்ந்திருந்தால் ரெண்டு பேர் குணமும் ஒன்றாகவே இருக்க முடிகிறதே. ரெண்டு பேருமே இணைபிரியாத நண்பர்கள் ஆகின்றனர்.

இதற்கு மூல காரணம் ஒருவன் விடும் மூச்சு. பிராணன். அது ஒருவன் மற்றொருவனிடம், மிருகத்தினிடம், பறவையிடம் பரிமாறி
க்கொள்ளும்போது ரெண்டு ப்ராணன்களும் ஒன்று சேர்கிறது. இடைவெளியில் இருக்கும் ஈதர் என்பது உள்ளே இருக்கும் ரெண்டு ப்ராணன்களுக்குள்ளும் பிரதிபலிக்கும் உணர்வுகளை ஒன்று சேர்க்கிறது. மஞ்சளும் நீலமும் ஒன்று சேர்ந்து பச்சையாகிறது.

மஞ்சள் கறுப்போடு சேரும்போது ப்ரௌனாக மாறுகிறது. இதை எல்லாம் நன்கு அறிந்து தான் நமது முன்னோர் நல்ல சகவாசம் வேண்டும் என்று கவனமாக இருந்தார்கள். கண்டவர்களோடு சேர சேர்ந்து விளையாட கூட அனுமதிக்கவில்லை. ஆரம்பத்தில் சொன்ன சத் சங்கம் என்பது இது தான்.

மந்தரையின் சேர்க்கை விடாது இருந்ததால் கைகேயி என்ற உத்தம பெண்ணின் குணம் மந்தரையின் குணமாக சுலபத்தில் மாறியது. தசரதனையும் உலுக்கியது. ராமன் காட்டுக்கு போனான். சில ரிஷிகள் ஆயுர்வேத தவ வலிமையால் வயதற்று வாழ்ந்தனர். இருக்கும் இடம் விட்டு மலைமீதிலிருந்து இறங்கி நதியோரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்தனர். அங்குள்ள அண்டை அசலில் இருந்த மக்கள் கூட பழகியதில் அவர்களும் மற்றவர்கள் போல் வயதானவர்களானார்கள் என்று ஒரு கதை உண்டு.

இதே போல் நல்ல சகவாசத்தால் ஒருமனிதன் உயர்ந்த மெச்சத்தகுந்த குணத்தைப் பெறுவதும் நிகழ்கிறது. ராமன் கால் பட்டதுமே கல்லாயிருந்த அஹல்யா ரிஷி பத்னியாக மீண்டும் மாறினாள். அர்ஜுனன் கீதா ஞானம் பெற்றது கிருஷ்ணனோடு பழகியதால்.

அசத்தியம், அசத் விஷயங்கள் நிரம்பியவர்களின் சகவாசம் உடல் உள்ளம் ரெண்டையுமே பாதிக்கும். அழிவுக்கு கையைப் பிடித்து​ அழைத்துப்​ போகும்.
சத்சங் என்றால் தாடி மீசை காவி ஜடை கொண்டவர்கள் நட்பு என்று கொள்ளக்கூடாது. வேதங்களை​ மந்த்ரங்களை கேட்பது, தூய எண்ணங்களை அள்ளித்தரும்​ நிகழ்ச்சிகளை நாடுவது கூடத்தான். நல்ல புத்தகங்களை படிப்பதும் அவற்றில் சிந்தனை கொள்வதும் சத் சங்கம் தான். சான்றோர் சகவாசத்தால் உள்ளே ஒரு பாசிடிவ் விளைவு ஆத்மாவில் தோன்றும்.

தாயே எனக்கு நல்லோர் நட்பு கிடைக்க அருள் செய் என்று வேண்டுகிறோம். இருளிலிருந்து ஒளிமயத்துக்கு அழைத்துபோ
(தமஸோமாம் ஜோதிர் கமய;)​ என்கிறோம் . நாம் எப்படிப்பட்டவர்கள் சத்சங்கம் பக்கமா எதிர்மறையா என்பதை நமது செயல்கள்
விளக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுகிறோம், ஆத்ம விஷயங்களில் நேரம் செல்கிறது, த்யானம் , ஜபம், செய்கிறோம். போதை, குடி, நாக்கின் ருசிக்கு அடிமையாகி​ பார்ட்டிகள் கிடைத்தால் விடுவதில்லையே அவற்றைத் தேடிப்போகிறோமா என்று கவனித்தால் விடை கிடைக்கும். மற்றவர் யாரும் உன்னைப்பார்த்து நீ நல்லவன் என்று சொல்ல எதிர்பார்க்க வேண்டாம்.''​
​''​உன்னையே நீ எண்ணிப்பார்''​ ​​ என்கிறோமே அது​ இது தான்.
​''​நமக்குள்ளே ரெண்டு ஓநாய்கள் உள்ளன என்று சொல்கிறாயே என்ன தாத்தா அது? உண்மையிலேயே ரெண்டு நமக்குள்ளே இருக்கா?

​''​ஆமாம் கோபாலசாமி,​ ரெண்டுக்கும் எப்போதும் கொலை சண்டை நடக்கிறது. எப்போதும் தான். முதல் ஓநாய் ரொம்ப மோசமானது. அது தான் கோவம், பொறாமை, பேராசை,​ ​துக்கம், திமிர், அழுத்தம், பொய் எல்லாம் உண்டாக்குகிறது. மனதை இதால் நிரப்புகிறது. ரெண்டாவது இருக்கிறது பார், அது சாது, நல்லது. நம்பிக்கை, அமைதி, அன்பு, சந்தோஷம், உண்மை, தான தர்மம்,​ தாராளம், இதெல்லாம் உண்டாக்கி மனதையும் இதயத்தையும் நிரப்புகிறது. ஆனால் ரெண்டுக்கும் சண்டை. நான் தான் நிரப்புவேன் என்று. ''

''எது தாத்தா ஜெயிக்கும்?''​

''நீ எதுக்கு சாப்பாடு போட்டு வளர்க்கிறாயோ அது''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...