Thursday, August 31, 2017

'' சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது!'' - 2




அமுதன் ஈந்த ஆழ்வார்கள் J.K. SIVAN


'' சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது!'' - 2

சிவ வாக்கியரை பேயாழ்வார் நாராயணனின் மகத்வம் உணர வைத்து வைணவராக மாற்றி திருமழிசை ஆழ்வார் என்று நாமகரணம் செய்தார் என்று சொல்வதுண்டு. ஸம்ஸ்க்ரிதத்தில் மழிசை என்பது 'மஹீஸாரம்' என்று பெயர் கொண்டது. திரு மழிசை மஹீஸார க்ஷேத்ரம் " (பூமிக்கே ஸாரமான ஊர்) என்று புகழ் பெற்றது.

மஹீஸாரத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் திருமழிசை ஆழ்வாருக்கு பக்தி ஸாரர்! என்றும் பேயாழ்வார் நாம மிட்டார். .ஆழ்வார் கூடவே இருக்கும் அவரது இளைய சகோதரன் கணிக்கண்ணன் ஆழ்வாரின் பிரதம சிஷ்யனானான். இனி திருமழிசை ஆழ்வார் என்றே அழைப்போம்.

ஒரு முறை அவர் காஞ்சீபுரத்துக்கு வந்து அங்கே வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். அங்கேயிருக்கிற ஒரு பெருமாள் கோவிலில் பாசுரம் பாடிக் கொண்டும், உபதேசம் பண்ணிக்கொண்டும் அவ்வப்போது அப்படியே யோக ஸமாதியில் ஆழ்ந்து கொண்டவாறும் இருந்தார்.

ஒரு வயதான பெண்மணி உடம்பு முடியாமல் பிரதி தினமும் ஆழ்வார் பூஜை செய்யும் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு விடாமல் தொண்டு செய்வது கண்டு மகிழ்வுற்ற ஆழ்வார் அவளுக்கு இளமை திரும்ப பெருமாளிடம் வேண்டுகிறார். என்ன ஆச்சர்யம். அழகிய யுவதியாக அந்த முதியவள் மாறுகிறாள். இந்த செய்தி காட்டுத்தீயாக எங்கும் பரவி அந்த ஊர் அரசன் காதிலும் புகுந்தது. பல்லவ ராஜா அவளது அழகில் மயங்கி அவளை மணக்கிறான். அவள் மூலம் அவள் எழில் ரகசியம் அறிகிறான். அந்த ராஜாவுக்கும் இப்போது தனக்கும் இளமை திரும்ப வேண்டும் என்ற ஆவல் வந்து, அவள் மூலம் அந்த கோவிலுக்கு வருகிறான்.

பெருமாளை வழிபடும்போது கணிக்கண்ணன் இனிய அழகு தமிழில் ஆழ்வார் இயற்றிய செவிக்கினிய பாசுரத்தை பாடிக்கொண்டிருந்ததால் அதில் மயங்கினான்

''ஆஹா என்ன அற்புதமாக பாடினீர்கள்'''இந்த பாசுரத்தை நீங்கள் நன்றாக வெகு இனிமையாக இயற்றி இருக்கிறீர்களே''

''இல்லை மஹாராஜா, இது என் குருநாதர் ஆழ்வார் இயற்றியதை தான் பாடினேன் .''

''ஓ அப்படியா எங்கே அவர். அவரைக் கண்டு என் மீதும் புகழ்ந்து இப்படிப்பட்ட ஒரு சில பாடல்களை இயற்ற சொல்லவேண்டும். அதை நீங்கள் பாடவேண்டும் '

''மன்னிக்க வேண்டும் மஹாராஜா, '' பெருமாள் மீதன்றி மற்றவர் மேல் புகழாரம் பாடும் வழக்கம் எங்கள் குருநாதருக்கு இல்லை. எனக்கும் இல்லை '' என பவ்யமாக மறுத்தான் கணிக்கண்ணன்''. தனது ஆணையை மீறியதால் கணிக்கண்ணன் மீது ராஜாவுக்கு கடுங் கோபம்.

ராஜாவுடன் மந்திரியும் கூட இருந்தான்.

''மந்திரி, இதை கவனித்தாயா? நமது நாட்டின் பிரஜை ஒருவன், அதுவும் ஏழைப் புலவன், இந்த கணிக்கண்ணன் என்னை அவமானப் படுத்திவிட்டான்? இவனை தண்டிக்காமல் விடக்கூடாது. ஆனால் அவன் அறியாமையால் செய்த பிழைக்காக அவன் மீது கருணை கொண்டு இன்னுமொரு வாய்ப்பு தருகிறேன். நாளை காலைக்குள் இவன் என் மீது பாட்டியற்றி பாட வில்லை என்றால், நாளையே இவன் இந்த ஊரை விட்டே வெளியேற வேண்டும். இல்லையேல் அவனுக்கு சிரச்சேதம்'' என்று உத்தரவு போட்டுவிட்டு சென்று விட்டான்.

கணிக்கண்ணன் அதிர்ந்து போனான். தன் குருவான திருமழிசை ஆழ்வாரிடம் சென்று நடந்ததை சொன்னான். பிறகு அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி "ஸ்வாமின், நான் உங்கள் நிழல், எவ்வாறு உங்களை விட்டு பிரிந்து செல்ல முடியும்'? ' என்றதும், ஆழ்வார் அமைதியாக பெருமாளை நோக்கினார்

'என்ன பார்க்கிறாய்?''என்றான் பரமாத்மன். ஆழ்வார் பதில் சொன்னார் ஆண்டவனுக்கு:

''கணிக்கண்ணன் போகின்றான் காமரு பூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா- துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந் நாகப்பாயை சுருட்டிக் கொள்''

"ஹே!! நாகசயனா, என் அருமை தம்பி, ஸ்ரீ வைஷ்ணவன், கணிக்கண்ணன் இந்த ஊரை விட்டு போகப்போகிறான். , அவனின்றி நான் இல்லை. எனவே நானும் போகிறேன், நீயின்றி நானில்லை என்பதால் நீ என்ன செய்கிறாய் . உடனே நீயும் சட்டு புட்டு என்று உன்னுடைய இந்த ஆதிசேஷ நாக படுக்கையை சுருட்டி கொண்டு ஐந்தே நிமிஷத்தில் கிளம்பு. மூவருமே இந்த ஊரை விட்டு செல்லலாம்" என்று ஆர்டர் போட்டார்!

அவர் சொன்னவண்ணமே செய்தான் சேஷ சயனன்.

கணிக்கண்ணன் நடக்க அவன் பின்னே திருமழிசை ஆழ்வார் தொடர, அவர்கள் பின்னே தனது சேஷ சயன படுக்கையை தோளில் தூக்கிக் கொண்டு பெருமாள் ஆகிய மூவரும் காஞ்சியை விட்டு அகன்றனர்.
ஓரிரவு ஓரூரில் தங்கினார்கள். அதுவே காஞ்சியில் இருக்கும் ஓரிக்கை என்னும் தலம். அந்த ஓரிக்கையில் தான் காஞ்சி பரமாச்சாரியரின் அற்புத மண்டபம் ஒன்று இப்போது உருவாகியிருக்கிறது.

அடுத்த கணமே அந்த ஊரே அஸ்தமித்து விட்டது.எங்கும் மண்மாரி பெய்தது.
ராஜாவுக்கு விஷயம் தெரிந்து அலறி புடைத்துக்கொண்டு ஓடினான். ஓரிக்கையில் அவர்களை கண்டான்.
பெருமாள்,ஆழ்வார் கணிக்கண்ணன் மூவர் திருவடிகளில் விழுந்து புரண்டான். அழுது தீர்த்தான்.

''புண்யா ,பாதகன் நான் மாபெரும் தவறிழைத்தேன். செய்த தவறை உணர்ந்து உங்கள் திருவடிகளில் சரணடைந்து திருந்தினேன். என் தவறை மன்னிதருளவேண்டும்'' என்று அலறினான். நீங்கள் வராமல் ஊர் திரும்பேன் என்று கெஞ்சினான்.

ஆழ்வார் யோசித்தார். ஊரில் எவரும் துன்பம் அனுபவிக்க கூடாதே.

''கணிக்கண்ணா, வா காஞ்சிபுரம் திரும்புவோம்" என்றார். பின்னால் நின்ற பெருமாளையும் பார்த்தார்

" அனந்த சயனா என்ன பார்க்கிறாய், உனக்கும் தான் சொன்னேன். நீ இல்லாமல் நாங்கள் ஏது? சுருட்டிய உன் பாம்பு படுக்கையை மீண்டும் தூக்கிண்டு வா. திரும்புவோம். உன் இடத்துக்கே மீண்டும் போவோம். அங்கு வந்து படுக்கையை விரித்துக் கொள்" என்றார். அந்த அருமையான பாசுரம் இது:

''கணிக்கண்ணன் போக்கொழிந்தான், காமருபூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும்- துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன், நீயுன் உன்றன்
பைந்நாகப் பாயில் படுத்துக் கொள்''

மூவரும் திரும்பினர். இந்த பெருமாள் அந்தக் கணம் முதல் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" (யதோக்த காரி'யதா உக்த':='சொன்னபடி', 'சொன்ன வண்ணம்';காரி'=செய்பவர்) என்று பெயர் வாங்கினான்.

திரு வெக்கா என்று இந்த கோவில் க்ஷேத்ரத்துக்கு பெயர். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ஏறக்குறைய ஆயிரம் வருட வயதுள்ள வைஷ்ணவ திவ்ய தேச கோவில். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஒரு கி.மீ தூரம் தான். விஷ்ணு காஞ்சி பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ. எதிரே அஷ்ட புஜம் பெருமாள் கோவில் அசாத்யமாக இருக்கிறது. நான் சென்று மகிழ்ந்தேன். நீங்கள்? .

ஒன்று நிச்சயம். ,காஞ்சிபுரம் சென்றும் இதை தரிசிக்காதவர்கள் மூச்சிருந்தும் பேச்சில்லாதவர்களுக்கு சமம். நின் கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இறைவனே மூச்சாக வாழ்வார்க்கு இறைவன் சொன்னதையும் ஏன் சொல்லாததையும் செய்வான். இறைவன் பக்தனுக்கு அடிமை என்பதற்கு இந்த கதை ஒன்றே போதுமே!

திருமழிசை ஆழ்வார் நாராயணனின் சுதர்சன சக்ர அம்சம். ஆழ்வார் பிராமணர் இல்லை என்று சிலர் அவரை கோவிலில் அர்ச்சகர் கௌரவிப்பது பொறுக்கவில்லை. தாறுமாறாக பேசினார்கள். ஆழ்வார் அப்போது இயற்றிய ஒரு பாடல் பொருள் செறிந்தது:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரம் கொள் கையனே, சடங்கர் வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காத்திடே - (பாடல் சிவவாக்கியர் மாடலில் இருப்பது புரிகிறதா)

''ஹே, நாராயணா , உனக்கு நாற்கரங்கள் இருந்தும் என்ன பயன் சொல்?. உன்னால் இந்த வீணர்கள் வாயை உன் கைகளால் ''நிறுத்துங்கள்'' என்று சொல்லி பொத்த முடிந்ததா? உன் கையில் சக்கரம் வேறு! நீ என்னுள்ளே புகுந்தால் நானே இவர்களுக்கு என் வாயால் அவர்கள் வாயை மூட வைப்பேனே !

நாராயணன் அவ்வாறே ஆழ்வாரின் உடல் புகுவதை எல்லோரும் பார்த்தார்களாம். பிறகென்ன அத்தனை பேரும் அவர் திருவடிகளில் ''எங்களை மன்னித்துவிடுங்கள் '' என்று கூறி ' தடால்'' தான்.

ஆழ்வார் கும்பகோணம் சென்றார். தனது திருச் சந்த விருத்த பாசுரங்களை ஓலைச் சுவடியில் எழுதி வைத்திருந்த தெல்லாம் அப்படியே சுழியிட்டு ஓடும் காவேரியில் எறிந்து விட்டார். உனக்கு பிடித்திருந்தால் மீண்டு வரட்டுமே.! அப்படியே அது மிதந்து அவரிடமே வந்ததே.

''நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்த மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்றிருந்து வெஃ கணைக் கிடந்ததென்ன நீர்மையே?''

''இதோ இருக்கிறாரே இந்த நாராயணன் என்ன பண்ணினார்? நான் பிறப்பதற்கு முன்பாகவே ஊரகத்தில் நின்றவர், பாட கத்தில் போய் உட்கார்ந்தவர், திருவெட்காவில் கால் நீட்டி படுத்தவர், எனக்கு அப்போது எது ஞானம்?கொஞ்சம் ஞானம் கிட்டியதும் மறப்பேனா? அவர் அப்புறம் என்ன செய்தார் என்று சொல்லவில்லையே, எனக்கு அவர் பற்றிய ஞானம் வந்ததும் மேலே சொன்ன எல்லா இடத்தையும் விட்டு நேராக வந்து என் இதயத்தில் குடிபுகுந்து விட்டார், அதுவும் நிரந்தரமாக..!!"

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...