Monday, August 7, 2017

''போய் சமையல் பண்ணு

''போய் சமையல் பண்ணு '' J.K . SIVAN

பட்டு சாஸ்திரி என்று ஒருவர். பரமாச்சார்யாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அவரோடு வெகுகாலம் தொடர்பில் இருந்த ஒரு பாக்கியசாலி. அவர் ஒருமுறை சொன்ன விஷயத்தை கேள்விப்பட்டேன். என்னிடம் யாரும் நேரில் சொல்லவில்லை. பத்திரிகைகள் வாயிலாக அறிந்ததை தான் சொல்கிறேன்.

” இது நடந்து ஏறக்குறைய சுமார் 40, 45 வருஷங்கள் இருக்கும். ஒருதடவை பாதயாத்திரை கிளம்பின மகாபெரியவா, சோளிங்கபுரத்துல வந்து தங்கினா. அது, மிகப்பெரிய நரசிம்ம க்ஷேத்திரம். அங்கே ஆஞ்சநேயர் ஆலயமும் உண்டு. ரொம்ப விசேஷமான ஸ்தலம் அது.

மகாபெரியவா அங்கு முகாமிட்டிருக்கிற விஷயம் கட கடவென்று வெள்ளம் போல் எங்கும் பரவியது. விஷயம் அப்போதிருந்த இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் காதிலும் விழுந்தது. அவர் பெரியவா பக்தர். எனவே தமிழ் நாட்டில் அதுவும் சென்னையில் அப்போது அவர் இருந்ததால் , அவர் மனைவி ஜானகியுடன், , ஆந்திர தேசத்தோட ஐ.ஜி. ராமநாதன் சகிதம் மற்ற எல்லோரும் கூட சோளிங்கர் வந்திருந்தா. வாலாஜாபேட்டை லேருந்து கோட்டாசெட்டி, டாக்டர் வேணுகோபால்னு தெலுங்கு பிரமுகர்களும் மகாபெரியவாளைத் தரிசிக்க வந்துட்டா.

ஸ்ரீகண்டன்னு ஒருத்தர், மடத்தைச் சேர்ந்தவர்தான். அவர்தான் மகாபெரியவாளுக்கு பிக்ஷை பண்ணிப் போடுவது வழக்கம். அவர், பெரியவாளுக்கு மட்டும்தான் பிக்ஷை பண்ணுவார்; அது மட்டும்தான் அவரோட வேலை.

ஆனா, அன்னிக்கி மகாபெரியவாளுக்கு என்ன தோணித்தோ தெரியலை… என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

”பட்டு இங்கே வா''
\
'' வந்துட்டேன் பெரியவா கட்டளையிடுங்கோ''

'' என்னைப் பார்க்கணும்கிறதுக்காகச் சிரமப்பட்டு எல்லாரும் இந்த ஊருக்கு வந்திருக்கா. அவாளைப் பசியும் பட்டினியுமா இருக்கவிடலாமா? தப்பில்லையோ! நீ என்ன பண்றே, அவாளுக்கெல்லாம் உன்னால முடிஞ்சதை சமைச்சுப் போட்டுடு”

.அதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டுத்து. ஒரு நிமிஷம், அப்படியே பேச்சுமூச்சு இல்லாம நின்னுட்டேன். ஏன்னு கேட்டா, ....எனக்கு சமைக்கவே தெரியாது. ‘எனக்கு என்ன சமைக்கத் தெரியும்னு, மகாபெரியவா என்னைப் போய் சமைச்சுப்போடச் சொல்றார்?’னு தவிச்சுப்போயிட்டேன். ஆனா, அவர்கிட்டே போய், ‘எனக்குச் சமையல் தெரியாது. வேற யார் கிட்டேயாவது சொல்லுங்கோ’னு சொல்லமுடியுமா, என்ன? பத்து வயசுலேருந்து பெரியவாளைப்பார்த்துண்டிருக்கேன். யாரையும் எந்தச் சங்கடத்துலயும் மாட்டிவிடமாட்டா ? அதனால அவரே இந்தக் காரியத்துக்கும் ஒத்தாசையா, பக்கபலமா இருப்பார்னு முழுசா நம்பினேன்.

சத்திரத்து மேனேஜர்கிட்டே போய், பாத்திரங்களைக் கேட்டு வாங்கிண்டு வந்தேன். அங்கே… பக்கத்துலயே இருந்த பெட்டிக் கடைல ஒரு தேங்காயும், கொஞ்சம் காய்கறிகளும் வாங்கிண்டேன்.

அது ஒரு மலையடிவாரம். அந்த இடத்துல, அம்மிக்கல்லுக்கு எங்கே போறது? கொஞ்சம் நீட்டமா இருந்த கல்லு மேல பருப்பு, தேங்காய், மிளகாய்னு எல்லாத்தையும் சேர்த்து வெச்சு அரைச்சுத் துவையல் பண்ணினேன்.

அங்கங்கே கிடந்த கல்லைப் பொறுக்கிண்டு வந்து, அடுப்பு தயார் பண்ணிண்டேன். காஞ்ச குச்சிகளையெல்லாம் பொறுக்கி எடுத்துண்டு வந்து, அடுப்பை மூட்டி சாதம், ரசம் செஞ்சு இறக்கினேன். யாரோ அரிசி கொடுத்திருந்தா. அந்த அரிசியைக் காமிச்சு, ‘இதப் பார்… ராஜா மாதிரி இருக்கு அரிசி! எடுத்துண்டு போய் சாதம் பண்ணு ’ன்னு சொன்னார் பெரியவா.

ஒரு மலையின் மேல நரசிம்மர்; இன்னொரு சின்ன மலையின் மேல ஆஞ்சநேயர். ரெண்டு மலையிலேயும் ஏறி, தரிசனம் பண்ணினோம். பெரியவாளும் மலைகள் மீது ஏறி வந்து, ஸ்வாமி தரிசனம் பண்ணினார்.

கீழே இறங்கறதுக்கு மத்தியானம் ஆயிடுத்து. அவாளுக்கெல்லாம் நல்ல பசி. எல்லாரையும் உக்கார வெச்சு, சாப்பாடு பரிமாற ஏற்பாடு பண்ணினேன். வந்திருக்கிறவா எல்லாரும் பெரிய மனுஷா. தேசத்துல முக்கியப் பதவிகள்ல இருக்கறவா. இதுவரை, சமைக்கவே சமைக்காதவன் நான். என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன்…

என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன். ஆனா, வந்தவா எல்லாரும் திருப்தியா சாப்பிட்டா. எனக்குப் பரம நிம்மதி.

‘வைதீக, சம்பிரதாய சாஸ்திரங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். சமைக்கத் தெரியாது’ன்னு பெரியவாகிட்ட சொல்லி, கையக் கட்டிண்டு சும்மா இருந்துடலை நான். ‘இது மகாபெரியவா உத்தரவு; நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’னு அசைக்க முடியாத தைரியம் உள்ளுக்குள்ளே இருந்துது. அவருடைய அனுக்கிரகம்தான், என்னைக் காப்பாத்திடுத்து!

சமையல் நன்னா இருந்துதுன்னும், வயிறு நிறைய, ருசிச்சுச் சாப்பிட்டதாவும் எல்லாரும் சொன்னா. உத்தரவு வாங்கிக்கறதுக்காகப் போனப்ப, பெரியவாகிட்டயும் என்னைப் பத்தி சிலாகிச்சு ஏதோ சொன்னாப்போல இருக்கு. வந்தவா எல்லாரும் போனப்புறம், பெரியவா என்னைக் கூப்பிட்டா. உள்ளூர பயமா இருந்தாலும், பெரியவா எதிர்ல போய் நின்னேன்.

”ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!”ன்னு கையைத் தூக்கி, ஆசீர்வாதம் பண்ணினார் மகாபெரியவா.

\”அது போதும் எனக்கு! அவரோட ஆசீர்வாதம் போதும், மனசு நிறையறதுக்கு! அதைவிட வேறென்ன வேணும்?!” – என்றாராம் பட்டு சாஸ்திரி மன மகிழ்ச்சியுடன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...