Sunday, August 13, 2017

எல்லாமே நீ தான்


எல்லாமே நீ தான் -- J.K. SIVAN

சில பேரால் தான் சில விஷயங்களை செய்ய முடிகிறது. இதுவும் தெய்வ சங்கல்பமே.

பக்தி எல்லோரிடமும் மிளிர்கிறது. அவரவர் தத்தம் முயற்சிக்கேற்ப, விருப்பத்துக்கிணங்கி வசதியின் படி, தமது இஷ்ட தேவதையை வாழத்தி வணங்குகிறார்கள். ஒருவரோடு ஒருவரை இணைத்தோ, ஒப்பிட்டோ பார்ப்பது தேவையற்றது. பக்தி அவரவர் மனம் விரும்பியபடி தான் அமையும். மற்றவர்க்கு அதில் சம்பந்தமில்லை. அது பற்றி அபிப்ராயம் தேவையற்றது.

என்னைப் பொறுத்தவரையில் காணும் யாவிலும் கண்ணனைக் காண வேண்டுமானால் கவிதை தெரியவேண்டாம். படிப்பு வேண்டாம். உயர் குல பிறவி வேண்டாம். எவராக இருந்தாலும் கருத்திலே கண்ணன் இருந்தாலே போதும். கண் வேண்டும். மனக்கண். கண்ணாடி அணிந்த புறக்கண் அல்ல. புறக்கண் வேறு எதை எல்லாமோ தான் தேடும். அகக் கண் அவனையே மட்டும் தேடும், காணும். அவனை அப்படியே கட்டிப் பிடித்து தன்னுள் வைத்துக் கொள்ளுமே. என்னுள் அப்படி செயகிறதே!

ஒரு விஷயம்.

ஒரு காகம் அருகிலே வந்து நின்றது. அதை உடனே ''காக்கா ஓஷ் '' என்று ஒட்டவில்லை. கை ஓங்கி விரட்ட வில்லை. பறவைகளில் அழகற்றது. ஒரு தரம் பார்த்தாலேயே அருவருப்பு. குரல் கர்ண கொடூரம். இப்படி தான் காகம் நம்மிடையே பெயர் பெற்றிருக்கிறது. ஆனால் அதன் கருமையே அழகு. தனிச் சிறப்பு. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு என்று கூத்தாடி அதன் கருப்பிலே கண்ணனைக் காண்பது ஒரு அபூர்வ அனுபவம். எல்லோராலும் முடியாதது. இது மட்டுமா?.
நடந்து கொண்டே போகும்போது இரு புறமும் பச்சைப் பசேல் என்று செடியும் கொடியும், மரங்களும். நாம் ''ஆஹா என்ன இனிய பசுஞ்சோலை குளு குளு வென்று காற்று'' என்பதோடு நிறுத்திக் கொள்ளும்போது அந்த பச்சை வர்ணத்தில் பச்சைமாமலை போல் மேனி பவழவாயன் தெரிகிறதை பார்க்கவில்லையே.. நான் யாத்திரை பயணம் செய்யும்போ தெல்லாம் பச்சை பசேல் வர்ண வயல்களில் செடி கொடிகளில் அவனை நினைக்கிறேன்.

சோலையான ஒரு பிரதேசத்தில் நடந்து செல்கிறோம். மரங்களில் அண்டி இருக்கும் பல வித வண்ணப் பறவைகள் ஆனந்தமாக குரல் கொடுக்கிறதே. அதை விட்டு முஷாரப் பற்றி பேசிக்கொண்டே செல்கிறோம். பறவைகளின் பலவித ஸ்ருதிகளில் தாளங்கள் சேர்ந்த கானம் அப்படியே உன்னிடம் என்னைக் கொண்டு சேர்க்கிறதே பார்த்தசாரதி. உன் குழல் நாதம் என்று அல்லவோ இதை நான் கேட்கிறேன் என்று சொல்லத் தோன்றுகிறதா நமக்கு?

''அடுப்பில் அப்பளம் சுடும்போது, அப்பளம் மீது படவேண்டிய சூடு கை விரலில் பட்டு மூன்று அடி உயரம் எம்பிக் குதிக்கிறாயே கோமளா. அப்படியே அந்த தீயின் உஷ்ணத்தில் கையை வைத்துக்கொண்டே ''ஆனந்தமாக இருக்கிறதே, ஆஹா இதுவல்லவோ உன்னை தீண்டும்போது கிடைக்கும் சுகம்'' என்று சொல்லேன்! ''.

இதைச் சொன்ன பட்டப்பா பட்டபாடு தெரியுமா உங்களுக்கு. வீட்டை விட்டே விரட்டி விட்டாள் கோமளா.

அப்படி எல்லாம் கண்ணனைக் கண்டதை, மகாகவி பாரதி நந்தலாலா அன்று வாத்சல்யமாக அழைத்து வரிகளாக்கியிருப்பதை படியுங்கள்.

காக்கைச் சிறகினிலே
நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா;1

பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலா;

கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;3

தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா -- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...