Friday, August 11, 2017

பையனின் கேள்வி

பையனின் கேள்வி J.K. SIVAN

புஜங்க ராவுக்கு ரொம்ப பெருமை. என்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்களாமே ! எப்படி சார்.

ஏன் இப்பவும் தான் பேசப்போகிறார்கள். உங்கள் மனதில் தோன்றிய கதை எனக்கு தெரிந்து விட்டதே! அதை சொன்னால் சந்தோஷம் வராதா? அது தோன்றிய உங்களை நினைக்கமாட்டார்களா? இதோ கிட்ட கிட்ட கிருஷ்ண ஜெயந்தி வருகிறதே. அவனைப் பற்றி நீங்கள் நினைக்கும் கதையும் தெரிந்துவிட்டதே''

புஜங்கராவ் நினைத்த கதை என்ன??

++

எக்க சக்கமாக கும்பல் உள்ளேயும் வெளியுமாக போய்கொண்டிருக்கும் ஒரு பெரிய ஷாப்பிங் சென்டர் அது. தெருவையே வளைத்துப் போட்டிருந்த கோடீஸ்வரரின் கடை. வியாபாரம் என்னவோ செருப்புகள் தான்.

அதன் வாசலில் ஒரு கண்ணாடி ஷோ ரூமில் நிறைய புது புது மாடல்களில் காலணிகள் வைக்கப்பட்டிருந்தது.
அந்த கட்டிடத்தின் வாசலில் ஷோ ரூம் கண்ணாடி அறையின் வழியாக உள்ளே இருக்கும் செருப்புகள், ஷூக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே தெருவில் ஒரு 10 வயசு பையன் கன்னத்தில் கை வைத்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.

மார்கழி இந்த வருஷம் ஏனோ அதிக குளிராக இருக்கிறதே. குளிரில் பல்லை கடித்துக் கொண்டு அவன் நடுங்கிக் கொண்டு இருந்தான். மேலே போர்வை இல்லை. காலில் செருப்பு இல்லை. அந்த காலை குளிரநேரத்தில் தெருவில் அதிக கூட்டமும் இன்னும் சேரவில்லை.

அவன் இருந்த இடத்துக்கு நேராக வாசலில் ஒரு பெரிய கார் வந்து அழகாக நிற்க அதன் உள்ளேயிருந்து ஒரு பணக்கார பெண்மணி இறங்கி உள்ளே போக நடக்கிற போது தான் அவள் பார்வை இந்த பையன் மேல் பட்டது.

"டே பையா, இந்த குளிரில் இங்கே என்னடா பண்றே, என்ன பார்க்கறே?"

'......''

பதில் இல்லை. அவளை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் கண்ணாடி வழியாக உள்ளே பார்வை திரும்பியது. வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது

''என்ன பார்க்கிறான் அங்கே? அப்படி என்ன உள்ளே இருக்கு பார்ப்பதற்கு?'' , ஆவல் மேலிட ஷோ ரூம் கண்ணாடி வழியாக அவளும் பார்த்தாள். உள்ளே நிறைய வித விதமான காலணிகள் தானே!''.

"இதையே உற்று பார்க்க என்ன இருக்கு? எதற்காக ஏதோ முணுமுணுக்கறே? ''

"ஒருத்தரை கூப்பிட்டுண்டு இருக்கேன்.''

''யாரை?

''கொஞ்ச நேரம் முன்னாடி இந்த பக்கம் ஒருத்தர் பேசிண்டு போனார். அவர் சொன்ன படியே செய்துண்டு இருக்கேன்."

"என்னடா சொல்றே?, யார் என்ன சொன்னார்?"

" யாரோ ஒரு தாத்தா அவர் கூட போயிண்டு இருந்த மாமா கிட்ட "நீ கவலையே படாதே ஜம்பு, உன்னுடைய குறையை அந்த கிருஷ்ணன் கிட்ட சொல்லிடு. அவன் பாத்துப்பான். உன் தேவையெல்லாம் பூர்த்தியாயிடும். இது என்னுடைய அனுபவம்.அவன் கேட்டதை கொடுப்பவண்டா. விடாம கேளு'' ஆமா நான் சொல்றேன்.அவனை விடாதே. கேள். கொடுக்கறானா இல்லையா பார்'' என்று உரக்க சொல்லிண்டே போனார். அதனாலே தான் ..''

''அதனாலே?''

''அதாலே தான் ரொம்ப நேரமா அவர் சொன்ன யாரோ கிருஷ்ணன் என்கிறவர் கிட்ட ''எனக்கு ஒரு செருப்பு வேணும்னு விடாத கேட்டுண்டு இருக்கேன்.."

"ஓ அப்படியா '' என்றாள் அந்த பணக்காரி.

''சரி. என்னோட கொஞ்சம் வரியா "

உள்ளே அவனை அழைத்துக் கொண்டு சென்று அரை டஜன் காலுறை , ஸாக்ஸ் வாங்கினாள்
.
"சார் ஒரு டவல் தரிங்களா?"

கடைக்காரன் நீட்டிய டவலை பெற்றுக்கொண்டு பணத்தை நீட்டி , பையனோடு டாய்லெட் ரூம் சென்று அவனை நிற்கவைத்து குனிந்து அவன் முழங்கால் வரை அலம்பி, அழுக்கு, மண் எல்லாம் நீக்கி டவலால் துடைத்து சாக்ஸ் மாட்டினாள். அவன் கால் அளவுக்கு நல்ல புது விலையுயர்ந்த புது மாடல் ஷூவும் காலில் இணைந்தது. மீதி 5 ஜோடி ஸாக்ஸ் பொட்டலம் கட்டி பையில் போட்டு அவனிடம் நீட்டி முதுகில் தட்டி

"இப்போ சந்தோஷமாடா?" கேட்டுவிட்டு நடந்தாள் அந்த பெண்மணி.

''.............'' பதில் சொல்லாமல் போகும் அவள் கையை பிடித்து இழுத்து அவளை உற்று பார்த்த பையன் கண்களில் பிரவாஹம்.

'' நீ அந்த கிருஷ்ணனோட அம்மாவா?"

அவன் வார்த்தைகளின் அர்த்தம் -- கிருஷ்ணனை வேண்டிக் கேட்டேன். ஒருவேளை அவன் வர நேரமில்லையோ என்னவோ, அவன் அம்மாவை அனுப்பி வாங்கிக்கொடுத்தானோ?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...