Wednesday, August 23, 2017

எட்டுக்குடி வேலவன்







யாத்ரா விபரம் - J..K. SIVAN
எட்டுக்குடி வேலவன்
திருக் கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானிடம் என் பாவங்களை தொலைத்துவிட்டு புண்ணியம் மிக்கவனாக ஸ்ரீனிவாசன் காரில் ஏறிக்கொண்டு எங்கே போகலாம் என்று தீர்மானித்தோம். அருகே தான் எட்டுக்குடி இருக்கிறது முருகனிடம் சென்று மீதி ஏதாவது பாவங்கள் இருந்தால் போக்கிக்கொள்வோமே என்று முடிவெடுத்தோம். நல்லவேளை மணி நாலு ஆகிவிட்டது கோவில் திறந்திருக்கும் என்று கச்சணம் எனும் ஊர் வழியாக சென்றோம். சுமார் 10 கி.மீ தூரம் கிராமப் பாதைகளும் நல்ல தார் ரோடுகளும் கலந்து கலந்து வந்தன.
எண்கண் சிக்கல் என்ற முருக க்ஷேத்ரங்களில் பார்த்த அதே அதி அற்புத சிற்ப வேலைப்பாடுகளை இங்கும் காண முடிந்தது. தேவ சிற்பி அவன். நாகபட்டினத்திலிருந்து 30 கி.மீ. தென் கிழக்கு திருவாரூரிலிருந்து 28 கி.மீ. திருக்குவளையிலிருந்து 19 கி.மீ. தூரம்.
கந்தா கார்த்திகேயா, முருகா, ஸ்கந்தா, சுப்ரமணியா , ஷண்முகா , சுவாமிநாதா , சரவணபவா, என்ன சொல்லி எப்படி அழைத்தாலும் அருள் புரிபவன் முருகன்.
இந்த க்ஷேத்ரத்துக்கு ஏன் எட்டுக்குடி என்று பெயர்? ஒன்று இதை சுற்றிலும் எட்டி மரங்கள் (விஷமானவை. strychnine) இருந்ததாலா, அல்லது அஷ்ட திசையிலும் எட்டு பக்கத்திலும் சிவன் ஆலயங்கள் இருந்ததாலா, சம்பந்தப் பட்டவர்கள் ஆராய்ச்சி செய்யட்டும். நாம் தரிசனம் மட்டும் செய்வோம். மனம் நிறைய பக்தியோடு அருணகிரி நாதர் திருப்புகழ் பாடிய ஸ்தலம்.
ஸ்தல விருக்ஷம் வன்னிமரம். சரவணப் பொய்கை தீர்த்தம். முருகன் இங்கே அற்புத சிலை. ஆறுமுகம், பன்னிரு கரம், ஆயுத
ங்கள், பெரிய மயில் மீது சரவணபவன் வட திசை நோக்கி அமர்ந்திருக்கிறான். மயிலோ மெல்லிய இரு கால்களில் நிற்கிறது. இதில் என்ன அற்புதமா? மயில், முருகன், இருபக்கமும் வள்ளி தேவானை, எல்லாமே அந்த சிறிய மயிலின் கால்களில் தான் நிற்குமாறு சிலையை வடித்திருக்கிறார் சிற்பி. எப்படி அவ்வளவு பெரிய ஒரே கல் சிலை மயிலின் சிறிய மெல்லிய கால் பளுவில் நிற்கிறது.!! என்கண்ணில் நான் கண்ட அற்புத சிற்பங்களை வடித்த அதே சிற்பி. எட்டுக்குடி முருகன் சூரபத்மனை வதம் செய்ய தயாராக போர்க்கோலம் பூண்டு காட்சி தருகிறான்.
அருகே முருகனின் தந்தை தாய் சந்நிதி. சௌந்தர்யநாயகர், ஆனந்தவல்லி, இங்கேயும் ஜுரதேவர் சந்நிதி இருக்கிறது.ஆஞ்சநேயர், மஹாலக்ஷ்மி சனி பகவான். பைரவர் எல்லோரும் உண்டு.
அந்த அதிசய சிற்பி பற்றி ஒரு வரி கதை சொல்லட்டுமா?
சிக்கல் சிங்காரவேலனை வடித்த சிற்பி இந்த அழகோடு இன்னொரு தெய்வம் சிலையாகக்கூடாது என்று தனது வலது கட்டை விரலை வெட்டிக்கொண்டு, முருகன் கனவில் தோன்றி ''அதெல்லாம் இல்லை என்னை எட்டுக்குடியில் போய் சிலையாக்கு'' என கனவில் கட்டளையிட்டு, அவன் அவ்வாறே இந்த முருகனை வடித்து, இனி எனக்கு வேறு சிலை செய்ய கண் வேண்டாம் என்று கண் குருடாக்கிக்கொண்டு, என் கண்ணில் அழகிய முருகன் கண்ணில்லாமலேயே வடித்து, முருகன் அருளால் கண் திரும்ப பெறுகிறான்.
இன்னொரு கதையும் உலவுகிறது. பொரவடசேரி (பொருள் வைத்த சேரி) ஊர் ராஜா அங்கே முருகன் சிலை செதுக்கிய சிற்பியின் கை விரலை வெட்டினதற்கு காரணம் இது போன்ற அழகிய சிலை வேறே எங்கும் அமையக்கூடாது என்பதற்காக. சிலை வைத்து ஆலயம் திறந்து சூரியனின் ஒளியில் தகதகவென்று முருகன் ஒளிர , மயில் சந்தோஷமாக மேலே பறக்க ஆரம்பித்தது. '' எங்கே எட்டி பிடி ''எட்டி பிடி '' என்று கட்டளையிட்டான் ராஜா. அதனால் அந்த ஊர் எட்டிப்பிடியாக இருந்தது எட்டிகுடியாக மாறி இப்போது எட்டுக்குடி என்று வளமான கற்பனை யாருக்கோ தோன்றியிருக்கிறது.
அமைதியான இந்த ஊர் கார்த்திகை, கந்த சஷ்டி, சூர சம்ஹாரம், சித்ரா பௌர்ணமி விசேஷ காலங்களில் பெரிய கூட்டத்தை சந்திக்கிறது சமாளிக்கிறது. மற்ற எல்லா கோவில்களிலும் முருகன் அமர்ந்திருக்கும் மயில் வலது பக்கம் பார்த்து இருக்கும், இங்கே இடது பக்கம் பார்க்கிறது. இது கந்தபுராணத்திலும் சொல்லப்படுகிறது.
ஷடானனம் சந்தன லிபித காத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய சூணும் சுரலோக நாதம்
ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே
அந்த ஆறுமுக குகன், வாசனாதி சந்தனக்குழம்பை பூசியவன், பரந்த மார்பன், மயில்வாகனன், பரமசிவன் புத்ரன், தேவர்கள் சேனையின் அதிபதி அவன் திருப்பாதங்களில் சரணம் சரணம் சரணம்
எட்டுக்குடி முருகன் கோவில் நேரம் 6:00 am to 12:00 pm and from 3:00 pm to 9:00 pm.

1 comment:

  1. chopdasushama@gmail.comApril 15, 2020 at 9:01 PM

    Sir , can you please translate and share your article in English as I would like to know more about the temple and the Murti ..

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...