Sunday, August 20, 2017

ஒரு அன்புக்கட்டளை




ஒரு அன்புக்கட்டளை - J.K. SIVAN

இன்று மாலை ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்கத்தின் 31வது புத்தகம் ''ஒரு அற்புத ஞானி'' மடிப்பாக்கம் தந்தரகாஷா நிறுவன கட்டிட கூடத்தில் சேஷாத்திரி ஸ்வாமிக்கு பிருந்தாவன ட்ரஸ்ட் நிறுவனர் ஸ்ரீ KVLN ஷர்மாஜி அவர்களால் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அப்போது ஒரு ஆச்சர்ய சம்பவம். விழாவிற்கு வந்திருந்த திருமதி பார்வதி மோகனின் சகோதரர் என்னை சந்தித்து நன்கொடை வழங்கினார்.

அப்போது மேடை ஏறி ஒரு அன்புக்கட்டளை அவர் இட்டது என் மனதை குளிர்வித்தது. இட்ட கட்டளை வந்ததும் அந்த அன்பு சகோதரர் ''கிருஷ்ண'' குமாரிடமிருந்து தான்.

''நீங்கள் பக்த சூர் தாஸ் பற்றி எழுதவேண்டும். அதை புத்தகமாக்க என்ன செலவானாலும் நான் தருகிறேன். இதோ பிடியுங்கள் அட்வான்ஸ் ரூபாய் இருபதாயிரம்.....''

ரூபாயை முதலில் வாங்கி வைத்துக்கொண்டால் போதுமா? எழுதவேண்டாமா? அதற்கு நிறைய படிக்க வேண்டாமா? கன்னாபின்னா விஷயமா இது? கண்ணா என் மன்னா உன் சமாச்சாரம் ஆச்சே ? இன்றிரவே அதை தொடங்க முடிவெடுத்தேன். அதில் சில எண்ணத்துளிகள்.

முதலில் உங்களில் யாருக்காவது சூர்தாஸை தெரியாமல் இருந்தால் இதோ அறிமுகம் செய்விக்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள் அந்த அபூர்வரை .

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விழியற்ற கிருஷ்ண பக்தர் சூர்தாஸ். இது அவர் பெயர் அல்ல. சூர் என்றால் அவர்கள் பாஷையில் குருடன் என்று அர்த்தம்...பிறவிக்குருடர் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். ஆறு வயதில் உலகில் தள்ளப்பட்ட சூர் தாஸ் மெதுவாக ப்ரஜ் என்கிற உ.பி. தேசத்தில் வாழ்ந்தார். கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.

ஹிந்தியில் கவிதைகளை ப்ரஜ் பாஷா எனும் அந்த ஊர் ஹிந்தி பாஷையில் தான் பாடினார். நம்மூரில் கொங்கு தமிழ், திருநெல்வேலி தமிழ், மெட்ராஸ் டமில் என்று இருப்பதை போல. சூர்தாஸ் கிருஷ்ணனை பற்றி ப்ரஜ் பாஷை ஹிந்தியில் பாடினார். 'எழுதினார்' என்று பார்வையற்றவரைப் பற்றி எப்படி சொல்ல முடியும்.

சூர் தாஸ் பாடிய கண்ணன் பாடல்களை சூர் சாகர் ( கிருஷ்ண சமுத்திரம்) என்று சொல்வார்கள். எல்லாமே குழந்தை கண்ணனை பற்றியே என்றால் என்ன சுகம்!

வழக்கம் போலவே சூர்தாஸ் எப்போ பிறந்தார் என்பதில் தகராறு. நமக்கு அது வேண்டவே வேண்டாம். சூர்தாஸ் தான் இன்னும் இருக்கிறாரே சூர் சாகரில்.

ராதா கிருஷ்ணா என்று இரு பெயர்களை நினைத்தாலே கடல் போல பொங்கும் கற்பனை சூர் தாஸ் என்ற பிறவிக் குருடருக்கு. இதயம் நிரம்ப மனம் பார்க்கும் போது கண் விழி இருந்தென்ன இல்லாதென்ன.' ஒரு லக்ஷத்துக்கும் மேலே கண்ணன் பாட்டுகள்.... யாரையா அதையெல்லாம் பாதுகாத்து அச்சடித்து புத்தகமாக இலவசமாக செய்ய ? கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைடியா இருந்தது அப்போது? எவ்வளவோ நமக்கு கிடைக்காமல் போய் விட்டதே!!! எவ்வளவு பெரிய துர்பாக்கியம். ஏதோ அவர் எழுதியதாக ஒரு 8000 மிஞ்சி இருக்கிறது.

பாரதத்தை அப்போது முகலாய பேரரசன் அக்பர் ஆண்ட சமயம். அவன் சூர் தாஸ் கவிதை ரசிகன்.

காட்டு வழியாக கண்ணற்ற சூர்தாஸ் நடந்து செல்லும்போது ஒரு நாள் தரையோடு தரையாக இருந்த பெரிய கிணறு ஒன்றில் விழுந்து விட்டார். கண்ணன் காப்பாற்றினான். அவனைப் பாட அவர் வேண்டாமா அவனுக்கு. அதனால் நமக்கும் கிடைத்தார். இந்த கதை அப்புறம் சொல்கிறேன். ராதையின் கொலுசை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு ''அவனை வரச்சொல்லு'' என்று சொல்லி அவள் கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டு வர ....... இது ஒரு கதையும் இருக்கிறது சொல்கிறேன்.

சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட சூர் தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார். ஒரு நாள் அவர் உட்கார்ந்த திண்ணை அருகே தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது. ''ஆஹா எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட வரக்கூடாதா? ஏன் முடியாது ஒருநாள் என்னையும் பாட வைப்பான்'' என்ற நம்பிக்கை. மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் ஒருவன் ''டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?""

''உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு''

இரவு வந்தது. சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போகவேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்'' இந்த முடிவு சூர்தாஸிடம் சொல்லாமலேயே அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை செல்ல காரணம்.

ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டு பண்ணி கிருஷ்ணன் பாடல்களை பாடினார் சூர்தாஸ். அதை கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர் அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள் மூலம் காதில் விழுவது தான் உலக ஞானம்.

பதினாலு வயதில் ஏதோ குறி சொல்ல வந்தது. சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா? ஒரு வழி காட்டினார் . ''இவன் ஒரு அதிசய பையன்'' என்கிறார்கள் அனைவருமே.
அந்த ஊர் பஞ்சாயத்து தலைவன் பிள்ளை சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். அப்பா திண்டாடுகிறான். சூர் தாஸ் ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்லி, அவன் அங்கே சென்று பையனை கண்டுபிடித்து மகிழ்ந்து....... சூர் தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பி வாத்யம் கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே பாடுவார் சூர்தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான் சூர் தாஸ் பாட பாட எழுதி வைத்தவர்கள்.

''சூர் தாஸ் இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.'' ஒரு இரவு கண்ணன் அழைத்தான்.

ஆஹா அப்படியே '' -- சூர் தாஸ் கிளம்ப சிஷ்யர்கள் வருந்தினார்கள். ''ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு, அவமரியாதை செய்தோம்?''

''அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு பிருந்தாவனம் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பிக்கிறேன். வழியெல்லாம் கண்ணனை பாடிக்கொண்டே செல்கிறார். இங்கேயே இருங்கள் என்று போகும் வழியெல்லாம் அழைப்பு. ''நான் ஒரு பர தேசி. ஒரு இடத்திலும் நிற்காதவன்'' என்று ஒரே பதில் அனைவருக்கும். சூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. வழியே காட்டில் ஒரு பெரிய கிணறு. யாரும் இல்லாத இடம். கண்ணில்லாத சூர்தாஸை அந்த கிணறு விழுங்கியது. உடலில் காயம். எப்படி மேலே ஏறி வருவது? பசியோடு ஏழு நாள் கிணற்றில்.

''தாத்தா உன் கையை நீட்டு. மேலே இழுக்கிறேன்'' எங்கிருந்தோ அந்தப்பக்கம் வந்த ஒரு மாடு மேய்க்கும் பையன் குரல் அருகில் கேட்கிறது. கிணற்றில் இறங்கி உதவுகிறான். மேலே ஏற்றிவிட்ட பையன் ஏன் காணாமல் போய் விட்டான். கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா. எங்கெல்லாமோ யாருக்கெல்லாமோ உதவ ஓடுபவனாச்சே.

''சூர்தாஸ் விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்று பிரபல கிருஷ்ண பக்தர் சுவாமி வல்லபாச்சாரியார் இந்த ஊர் வருகிறார்.''

''அடடா நான் அவரை சென்று நமஸ்காரம் பண்ண முடியுமா?''

சூர்தாஸ் எப்படியோ தட்டு தடுமாறி தன்னை சந்திக்க வரும் முன்பே வல்லபாச்சாரியார் சூர்தாஸை தேடி வந்துவிட்டார். வல்லபாச்சார்யர் திருவடிகளை பிடித்துக்கொண்டு கதறுகிறார் சூர்தாஸ்.

''சூர்தாஸ், நான் வந்ததே உங்கள் திவ்ய கிருஷ்ண கானத்தை கேட்கத்தான்''. தொடர்ந்து வெகுநேரம் சூர் சமுத்திர சுனாமி. வல்லபாச்சார்யர் சில நாள் தங்கிய போது கிருஷ்ணனை பற்றிய சகல சரித்திரங்களையும் விஷயங்களையும் சூர்தாஸ் தெரிந்து கொள்கிறார்.

வல்லபாச்சாரியார் சூர்தாஸை பிருந்தாவனம் அழைத்து செல்கிறார். பிருந்தாவனத்தில் கோவர்தன கிரிதாரி ஆலயத்தில் சூர்தாஸ் ஆஸ்தான வித்துவான் ஆகிறார்.

தான்சேன் மூலம் சூர் தாஸ் கீர்த்தனங்களை கேட்ட அக்பர் சூர்தாஸ் நீங்கள் எனது சாம்ராஜ்ய அரண்மனை வந்து பாடுங்கள் என்று செய்தி அனுப்ப ''சக்ரவர்த்தி, என்மேல் இவ்வளவு அன்பா. எனக்கு கிருஷ்ணனின் சமஸ்தானம் ஒன்றில் தான் பாட்டே வரும் '' என்று பதில் அனுப்புகிறார். அக்பர் நேரில் வந்து சூர்தாஸை ஆலயத்தில் சந்தித்து அவர் கிருஷ்ண கானாம்ருதத்தை கேட்டு மகிழ்கிறார்.



சூர்தாஸ் இயற்றிய கிருஷ்ண கான சமுத்திர அலை இன்னும் பல இல்லங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...