Friday, August 25, 2017

ராமகிரி வாலீஸ்வரர்










யாத்ரா விபரம் J.K. SIVAN

ராமகிரி வாலீஸ்வரர்

திருக்கள்ளில் என்ற பழம்பெயரும் திருக்கண்டலம் எனும் புதுப் பெயரும் கொண்ட அந்த சிறிய குக்கிராமத்தில் இங்கே ஏதாவது சைவ சாப்பாடு ஹோட்டல் இருக்கிறதா என்று திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒருவரை கேட்டபோது '' நாஷ்டாவுக்கா?'' என்று கேட்டார். அதன் அர்த்தம் என்ன என்று யோசிக்கும் முன்பே வலது கரத்தை நீட்டி இங்கே பீச்சக்கை பக்கம் ரெண்டு கடை இருக்குது என்கிறார். நான் அவரைக் கேட்டது ஒன்றுமே ஆகாரம் கைவசம் இல்லாதவர்கள் பயன் பெறும் விஷயமாக. ஏனெனில் நாங்கள் அதி புத்திசாலிகளாக கையிலே கொண்டு சென்ற எங்கள் வீட்டு இட்டலிகளை காரில் அமர்ந்தவாறே சாப்பிட்டோம்.

நமது முன்னோர்கள் எவ்வளவு சமயோசிதமாக இட்டிலியை பூப்போல மெத்து மெத்து என்று சூடு பறக்க ஆவியிலிருந்து எடுத்து அதன் மீது நைசாக அரைத்த மிளகாய் பொடியை தூவி அது இப்போதெல்லாம் பெய்யும் மழையில் தெரு நனைவது போல் மெல்லிதாக நல்லெண்ணெய் பூச்சுடன் முழுதும் வெண்மை நிறத்தை இழந்து நாக்கில் நீரூற வைத்து சிறு சிறு விள்ளல்களாக உள்ளே போகும் சுகத்தையும், அதை விழுங்கியவுடனேயே கள்ளிச்சொட்டு பில்டர் காப்பி அதை உள்ளே அன்போடு கை கோர்த்து அழைத்துச் செல்லும் இன்பத்தையும் எழுத எனக்கு வார்த்தை தெரியாதே.

காலை உணவு இவ்வாறாக வயிற்றை நிறைத்து அளித்த திருப்தியில் அங்கிருந்து கிளம்பி சுருட்ட பள்ளி போகும்போது தான் அந்த ஊரில் கோவிலுக்கு அருகேயே , ரெட்டியார் ஒருவர் இட்டலி பூரி கடை வைத்து சூடாக தயாரித்து கொடுப்பதையும் அவருடைய சிற்றுண்டி கடைக்கு எதிரே சிறிய வீடு ஒன்றில் ஒரு அம்மையார் தானும் தோசை சில இட்லிகளை சுட்டு விற்கிறதையும் பார்த்தேன். வீட்டில் வசதியில்லாத ஒரு சிறிய கும்பல் அங்கேயும் இங்கேயுமாக நின்று கொண்டிருந்தது. இது தான் அங்கே யாத்ரிகளுக்கு ஓட்டல்.

சுருட்ட பள்ளி தமிழக எல்லை தாண்டி ஆந்திராவில் காலை வைத்ததும் ஒரு சில கி.மீ. தூரத்தில் சிவ சிவ என்ற பெரிய தமிழ் எழுத்து கோபுரத்தில் ஜொலிக்க அழைக்கிறது.

பள்ளி கொண்ட ஈஸ்வரர் உலகிலேயே பிரம்மாண்ட சயன கோலத்தில் பார்வதி மடியில் தலைவைத்து ப்ரம்ம விஷ்ணு ரிஷிகள் முனிவர்கள் கவலையோடு நோக்க ஆலகால விஷத்தை நெஞ்சில் தேக்கி மயங்கி கண் மூடியவாறு காட்சி அளிக்கிறார்.சுதையில் வடித்த சிற்பி உயிரோட்டம் கொடுத்து அமைத்த சிலை.பிரதோஷ காலத்தில் நெருங்க முடியாது. அவ்வளவு கூட்டம் சேரும் ஆலயம்.

ஆந்திர கோவில்களில் தட்டில் காசு போடு என்று ஜாடை காட்டி கேட்கும் அர்ச்சகர்களை அங்கு தான் கண்டேன். ஏற்கனவே இந்த ஆலயத்தை பற்றி விலாவாரியாக எழுதியிருக்கின்றேன் . போகும் வழியில் தரிசனம் கிடைத்தால் அந்த ஆலய அழகிய நந்தியை பார்க்காமல் போக மனசு இடம் கொடுக்குமா?

அங்கிருந்து இருப்பது கி.மீ. தூரத்தில் ஒரு அற்புத பழைய கோவில் ஒன்று இருக்கிறது என்றுதெரியும் அதை ரெண்டு மூன்று தடவை காண முடியாமல் தடங்கல் இருந்ததால் இந்த முறை கண்டிப்பாக சென்று தரிசனம் செய்ய முடிவோடு காரில் வேகமாக சென்றோம்.

எட்டாம் நூற்றாண்டு பல்லவ கால சிறிய மலைக் கோவில். மலைக்கு ராமகிரி என்று பெயர். நந்திக்கு எதிரே ஹனுமான். மலைமேல் வழக்கம்போ குன்று தோராடும் குமரன் குடி கொண்டிருக்கிறான். இதன் அருகே தான் கைலாஸா கோனே நீர்வீழ்ச்சி. அங்கே சென்று குளித்திருக்கிறேன் பல வருஷங்களுக்கு முன்பு.
ராமகிரி ஆலயத்தை பெரியபாளையத்திலிருந்து புத்தூர் சாலைவழியே நாகலாபுரம் அருகில் சென்று அடையலாம்.
ராமகிரி அடிவாரக் கோயிலில் கால பைரவர் சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார். சென்னையிலிருந்து 90 கி.மீ.

ராவண சம்ஹாரம் முடிந்து ராமன் ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க சிவாலயங்கள் சென்று பூஜித்து வழிபட்டான்..

'ஆஞ்சநேயா, கைலாசம் காசி எல்லாம் சென்று ஒரு சிவ லிங்கம் கொண்டுவா'' என்றான். லிங்கத்தோடு வந்த ஹனுமான் வழியில் இங்கே காலபைரவரை பார்த்தான். தாகத்திற்கு ஒரு ஏரியை காட்டினார்.லிங்கத்தை இங்கே வைத்த ஹனுமான் அதை இங்கேயே பிரதிஷ்டை செய்தது போல் அசையாமல் நின்றுவிட்டது. ஸ்ரீரங்கத்தில் விபீஷணன் ரங்கநாதரை பிள்ளையாரின் தந்திரத்தால் தரையிலிருந்து மீண்டும் எடுத்துச் செல்லமு டியாதது.
அதுபோல் தான் ராமகிரி வந்த ஹநுமானுக்கு தரையில் வைத்த லிங்கத்தை தனது பலமான வாலினால் சுற்றி இழுத்துச் செல்லமுடியவில்லை. ராமகிரியில் சிவனுக்கு அதனால் ''வாலீஸ்வரர் என்று பெயர்.

அருகே ஒரு குளம். அதில் ஒரு கல் நந்தி முகம். அதன் வாயிலிருந்து இரவு பகலாக பல வருஷங்களாக ராமகிரி மலையிலிருந்து அருமையான சுனைநீர் ஊற்றிலிருந்து பெருகி வருகிறது. அந்த ஊரே கல்கண்டாக இனிக்கும் நந்தி வாய் மூலிகை நீரை பருகி சந்தோஷமடைகிறது. குளத்தில் இறங்கி ரெண்டு கை நிறைய நந்தியின் வாயில் இருந்து நீர் வாங்கி குடித்தேன். என்ன ருசி அப்பப்பா!

பஞ்ச முக சிவன் இந்த பகுதியில் இருக்கிறார். ஒன்று ராமகிரி வாலீஸ்வரர். ராமகிரிக்கு இன்னொரு பெயர் திரு ஏரிக்கரை - ஈசானன்
ரெண்டாவது சிவன் பள்ளிகொண்டீஸ்வரர் சுருட்டப்பள்ளியில். தத்புருஷ முகம்.
மூன்றாவது முகம் சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவ புரம் எனும் ஆரணி (பெரிய பாளயத்துக்கருகே உள்ளது.) வாமதேவ முகம்
நான்காவது முகம் வரமூர்த்தி. அறியதுறை . ஸத்யோஜாத முகம். தென் கோகர்ணம் என்று ஊருக்கு பெயர்.

ஐந்தாவது முக சிவன் சிந்தாமணீஸ்வரம் எனும் ஊரில் இருப்பவர். மீஞ்சூர் அருகே காட்டூர் என்கிற இடத்தில் இருப்பவர். அங்கே ப்ரம்மாரண்ய நதி கடலோடு சங்கமமாகிறது. இங்கே சிவனின் முகம் அகோரமூர்த்தி.

ராமகிரியில் அம்பாள் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே அழகு.

காலபைரவர் சந்நிதி முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச்செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகு இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...