Tuesday, August 22, 2017

அமுதன் ஈந்த ஆழ்வார்கள். 4



அமுதன் ஈந்த ஆழ்வார்கள். 4 - J.K. SIVAN

''வேதம் தமிழ் செய்த மாறன்.....''

மிகச் சிறந்த ஞானி அவர். அவதார புருஷர். ஆனால் யாருக்கு தெரியும்? அவர் தான் பிறந்தது முதல் வாய் பேசாமல், பாலோ, ஆகாரமோ, நீரோ அருந்தாமல் மௌனியாகவே இருந்தாரே!.

பிறந்தது முதல் கண்ணே திறக்கவில்லையாம், அழவில்லையாம். என்னதான் இப்படி தொந்தரவே பண்ணாத ஒரு அபூர்வ குழந்தையாக இருந்தாலும் பெற்றோருக்கு கவலை இருக்காதா? அந்த ஊர் பெருமாள் பொலிந்து நின்ற பிரான் ( ஆதி நாதன்) என்ற பெயர் கொண்டவர். குழந்தை பிறந்த 12ம் நாளே பெருமாள் முன் குழந்தையை கிடத்தி வேண்டினார்கள் பெற்றோர். என்ன ஆச்சர்யம்? குழந்தை கண் திறந்து பார்த்து நேராக தவழ்ந்து அருகே இருந்த புளியமரத்தை அடைந்தது. அங்கே ஒரு பெரிய பொந்தில் அமர்ந்தது. இது ஸ்தல விருக்ஷம்.

சமீபத்தில் திருநெல்வேலி பக்கம் சுற்றினேன். அப்போது இந்த திவ்ய தேசத்துக்கு சென்று அந்த விருக்ஷத்தை அதன் விருத்தாப்பிய கோலத்தில் கண்டு வணங்கினேன். நிறைய பேர் வந்திருந்தார்கள். புளிய மரம் பார்க்க தட்டில் ஒருவர் காசு வாங்கி தட்டில் நோட்டு பறந்தது.

இந்த புளியமர இலைகள் இரவில் கூட மற்ற மரங்களின் இலைகள் போல மூடி உறங்குவதில்லை. ''உறங்காப்புளி'' என்ற பிரசித்த பெயர் பெற்றது. இந்த பெரிய புளிய மர பொந்தை, ஆதிசேஷனே பூமியில் அவதரித்து படம் விரித்து நிற்பதாக கூறுவதுண்டு.

புளிய மரத்தில் சவுகரியமாக அமர்ந்த குழந்தை த்யானத்தில் ஆழ்ந்தது. ஒருநாளோ ரெண்டு நாளோ அல்ல. வருஷங்கள் பதினாறு ஓடியது. அதற்கப்புறம் இன்னொரு 16 வருஷம் தான் வாழ்ந்தார். மொத்த வயது 32 தான். அதற்குள்ளா இத்தனை யுக விஷயங்கள்? ஆதிசங்கரரும் விவேகானந்தரும் கூட இப்படித்தானோ? ஏன் ஆதி சங்கரர், விவேகானந்தர் நம்மாழ்வார், மார்க்கண்டேயன் -- இவர்களுக்கு எல்லாம் வெறும் 16, 32 வயசு மட்டும் ?? மகான்களுக்கு ரொம்ப வயசு தேவையில்லையோ!
அதனால் தான் பாபி ஆயுசு சதாயுசு -- பாபம் செய்தவர்கள் தான் நூறாண்டு காலமோ? கஷ்டங்கள் சித்திரவதைகளுக்கு அப்புறம் விமோசனமோ?

இந்த ஆழ்வார் இருந்த காலம் கி.மு. 3102, கலியுகத்துக்கு முன்னாலேயே என்றும், இல்லை, அப்புறம் தான், அதாவது 6, 8, 9ம் நூற்றாண்டு கி.பி. என்கிறார்கள். நாம் எதற்கு வடையை எண்ணச் சொன்னால் துளையை எண்ண வேண்டும். வருஷமா முக்கியம்?

அவர் அவதாரம் செய்தது ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படும் திருக்குருகூர். இது தாமிர பரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூர். திருநெல்வேலியிலிருந்து 20 கி.மீ. திருச்செந்தூரிலிருந்து 17 கி.மே. ஸ்ரீ வைகுண்டம் என்று ஒரு ஊர் 3 கி.மி. தூரத்தில் இருக்கிறது. ஆழ்வார் திருநகரி மிகச் சிறந்த ஒரு வைணவ ஸ்தலம். திவ்ய தேசம். விடியற் காலையில் அங்கு சென்றபோது மனமும் உடலும் குளிர்ந்தது. எங்குமே பட்சிகளின் சப்தத்தை தவிர எல்லாமே அமைதி.

ஆழ்வாருக்கு விளங்கும் மற்ற சில பெயர்கள், சடகோபன், பராங்குசன், சடாரி, மகிழ்மாறன், வகுளாபரணன், வழுதி வளநாடன், குருகையார் கோன். அவருடைய அப்பா காரி. அம்மா உடைய நங்கை. மிகவும் புண்யம் பண்ணினவர்கள். வெள்ளாள பிள்ளை வகுப்பை சேர்ந்தவர்கள். பரம்பரையாக விஷ்ணு பக்த குடும்பம்.

திருவண் பரிசாரம் என்று ஒரு திவ்ய தேசம் இருக்கிறதே அதில் தான் உடைய நங்கையின் பெற்றோர் வாழ்ந்தனர். அந்த ஊரில் தான் அவருடைய தந்தை வைஷ்ணவ ஸ்தானிகராக இருந்தவர். உடையநங்கையை காரிக்கு மணமுடித்தார்கள். திருவண் பரிசாரம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப் பக்கத்தில் உள்ள ஊர்.

அப்போதெல்லாம் தமிழ் வருஷங்கள் தானே கணக்கு. கலியுகம் பிறந்து 45வது நாள் பிரமாதி வருஷம் வைகாசி மாசம், விசாக நக்ஷத்ரம் என்று ஆழ்வாரின் பிறந்தநாளைச் சொல்கிறார்கள்.

பெருமாளின் படைத் தலைவராம் விஷ்வக்சேனரே இந்த ஞானியாக பிறந்தவர் என்பார்கள். இனி அவரை நாம் 'நம்' ஆழ்வார் என்று அறிவோம். இது நாம் வைத்த பெயர் இல்லை. ஸ்ரீ ரங்கநாதரே இவர் ''நம் ஆழ்வார்'' என்று பெருமையாக சொன்னதால் அந்த பேர் உலகம் உள்ளவரை நம்மை மகிழ்விக்கும்.

நம்மாழ்வார் வெறும் ஞானியாக மட்டும் இல்லை. இணையற்ற கவிஞன். ஆழவார்களிலேயே மிகச் சிறந்த முதன்மையான ஆழ்வார். இவர் புலமையைக் கண்டு நாம் மட்டுமா மகிழ்ந்தோம். தமிழ் மொழிக் கவிகளில் நிகரில்லாத கம்பர் சடகோபரந்தாதி என்று இவரைப் பற்றி எழுதிய பாடல்களில் இவருக்கு ஈடான தமிழ் ஞானம் கொண்ட பக்திக் கவிஞன் கிடையாது என்று அல்லவோ எழுதியிருக்கிறார்.

நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.நினைவிருக்கலாம். மதுர கவி என்று பாண்டிய தேசத்து பிராமணர் ஒருவர். வேதங்களில் நன்றாக தேர்ச்சி பெற்றவர். வட தேசங்கள் யாத்திரையாக சென்றார். அப்போது வானிலே ஒரு ஒளி அவரை வடக்கே இருந்து வழிகாட்டி குருகூர் வரை அழைத்துக் கொண்டு சென்று நம்மாழ்வார் முன் நிறுத்தி மறைந்தது. அப்போது மதுரகவி ஒரு கேள்வி நம்மாழ்வாரை கேட்கிறார்.

'' செற்றத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தை தின்று எங்கே கிடக்கும்?''

இந்த கேள்வியை நம்மிடம் யாரவது ஒருவர் கேட்டால் அவரை ஒருமாதிரியாக பார்த்து விட்டு ''பாவம் சின்ன வயதில் இப்படி ஆகிவிட்டாரே '' என்று பரிதாபப்பட்டு நகர்வோம். ஏனென்றால் நமக்கு இது புரிந்து கொள்ளவே பல யுகங்கள் ஆகும். ஆனால் இதுவரை பேசாதிருந்த அந்த புளியமர பொந்து பாலகனோ, அடுத்த கணமே ''அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதில் சொன்னார். இதன் உள்ளர்த்தம் ''ப்ரக்ரிதியில் உழலும் ஜீவன், அதிலேயே அனுபவம் பெற்று ஜீவிக்கும். பரத்தில் திளைத்து பரமனிலேயே உய்யும்'' என்ற உயர் தத்துவம் இதில் அடங்கும் என்பார்கள். நிதானமாக படித்து யோசியுங்கள் அர்த்தம் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

மதுரகவி ஆழ்வார், இதன் பொருளை உணர்ந்து அந்த கணம் முதல் நம்மாழ்வாரையே தமது குருவாகக் கொண்டார். முன்பே எழுதியபடி மதுரகவியாரின் கண்ணினுட் சிறு தாம்பு 11 பாசுரங்களே ஆனாலும் ''ஆச்சார்ய நிஷ்டை'' என்ற வகையில் ஆச்சார்யனான நம்மாழ்வாரைப் பற்றியே பாடப்பட்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஒரு சிறந்த நிரந்தர இடத்தை பெற்றிருக்கிறது.

நம்மாழ்வார் இயற்றியவை:

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி. கடைசியாக சொன்ன திருவாய் மொழி மிகவும் சுவை வாய்ந்த பாசுரங்களைக் கொண்டது. படித்து ரசித்தேன். நிறையவே சொல்லவேண்டும். இப்போது இயலவில்லை. ஒவ்வொருவருமே படித்து ஸ்வானுபவம் பெற வேண்டிய ஒரு அபூர்வ, அதிசய நூல். இது அத்தனையும் நம்மாழ்வார் சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் பனை ஓலைச் சுவடிகளில் பொறித்து நமக்கு அளித்த கருவூலங்கள். இது தான் தேவ ரஹஸ்யம் என்பது. எப்படி அந்த மாயவன் எங்கோ இருந்த மதுர கவியாழ்வாரைப்பிடித்து முக்கால் இந்தியாவுக்கு மேல் நடக்கவைத்து காடு மேடு எல்லாம் கடந்து தெற்கே எங்கோ ஒரு சிறு ஊரான திருகுருகூர் அடைந்து பேசாத நம்மாழ்வாரை பேசவைத்து அவரது பாசுரங்களை படியெடுக்க வைத்தான்!!
எல்லாம் நம் மேல் கொண்ட அன்பினால் தானே! நாம் அனுபவிக்கத்தானே!

நம்மாழ்வார் 'சர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று அனுபவித்து வாழ்ந்தவர். எதிரே ஒரு கம்பமோ, கன்றுக்குட்டியோ, மரமோ இருந்தாலும் அதை அணைத்து ''என் கண்ணப்பா'' என்று விஷ்ணுவாக பாவித்து அனுபவித்தவர்.

ஆழ்வார் திருநகரியிலிருந்தே ஸ்ரீ ரங்கம் நடந்தார் ஸ்ரீரங்கநாதனை சேவித்தார். ஸ்ரீ வைஷ்ணவத்திலே ஜொலிக்கும் ஒரு தாரகை நம்மாழ்வார். அந்த மஹா பெரிய வைஷ்ணவ வரிசை, ஸ்ரீதரன் , ஸ்ரீ, விஷ்வக்சேனர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி,யாமுனாச்சார்யர், பெரியநம்பி, ராமானுஜர், கூரத்தாழ்வான், எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை என்று தொடர்கிறது.

விஷ்ணு ஆலயங்களில் நாம் தலையில் கிரீடம் மாதிரி பட்டாச்சாரியார் முன் தலை குனிந்து சாற்றிக் கொள்கிறோமே , அதன் மேல் இரு திருவடிகள் தோன்றும் அல்லவா. இது தான் ஸ்ரீ சடாரியாகிய ஸ்ரீ நம்மாழ்வார். ஒவ்வொரு முறை பெருமாளை தரிசிக்கும் போதும் நாம் கேட்காமலேயே நம்மாழ்வார் நம்மை ஆசீர்வதிக்கிறார்! இது இனி நினைவிலிருந்தால் மனது குளிரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...