Wednesday, November 18, 2020

RAGAVENDRA SWAMIGAL

 


                                                       சுடும் சந்தனம்   J K  SIVAN 


 வெயில் காலத்தை  பற்றி  எழுதினேன். அதோடு நெருங்கிய சம்பந்தப்பட்ட ஒரு வஸ்துவிப் பற்றி சொல்லவேண்டாமா? சந்தோஷத்தை  மணத்தோடு  வாரி வீசுவது  சந்தனம்.  சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று தான் அப்போதெல்லாம்  கல்யாணம் மாற்று விசேஷ காலங்களில்  சந்தனம் தந்து உபசரிப்பார்.  ரொம்ப முக்யமானவர்களுக்கு முகத்தில் கைகளில் மார்பில் பூசி விடுவார்கள். சட்டை போடாத காலம் என்பதால் முதுகில் கைகளில் மார்பில் பூசி விட முடிந்தது. இப்போது கிண்ணத்தை நீட்டினால் அசட்டு சிரிப்புடன் சுண்டு விறல் நுனியால் தொடுவதோடு சரி.

கோவில்களிலும்  மனது சந்தோஷமாக இருக்க  அபிஷேக பிரசாதமாக சந்தனம் தருவார்கள்.  வாரி நெற்றியில் பூசிக்கொள்வோம்.

மரத்தடியில் பனை ஓலை விசிறியை ஒரு கையால் விசிறிக்கொண்டு  சுகமாக   அமர்ந்த காலத்தில் சந்தனம் மிகவும் சுகமாக இருந்தது.   அதுசரி  எதற்கு இந்த சந்தன கட்டுரை?   ஒரு கேள்வி கேட்பதற்காகத்தான்?

 சந்தனம் குளிர்ச்சியை தருமே அது சுடுமா ?  இப்படி ஒருவர் கேட்டால்?

'' ஆம்  நிஜமாகவே ஒருவர் சந்தனம் சுடுவதை  அனுபவி த்திருக்கிறார். அதை பற்றிய  விவரம் சொல்லவேண்டாமா?  ஒரு கதை சொல்கிறேன். 

ஒரு  மத்வ கோடீஸ்வரர்  யாகம்  நடத்தினார். நிறைய படித்த பழுத்த  வேத சாஸ்த்ர பண்டிதர் ஒருவரை முதன்மை ஸ்தானத்தில் வைத்து அவர் தலைமையில் மற்ற  வேத பிராமணர்கள் மந்திரம் சொல்லி யாகம் நடக்க ஏற்பாடு ஆயிற்று.

பிரதம  வேத சாஸ்திரி படாடோபமானவர்.  நிறைய பணம் சம்பாதிப்பவர்.  எனவே  உயர்ந்த  பட்டு வேஷ்டி , அங்கவஸ்திரம், காது, கழுத்து, கைகளில்  தங்கம் வைர நகைகள்.  ஆசாமி ஏற்கனவே   பரங்கிப்பழ கலர்.  ஆகவே  பள பள வென்று  ஜொலித்தார்.   ஜபர்தஸ்தோடு  கம்பீரமாக  எல்லோரையும் ஏளனமாக  பார்த்துக் கொண்டு  யாக குண்டம் முன்னால்  பீடத்தில்  அமர்ந்தார்.   அவருக்கு  எவரும் லக்ஷியம் கிடையாது.  ராஜாவுக்கு அப்புறம்  அவர் தான்  ரெண்டாவது ஸ்தானம் என்று நினைப்பவர்.  பணம் வேறு சேர்ந்ததால்  தான்  கோடீஸ்வர  சாஸ்திரிகள்.   அவர் சொந்தக்  காரர்கள், குடும்பம் அனைவரும்  பவ்யமாக அவர் அருகே  கை  கட்டி நிற்பார்கள். 

 மந்திரம் சொல்லும்  அவருடைய  உதவியாளர்கள்  சிலர்  அருகே இருந்தார்கள்.  வயதான அந்த மணித்தியார் புதியவர்.  மந்திரம் சொல்ல வந்திருந்தார்.   பரம ஏழையாக கிழிந்த  சாயம்போன வேஷ்டியோடு இருந்தார்.     மற்றவர்கள்  வசதி உள்ளவர்கள் போல் இருக்கிறது. நல்ல ஆடைகளோடு வந்திருந்தார்கள்.  

 கிழவர் நெற்றியில்  உடலில்  நிறைய சந்தனம்  பளபளத்தது. யாக குண்டத்தை சுற்றி ப்ராமணர்களோடு அவரும்  உட்கார்ந்திருந்தார்.  பிரதம வேத சாஸ்திரி அவரைப் பார்த்து முகம் சுளித்தார்.  யார்  இந்த பரதேசி?

கை  தட்டி அந்த கிழவரை கூப்பிட்டார்  வேத சாஸ்திரி.
பெரியவர்  எழுந்து அவர் அருகில் வந்தார்.

''நீர் மந்திரம் எல்லாம் தெரிந்தவரா?''

'தெரியும். தெரிந்ததை சொல்லிக்கொண்டு வருகிறேன்''

'' இது முக்கியமான  யாகம் என்னு உனக்குத் தெரியுமா?   அக்னி உபாசனை இதில்  முக்கியம். 
.  எனக்கென்னமோ உம்மைப் பார்த்தால்  மந்திரம் எல்லாம் சரியாக தெரிந்தவராக இல்லையோ என்று தோன்றுகிறது.  எதற்கும் உமக்கும் ஒரு வேலை தருகிறேன்.  இங்கே  எங்களோடு உட்கார்ந்து நீர்  மந்திரம் ஒன்றும் சொல்ல வேண்டாம்.  அதோ இருக்கிறது பாரும்  சந்தனக் கல். அங்கே போய்  பேசாமல்  அமர்ந்து சந்தனம் நிறைய அரையும்.  

யாகம் முடிந்தவுடன்  எல்லோருக்கும் சந்தனம்  பூசிக்கொள்ள நிறைய வேண்டும். அதை உருப்படியாக செய்யும். உமது மந்திரம் எங்களுக்கு இங்கே வேண்டாம். புரிகிறதா?'' என்று விரட்டினார்.

பெரியவர் ஒன்றும்  சொல்லவில்லை.  பேசாமல் திரும்பி சென்றார்.  ஓரமாக  இருந்த சந்தனக்கல்  அருகே அமர்ந்து சந்தனம் அரைக்க ஆரம்பித்தார்.  

அக்னி யாகம் நடந்துகொண்டிருக்க வயதானவர்  ஓரமாக   சூரிய   நாரயணன் மந்திரத்தை உச்சாடனம் பண்ணிக்கொண்டு சந்தனம் அரைத்து முடித்தார்.

அவர் மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்ததை அவர் வாய் அசைவதிலிருந்து  வேத சாஸ்திரி கவனித்தார். 

இந்த கிழட்டுப்பயல்   தப்பு தப்பாக ஏதோ மந்திரம் வேறு சொல்லிக்கொண்டிருக்கிறானா  அல்லது என்னை திட்டிக்கொண்டே  அரைக்கிறானா தெரியவில்லையே .  அகம்பாவம் பிடித்தவன். இருக்கட்டும்.  யாகம் முடியட்டும் இவனை  ஒரு வழி பண்ணுகிறேன்.  ''பேசாமல்  சந்தனம் அரை'' என்று தானே சொன்னேன். என்ன திமிர் இந்த கிழவனுக்கு?    பேசாமல் அரைக்காமல்  மந்திரம் என்று ஏதோ முணுமுணுக்கிறானே. வேஷதாரி. ''   கோபம் சாஸ்திரிக்கு. 

யாகம் முடிந்து  எல்லோருக்கும்   சந்தனம்  அளிக்கும்  நேரம் வந்தது.  முதலில் பிரதம  வைதிகருக்கு.  எனவே  அவர்  சந்தனத்தை வாங்கி நிறைய  மார்பில் கைகளில் பூசிக்கொண்டார்.  அடுத்த க்ஷணமே  ''ஐயோ அப்பா, அம்மா, என்று அலறினார்.   ''தா தை''    என்று குதித்தார். மேல் அங்கவஸ்திரத்தை அவிழ்த்து போட்டுவிட்டு அங்கும் இங்கும் ஓடினார் ''

சுவாமி  என்ன ஆயிற்று என்று அருகில் இருந்தோர்கள் கேட்டார்கள்.

'இது சந்தனம் இல்லை,  நெருப்பு, அக்னி....என்னை கொளுத்துகிறது''

''சந்தனம் சுடுமா என்ன,   ஏன் இப்படி சொல்கிறார்?   என்று  அந்த பெரியவரை கேட்டார்கள்.  

''அக்னி ஹோமம் பண்ணும் போது  சூரிய மந்திரம் தான் பிரதானமாக  சொல்லவேண்டும்.  நான் கவனித்தபோது அவர்கள் அதை அவர்கள் சொல்லவில்லை.  சூரியன் அனுக்கிரஹம் இல்லாமல்  அக்னியாகம் பலன் தராது அல்லவா.  ஆகவே   அவர்களை ஒன்றும் சொல்லலாம்   நான்  எனக்குள்  சூரிய மந்திரம் உச்சரித்துக்கொண்டே  சந்தனம் அரைத்தேன். அதனால்  சூரியன்  என்னுடைய சந்தனத்தில்  ஆவாஹனம் ஆகிஇருக்கலாம்.   தவறு என்னுடையது. அதனால் தான் அவருக்கு சுடுகிறதோ என்னவோ தெரியவில்லை. 

இதோ  சூரியனை மறுபடி வேண்டிக்கொண்டு அதை குளிர்ச்சி செய்ய வேண்டுகிறேன்''  என்று  சூரியனை  வேண்டி  மந்திரம் உச்சரித்தார்.  

சந்தனம்  ஜில்லென்று  ஐஸ் கட்டியாக குளிர்ந்தது.  

தலைமை வேதியர் அப்படியே  நெடுஞ்சாண் கிடையாக  தரையில் விழுந்து அந்த பெரியவர் கால்களை பிடித்துக் கொண்டார்  என்று  நான் சொன்னால்  அது உங்களுக்கு முன்பே தெரிந்த விஷயம். 

''நான் தப்பு பண்ணிவிட்டேன். என்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள் . உங்கள் அருமை பெருமை தெரியாமல் பேசிவிட்டேன்.  அவமதித்தேன். தக்க தண்டனையை சூரியன் கொடுத்தான்.  நீங்கள் யாரென நான் தெரிந்து கொள்ளலாமா?'' .  பிரதம வைதிகர்  கேட்டபோது  அருகே இருந்த ஒருவர் பதிலளித்தார்.  என்ன சொன்னார். 

'' இவரைத் தெரியாதா,  எல்லோரும்  இவரை   ''ஸ்ரீ   ராகவேந்திரர்''  என்று தான்  சொல்வார்கள். எல்லோரும்  ராகவேந்திரா ஸ்வாமிகள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.   நாமும் செய்யலாம் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...