Friday, November 27, 2020

pattinathar


 


பட்டினத்தார்    J K  SIVAN  


                    பிடிக்காமலும்  படிக்கலாம்.  


எல்லோருக்குமே, அரசியல்வாதிகள்,  செல்வந்தர்கள் , பணத்தை அதிக அளவில் ஈட்டும் I-T உத்யோகஸ் தர்கள்,  யாராக  இருந்தாலும்   பணத்தை கண்டவுடன்  பகட்டான வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது.


நடுத்தர  ஆசாமிகள்  மனைவி-மக்களுக்காக வீடுகள், நகைகள்   எல்லாம்  வாங்கக்  கடனில் மாட்டிக்
கொண்டு  வட்டி விழுங்குகிறது.  முழி பிதுங்குகிறது.   திருட்டு வழியில் பணம் தேடுகிறவர்களும் உண்டு. சுலப வழி ஆயிற்றே.   செய்யக் கூடாத தவறுகளை எல்லாம் துணிந்து செய்யத் துணிவு எங்கிருந்தோ 
வருகிறது. 
மொத்தத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதிலோ அறச்செயல்களைச் செய்வதிலோ இறைவனைத் துதிப்பதிலோ அக்கறை காட்டுவது  பூஜ்யம்.  ஸீரோ பெர்ஸன்ட்  ZERO PERCENT தான். 

 வாழ  இவ்வளவு முஸ்தீபு, பிளான் பண்ணும்போது,  திடீரென்று உயிர் பிரிந்து விட்டால் என்ன நடக்கும்?  யார் யார் உடன்வருவார்?  மரணம் நிச்சயம் ஆனால் அது வரும் நேரம்  நிச்சயமல்லையே.  அடுத்த நொடியில் கூட வரலாம்.  அப்போது சேர்த்து வைத்த சொத்து உடன் வருமா?   நகைகள் பூட்டி அழகு பார்த்த  மனைவி உடன் வருவாளா?  பெற்ற,  மற்ற மக்கள் தான் கூட வருவார்களா? 

இதை முன்கூட்டியே  நமக்காக யோசித்து தாம் உணர்ந்த உண்மைகளை சித்தர்களும் ஞானிகளும் நமக்கு எடுத்துக் காட்டி உள்ளார்கள்.  அவற்றை நாம் படிப்பதில்லை.  அதற்கு என்னவோ நமக்கு நேரமில்லை. 
அதை படித்தால் தான்   செய்யும் தவறுகல் புரிபடும்.  தவறு செய்ய அச்சப்படுவோம்.

 அப்படி  மண்டையில் அடித்தது போல் எடுத்துச்  சொல்பவர்களில் ஒருவர்  பட்டினத்தார்.  சில நேரங்களில்  பட்டினத்தார் பாடல்களை  நாம் உங்களுக்கு   சொல்கிறேனே. என் மேல் கோபம் வரலாம். ஸாரி .  படிப்பது நல்லது என்று தோன்றுவதால் இப்படி செய்கிறேன்.  இன்று கொஞ்சம் புரிந்துகொள்வோம்.  தவறுகளைத் தவிர்ப்போம்.  பட்டினத்தார்  சொல்வது போல்  இந்த உடல் என்பது என்ன?

“அங்கோடு இங்கோடு அலமருங்க கள்வர் ஐவர் (ஐம்புலன்களை சொல்கிறார்)  கலகமிட்டு அலைக்குங் கானகம்,   சல மலப் பேழை,    இருவினைப் பெட்டகம் (நல்லது கெட்டது , இம்மைக்கு மறுமைக்கும் ஆன செயல்கள்) ,   வாத பித்தம் கோழை குடிபுகுஞ் சிற்றூர்,   ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டு , நாற்றப் 
பாண்டம் – நான் முழத்து  ஒன்பது  பீற்றல் துண்டம் (உடல் அளவு ),  பேய்ச்சுரைத் தோட்டம் (பிரயோஜனம் இல்லாதது) ,  ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்,   ஓயா நோக்கிடம்- ஓடும் மரக்கலம் (நிழலைத்தேடி ஓடுகிறோமே  அது )  மாயா விகாரம் – மரணப் பஞ்சரம் (கூடு),    சோற்றுத் துருத்தி – காற்றில் பறக்கும் கானப் பட்டம்,  சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை,  ஈமக் கனலில் இடுகிற விருந்து,  காமக் கனலில் கருகும் சருகு,   கிருமி கிண்டும் கிழங்கு”.....“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து,    கண்துயில் கனவில் கண்ட காட்சி”
ஐம்பொறி மயக்கமும் இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கை,  உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பை,   எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்துக் கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிசை , ..
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரம் (பஞ்சரம் என்றால் கூண்டு, கூடு  என்று மேலே சொல்லியிருக்கிறேன்)
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்,  காசில் பணத்தில் சுழலும் காற்றாடி.  .. “காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக்கலத்தை இருவினை விலங்கொடும் இயங்கு புற்கலன், நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கை 
“ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே  அன்பு வைத்து அலைந்தாய் நெஞ்சமே”
“எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை அத்தனையும் மண் தின்பதில்லையோ”
“ஆங்காரப் பொக்கிஷம் – கோபக் களஞ்சியம் – ஆணவத்தால் நீங்கா அரண்மனை – பொய் வைத்த கூடம் – விண்நீடி வளர் தேங்கார் பெருமதில் – காமவிலாசம் – இத்தேகம் கந்தல்”
“விடக்கே – பருந்தின் விருந்தே – கமண்டல வீணன் இட்ட முடக்கே – புழு வந்து உறையிடமே – நலம் முற்றும் இலாச் சடக்கே – கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத் தொடக்கே” 
(விடக்கு என்றால் தசைப்பிண்டம், முடக்கு என்றால் சிறு குடிசை , கமண்டல வீணன் என்றால் பிரமன், )

போதும்  ஸார் , மேடம்,  போதுமே எழுதும் எனக்கே  தாங்கவில்லை, பாவம், படிக்கும் நீங்கள் அவஸ்தை இன்னும்  படவேண்டாம்....

அடேயப்பா,   பட்டினத்தார் லிஸ்ட்  நான் முழுக்க தரவில்லை..... நமது உடம்பைப் பற்றி  அவர் வர்ணனை எப்படி?  டிஸ்க் ரிப்ஷன்  DESCRIPTION,   நமது உடலைப் பற்றி இதற்கு மேலும் யாராவது இப்படி அழுத்தம் திருத்தமாக சொல்லமுடியுமா?  வார்த்தைகளில் வேகம், எளிமை, எளிதில்  புரிகிறமாதிரி தமிழ்,   சொல் கட்டு. ஆகவே தான்  இந்த அழகைக் கெடுக்க நடுவே  நான் அர்த்தம் சொல்ல மூக்கை நீட்டவில்லை.

இப்படி நமது உடலை வர்ணிக்கும் பட்டினத்தார் மரணம் வந்தால் என்ன நிகழும் என்பதையும் பல பாட்டுகளில் நமக்கு விளக்குகிறார். பாட்டு புரிகிறது. 

“கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத் தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
எட்டி அடி வைப்பரோ?”   

எப்படி கேள்வி கேட்கிறார் பாருங்கள்   பட்டினத்தார்.   ஏனய்யா,  இவ்வளவு செஞ்சியே,  உன்னோடு மயானத்
திற்கு  யார் உன்  கூடவே  வரப்போகிறார்கள்?    பதில் சொல்ல திணறுகிறோம்....  “காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”   என்று  பதிலும் அவரே  சொல்கிறார்.

“மனையாளும் மக்களும், வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே-  வழிக்கேது துணை?
தினை
யாம் அளவு,  எள் அளவாகிலும்,  முன்பு செய்தவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும்.  சத்தியமே”

“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே – விழி அன்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே – விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே”

நமது நல்ல, சத், கர்மா பலன் ஒன்று தான் கூட வரப்போகிறது என்கிறார்.  அதற்காகவாவது நாம் பிடிக்காவிட்டாலும் சில நல்ல காரியங்கள் செய்யவேண்டாமா?  பட்டினத்தாரை பிறகு  மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...