Wednesday, April 1, 2020

SOOR SAGARAM




சூர் சாகரம் J.K. SIVAN

''நீ சொல்றது உண்மை தான் ...

மய்யா மோரி என்கிற பாடல் கேட்டிருக்கிறீர்களா?. என்னை மிகவும் கவர்ந்த ஒரு செவிக்கினிய பாட்டு. இதை MS பாடியிருக்கிறார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இது தான் லிங்க். கிளிக் செய்தால் MSS பாடிக்காட் டுவார். https://youtu.be/xUJafHydVfk இதை ரசிக்காதவர்கள் கிடையாது என்றும் சொல்லலாம். இது சூர்தாஸ் எழுதிய எத்தனையோ ஆயிரத்தில் ஒன்று. சூர்தஸ் ''எழுதிய'' என்பது தப்பு. கண் பிறவியிலிருந்து கிடையாதே. எந்த பள்ளிக்கூடமும் போகவில்லை, தானாகவே கிருஷ்ணன் மனதில் போய் புகுந்து கொண்டு ''என்னைப் பாடு '' என்று பாடவைத்து கேட்டவர்களில் யாரோ எழுதி வைத்தது. சூர்தாசரைப் பற்றி அநேகருக்கு இதுவரை தெரியாமல் இருக்க நிறைய வாய்ப்புண்டு. ஆகவே தான் அடிக்கடி அவர் பாட்டுகள் அர்த்தம் எழுதுகிறேன்.
லதா மங்கேஷ்கர் பாடியும் கேட்டேன். ஏனோ மனதில் தங்கமாட்டேன் என்கிறது. வடக்கு சங்கீதம் பரிச்சயமில்லை என்பதால் இருக்கலாம்.

o maiyyā morī, maiń nahiń mākhan khāyo bhor bhayo gaiyana ke pāche (tune) madhubana mohi paṭhāyo cāra prahara vaḿśī vaṭa bhaṭakyo sāñjha paḍe ghara āyo
maiyyā, maiń kab mākhan khāyo maiń bālaka vahi yan ko choṭo yeh chīko vidhī pāyo gvāla bāla sab bair paḍe haiń bar-bas mukha lapaṭāyo yeh le apani lakuṭa kamarīya bahuta hī nāca nacāyo jiye tere kachu bheda upaj hai jāni parāyo jāñyo sūra dāsa tab hasī yaśodā le ura kaṇṭha lagāyo (naina nīra bharī āyo) (tai nahin mākhan khāyo)

உத்தேசமாக அர்த்தம் சொல்கிறேன்:

''டேய் கிருஷ்ணா இங்கே வா. ?
''........''
''எங்கேடா இருக்கே, கூப்பிடறேனே காதில் விழலை. வா இங்கே உடனே''
. ''.....''. '
'உன்னை விட்டேனா பார்?''
யசோதை ஒளிந்து கொண்டிருக்கும் கண்ணனை பிடித்து விட்டாள் . தரதர வென்று கூடத்துக்கு வெளிச்சத்தில் இழுத்துக் கொண்டு வருகிறாள்.
''எங்கே இப்போ சொல்லு ? வெண்ணை எடுத்து திருட்டுத்தனமாக தின்றாயா?''''
''அம்மா அம்மா என் ஆசை அம்மா இல்லை நீ. நான் பொய் சொல்வேனா? நான் வெண்ணையை தொடவே இல்லை. அப்புறம் தானே சாப்பிடமுடியும்?

'' நீ சொன்ன மாதிறியே தான் நான் செய்தேன். பொழுது விடிந்து எழுந்தேன். பசுக்களை கட்டி அணைத்துக் கொண்டேன். அதுகளோடு மதுவனம் போனேன். அங்கே அதெல்லாம் மேயும்போது மரத்தடியில் உட்கார்ந்து இடுப்பிலே இருந்த புல்லாங்குழலை எடுத்து ஊதினேன். பொழுது போச்சு. அந்தப் பக்கமெல்லாம் சுத்தினேன். சாயந்திரம் ஆச்சு. பசுக்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துட்டேன்.. நான் எப்போ வெண்ணை எடுத்து தின்பதற்கு நேரம் இருக்கு ? நீயே சொல்லு?
''நான் வெண்ணையை மேலே ஏறி எங்கேயோ எடுத்தேன் என்கிறாயே. நான் என்ன உயரமானவனா?
எப்படி எனக்கு மேலே வைத்திருக்கிற வெண்ணைப் பானை எட்டும்?
இந்த கன்னுக்குட்டிகள் எல்லாம் அம்மா கிட்டே பால் குடிக்கிறது இல்லையா? . வாய் நிறைய வெள்ளை நுரையோடு என்னை வாயிலே முகத்திலே, வாய்லே,உதடுலே எல்லாம் அதுகள் நக்கும். அதனாலே என் மேலே பால் வாசனை. அது என் தப்பா?.
''இந்'தா'' மாடு மேய்க்கிற உத்தியோகம் போதும். என் கிட்டே இருக்கிற கொம்பு, கயிறு, கம்பளி எல்லாம் இதோ எடுத்துக்கோ, எனக்கு வேண்டாம். . போதும் இது. இனி நீ என் அம்மா இல்லை ? இல்லாததும் பொல்லாததும் சொல்றே. நீ யாரோ. என்னை பெத்தவள் இல்லை?''

''ஐயோ, கிருஷ்ணா, அப்படி எல்லாம் பேசாதேடா''

கிருஷ்ணனின் வாயை பொத்துகிறாள் யசோதா. கண்களில் நீர் துளிர்க்கிறது.
''என் கண்ணப்பா, நீ ரொம்ப நல்லவன். உண்மை தான் சொல்றே. நீ வெண்ணை எடுத்து திங்கவில்லை. ஆமாம் நீ வெண்ணையைத் தொடவே இல்லை. ஒப்புக்கொள்கிறேன்.....'' கெஞ்சுகிறாள் யசோதை.
கண்ணில்லாத சூர்தாஸ் எப்படி நம் கண் முன்னால் மேலே சொன்ன காட்சியை கொண்டு நிறுத்துகிறார் பார்த்தீர்களா? கண் எதற்கு. அது கொரோனா செய்திகளை டிவியில் பார்ப்பதற்கும் பத்திரிகை படிப்பதற்கும் தேவையானவர்களுக்கும் உபயோகப் படட்டும் . மனக்கண் தான் வேணும் எனக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...