Saturday, April 4, 2020

pesum deivam



பேசும் தெய்வம் J K SIVAN
3ம் பாகம்

''தங்க சாலை''

தருமமிகு சென்னையில் கந்தகோட்டம் சென்றவர்களுக்கு தங்கசாலை தெரியும். கோவிலுக்கு போகாத சென்னைவாசிகள் கூட ஒரு தரமாவது காசிக்கு போகாவிட்டாலும் மின்ட் ஸ்ட்ரீட் mint street எனப்படும் தங்கசாலைக்குள் நடந்து யார்மேலாவது, இதன் மீதாவது இடிபடாமல் நடந்திருக்க முடியாது. கஜகஜ வென்று கட்டைவண்டி, கை ரிக்ஷா வாய்நிறைய ரத்தக்கலரில் பான் சுபாரி நீள ஜிப்பா போட்ட வடக்கத்தியர் , சட்டையில்லாத, காலில் செருப்பில்லாத நமது லுங்கி டப்பா கட்டு ஆட்கள் நிறைந்த, வியாபாரிகள் கூடும் இடம். 17ம் நூற்றாண்டு கால நீளமான சென்னை தெரு. தெலுங்கு பேசும் ,கோமுட்டி, பேரி செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்தார்கள். இன்றும் அந்த வம்சத்தினர் வியாபாரம் செய்கிறார்கள். இரும்பு சாமான், துணி, பாத்திர வியாபாரிகள் நிறைந்து இப்போது மார்வாரிகள், குஜராத்திகள், மற்றவர்களும் அவர்களோடு வாசம் செயகிறார்கள். பக்தி குன்றவில்லை. 1841–1842 வாக்கில் கிழக்கிந்திய கம்பெனியார் அவர்கள் ஆட்சி நாணயம் செய்யும் இடம் இங்கே உருவானது. உலோகங்களை உருக்கி நாணயம் வார்ப்படம் செய்யும் இடம் என்பதால் மின்ட் ஸ்ட்ரீட், தங்க சாலை என்ற பெயர் நிலைத்தது. அது அப்புறம் govt press , அரசாங்க அச்சகம் ஆயிற்று. இந்த தெருவின் வடகோடியில் வீராசாமி தெருவில் ராமலிங்க வள்ளலார் வாழ்ந்து , தினமும் கந்தசாமி கோவில் நடந்து வருவார். மேலே சொன்னது தான் தங்கசாலை பற்றிய சரித்திர தகவல். இனி மஹாபெரியவா பக்கம் வருவோம். காஞ்சி மடத்தில் நல்ல கும்பல். ஸ்வாமிகள் மௌன விரதம் இல்லை. எல்லோருடனும் பேசுவார். எல்லோரும் அவர் எதிரே வணங்கி நின்று தங்களை, தங்கள் குடும்பத்தில் சிலரை பற்றி அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். வரிசையில் வந்த ஒரு இளம் வாலிபன் வணங்கி ''பெரியவா நான் வள்ளலார் நகரிலிருந்து வருகிறேன்'' என்றான்.. "வள்ளலார் நகரா?" "ஆமாம் பெரியவா, தங்கசாலைக்குத்தான் அப்படி பெயர் மாறியிருக்கிறது. ''ஓஹோ வள்ளல் என்றால் பணத்தை வாரிக் கொடுக்க வேண்டும். பணம் நிறைய வெள்ளைக்கார அரசாங்கம் அச்சுப் போட்ட சாலை இப்போது வள்ளலாரின் ஊராகிவிட்டதோ!" " ஆமாம் பொரியவா தங்கசாலைக்கு இப்போது அந்த பெயர் '' ''அதுசரி, தங்கசாலை என்றாயே, அப்படியென்றால் அங்கே பணம் அச்சுப் போடுகிற இடம் என்பது உனக்கு தெரியுமோ?" "தெரியாது பெரியவா " "தங்க சாலை என்றால் தங்கத்தினால் போட்ட ரோடு இருந்தது என்று நினைத்தாயோ?" "தெரியாது பெரியவா. இப்போ தான் அங்கே தங்கக்காசு தயாரித்ததால் அந்த இடம் தங்கசாலை என்று பேர் கொண்டது என்று தெரிஞ்சுண்டேன்.'' ''அதுவும் தப்பு, தங்கசாலை என்று சொல்வது தப்பு '' மஹா பெரியவா சொல்லிவிட்டு புன்னகைத்தார். " நீ சப்த விடங்க க்ஷேத்திரம்'' என்று பெயர் கேள்விப்பட்டதுண்டா?'' ''..........................''
கைகட்டி வாய் பொத்தி ''தெரியாது' என அந்த வாலிபர் உணர்த்த தலை ஆட்டுகிறார். "டங்கம் என்றால் செதுக்கும் உளி . கற்சிலை அடிக்கிற உளி மட்டுமில்லை. தங்கத்திலும், வெள்ளியிலும் விகிரஹங்கள், நகைகள் செய்ய உபயோகிக்கும் கருவி. உளி மாதிரி. டங்கம் என்று பெயர்.
''தேவதச்சனான விஸ்வகர்மா டங்கம் எல்லாம் இல்லாமலேயே, மனது சங்கல்பத்தால் நினைத்த எதையும் உருவாக்கி விடுவான். டங்கமில்லாமல் செய்வது விடங்கமாக செய்வது. என்று பொருள்படும்.
விஸ்வகர்மா செய்த ப்ரதிமைகள், பிம்பங்கள், விக்கிரஹங்கள் விடங்கமாக செய்ததால், திருவையாறு அதன் பக்கத்தில் ஆறு க்ஷேத்ரங்களில் கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு சப்த விடங்க மூர்த்திகள் என்று பெயர். வருஷா வருஷம் சப்த ஸ்தானம் உத்ஸவம் நடக்கும்.''
கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் நிசப்தமாக பெரியவா சொல்லும் விஷயங்களை சிரத்தையாக கேட்டுக்கொண்டிருக்க மேலே தொடர்கிறார். ''உன்னை தங்கசாலை பற்றி கேட்டுட்டு ஏன் விடங்கம் பற்றி பேச்சு மாற்றினேன் தெரியுமா?"
ஒரு நிமிஷம் நிறுத்தி எல்லோரையும் சுற்றி பார்க்கிறார். அனைவரும் ஆவலாக சிலையாக நிற்கிறார்கள்.
"நாணயம் பண்ணுமிடத்தில் தங்கக்காசு செய்வதால் அதற்குத் தங்கசாலை என்று பெயரென்று நினைத்தால் அது தப்பு. வெள்ளைக்காரனின் காலத்திலே இப்போது போல் தங்கம் அதிக விலை இல்லாவிட்டாலும் கூட தங்கக் காசை விட வெள்ளி, தாமிரம் முதலான மற்ற உலோகக் காசுதான் அதிகம் அச்சடித்து போட்டார்கள். அதனால் தங்கசாலை என்பதற்குக் காரணம் வேறே.
காசுகளில் சித்திரம்,எழுத்து இவற்றைப் பொறிப்பதற்கும், அதன் மாற்று,எடை எல்லாம் சுத்தமாய் இருக்கிறதா என்று பரிசோதனை பண்ண தட்டிப் பார்த்தே தெரிந்து கொண்டார்கள். உளி போன்ற ஒரு கருவி யை நாணயங்களை தட்டி பார்க்க உபயோகித்தார்கள். "டங்கம்" என்றே அதற்கும் பெயர். காசு உலோகத்தில் உருக்கி வார்த்து அச்சடிக்கும் கிடங்கில் இப்படி நிறையும் ஆட்கள் உட்கார்ந்து கொண்டு, காசுகளை டங்கத்தால் தட்டிச் சோதிப்பார்கள். அந்த ஓசை ஜல்ஜல் என்று வெளியிலே ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.அதனால் நாணயம் செய்யும்
அந்த இடத்துக்கே "டங்கசாலா" என்று பெயர் வந்தது. ஸம்ஸ்கிருதப் பெயர், வடக்கத்தி சொல். நம்ம தமிழில் அதை தங்கசாலை ஆக்கி விட்டோம்.
"பொருட் செல்வத்தை வாரி வாரி அள்ளி கொடுத்தவர்கள் வள்ளல்கள்..அருள் செல்வத்தைத் தந்தவர் திரு அருட்பா பாடின ராமலிங்க ஸ்வாமிகள். அருட்செல்வம் கொடுத்த ராமலிங்க ''வள்ள"லுக்கு மரியாதை "ஆர்'' சேர்த்து ''வள்ளலார்" என்கிறோம். தங்கசாலைப் பெயரும் அநித்யமாகப் போய் நித்தியமான அருளைக் குறிக்கிற வள்ளலார் பெயர் அதற்கு வந்திருக்கிறது"
இதுதான் மஹா பெரியவா சிந்தனைக்கும் மற்றவர்கள் சிந்தனைக்கும் உள்ள வித்யாசம். என்ன ஞானம், எல்லையற்ற சமுத்திரம் அவர்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...