Friday, April 3, 2020

LATE REALISATION



                லேட்  சூர்ய நமஸ்காரம்  J K  SIVAN 

கோபாலய்யர்  படுக்கையில் உட்கார்ந்து இருக்கிறார். ஊரெங்கும்  அடங்கி விட்டது. முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்  பேச்சு  ரொம்ப பிடிக்கும்.  இப்போது  கேட்க முடியவில்லை. காது  அவுட்.  படித்தால் கண்ணில் தண்ணீர் வருகிறது.  பழசை  நினைத்து நினைத்து  பார்க்க வேண்டியது தான்.   கோபாலா  எப்படிடா  இருக்கே ?   கேட்க, பேச  ஆளில்லை.   பல்லில்லாமல் கொளரி  கொளரி பேசினால் யார் கேட்பார்கள்.  அப்படி பேச மட்டும் முடிந்து  பிறர்  பேசுவதை   ஒரு அக்ஷரமும் கேட்க முடியவில்லை என்றால் யார் பேசுவார்கள்?  

ஏர் உழுபவன்   உழவுக்கு  உழைக்க  காளை மாட்டை நம்புவான்.   அப்படி தான்  இந்த  கோபாலன்  சம்பளம் வாங்க யாருக்கோ  58-60 வருஷம் உழைத்து  ஓடாக  தேய்ந்து  இப்போது  அந்திம காலத்தில் சிரமப்படுகிறன் .  நானா  ஒரு காலத்தில்  10மைல்    காலையிலும்  மாலையிலும்  தினமும் நடந்து ஆபிஸ் போனவன்?. இப்போது படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே  யாரோ உதவ வேண்டி இருக்கிறதே. 

அந்திம காலம்  இது தானா? . உட்காரவோ,  எழுந்திருக்கவோ முடியாமல்  இப்படி  மூச்சு வாங்கி . கண்  இருட்டுகிறதே.  அடேடே  இனிமேல்  எப்போதும்   இன்னொருத்தர் தயவு தேவையோ? கடவுளே  அப்படி என்றால் ரொம்ப கஷ்டமாயிற்றே, என்ன செய்வது ?

ஆதி சங்கரர் சொன்னது  ரொய்ங்ங்க்   என்று காதில் ஒலிக்கிறதே.  ''எல்லாம் விட்டுப்  போய் விட்டுடுத்து.  .. ஆனால் ஒண்ணே  ஒண்ணு ...இந்த  ''ஆசை” மட்டும்  விடவில்லையே.  அந்திம காலத்திலே கூடவா  சிரமப்படுத்தணும்? .  தேகமே  ஒடுங்கி போச்சு, முதுகு  கூனிப்போச்சு.   கண்ணு  ரெண்டு அடி க்கு  அப்புறம்  மாடா  மலையா  என்ன இருக்குன்னு தெரியல. காது சுத்த  மௌனம்....

கூடவே  உழைக்க  உதவ  மனைவி, அதனாலே  தான் தர்ம பத்தினி ன்னு  பெயரா??  தர்மாம்பாள் முன்னாலேயே போய்விட்டாளே  என்ன பண்றது??  இதுக்கு மேலே  கஷ்டம் உண்டா?

கல்யாணத்திலே கூட்டத்துக்கு நடுவிலே,  மேடையிலே  புகையிலே, சுற்றிலும் வாத்தியார்கள்.  பாணி கிரஹணம் நடக்கறதுக்கு முன்னால் வாத்யார்  சப்தபதி மந்திரம்  சொல்ல சொன்னாரே. சொன்னேனே,   அப்போ மந்திரமும் தெரியாது, அர்த்தமும் தெரியாது. எத்தனையோ வருஷங்களுக்கு அப்புறம் இப்போதோ தான் சமீபத்திலே படித்து அர்த்தம் தெரிந்து கொண்டேன். 

 ‘ இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான் விடமாட்டேன். ஜீவித காலம் பூரா  கடைசிவரைக்கும்  நீயும் நானும் அப்படியே  ஒருத்தர் ஒருத்தரை விடாம கெட்டியா  பிடிச்சுண்டு இருக்கணும் ''    

 தர்மாம்பாள் இல்லையே.  இது எப்படி சாத்தியம்? 

தலைக்கு மேலே  பிள்ளைகள் உசந்து  அதுகள் சம்பாத்யத்திலே  உயிர் வாழற நிலை வந்தா  கேட்கவே வேண்டாம்.......  மூக்கு பொடி வாங்க கூட  பிள்ளை தயவு, எதுக்கும்  எல்லாத்துக்கும் அங்கே  தான்  SANCTION  ஆகணும். 
!  எப்ப  எந்த  மூட் லே  இருக்கான்  என்  தெரியல.  வள்  என்று விழுவான்.  தர்மாவும் இல்லை.  தனிமை.  ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. 

மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சுக்களைத் தாங்கவே முடியவில்லை  என்று  சுந்தரம் அடிக்கடி முன்பெல்லாம் சொல்வான்.  ''கோபாலா, இப்படி   ஜீவித்துக் கொண்டி ருப்பதை விட போய் சேர்ந்து விடுவதே நல்லது!’'' என்பான். 

இப்படிப்பட்ட   அவல நிலையை அடையலாமா?   அடைந்தாலும்  இப்பவாவது  கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்ல தோன்றாதா? என்ன ஜென்மம் இது ?   

கோபாலய்யருக்கு இப்பவும்  விவேகம் வரவில்லை. பாங்கில் பணம் ஷேர், குறுக்கெழுத்து போட்டி   வெங்காய வடை நினைவாக இருக்கிறார்.   அந்திம  காலம்  படுத்துவது கஷ்டமாக இருக்கிறது. 
.                           
ஆழ்வார் கெட்டிக்காரர்.  அப்போதைக்கு இப்போதே சொல்லுகிறேன்  என்று  நாராயணன் நாமம் விடாமல் சொல்வார் .  வருமுன்  காப்போன்  அவர்.  

 உடம்புலே   நாடி  நரம்பு  எல்லாம்  முறுக்கேறி  தேகம் மிடுக்குடன் இருக்கும்போதே  எதை  நம்ப வேண்டும் எது ஸாஸ்வதம்  என்று  தீர்மானிக்க வேண்டும்.   பெரியோர்கள் சொன்னது, பாடியது, எழுதியது  எல்லாம் புரிந்து கொள்ளவேண்டும். அதைப்பற்றி  விடாமல் சிந்திக்க  வேண்டும். இதுவரை புரியாதது  அப்போது  புரிந்திருக்கும்.  நல்லதை  பின்பற்றி  இருக்க  வேண்டும்.
எல்லாம் போன பிற்பாடு என்ன பண்ணுவது? ஒன்றும்  முடியாது!

 காளைமாடு உழைப்பில்  அதற்கென்ன  லாபம்?  ‘பிறர்க்கே உழைத்து’ என்பதில்  இன்னொரு அழகான ஒரு  அர்த்தமும்  உள்ளே  இருக்கிறது. ‘பிறர்’ என்பது பந்து மித்ரர், எஜமானனை  மட்டுமா?  ‘நான்’  ''தான்'' அல்லாத இந்த ‘சரீரத்துக்கே’   அல்லவோ  இத்தனை நாள் உழைத்தேன்... என்றும் உணர்த்துகிறதோ?

முக்கூர்  ஸ்வாமிகள் சொல்வாரே நினைவிருக்கிறதா?

''இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா தானே நாம்.  அதைப்பற்றி நினைக்காமல்  பல  வயதுகள் ஓடிவிட்டதே.  சரீரம் வெறும் உபகரணம். நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களையெல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்தி ருக்கிறான். இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?

மாமிசத்தாலும் ரத்தத்தாலும் பிசைந்து  எழுப்பப்பட்ட  சுவர் இது!   நின்றால்  நெடுஞ்சசுவர், விழுந்தால் குட்டிச் சுவர். இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள் எலும்புக்கூடு! அதற்கு மேல் கூரை வேயப்பட்டிருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர ரீதியாக நவத்வாரங்கள்!  

பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய  ''பட்டிணம்''  என்று சரியாகத்தான்  சொன்னார்.
இந்த நகரத்துக்கு ஒன்பது வாயிற்படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.இந்த வீட்டை நமக்குக் கட்டிக் கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்! வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது ஒரு தடவை உடலைப் பார்க்கிறது. பார்த்தவுடனே ‘இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது’ என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.

ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது. சரீரத்திலே இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது. அப்போது ‘வந்து திருவடியை அடைந்தேன்’ என்று விழுகிறான்!

பகவானுடைய காருண்யத்தைப் பாருங்கள். நன்றாயிருக்கும் போது வரவில்லை. எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது ‘உன்னிடத்திலே வந்தேன்’ என்று சொன்னால் அவன் ‘இப்போதாவது வந்தாயே’ என்று ஏற்றுக் கொள்கிறான்.

‘ஏன் முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்கமாட்டான். வந்ததைக் கொண்டாடி அனுக்ரஹம் பண்ணுகிறான்!
இந்தக் குழந்தை நம்மிடத்திலே வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.
அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும். பச்சாதாபப்படவேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.
கண்களிலிருந்து விழக்கூடிய நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.
அது தான் நிர்வேதம்!
நிர்வேதம் யாருக்கு வரும்?
விவேகமுடையவனுக்குத்தான் வரும்.
விவேகமுடையவனுக்குத்தான் நிர்வேதம் வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!
ஆகவே விவேகம் என்கிற முதல் படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.
விவேகம் வரவில்லையானால் நிர்வேதம் வராது '' 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...