Monday, April 20, 2020

GEETHANJALI



கீதாஞ்சலி
ரவீந்திரநாத் தாகூர்  J K SIVAN

36.   சேவை செய்ய  சக்தியைத் தா

இப்போதைய  கால கட்டத்தில் இந்த  கீதாஞ்சலி தரும் அறிவுரைகளை பலர்  அற்புதமாக  உயிரை திரணமாக மதித்து  மக்களுக்கு இரவும் பகலும்  சேவை செய்து வருகிறார்கள்.  அவர்கள் தாள் தொட்டு வணங்குவோம்.மக்கள் சேவைதான்  மஹேசனுக்கு புரியும்   சேவை. ஜன சேவை தான் ஜனார்தனனுக்கு சேவை.
(கீதாஞ்சலியில்  தாகூர்  கிருஷ்ணா என்று நேரிடையாக  ஒரு இடத்திலும் அவன் பெயரை உரைக்கவில்லை, உச்சரிக்கவில்லை. கண்ணுக்கு தெரியாத அவன் காருண்யம், அன்பு,  செயல்கள், அவன் வேணுகான ஒலி, அவனது ஒளிமயமான அசைவு இதைத்தான் சொல்கிறார்.  என்னைப்  பொறுத்தவரை நான் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அல்ல. கீதாஞ்சலி என்று சொன்னாலோ, எழுதினாலோ  கிருஷ்ணன் நாம்  இன்றி அது மனதில் பதியாது. இணைபிரியாத இரண்டும் அவை. )

36.  This is my prayer to thee, my lord---strike, strike at the root of penury in my heart.
Give me the strength lightly to bear my joys and sorrows.
Give me the strength to make my love fruitful in service.
Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.
Give me the strength to raise my mind high above daily trifles.
And give me the strength to surrender my strength to thy will with love.
எனக்கு  நன்றாக  ஞாபகம்  இருக்கிறது.  15-16 வயது பையன் நான். அடிக்கடி  என் தந்தையார் இந்த கீதாஞ்சலி ஆங்கில வார்த்தைகளை அடிக்கடி  உபயோகிப்பதன் விவரம் அப்போது புரியவில்லை.  சரணாகதி  லக்ஷணத்தை இதற்கு மேல் ஆங்கிலத்தில்  சொல்ல முடியுமோ என்று யோசிக்க வைக்கிறது.
பகவானே கிருஷ்ணா, நான் உன்னை என்ன கேட்பேன்? எனக்கென்ன வேண்டும் என்று தானே? எனக்கு உன்னிடம் இருந்து என்ன வேண்டும் தெரியுமா, நீ எதை எனக்கு தரவேண்டும் அறிவாயா? என் மனதில் என்
இதயம் ஏழ்மையாக,   பூஞ்சையாக, ஒன்றுமில்லாமல்,  நலிந்து  கிடக்கிறதே
எதற்கும் உபயோகமில்லாத ஞானப் பஞ்சமாக, ஞான சூன்யமாக இருக்கிறதே அதற்கு உன்  சக்தியை பலமாக கொடு. எதற்கு என்று கேட்கிறாயா வரிசையாக சொல்கிறேன் எண்ணிக்கொள்.
1. என்னதான் சுகம் என்னை தேடி வரட்டுமே, எவ்வளவு பேரிடியாக துன்பம் என்னை சூழட்டுமே, அவைகளால் பாதிப்பு இல்லாமல் இன்பத்தையும் துன்பத்தையும் ரெண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு வரவேண்டும்.  சந்தோஷமோ, துக்கமோ என்னை  சாப்பிடக்கூடாது . எது வந்தாலும்  அதை சமமாக உணர்ச்சிவசப்படாமல்  ஏற்றுக்கொள்ளும்  சக்தியைத்  தா. அதைக் கொடுக்கக்கூடியவன் நீ ஒருவன் தானே.
2.என் மனத்தில் அன்பு ஊறவேண்டும். ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். உன்னிடம் மட்டும் அல்ல. நீ படைத்த அனைத்து உயிர்களிடத்தும் கூட.  பிரதி பலன்,  ஆதாயம்  தேடாத,  சுயநலம் அற்ற தூய  அன்போடு நான் சேவை செய்யவேண்டும். அது அனைவருக்கும், அனைத்துக்கும் பயன்பட வேண்டும். அதில் கிடைக்கும்  சந்தோஷம் எனக்கு வேண்டும். அப்படி  அன்போடு உழைக்கும் சக்தியைத் தா.
3.  வறியோர்க்கு, நிர்க்கதியாக தவிக்கும்  உயிர்களுக்கு எந்த  அதிகாரத்துக்கும்  தலைவணங்காமல், கட்டாயம் எதுவுமில்லா மல்  அன்போடு  தானாகவே  நான் ஏழைக ளுக்கு  ஆதரவற்றோருக்கு  பணிபுரியும் மனதையம், அதை செயல்படுத்த சக்தியும்  எனக்குத்  தா.
4.  பொழுது விடிந்தால் ஆரம்பித்து, இரவு மண்டையை படுக்கையில் சாய்த்து தூங்கும் வரை அப்பப்பா ஒவ்வொரு நாளும் ஒரு யுகம்.  எத்தனை இன்னல்கள், தடங்கல்கள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கோபம் தாபம். என் மனம் இதையெல்லாம் தாண்டி  தைரியமாக, தன்னம்பிக்கையோடு  ''தலைக்கு மேலே வெள்ளம்  போனால்  சாண்  என்ன முழமென்ன'' என்று ஒரே சீராக அமைதியாக ஆனந்தமாக  துணிவோடு செயல்பட சேவை செய்ய   எனக்கு  தேவையான சக்தி உன்னிடம் தான் இருக்கிறது.   அந்த சக்தியை  எனக்குத் தா.
5. அவனருளால் அவன் தாளை வணங்க என்று ஒரு அற்புதமாக சொல் எங்கள் தமிழில் உண்டு.
கிருஷ்ணா, அந்த அர்த்தத்தில் சொல்கிறேன். உன் திருவடிகளில் சரணடைய எனக்கு சக்தி வேண்டுமல்லவா, என்னாலியன்ற பரோபகாரத்தை மக்களுக்கு செய்வது தானே உனக்கு செய்யும் சேவை?   நீ கொடுக்கும் அந்த சக்தியை உனக்கு மனமார்ந்த அன்போடு செலுத்த வேண்டாமா,   அதற்கு அந்த சக்தியை நீயே எனக்கு கொடு கிருஷ்ணா, நான் பம்பரம், என்னை சுற்றி ஆடவிடுவது நீ அல்லவா. ஆட்டுவித்தால் ஆடுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...