Tuesday, January 21, 2020

THIRUKOLOOR PEN PILLAI

திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் 

 
        43  பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே

கிருஷ்ணனை கொல்ல  ஒன்றல்ல  ரெண்டல்ல கம்சனின்  எத்தனையோ  முயற்சிகள்.   அவன் தேர்ந்தெடுத்து அனுப்பிய எத்தனையோ  பலமிக்க  ராக்ஷஸர்கள். அவர்கள் அத்தனை   பேரையும்  கிருஷ்ணன் தீர்த்துக் கட்டி விட்டான்.  அந்த சிறு பயல் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ந்துகொண்டு தான் இருக்கிறான். நாமே அவனையும் அவன் சகோதரன் பலராமனையும் சிங்கத்தின் குகைக்கு அழைத்தால் என்ன? அவர்கள் முடிவு மதுராபுரியில் என் கண்ணுக்கு முன்பே  நடக்கவேண்டும்  என்று விதி எழுதியிருக்கிறதோ என்று கம்சன் கோட்டை கட்டினான்.

ஒரு பெரிய தனுர் யக்னம் பண்ணப்போவதாக அறிவித்து அனைவரையும் அழைத்தான். கிருஷ்ணன் பலராமனுக்கும்  விருந்தாளிகளாக  மாமா  கம்சன் அழைப்பு    விட்டான்.அது   அக்ரூரர்  மூலம் பிருந்தாவனத் தை அடைந்தது.   கம்சன் அழைப்பை ஏற்று பலராமனும் கிருஷ்ணனும் மதுராபுரி சென்றனர். உறவை மீண்டும் பலப்படுத்த பாசத்தாலோ நேசத்தாலோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கம்சனுக்கு தெரியும். தன்னுடைய சாமர்த்தியம் மற்றவர்களுக்கு தெரியாது என்ற எண்ணம்.

"பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ டொய்ங், டொய்ங் டொய்ங் " என்ற ஒரு பழைய கால பாட்டு ஞாபகமிருக்கிறதா?. ரொம்ப பிரபலம் அது அக்காலத்தில். தெருவில் பல பேர் பாடிக்கொண்டு போவார்கள்.

மதுராபுரி அழகிய ஒரு பிரதேசம். தெருக்கள் விசாலமாக தேரோடும் வீதிகளாக காட்சியளித்தன. வரிசை வரிசையாக வீடுகள், ஒவ்வொரு தெருவிலும் ஆழ் கிணறுகள், பூச்சொரியும் வித விதமான மரங்கள் இரு பக்கமும். வீட்டு வாசலில் நிறைய பேர் நின்று கொண்டு கிருஷ்ணன் பலராமன் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருந்தனர் வாசல்களில் நீர்   தெளித்து பிரம்மாண்டமான  அழகிய   கோலங்கள். அந்த  பிருந்தாவன மாயா ஜாலச் சிறுவர்களை பற்றிய செய்தி மதுரா நகரிலும் பரவி இருந்ததே.  இந்த இரு தெய்வீக குழந்தைகளைத்தான் கம்சன் கொல்வதற்கு ஆளுக்கு பின் ஆளாக அநேக ராக்ஷசர்களை அனுப்பினானாம். ஆனாலும் அவர்களை நெருங்க முடியவில்லையாமே!! அரக்கர் அரக்கியரை எல்லாம் எளிதில் கொல்லும் இந்த மா வீர சிறுவர்களை பார்க்கவே ஆர்வம் அவர்களுக்கு. மதுராவில் அனைத்து மக்களும் இந்த இரண்டு அழகிய இளம் சிங்கங்களையும்ஆவலோடும், அன்போடும் வரவேற்றனர். நிறைய பரிசுகள் குவிந்தன அவர்களுக்கு. மாலைகள், இனிப்புகள், தின்பண்டங்கள், உடை, ஆபரணம் எல்லாம் சேர்ந்து விட்டன.

தெருவில் அவர்கள் சந்தோஷத்தோடு  மதுரா நகர   பிரதான அங்காடி  தெருவில்  நடந்து வந்து கொண்டிருக்கும் போது "கம்" மென்று வாசனை மூக்கை துளைத்தது நன்றாக அரைத்த சந்தன மணம்.

"கிருஷ்ணா,  ஆஹா   என்ன வாசனை.. உனக்கு பிடித்த சந்தன வாசனையை மூக்கு நிறைய உள்ளே இழுத்துக்கொள்” என்று சிரித்தான் பலராமன்.

''ஆமாம்  அண்ணா  இந்த இடத்தை  விட்டு,  இந்த  வாசனையை விட்டு   அகலவே  கால் மறுக்கிறது.  என்   மனசும்   இங்கேயே இருக்கவேண்டும்    என்கிறது.  அது சரி  எங்கிருந்து வருகிறது  கம்மென்று  இந்த வாசனை.?''  என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் சுற்றி முற்றிலும்  பார்த்தான்.  அவனுக்கு பின்னே  சற்றே  தூரத்தில்  சந்தனக்குழம்பு நிறைந்த பாத்திரத்தை வைத்திருந்த இளம் பெண் தான்  இந்த  சந்தன வாசனையை  பரப்புபவள்.  இளம் பெண் தான்  என்றாலும்   பாவம் அவளுக்கு ஒரு குறை.  அவளது முதுகு திருப்பி போட்ட "ட" மாதிரி வளைந்திருந்தது. பிறந்ததிலிருந்தே இந்த குறைபாடு இருந்ததால்   எத்தனையோ பேரின்  கேலி களுக்கு  ஆளாகி அவளுக்கு அது மரத்து போய்விட்டது. துளிக்கூட    தனது குறையைப் பற்றி அவள் நினைப்பதில்லை. கிருஷ்ணன் தன்னை பார்ப்பதைக்  கண்டவுடன்   தலையை   மட்டும் தூக்கி  வணங்கினாள். அவள் கையில் ஒரு பெரிய தூக்கில் நிறைய சந்தனம் அந்த தெரு பூரா வாசனையை பரப்பிக் கொண்டிருந்த்ததே!

"அட, அழகான பெண்ணே, நீ தான் சந்தன "கம கம"வை வெள்ளமாக பரப்புகிறாயா? யார் நீ"?” எங்கே யாருக்கு இந்த சந்தனத்தை எடுத்துகொண்டு போகிறாய் ?"    என்று  அவள் அருகே சென்று கேட்டான் கிருஷ்ணன்.

"ஐயா ,  ராஜா மாதிரி இருக்கீங்க நீங்க.  இன்னிக்கெல்லாம்  உங்க   முகத்தையே  பாத்துக்கிட்டே இருக்கலாம் போல  இருக்குதுங்க. இந்த ஊரிலே உங்களை  இது வரையிலும்  பார்த்ததே   இல்லையே. வெளியூருங்களா? "

" ரொம்ப தான் சாமர்த்திய காரி நீ! நான் உன்னை கேட்ட கேள்விக்கு பதிலாக என்னையே கேள்வி கேட்கிறாயே ?" இருந்தாலும்  உன் சந்தனத்துக்காகவாவது  நீ கேட்டதற்கு பதில் சொல்றேன்.  நான்  இந்த ஊரு இல்லை.

''அது தான் தெரியுதே. எந்த  ஊர்க்காரங்க   என்று  தானே கேட்டேன்.'' 

''பிருந்தாவனம்  தெரியுமா உனக்கு?''

''போனதில்லே,  ஆனா  ரொம்ப நல்லா  நிறையவே அது பத்தி தெரியும்?''
''எப்படி ?''
''அங்கே  கிருஷ்ணன் னு  ஒரு  மாயாவி  இருக்கிறாராம். அவரைப் பத்தி கொள்ளை கொள்ளையாக  இந்த ஊரிலே நிறைய  பேர் பெருமையா பேசிக்கிறாங்களே. அவரு கூட  இந்த ஊருக்கு  வரப்போகிறாராம்.  அதுவும் பேச்சு இங்கே இப்போ. நீங்க  யாருன்னு சொல்லலியே?''

''அது சரி உன் பேர் என்ன?  சொல்லு அப்புறம் நான்  யாருன்னு சொல்றேன் ''

"என் பேர்    நினைப்பு இல்லீங்க.  எனக்கு  எதுங்க, ஏதுங்க  பேரு  என் பேரே  எனக்கு  மறந்து போச்சுங்க.     கேலியாகவே    கிண்டலாகவே, எனக்கு நினைவு தெரிந்ததிலேருந்து  எல்லோரும்  'கூனிப் பொண்ணு' ன்னு தான் கூப்பிடறாங்க. முதல்லே ரொம்ப நாள் அழுகை அழுகையா வந்தது. அப்பறம் அவங்க பேச்சு ஏச்சு எல்லாமே பழகி போச்சு” என்  பேரு  '' கூனி''  ங்க.  மூணு   வளைசலா என்  உடம்பு இருக்கிறதால  ''திரி வக்ரா'' ன்னு  கூப்பிடறாங்க. நானும்   பாக்கிறேன்.   உங்க  பேரு  என்ன ராஜா?''

" சொல்றேன்.  எங்கே இவ்வளவு சந்தனம் கொண்டு போறே?" .

'' நான்  இந்த ஊர்  ராஜா அரமனையிலே வேலை செய்றேன். கம்ச  ராஜாவுக்கு தினமும் சந்தனம் பூசற  வேலைங்க"
''சந்தனத்தை எங்களுக்கு கொடுத்தாலாவது உனக்கு புண்யம். அங்கே எதுக்கு கொண்டு போய் கொடுத்து   பாவத்தை தேடிக்கிறே'' ?” என்று பலராமன் குறுக்கிட்டான்.

" ஐயோ  அந்த  ராஜா ரொம்ப கோவக்காரருங்க  கொன்னே புடுவாருங்க   எனக்கு  ஒரு  ஆசைங்க.  இந்த ஊ ருக்கு  அந்த  கிருஷ்ணன் வருவாராமில்லே.   அவருக்கு ரொம்ப சந்தனம்  பிடிக்குமாம்.  நிறைய  நானே    அரைச்சு அவருக்கு  பூசணுமுன்னு  ஒரு  ஆசை.  எப்போ வரப்போறாருன்னு தெரியலியே'' என்றாள்   கூனி. ''

''கிருஷ்ணனோடு  அவர் அண்ணன்  பலராமனும்  வருவாருன்னு  பேசிக்கிறாங்களா இங்கே?? என்றான் பலராமன்.

''ஆமாமுங்க''
'' அந்த  கிருஷ்ணனும்  பலராமனும்  நாங்க  ரெண்டு பேரும்  தான்  என்று சொன்னா  உனக்கு  சந்தோஷமா?.  சந்தனம் குடுப்பியா?''

''அப்படிங்களா,  அடடா என்ன பாக்யமுங்க  இது.  இதோ இந்த கிருஷ்ணனை பார்த்தாலே மனசு என்னமோ  பண்ணுதுங்க. வாங்க  உங்க  ரெண்டு பேத்துக்கும்  உக்காரவச்சி  நிறைய  என் கையாலே சந்தனம் பூசி விடுறேன்.   அப்புறமா போய்  அந்த  ராஜாவுக்கு வேறே சந்தனம் கொண்டு போய் தரேன்''. 

அந்த பெண் கை நிறைய சந்தனம் எடுத்து பலராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் கழுத்து கை மார்பு முதுகு முகம் என்று ஏராளமாக பூசினாள். அவள் அன்போடு மனம் மகிழ்ந்து பூசிய சந்தன குழம்பு இரு பாலகர்களின் அழகுக்கு அழகு செய்தது. கண்ணன் மிக்க மனம் மகிழ்ந்தான்.   அவன் தான் சிறு சிறு பொருள்களை, சாதாரண வஸ்துக்களையே உள்ளன்போடு கொடுத்தால் உலகத்தையே பரிசாக கொடுப்பவனாச்சே!.

அந்த பெண் சந்தோஷத்தோடு பூசிய சந்தனம் மிக்க மன நிறைவைக் கொடுத்ததில் என்ன ஆச்சர்யம். அவளுக்கு "பதில் மரியாதை" என்ன செய்யலாம் என்று பலராமன் யோசிக்கு முன்பே கண்ணன் தீர்மானித் துவிட்டான்.

அந்த பெண்ணை அருகில் அழைத்தான் அவள் கால் கட்டைவிரலை தனது காலால் அழுத்திக்கொண்டு அவள் இரு கன்னங்களிலும் இரு கைகளை வைத்துக்கொண்டு ஒரு தூக்கு தூக்கி விட்டான். நேர் கோடாக, அந்த கூன் விழுந்த பெண் நிமிர்ந்து நின்றாள்.

இந்த அதிசயத்தை அந்த தெருவில் பார்த்துகொண்டிருந்த மக்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் விழித்தனர். அந்த பெண்ணுக்கு நடப்பது கனவா நினைவா என்று புரியவே வெகு நேரம் ஆயிற்று. அவளுக்கு பேச்சு வரவே இல்லை. தான் நடுத்தெருவில் நிற்கிறோம் என்ற எண்ணம் கூட அவளுக்கு இல்லை. அப்படியே கிருஷ்ணனை வாரி அணைத்துகொண்டாள்.

“ என் வீட்டுக்கு வாங்க.. என்னோடே இருங்க.  என் வீட்டில்    கிருஷ்ணா  உனக்கு நல்ல சாப்பாடு பண்ணி போடுகிறேன், வா” என்று கையை பிடித்து இழுத்தாள். கிருஷ்ணன் கை அவள் மேல் பட்ட அடுத்த கணமே அவள் திவ்ய ரூப சுந்தரியாக மாறிவிட்டாளே!!

இதற்குள் அந்த அங்காடியிலிருந்த அனைத்து வியாபாரிகள், மற்றும் சில்லறை பண்ட மாற்றுபவர்கள், பெண்கள் ஆண்கள் அனைவரும் ஓடி வந்து விட்டனர். கிருஷ்ணனிடமும் பலராமனிடமும் தங்களிடமிருந்த விலை யுயர்ந்த பொருள்களை, வாசனை திரவியங்களை, வஸ்த்ரங்களை, வெற்றிலை பாக்கு தின்பண்டங்கள் அனைத்தையும் போட்டா போட்டியோடு முண்டியடித்துக்கொண்டு யார் முதலில் தருவது என்று கிருஷ்ணனை நெருங்கிவிட்டனர். ஒருவழியாக அவர்களை சமாளித்து திருப்தி படுத்திக்கொண்டு கிருஷ்ணனும் பலராமனும் மேலே   அரண்மனை  நோக்கி  நடந்தனர்  

இந்த  திரிவக்ரா  கதை  நமக்கு  வெகு காலத்துக்கு  முன்பே  திருக்  கோளூர்  பெண் பிள்ளைக்கு தெரிந்திருப்பதால்  தானே  அவள்  ஸ்ரீ  ராமானுஜரை  பார்த்து 

'' சுவாமி நான் என்ன  திருவக்ரா என்ற  கூனிப் பெண்ணைப்  போல  ராஜா கோபிப்பானே  என்று கூட  தன்னுயிர் பற்றி கவலைப்படாமல்  கிருஷ்ணனுக்கு  சந்தனம் பூசி விட்டாளே  அவள் போல் ஏதாவது ஒரு கைங்கர்யம்  பெருமாளுக்கு பண்ணினவளா?  நான்  எவ்விதத்தில் இந்த புண்ய  பிரதேசம் திருக்கோளூரில் வசிக்க  தகுந்தவள்.சொல்லுங்கள் ?''  என்கிறாள்
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...