Wednesday, January 15, 2020

NATARAJA PATHTHU



நடராஜ பத்து 8 -                       J.K. SIVAN

       நான் செய்யாதது இன்னும் என்ன பாக்கி   
      இருக்கிறது?

நிறைய பேர்,   தான் செய்த தவறுகளை, அக்கிரமங்களை வெளியே சொல்வதே இல்லை. சிலர் அப்படி இல்லை.

''சார் நான் ரொம்ப கெட்டவனாக இருந்தேன். என் தாய் தந்தைக்கே என்னை கண்டால் அருவருப்பு. என் நண்பர்கள் மூலமாக தான் கெட்டவன் என்று ''எல்லாம் சகவாச தோஷம்'' என்று அடிக்கடி என் தாய் சொல்வாள்..

''உன்னையும் கொன்று உன் நண்பர்களையும் கொல்கிறேன் '' என்பார் அடிக்கடி என் தந்தை. ஒரு கரப்பாம்பூச்சியை கூட அடிக்காதவர். அவ்வளவு கோபம் அவருக்கு,  என்  நண்பர்கள் மீது.  அவர்களால் தான் எனக்கு துர்குணம் என்று.''

உண்மையில் அது ஒரு நல்ல திருப்பம்.  செய்த  தவறை ஒரு நேரமாவது  நாம்  உணரவேண்டும். இன்று நடராஜ பத்து எட்டாவது பதிகத்தில் முனிசாமி முதலியார் வருந்துகிறார். யார் முதலியார்  என்றா  கேட்கிறீர் கள்.? அவர் தான் நடராஜ பத்தை அருமையாக எழுதி அதிகம் வெளியே தெரியாதவராக இருக்கும் அதிசய மனிதர்.

அப்பப்பா. ஒவ்வொரு செயலாக நினைவு கூறுகிறார் பாருங்கள். அருணகிரி அப்படி திருந்தினவர் தானே. கண்ணதாசனை அப்புறம் நினைப்போம். முதலில் முதலியாரை கேட்போம்.

''ஒரு மரம் வளர்ந்து அதில் முதன் முதலாக பூக்கள் தோன்றி பிஞ்சுகள்  பச்சையாக  
தோன்றியது
சும்மா இருந்தேனா? வெடுக்கென்று அந்த பிஞ்சை பறித்தேன். முகர்ந்து தூக்கி எறிந்தேன்? செய்யலாமா?

எதிரே கண்ட பெண்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் குறை சொன்னேன். கொஞ்சமா நஞ்சமா?

''இதோ தந்துவிடுகிறேன் என்று கடன் வாங்கி வருஷக்கணக்கில் திருப்பி தராமல் நிறைய பேரை என்னைத் தேடி நடக்கவிட்டேன்''  இதை விட  பெரிய  தெரிந்து செய்த தப்பு உண்டா  சொல்லுங்கள் ? .

வெறும் காலில் நிறைய பேர் நடக்கும் வழியில் கருவேல முள்ளை கொண்டு போட்டு அவர்கள் கால் பஞ்சர் ஆகி அவதிப்படுவதை  மரத்தின் பின்னால்  நின்று பார்த்து  ரசித்தேன்.  சிரித்தேன்.  நான்  ராக்ஷஸன். என் அம்மாவுக்கு இப்படி ஒரு பிள்ளை பெற அவள் என்ன பாவம் செயதாளோ?

கடன் வாங்கியதை இரவல் வாங்கியதை ''நான் வாங்கவே இல்லையே'' என்று எத்தனை சத்தியம் செய்திருக் கிறேன் ? உங்கள் தலை தெரிந்தால்  அதன் மேல் அடித்துக்கூட  சத்தியம் செய்வேன்.

எதிலும் எவற்றிலும் நானே சிறந்தவன், முதல் என்ற ஒரு கர்வம் என்னை விட்டு இன்னும் கூட  நீங்கவே இல்லையே.

ஒருவேளை எனக்கே தெரியாமல் கொலை கொள்ளை கூட செய்திருப்பேன் போல் இருக்கிறது. செய்யக்  கூடியவன் நான்.

சாதுக்கள், ஞானிகள் எவரைப் பார்த்தாலும் கேலி செய்வேன். போலிகள் என்பேன்.  இன்று மாலை கூட  சொன்னேன் ஒருவரைப் பற்றி. பாவம் அவரைப்பற்றி எனக்கு உண்மையில் ஒன்றுமே  தெரியாது. இருந்தும் போலி  என்று சொன்னேன்.

என் சாமர்த்தியமே மற்றவரிடம் எப்படியாவது நைசாக பேசி அவர்களிடம் உள்ள பொருள்களை ஓசியில் வாங்கிவிடுவது. ஏமாற்றுவது. நான் இதில் கை தேர்ந்தவன்.

தேவர்கள் கடவுள்கள் என்னைப்பொறுத்தவரை எனக்கு அப்புறம் தான். நான் தான் முதல் கடவுள் என்ற நினைப்பு உண்டு.

''அவனா,  சே.  ஒரு பைசா கூட   தரமாட்டானே'' என்று பேர் எடுத்தவன் அல்லவா  நான் ? எதற்கு என்னை பற்றி இந்த நீள லிஸ்ட்?. நான் எல்லாமே தவறாக செய்த பாவி.

அதெல்லாம் தப்பு என இதோ இப்போது உணர்ந்துவிட்டேன். உன்னை நாடி வந்துவிட்டேன் ஈஸா. சிதம்பரேசா. எனக்கு நீ ஒருவனே கதி. என் தவறுகளை பொறுத்து என்னை நல்வழிப்படுத்த. உன்னைவிட்டால் வேறு யாரிடம் இதை முறையிடுவேன். என்னை தடுத்தாட்கொள்.

இது தான் பக்தர் ஒருவர் , நடராஜனை நோக்கி அருமையாக செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரும் அற்புத பாடல். எளிதில் புரியும். அர்த்தமே தேவை இல்லை. நடராஜ பத்தில் இது எட்டாவது பதிகம். இன்னும் ரெண்டே ரெண்டு தான் பாக்கி இருக்கிறது.    எதையாவது எழுதிக்கொண்டே இருக்கும் என் தொந்தரவு அப்புறம் நின்றுவிடும் என்று ஏமாறாதீர்கள்.  விடவே மாட்டேன் உங்களை . போதுமா?

பாடல் : 8

காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் ‏ இல்லை
யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...