Wednesday, January 15, 2020

MARGAZHI VIRUNDHU


மார்கழி விருந்து    J K   SIVAN
ஆண்டாள் கல்யாணம்

                          ''கனாக்கண்டேன் தோழி நான்''
         
நாம்  கனவு காண்கிறோம்.    நமது கனவுகளில்  முக்கால்வாசி பேருக்கு திருடன் வீட்டுக்குள் வருவது போல், நம்மை யாரோ துரத்துவதால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவது போல், போலீஸ்காரனிடம் பிடிபடுவதுபோல், பஸ்ஸிலிருந்து விழுவதுபோல், மனைவியை கோபித்துக் கொள்வது போல்,-- இப்படிப்பட்ட கனவுகள் வருகிறதே.

நாளெல்லாம் வாயினிக்க அந்த கண்ணனைப் போற்றிப் பாடினாலும் இரவு தூங்கும் போதாவது அந்த அபூர்வமான ஆண்டாள் என்கிற அழகிய சிறு பெண் வெறுமனே தூங்கினாளா என்றால் அது தான் இல்லை. தூக்கத்திலும் இடைவிடாத கனவு ஒரே சீராக. அந்த கனவு என்ன ? வாருங்கள் . அவள் தன் தோழிகளிடம் மறுநாள் அதை பற்றி விவரமாக சொல்வதை நாமும் "உம் " கொட்டிகொண்டே “அப்புறம், அப்புறம்" என்று கேட்போம்:

'' நிறைய யானைக் கூட்டம் சுற்றி வருகிறது. நடுவில் ஜம் என்று அந்த அழகன் வருகிறான். எங்கே பார்த்தாலும் தென்னை,பாக்கு மர இலை, மாவிலைத் தோரணம். வேதியர் கூட்டம் மந்திர கோஷத்துடன் பூரண கும்பத் தோடு வரவேற்க காத்திருக்கிறார்கள்


பிரம்மாண்டமான பெரிய பந்தல், வாழை,பாக்கு போன்ற மரங்கள் அங்கங்கு கட்டப்பட்டு. குறையொன்று மில்லாத அந்த கோவிந்தன் என்னமாக அவனுக்கே உரித்தான பீதாம்பர பட்டாடை உடுத்தியிருக்கிறான்!! முக மலர்ச்சியோடு இதோ பந்தலில் நுழைந்து விட்டான்.

கல்யாணத்துக்கு நாள் பார்த்து எல்லா ஏற்பாடுகளும் தான் செய்தாகிவிட்டதே. என்னை அவனுக்கு பெண் பார்க்க யாரெல்லாம் வந்தார்கள் தெரியுமா? 

இந்திரன்,வருணன்,அக்னி, வாயு போன்ற தேவர்கள் கூட்டமே வந்து அவனுக்காக என்னைப் பெண் கேட்டார்களே தெரியாதா? மறந்து விட்டதா? 

இதோ,எனக்கு மந்திரங்கள் சொல்லி ஆசிர்வாதத்தோடு புது கூறைப் புடவை கூட கட்டி விட்டார்கள். தூக்க முடியாத கனமான இந்த மாலையைக் கூட என் கழுத்திலே போட்டுவிட்டார்களே.

அப்பப்பா! எத்தனை வேத கோஷ பிராமணர்கள், எங்கெங்கோ நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ப்ரோக்ஷணம் செய்து, மங்கல நாண் அதில் தோய்த்து என் கையில் காப்பு கூட அந்த மாயாவி கட்டியாச்சே! கல்யாணத்துக்கு சதிர் ஆட பெரிய பெரிய நாட்டியக்காரிகள் வந்திருக்கிறார்கள். எல்லோர் கையிலும் தீபங்கள் எவ்வளவு அழகாக மின்னுகிறது பார்த்தாயா? இந்த கல்யாண ஏற்பாடுகள் ஒழுங்காக நடக்கிறதா என்று யார் மேற்பார்வை தெரியுமா?.வேறு யார்?. இந்த மதுரை ஊருக்கு ராஜாவான பாண்டியன் தான்.

முகூர்த்த நேரம் வந்துவிட்டதே. நாதசுரம், தவில், மங்கள வாத்யங்கள், சங்கு எல்லாம் முழங்கும் போது, இதோ இந்த முத்துப் பந்தலில் என்னருகில் வந்து என் கையை தானே எடுத்து பிடித்து அந்த கிருஷ்ணன் என்னைக் கைப்பற்றிவிட்டான். ''மாங்கல்யம் தந்துனானேனா.''.....மந்திரம் ஒலித்துவிட்டதே .

மந்திர கோஷங்கள் வானைப் பிளக்க அந்த கோவிந்தன் என் காலைப் பற்றினான். அம்மி மிதித்தேன். அருந்ததி பார்த்தேன். என் கையை அவன் பற்றிக்கொண்டு என்னை அணைத்து வர நானும் அவனும் அக்னி வலம் வந்தோம்.

என் கனவை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் தோழியரே, நான் அவன் மனைவியானேன்.
எனது “கண் அவன்” கணவன் ஆனான்”

தோழியர்கள் ஆண்டாள் கனவைச் சொல்லி முடித்ததும் ஆண்டாளை கேட்டனர். உனக்கு நிஜமாக எப்போ டீ அந்த கிருஷ்ணனோடு கல்யாணம்?''

ஆண்டாள் கனவு கண்டாளே அது நிறைவேறியதா? கனவு நிறைவேறுமா?. ஓ ஆகுமே! மார்கழி  மாதம் பூரா விரத மிருந்து ஆண்டாள் வேண்டிக்கொண்டது நிறைவேறியது. கனவுகாட்சியாகியது. போகியன்று சில இடங்களில், தை முதல் நாள் அன்று என்றெல்லாம் ஆண்டாள் திருக்கல்யாணம் ஊரெல்லாம் காலா காலமாக நடைபெறுகிறதே  
https://youtu.be/ypvBStLS12w

கல்யாணம் முடிந்து இனி பெண் வீட்டுக்குப்போகவேண்டும் தயாராகுங்கள்.








 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...