Saturday, September 1, 2018

A MEETING



                   சந்திப்பு --  J.K. SIVAN 


 இந்த  கதை நிறைய பேருக்கு  தெரிந்திருக்காத  ஒன்று என்று  தைரியமாக சொல்லலாம்.  ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நான்  கிருஷ்ணனை எங்கெல்லாமோ தேடும்போது திடீர்  என்று  இது அகப்பட்டது.  ஆகவே  ரொம்ப வயதாகிய பிறகே எனக்கு  இது   தெரிந்து உங்களுக்கும் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. 
பாகவதத்தில் இருக்கும்  ஒரு சிறு விவரம் என் கண்ணில்  பட்டு அது  உடனே ஒரு கதையானது. 

அதை யாரிடமாவது சொல்லாவிட்டால் திடீரென்று  என் தலை வெடித்து விட்டால் என்ன செய்வது? தலையின் மேல் உள்ள ஆசையாலோ பாசத்தாலோ,   அல்லது கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு நல்ல கிருஷ்ணன் கதையை நாலு பேருக்கு சொன்ன புண்யம் கிடைக்கட்டும் என்ற  பேராசையாலோ  இந்த கதை உருவானது  என்று கூட வைத்துக்கொள்ளலாம்.   ஆஹா  எவ்வளவு நியாயமான வார்த்தை.

+++

 கோகுலத்தில் அன்று “ஜே ஜே”  என்று ஒரே   கூட்டம்.  வாயிலில்  எல்லா வீட்டிலும் தோரணம். தெருவெல்லாம் பெரிய பெரிய  கோலங்கள். அப்போதெல்லாம் பொதுவாக யார் வீட்டில் எந்த விசேஷமும் ஊரில் ஒன்றாக தமது வீட்டு சம்பவம் போல்  கொண்டாடும் பழக்கம்  அக்காலத்தில் எல்லோரிடமும் இருந்தது.  ஆகவே  எந்த வீட்டில் என்ன விசேஷம்  என்று தெரியாதபடி  எல்லா வீடுகளும் கோலாகலமாக மகிழ்சிக் கோலம் பூண்டிருக்கும்.  மேலும்  அந்தக்காலத்தில்  கிராமங்களில் சிலர் மட்டுமே இருந்தார்கள். ஓருவரை ஒருவ நன்றாக தெரிந்து புரிந்து கொண்டு வாழ்ந்தார்கள். 

ஆகவே  இந்த நிலையில்  அன்று  கோகுலமே சந்தோஷ வெள்ளத்தில் திளைத்து கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட அதிக  மாகவே உற்சாகம். கொண்டாட்டம்.  ஏனென்றால் அன்று  மையமாக மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தது  ஊரிலே பெரிய பணக்காரன்  நந்தகோபன் வீடு.   மேள தாளங்கள் வாண வேடிக்கைகள் விண்ணைப்  பிளக்க,, பெண்கள்  சேர்ந்து இசை கோலாட்டம், கும்மி, என்று பல கேளிக்கைகளில்  சிரித்த முகத்துடன்   ஈடுபட்டுக்  கொண்டிருக்க,  ஆண்களில் பலர் கூட்டம் கூட்டமாக பாடிக்கொண்டும்  இசை வாத்தியங்களை முழங்கி கொண்டு ஆனந்தமாக  கூத்தாடிக் கொண்டிருக்கிறார்களே. சிறுவர்கள் சிறுமிகளின் மகிழ்ச்சிக்கு  கேட்கவே வேண்டாம். ஊரே திரண்டிருந்தது. 

அப்படி என்ன இன்று கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில்  விசேஷம்?   ஏன் நந்தகோபன் வீட்டில்  இத்தனை மகிழ்ச்சியும்  கோலாகலமும் ?   எல்லோருக்கும் தெரிந்த  காரணம் தான். அது என்ன ?

''ஓஹோ   சமீபத்தில் ஒரு குட்டிப்பயல் பிறந்திருக்கிறானே  அந்த வீட்டில். ஊருக்கே செல்லம் அவன். அவனுக்கு பெயர் சூட்டு விழா என்பதால் வேத கோஷங்களும் மந்திர ஒலியும் வானைப்  பிளக்கிறது.  

விடியற்காலை மந்தமாருதம்,  மெல்லிய  பனிச்சாரல் போன்ற  பன்னீர் தெளித்த மெல்லிய மழை தூற்றல், இடையிடையே காலை சூரியன் உதயமாகிவிட்டதால்  சுகமான  சூரிய வெப்பம். கோகுலத்தில்  பசுக்கள் எண்ணற்றவை,   எங்கும் பழம் தரும் மரங்கள் சூழ்ந்த ஊர்.  ஆகவே  ஏராளமான  பறவைகளின் சப்தம். வண்டுகள் மலர்களில் தேனை உண்டு அதை ஜீரணிக்க அற்புதமாக இசைக்கின்றன

பசுக்கள் கன்றுகளின் பரிபாஷை  ''அம்மா'' என்ற குரல் தான். அந்த ஒரு வார்த்தையில் எத்தனை அர்த்த புஷ்டி, கன்று கத்தினால் தாய்க்கு புரியும். தாய் கத்தினால் கன்றுகளுக்கு புரியும்.   எங்கும் பல குரல்களில் பட்சி ஜாலம் வெகு அற்புதம்.  காற்றில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும்  வரும்  இனிப்பு பலகாரங்களின் மணம்  மூக்கை துளைக்கிறதே.   “இது கைலாசமா வைகுண்டமா” என்று  நம்மை நாமே கிள்ளி பார்க்கத  தோன்றும் ஆனந்த நிலை. நாமும்  அந்த கூட்டத்தில் நிற்கிறோமே.

 இந்த சிறிய  கோகுலம் மட்டுமல்ல.  அண்டை அசல்  ஊர்களிலிருந்தும் ஏராளமான  பேர் வந்திருந்தார்கள்.  அனைவரும்  நந்த கோபன் வீட் டு வாசலில்   கூட்டமாக பேசிக்கொண்டு  காத்திருக்கிறார்கள்.  அந்த அதிசயக்  குழந்தையைக்  காண எல்லோருக்குமே  ஆர்வம். முக்கியமாக அனைத்து கோபியர்களுக்கும்.

இது யார்?  கூட்டத்தில் பொருந்தாத உருவம்!  மாளிகையின்  வாசலில்   ஒரு இடத்தில்  வாசலில் வளர்ந்து நிற்கும் ஒரு   வில்வ  மரத்தடியில் நிழலில்  நந்தகோபன் வீட்டு வாயிலை பார்த்தபடி  நிற்பவர்.  நீண்ட நெடிய ஆஜானுபாகுவான  புலித்தோல் அணிந்த உடல்,  நெற்றி பூரா வெள்ளிய திருநீறணிந்த,  உருத்ராக்ஷ கமண்டல ஜடாதாரி. சிவபக்தர்,  முதியவர், துறவி போல் தோன்றிய  அவருக்கு இங்கென்ன  வேலை?    ஒருவேளை  குழந்தையைக் காண வந்தவர்களில் அவரும் ஒருவரோ?  அவருக்கும்  எல்லோரும் சொல்லி ஒரு வித ஆர்வமோ?

 வாசலில்  வந்து எல்லோரையும் உபசரித்த  ரோஹிணியின் பார்வை அந்த ஜடாதாரி மீதும் சென்றது. ஏற  இறங்க அவரைப் பார்த்துவிட்டு  உள்ளே சென்றாள் . நேராக  யசோதையிடம் சென்றாள் .

“யசோதா,  யாரோ ஒரு சாமியார் கூட வந்திருக்காரடி,  என்னவோ அவரைப் பார்க்கவே ரொம்ப பயமாக இருக்கிறதே”.

“ ஏன் ?  உனக்கு அவரைப் பார்த்தால் ஒரு வேளை  பிள்ளை பிடிக்கிற சாமியார்  மாதிரி தோன்றுகிறதா?”  உள்ளே விடவே  யோசனையா இருக்கிறதா? என்கிறாள் யசோதை. அவள் கவலை அவளுக்கு.

“அப்படி எல்லாம் இருக்காது என்று தான் தோன்றுகிறது.  எதற்காக  அவரும் காத்து நிற்கிறார் என்று தான் தெரியவில்லை?  நாம் ஜாக்கிரதை யாக இருப்போம். 

''உனக்கு சம்மதம் என்றால் ரோஹிணி  எல்லோரையும் போல அவரையும் உள்ளே  விடேன்.வந்து குழந்தையை பார்ப்பதாக இருந்தால் பார்த்து விட்டு போகட்டுமே ”.

“குழந்தை பயந்து போய்ட்டான்னா?”

அந்த நேரம் பார்த்து குழந்தை இதற்குள் வீல் என்று அழுதது. முரண்டு பிடித்தது. யார் கையிலும்  தங்கவில்லை.  சமாளிக்க முடியவில்லை.  குழந்தையின் அப்பா நந்தகோபன் வேகமாக அருகில் வந்தார்.
“வழி, வழி”, கும்பலாக  குழந்தையை  சூழ்ந்து கொள்ளாதீர்கள் கொஞ்சம் காற்று வெளிச்சம் விடுங்கள். குழந்தை  கிருஷ்ணன் கைவிடாமல் அழுகிறான் ”.

அழும்  குழந்தையை நந்தகோபன்  கையில் தூக்கி  வைத்துகொண்டார். தோளில்  சாய்த்துக்கொண்டு  ஆடினார்,  சமாதானம் பண்ணி பார்த்தார்.  ஹுஹும்.  
மேலும்  அதிகமாக கத்தினான்  கிருஷ்ணன்.  அழுகை ஸ்வரம் உச்சமாகியது.  வயிற்றுவலியா, பசியா? என்னவென்று  எப்படி கண்டுபிடிப்பது ?.
“நந்தகோபா,  குழந்தையை  கொஞ்சம் வெளியே எடுத்து போய்  எதையாவது வேடிக்கை காட்டு.  அழுகை நிற்கிறதா என்று பார்ப்போம்”   என்றார்  ஒரு பெரியவர். இன்னும் சுரம் மேலே போனதே தவிர அழுகை நிற்கவில்லை.

ஏதாவது தோஷம்  பட்டிருக்குமோ?  எண்ணற்றபேர்  வந்திருக்கிறார்களே!  யசோதை அடிக்கடி சொல்வாளே. கண் பட்டிடுக்குமோ?  கன்னத்தை பார்த்தார். கருப்பனின் கன்னத்தில் இன்னும்          கருப்பாக மை  இட்டிருக்கிறாளே.   யசோதை  ரோகிணி  மற்றும் வீட்டுப்  பெண்கள்  பெரியவர்கள் என்ன  கை  வைத்தியம் பண்ணினாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.  கிருஷ்ணனுக்கு என்ன கஷ்டம்  என்று தெரியவில்லையே?

ஒரு வயதான மூதாட்டியின் குரல் கேட்டது நந்தகோபனுக்கு. 

“அங்கே பாருங்கள், யாரோ ஒரு  ரிஷியோ  முனிவரோ யோகியோ ஒரு பெரியவர் வாசலில்  நிற்கிறாரே. பேசாமல்  அவரிடம் போய் சொல்லி ஏதாவது விபூதி வாங்கி தடவு. மந்திரமாவது போட்டு அழுகையை நிறுத்துவார். காத்து கருப்பு ஏதாவது துஷ்ட சமாச்சாரம் இருந்தாலும் அவர் ஒருவேளை நீக்கலாமே.” என்றாள் அந்த பாட்டி.

ஆஹா  நல்ல யோசனை.   ரோகிணி குழந்தை கிருஷ்ணனை  வாங்கிகொண்டு சாமியாரிடம் சென்றாள். சாமியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.    

இதற்காகவே  காத்திருந்தவர் போலே  குழந்தை கிருஷ்ணனை  தனது  இரு கைகளிலும் வாங்கி இடி இடியென்று  சிரித்தார். அவனைத் தூக்கிக்கொண்டு   ஆனந்த  சிவ தாண்டவமாடினார்  குழந்தை அழுகையை  சட்டென்று நிறுத்தினான். கிருஷ்ணனுடைய பொக்கை  வாய் சிரிப்பு அனைவரையும் மயக்கியது.  தனது சிறு கைகளால்  சாமியாரின் ஜடையை பிடித்திழுத்தான்.  வளர்ந்து கொஞ்சம் பெரியவனான பிறகு   எத்தனை பெண்களின் பின்னல் சடையை பிடித்து இழுக்கப் போகிறான் இந்தப் பயல். அதற்கு இப்போதே  சாமியாரின் ஜடாமுடியை  பிராக்டிஸ் பண்ணுகிறானோ ?  அனைவரும் சிலையாயினர் ஏன் ஆகமாட்டார்கள்?
 ஹரியும் ஹரனும் ஒன்றல்லவா?. இருவரும் ஒருவரை  ஒருவர்  இணை பிரியாதவர்களாயிற்றே! ஹரி கிருஷ்ணனாக பிறந்தது தெரிந்து, அவனை பார்க்க ஹரன் ஆவலாக வந்ததை தெரிந்துதானே   ஹரி ஹரனை வரவேற்பதற்காக  அழுது ஆகாத்தியம் பண்ணி வெளியே வந்து ஹரனை கட்டித்  தழுவினான் . இதில்   மகிழ்வதற்கு  என்ன ஆச்சர்யம் இருக்கிறது !

ரெண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள்!!.  

ஒருத்தர்  தன்னை பக்தியுடன்  புகழ்ந்து வேண்டினால் யோசிக்காமல்  வரங்களை வாரி வழங்குபவர். எத்தனை  அசுரர்கள் ராக்ஷசர்கள் அப்படி தவமிருந்து சிவனிடமிருந்து வேண்டிய   எல்லா  வரங்களையும் பெற்று  அவற்றை  துஷ்ப்ரயோகம் செய்தவர்கள். 

மற்றவர்  அப்படி  தவறாக அந்த  வரங்களை பயன்படுத்துவோரை சாமர்த்தியமாக தண்டித்து, அழித்து  தர்மத்தை நிலை நாட்டுபவராச்சே !!    ஆகவே  சாமியாராக வந்த பரமேஸ்வரன்  குழந்தையாக காட்சியளித்த பரந்தாமனுக்கு  ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மகிழ்ந்தனர்.



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...