Saturday, September 29, 2018

ADVICE




ஒரு அறிவுரை J.K. SIVAN



கலீல் கிப்ரான் ஒரு அருமையான பாரசீக அறிஞன். கவி. எனக்கு பிடித்த கவிஞன். எனக்கு அவனை அறிமுகப்படுத்தியது எனது ஆரம்ப கப்பல் நிர்வாக உத்தியோக காலத்தில் என்னுடைய மேலதிகாரி. எதை எழுதினாலும் அதில் ஒரு கிப்ரான் பொன்மொழி உபயோகிப்பவர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். இன்று கிப்ரான் கொஞ்சம் படித்தேன். அதில் ஒரு அருமையான வாசகம்.
: "I have learned silence from the talkative, tolerance from the intolerant, and kindness from the unkind; yet, strange, I am grateful to those teachers"
ஆம், ''புயலில் தான் அமைதி உருவாகிறது. நிறைய பேச்சில் தான் மௌனம் புரிகிறது. கொடூரத்தில் தான் கருணை புரிகிறது. இப்படி உண்மையை உணர்த்துபவைகளுக்கு, உணர்த்துபவர்களுக்கு நன்றி''. '
ப்ரணதார்த்திக்கு எப்போது யார் மீது கோவம் வந்து வெடிப்பான் என்று பகவானுக்கே தெரியாது. ஹல்வா சாப்பிடும்போது கூட கடுகடு என்று மூல வியாதிக் காரன் மாதிரி முகம். சந்தோஷம் என்ற வார்த்தையே அறியாதவன். எவனோ ஒருவன் தெரியாமல் ''சார் இங்கே ஷண்முகம் தெரு எங்கே?'' என்று கேட்டுவிட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு இனிமேல் எந்த சண்முகமோ சுப்ரமணிய மோ பேர் கொண்ட எந்த ஒரு தெருவுக்கும் போகமாட்டேன் என்று போய்விட்டான்.
யார் எது சொன்னாலும் செய்தாலும் அதில் தப்பு கண்டுபிடிப்பது அவனது வியாதி. பிராண தீர்த்தி (உயிரை எடுப்பவன்) என்று கூட வேலை செய்பவர்கள் ... நண்பர்கள்... (அப்படி யாரும் இல்லை, ஒருவனைத்தவிர குப்பு சுவாமி... அவனுக்கு காது கொஞ்சம் மந்தம் என்பதால் ப்ரணதார்த்தி சொல்வது பாதி காதில் விழாதே.) அவனுக்கு பேர் வைத்திருந்தார்கள்.
ப்ரணதார்த்திக்கு கல்யாணம் வேறு ஆகிவிட்டது. ஜலஜாவால் அவனை தாக்குபிடிக்கமுடியவில்லை. தற்காப்புக்கு கத்த ஆரம்பித்தாள். அவனைவிட குரல் உச்ச ஸ்வரத்தில் கத்தியதால் ப்ரணதார்த்தி கொஞ்சம் அடங்கினான். அவனுக்கே அவன் குறை தெரிந்தது. இருந்தாலும் அவனிடம் குறை கண்டு, யாராவது அறிவுரை கொடுத்தால் அங்கேயே ஒரு உயிர் பிரியும். அந்த அளவுக்கு கத்துவான்.
சுப்புசாமி டாக்டர் ப்ரணதார்த்திக்கு எப்படியோ அறிமுகமாகி அவனை நன்றாக புரிந்து கொண்டுவிட்டார். அவன் குணம் தெரிந்த மனோதத்துவ நிபுணர். நிறைய ப்ரணதார்த்திகளை பார்த்தவர்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா. நீ இப்படி செய்து பார் பிரண தார்த்தி..
''இனிமேல் நான் ஹாஸ்யம் நிறைய ரசிப்பேன், எல்லோருடனும் சிரித்து பேசுவேன். சந்தோஷமாக இருப்பேன்''
பொழுது விடிந்தது முதல் இரவு படுக்கும் வரை தினமும் மணிக்கு ஒரு தடவை இதை கண்ணாடிக்கு முன்னால் நின்று சொல்லு '' என்கிறார். அவன் வேலை பார்க்கும் அவனது மேலதிகாரி உறவினர் டாக்டர் சுப்புசாமி. உனக்கு உத்யோக உயர்வு சம்பள அதிகரிப்பு எல்லாம் நான் சிபாரிசு செயகிறேன் இதை நீ செய்தால் என்று தூண்டிலில் மீனுக்கு புழு மாட்டினார்.
ஒரு மாதம் ஆகி விட்டது. ப்ரணதார்த்தி விடாமல் மணிக்கொரு முறை பல நாட்கள் இதை சொல்லி சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அவனிடம் தெரிந்தது .
அவன் முகத்தில் இயற்கையாகவே கொஞ்சம் சிரிப்பு தெரிந்தது. கண்கள் கோபமின்றி மலர்ந்தன. யாரா வது ஏதாவது சொன்னால் வாய் விட்டு சிரித்தான். தானும் பதிலுக்கு ஏதாவது சிரிக்கும்படியாக சொன்னான். அவன் மனைவி ஜலஜாவுக்கு ஆச்சர்யம். ஆபீஸிலும் இப்போது அவன் அருகே சில தலைகள்.
கோபம் அவனிடம் அடிக்கடி வந்து இப்போது குளிர்ந்த அமைதியாகி விட்டது. நண்பர்கள் பெருகினர் . எதெல்லாம் அவனுக்கு துன்பம் விளைவித்ததோ அதெல்லாம் இப்போது அவன் மாற்றத்துக்கு வழி கோலியவை. அவைகள் இல்லையென்றால் அவன் மாறியிருக்க முடியுமா?
கோபம், வெறி, பயம் ஆகியவை தான் ஒருவனை நிலைகுலையச் செய்வன. யார் மீதாவது கோபம், எரிச்சல் வந்தால் உன்னை புரிந்து கொள்ள அவை நல்ல சந்தர்ப்பங்கள். இழக்காதே. பயத்தை சந்தித்தால் தான் பயமற்று இருக்க முடியும். எதிர்ப்பு இருந்தால் தான் வரவேற்று உன் திறமை மேல் நீ நம்பிக்கை கொண்டு வெல்ல முடியும். கசப்பு மருந்து தானே குணப்படுத்துகிறது. கூரிய ஊசியால் குத்தினால் தானே வியாதி குணமடைகிறது. ஆகவே, கோபம், எரிச்சல், பயம் இவற்றை கண்டு அஞ்சாதே. எதிர்கொள் உனக்கு உலகை புது மாதிரியாக பார்த்து அனுபவிக்க உதவும் கண்கள் அவை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...