Friday, September 28, 2018

yaathra vibaram

யாத்ரா விபரம் 
  















நரம்பு வியாதி தீர்க்கும் நல்ல சிவன்                                                      


அடிக்கடி  எங்காவது ஒரு சில கோவில்களை சென்று தரிசிப்பது அதைப்பற்றி நாலு பேருக்கு சொல்வது ஒரு பழக்கமாகிவிட்டது.  ஒரு அற்புத நண்பர் ஸ்ரீ அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் இதற்கு உறுதுணையாக அமைந்தது இறைவனருள். மனதில் இருந்த ஒரு நினைவு அவ்வளவு சீக்கிரம் மறையாது.  கிட்டத்தட்ட  ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது நாங்கள் சில ஆலயங்களை  செய்யூர் பக்கம் சென்று பார்த்து விட்டு வந்து.
19.8.18 அன்று பேரம்பாக்கம் சென்றோம். அங்கே ஒரு அற்புத சிவன் கோவில்.  சோளீஸ்வரர் என்று சிவனுக்கு பெயர் அங்கே.
பேரம்பாக்கம் என்றால்  ராவணனை  ராமர்  வதம் செய்யுமுன்பு  ஒரு ஸ்பெஷல்  அம்பு தயார் செய்த இடமாம். பெரிய+ அம்பு+ ஆக்கம் என்று  ஒரு  விளக்கம்.  காதில்  பூ சுற்றும் தகவலா, உண்மையா என்று ஆராயவே  வேண்டாம்.   வேறு யாராவது இதை ஆராயட்டும்.  சென்னை  பூந்தமல்லி  சாலையில் சென்றால் 55 கி.மீ. திருவள்ளூரிலிருந்து 20கி.மீ. தூரத்தில் இருக்கிறது பேரம்பாக்கம் .

பல்லவர் கால ஆலயம். உரு மாறி இப்போது  ஏதோ கொஞ்சம் பச்சையும்  நீலமுமாய்  இருக்கிறதே என்று சந்தோஷப்படுவோம்.  இந்த கோவிலுக்கு  வந்து வழிபட்டால்  நரம்பு சம்பந்த வியாதி குணமாகும் என்று அர்ச்சகர் சொல்கிறார். இன்னொரு விஷயம் இந்த  ஆலய  சிவனை எவரும் தொடுவதில்லை. சிவலிங்கம் தீண்டா திருமேனி.  லிங்கத்தை துணியால் சுற்றி விட்டு அபிஷேகம். பால் அபிஷேகம் செய்யும்போது பார்த்தால் லிங்கத்தின் மீது நரம்புகள் போல்  கோடு கோடாக  வளைந்து ஏதோ தெரியும்.

அம்பாள் காமாக்ஷி.  கருணையும் அழகும் ஒன்றாயிணைந்தவள். அவள் கால்களுக்கு  கொலுசு போடும் அளவுக்கு  இடைவெளி விட்டிருக்கிறான் அற்புத பல்லவ சிற்பி.   கணேசர், காசி விஸ்வநாதர், சுப்ரமணியர், பைரவர், ஐயப்பன், நவகிரஹங்கள் சந்நிதிகள் இருக்கிறது.

துவஜஸ்தம்பம்  (கொடிமரம்)  ஒரு தனி நபர், பக்தரின் கைங்கர்யமாம்.  பாரிச வாயுவினால்  கைகால் இழந்த அந்த பக்தர் இந்த க்ஷேத்ர சிவபெருமானால் குணமடைந்து சந்தோஷமாக ஒரு கொடிமரம்  உயரமாக நிற்கிறது. எண்ணற்ற பக்தர்களின் நோய்கள் தீர்த்திருக்கிறார் சோழீஸ்வரர்.

கொங்கண சித்தர்  ரத்த அழுத்த நோயை ஊமை கொலைகாரன் என்று பாடியிருக்கிறார்.  அகஸ்தியர்  கொடிமரத்தை போற்றி பாடி இருக்கிறார்.

நிறைய கோவில்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதற்கு நாம் தான் முக்கிய காரணம்.  அரசு அதிகாரிகள் பொறுப்பேற்று ஏதேனும் அபிவிருத்தி வரும் என்று  மனப்பால் குடிக்காமல்  அந்தந்த ஊர் மக்கள் விழிப்புணர்வோடு தங்கள் ஊர் கோவில்களை பராமரிக்க எல்லோரும் சேரவேண்டும். மற்ற ஊர்க்காரர்கள் வசதியுள்ளோர்களும் ஒவ்வொரு கோவிலாக சென்று தரிசித்து எதற்கு உடனடி  கவனம் தேவையோ அதற்கு உதவ வேண்டும்.

சோழீஸ்வரர்  ஆலயம் ஆரம்பகாலத்தில்  குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மஹாதேவர்  ஆலயம் என்று பெயர் நீளமாக கொண்டிருந்து இப்போது  சோழீஸ்வரர் ஆகிவிட்டது.ஆயிரம் வருஷ தெற்கு பார்த்த  கோவில். ஆவுடையாரோடு  மூன்றடி உயர சிவலிங்கம். அம்பாள் காமாட்சி நின்ற திருக்கோலம்.  நாலு அடி  உயரம்.   வில்வம் ஸ்தல விருக்ஷம்.
முடக்கு வாதம், கீல் வாதம், காக்காய் வலிப்பு  வியாதியஸ்தர்கள் இங்கே குணமாக நம்பிக்கையோடு ஆறு வாரம் வருகிறார்கள். அனைவரும் குணமாக சோழீஸ்வரரை  நாமும் பிரார்த்திப்போம். 

முதலாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு ஒன்று  மேலைச்  சுவற்றில் ''குட்டடி தக்கரைசன் தெலுங்கராயன் என்பவன்  ஆலய தீப கைங்கர்யத்துக்கு பணம் கொடுத்தான் என்கிறது''

கிழக்கிலும், திகிலும், சுவற்றில் உள்ள  கல்வெட்டு சொல்லும் 3 விஷயங்கள்: இதெல்லாமே திருபுவன சக்கரவர்த்தி, திருபுவன வீர தேவ  மூன்றாம் குலோத்துங்க சோழன் எழுதிவைத்தவை.
ஒன்றில் யாரோ ஒரு பெண்மணி  மூலவருக்கு என்று ஏதோ பணம் தானமாக கொடுத்தது. இரண்டாவதில்  பெரும்பாக்கம் மீயாயம் அங்கத்தினர்  சங்கராந்தி பல்லவராயன் விளக்குகள் தானமாக கொடுத்தது.  மூன்றாவது மற்றொரு மீயாயம் குழு அங்கத்தினர் விளக்கெரிய  பணம் கொடுத்தார் என்கிறது. 

3ம்  ராஜராஜ தேவன் கால   3 கல்வெட்டுகள் இங்கே என்ன சொல்கிறது தெரியுமா:  1.  யாரோ ஒரு அரும்பா நாயக்க பல்லவராயன் அன்றாட  தீப கைங்கர்யத்துக்கு பணம் கொடுத்தான்.  2.  கிராம ந்யாயதாரர்கள்  ஒன்று கூடி  தீர்மானித்து  அணைக்கட்டபுதூர் என்ற ஊரில்  மூன்று வேலி நிலம் வட்டி இன்றி மானியமாக அளித்தார்கள்.   3. ஊர்  நியாயதாரர்களில் ஒருவரான  திருமுடி சோழ பல்லவராயன் உடையா பிள்ளை   மூன்று காசு கொடுத்து  ஆலய  விளக்கேற்றும்  கைங்கர்யத்தில் பங்குகொண்டார். 

சென்னை வாசிகள்  நேரம் கிடைத்தால்  சினிமா தியேட்டர் போகலாமா  கோவிலுக்கு போகலாமா என்று  சீட்டு குலுக்கி போடாமல்  கோவிலுக்கே  குழந்தைகள் குடும்பத்தோடு போவோம் என்று தீர்மானித்து இது போன்ற பழைய ஆலயங்களை அடிக்கடி சென்று தரிசித்தால் உள்ளூர் காரர்களும் அக்கறை கொண்டு அவற்றை  பராமரிப்பார்கள்.  இது ஒரு சின்ன அபிப்ராயம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...