Friday, September 7, 2018

LALITHA SAHASRANAMAMAM


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (468- 479) - J.K. SIVAN

वज्रेश्वरी वामदेवी
वयोऽवस्था-विवर्जिता ।
सिद्धेश्वरी सिद्धविद्या
सिद्धमाता यशस्विनी ॥ ९७॥

Vajreshvari vamadevi
vayovasdha vivarjita
Sideshvari sidhavidya
sidhamata yashasvini –

வஜ்ரேச்வரீ வாமதேவீ
வயோவஸ்தா விவர்ஜிதா |
ஸித்தேச்வரீ ஸித்தவித்யா
ஸித்தமாதா யசஸ்விநீ || 97

विशुद्धिचक्र-निलयाऽ
ऽरक्तवर्णा त्रिलोचना ।
खट्वाङ्गादि-प्रहरणा
वदनैक-समन्विता ॥ ९८॥

Vishudichakra nilaya
raktavarna trilochana
Khatvangadi praharana
vadanaika samanvita – 98

விசுக்தி சக்ரநிலயா
ரக்தவர்ணா த்ரிலோசநா |
கடவாங்காதி ப்ரஹரணா
வதநைக ஸமந்விதா || 98

லலிதா ஸஹஸ்ரநாமம் - (468-479) அர்த்தம்

* 468 * வஜ்ரேச்வரீ -- வஜ்ரம் உறுதியானது. பளபளப்பு, மதிப்பு மிகுந்த கரிக்கல் . வைரம் என்று தமிழில் அதை சொல்வோம். அம்பாள் ஸ்ரீ லலிதை வைரம் போன்ற உறுதியான சக்தி கொண்டவள். ஜலந்தர பீடத்தில் வசிப்பவள் . ஜலந்தரா ஸ்ரீ சக்ரபூஜையில் ஆறாவது நித்யதேவதை. நமது உடலில் விஸுத்த சக்ரம் தொண்டையில் உள்ளது. ஸ்ரீ சக்ர நவாவர்ண பூஜையில் எட்டாவது ஆவாரணத்தில் மஹா வஜ்ரேஸ்வரி பூஜிக்கப்படுகிறாள். கன்ணுக்கு தெரியாத ஒரு நதியின் பெயர் வஜ்ரா. அதில் சங்கீத அலைகளாக அம்சங்கள் மிதக்குமாம்.

* 469 * வாமதேவீ -- வாமதேவர் பத்னி. சிவனுக்கு இப்படி ஒரு பெயர். சிவனுக்கு ஐந்து முகங்கள் , பஞ்சமுகம்,. அவை ஈசானன், தத்புருஷன் , அகோரன், வாமதேவன், ஸத்யோஜாதன் . மூன்று முகங்களை தான் திரிமூர்த்தியாக காண்கிறோம். நான்காவது முகம் பின்னால், ஐந்தாவது தலை உச்சியில். அந்த ஐந்தாவது உச்சி தான் வாமதேவன். லிங்கபுராணம் சிவன் சிவப்பு நிற ஆபரணங்களை சூடுபவன், சிவந்த ஆடைகள், மாலைகள் அணியும் செந்நிற கண்ணன் என்கிறது
அடிக்கடி ''ஓம் நமோ பிரம்மணே வாமதேவாய:' என்று சொல்பவனுக்கு மறுபிறவியும் இல்லை அவன் பாபங்களும் காணாமல் போகும். வாமதேவனை வழிபடும் முறைக்கு சமாச்சாரம் என்று பெயர்.

* 470 * வயோவஸ்தா விவர்ஜிதா - காலத்தாலோ வயதினாலோ மாறுபாடுபவள் அல்ல அம்பாள். அம்பாள் உபாசகர்கள் விடிகாலை முதல் அடுத்தநாள் விடிகாலை வரை விடாமல் சொல்லும் மந்திரம் தான் ஹம்சமந்த்ரம், இதை அஜப மந்திரம் என்றும் சொல்வார்கள்.ல் - இளமை குன்றாத சக்தி பலம் மன உறுதி எல்லாம் பெறமுடியும்.

* 471 * ஸித்தேச்வரீ - சித்தர்கள் தொழும் தேவி அம்பாள். எனவே அவளுக்கு இந்த நாமம்.

* 472 * ஸித்தவித்யா -- பஞ்ச தச மந்திரத்திற்கு சித்த வித்யா என்றும் ஒரு பெயர். அம்பாளை இந்த நாமத்தில் போற்றுவதற்கு நாக்கு இனிக்கும். எல்லா மந்த்ரங்களுமே சக்தி உள்ளவவை தான். பகவானை வேண்டி சொல்வதை மந்த்ரங்கள் என்றாலும் அம்பாளை, சக்தியை வேண்டி சொல்லும் மந்த்ரங்கள் ''வித்யா'' எனப்படும். குருவானவர் ஒரு சிஷ்யனின் மன வலிமை, நோக்கம், பக்தி, எல்லாம் அறிந்து கொண்டு அவன் பொருத்தமானவன் என்று தெரிந்து தான் வித்யையை உபதேசிப்பார். ஒரு நாள் சொல்லிவிட்டு ஓடுபவனை தேர்ந்தெடுக்கமாட்டார். ஆத்ம பீஜத்தை பொருத்தமானவனுக்கு தான் உபதேசிப்பார். பஞ்சதசி மந்திரம் நடுவில் விட்டவனுக்கு துன்பம் விளைவிக்காது. நாள் நக்ஷத்ரம் பார்த்து ஆரம்பிக்கவேண்டாம். எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். காரணம் எல்லா நேரம், நக்ஷத்ரம், க்ரஹங்கள் அவள் வசம் ஆனவை.

* 473 * ஸித்தமாதா -- சித்தர்களின் தாய் அம்பாள். சன்யாசிகளுக்கும் தாய் வேண்டும். தாய் என்கிற பதவி அவ்வ்ளவு உயர்ந்தது. முதல் ஸ்தானம் வகிப்பது. மாதா பிதா குரு தெய்வம்... சித்தர்கள் அனைத்தும் துறந்த யோகிகள். சிவனையும் சக்தியையும் தியானித்து உபாசிப்பவர்கள்.
குண்டலினி சக்தியால் உயர்ந்தவர்கள்.

* 474 *யசஸ்விநீ -- பிரபலமானவள் அம்பாள். சர்வ சக்தியும் கொண்டவள் என்று எண்டிசையிலும் புகழ் பெற்றவள். இனி 475 முதல் 534 வரை உண்டான அம்பாளின் நாமங்கள் குண்டலினி ஸஹஸ்ராரத்தின் தத்துவ மண்டலங்களை பற்றி கூறுபவை. ஆறு சக்ரங்களின் மொத்த விபரம். ஒவ்வொரு சக்ரம், மண்டலத்துக்கும் தலைவி ஒரு யோகினி. இதுபோல் ஏழு யோகினிகள் உள்ளார்கள்.ஒவ்வொரு யோகினிக்கும் பத்து, ஏழு நாமங்கள் உண்டு. இவை லலிதாம்பிகையை நேரடியாக சொல்பவை அல்ல. வழிபாடு விஸுத்தியில் ஆரம்பித்து ஆக்ஞா, ஸஹஸ்ராரம் வரை தொடர்ந்து முடிவது. ஒவ்வொரு யோகினியையும் வழிபட ஒரு த்யான ஸ்லோகம், ஜெப மந்திரம் உண்டு. அவர்களுக்கு துணை அதிகாரிகள் உண்டு. இந்த ஸ்லோகங்கள் அவர்கள் குணங்கள், உருவங்கள் உண்ணும் உணவை பற்றியெல்லாம் விவரிக்கும். ஒவ்வொரு யோகினிக்கும் பல முகங்கள் உண்டு. விஸுத்தி யோகினிக்கு ஒரு முகம். அதே சாயம் ஸஹஸ்ரார யோகினிக்கும் ஆயிரக்கணக்கான முகங்கள்.

சமஸ்க்ரித மொழியில் ஏன் மந்த்ரங்கள் சொல்கிறோம் என்றால் அதற்கு 50 அக்ஷரங்கள். அவற்றை பதினாறு ஜீவ எழுத்துகளாக பிரித்து ''வாழ்வின் எழுத்துக்கள்'' என்று பிரித்து மற்றவை உடல் எழுத்துக்கள் என்பார்கள் .ஒவ்வொரு சக்கரத்துக்கு இத்தனை தாமரை இதழ்கள் என்று கணக்கு உண்டு. விசுத்தி சக்ரத்தில் பதினாறு தாமரை இதழ்கள்.அதாவது பதினாறு ஜீவ அக்ஷரங்கள்.

* 475 * விசுக்தி சக்ரநிலயா -- விசுத்தி சக்ரத்தில் பதினாறு இதழ் நிலையில் வாசம் செய்யும் அம்பாள் என்று இந்த நாமம். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். யோகினிகள் அம்பாளின் உதவியாளர்கள் அம்பாள் இல்லை. சுழுமுனையில் அடியில் மூலாதாரம். உச்சியில் ஸஹஸ்ராரம். குண்டலினியின் பாதை இது. விசுத்தி சக்ரம் ல் புகை படிந்தமாதிரி கத்திரிப்பூ வர்ணத்தில் இருக்குமாம்.

* 476 * ரக்தவர்ணா-- இளஞ்சிவப்பு ரத்த வர்ணம் கொண்டவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். யோகினிக்கு டாகினி என்றும் பெயர். அவள் சுமாரான சிவப்பு வர்ணம் என்கிறது ஸ்லோகம்.

* 477 *த்ரிலோசநா -- முக்கண்ணி - த்ரி நேத்ரி. சிவனுக்கு முக்கண்ணன் என்று பெயர். அவனாகவே அவனில் கலந்த அவளுக்கும் த்ரிலோசனி என்று பெயர் பொருத்தமாக இருக்கிறது.
* 478 * கட்வாங்காதி ப்ரஹரணா - கட்வாங்கம் என்பது கூரிய வாள். அந்த வாள் கொஞ்சம் கதாயுதம் மாதிரி இருக்கின்ற விசித்திரமானது. முனையில் மனித கபாலம் (மண்டை ஓடு) இணைந்திருக்கும்.

* 479 * வதநைக ஸமந்விதா -- ஒரு முகம் கொண்டவள் என்ற நாமம் இது. சம்பந்தப்பட்ட யோகினிகள் முக எண்ணிக்கையை பொறுத்து சக்ரத்தின் முக்யத்துவம் அமையும். டாகினி ஒருமுக நாயகி. ஆகாச தத்துவத்தை குறிப்பிடும் யோகினி.




ஒரு சக்தி பீடம் : காசி விசாலாக்ஷி

விசாலமான, அகன்ற கண்களையுடையவள் விசாலாக்ஷி கௌரி. பார்வதி, உண்மை அப்படிப்பட்ட கண்களை கொண்டவள். கங்கைக்கரையில் வாராணாசியில் மீர் கட்டத்தில் குடிகொண்டவள். சிவ பெருமான் சதியின் உடலை சுமந்து தாண்டவமாடும்போது சதியின் காது குண்டலங்கள் விழுந்த இடம் வாரணாசியில் இது. கர்ணகுண்டலங்கள் அம்பாளின் உடல் பாகமாகாதே. காதோடு விழவில்லையே. எனவே இந்த சக்தி பீடம் முக்கியமான உப சக்தி பீடம்.

ஒரு ருசிகர தகவல் சொல்கிறேன். வாரணாசியை பொறுத்தவரை அது ஷஷ்டாங்க யோகா ஸ்தலம். அதாவது ஆறு பகுதியானது. அந்த ஆறு இடத்தையும் தரிசிக்க வேண்டும். அவை என்ன தெரியுமா? காசி விஸ்வநாதர் ஆலயம், விசாலாக்ஷி ஆலயம். கங்கைநதி, காலபைரவ ஆலயம், துண்டிராஜர் ஆலயம் (விக்னேஸ்வரர்) தண்டபாணி ஆலயம் (முருகன் ).

விசாலாக்ஷி ஆலய கோபுரம் விசாலமானது. வாசல் கதவின் இரு பக்கங்களிலும் சிங்கம் காவல். ரெண்டு சிங்கத்திற்கும் மேலே சலவைக்கலில் லக்ஷ்மி உருவம். தாமரையில் அமர்ந்தவாறு. எதிரும் புதிருமாக ரெண்டு யானைகள் கங்கை நீரை அபிஷேகம் செய்கிறது. நாம் கஜ லட்சுமி என்போமே அது. ஆலயத்தின் சுவர்களை ஒட்டி நிறைய சிவலிங்கங்கள்,நாக பதுமைகள். கனைப்பறிக்கும் ஒரு தொந்தி கணபதி. மூல விக்ரஹம் பின்புறம் பிராஹாரத்தில் ஆதி சங்கரர் சிலை. விசாலாக்ஷி மூல விகிரஹத்திற்கு எதிரே கௌரி விக்ரஹம். புராணம் இந்த க்ஷேத்ரத்தை விசாலாக்ஷி மணிகர்ணிகா என்கிறது.

பக்தர்கள் யாத்ரீகர்கள் கங்கையில் நீராடி புஷ்பங்கள் கங்காஜலம் கொண்டுவந்து ஸ்லோகங்கள், மந்திரங்கள் சொல்லி பூஜை செய்கிறார்கள். கேட்ட வரம் தருகிறாள் அன்னை. அன்னபூரணி அவள். ஸ்கந்தபுராணத்தில் ஒரு வரி கதை: வியாசர் ஒருமுறை காசியில் யாரும் அவர் பசித்து அன்னம் யாசித்தபோது கொடுக்கவில்லை என்று வாரணாசியை சபிக்கின்ற நேரம் அன்னை அன்னபூரணி ஒரு பிராம்மண ஸ்திரீயாக அவரை அழைத்து உபசரித்து வயிறார உணவிடுகிறாள். அன்றுமுதல் காசியில் எவரும் பசித்திராதபடி அன்னபூரணியாக இருப்பவள் அம்பாள்.

தாந்த்ர சாஸ்திரநூல்கள் அம்பாள் மகாகாளி என்கிறது. மரணத்துக்குப்பின் தொடரும் கர்ம பந்தங்களை துவம்சம் செய்பவள். மஹா காலனாக அருள்பாலிக்கும் விஸ்வநாதர் மோக்ஷம் தருகிறார் என்பதால் காசியில் மரணம் சம்பவிக்கவென்றே ரிட்டர்ன் டிக்கெட் இல்லாமல் நிறைய பேர் இங்கே வருகிறார்கள் திரும்புவதில்லை.



ருத்ராய மாலா என்று ஒரு தாந்த்ரீக நூல். பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. பத்து சக்தி பீடங்களை பட்டியலிடுகிறது. அதில் வாரணாசி ஐந்தாவது. குலார்ணவ தாந்த்ர நூல், ஆறாவது பீடம் என்கிறது. தேவி பாகவத புராணம் வாரணாசி முதலாவது சக்தி பீடம் என்று சொல்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...