Saturday, September 22, 2018

ORU ARPUDHA GNANI




ஒரு அற்புத ஞானி    J.K. SIVAN 
சேஷாத்திரி ஸ்வாமிகள் 


சேஷாத்திரி ஸ்வாமிகளை  பற்றி  நிறைய  எழுத வேண்டுமானால்  அவசியம்  தேவை  .ஆயிரம் கை.   அது கிடைக்காவிட்டால் தும்பிக்கை இருந்தால் போதும்.    ஆமாம்  சொல்ல சொல்ல  மஹாபாரதம் போல்  எழுத  அந்த  ஒற்றைக்கொம்பனால் மட்டுமே  முடியும்.  

ஒரு  ஆச்சர்ய  சம்பவம்.        ஆர். வி. அர்த்தநாரி  என்பவர் ஸ்வாமிகளின் பக்தர்.   ஒருநாள் அவர் வீட்டுத் திண்ணையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் தானாகவே  வந்து உட்கார்ந்திருந்ததைப்  பார்த்து ஆனந்தம் அடைந்தார். ''இப்படி சுவாமி உட்கார்ந்திருப்பதை ஒரு புகைப் படம் எடுத்தால்  பூஜைக்கு வைத்துக் கொள்ளலாமே''  என்று மனம் எண்ணியது.   

அடுத்த கணமே  சேஷாத்திரி ஸ்வாமிகள் தானாகவே  அர்த்தநாரியிடம் என்ன சொன்னார் தெரியுமா?

''டேய்   வேங்கடசுப்பையர் கிட்டே போ. என் படம் வச்சிருக்கார். ஒண்ணு  வாங்கிக்கோ'' என்று சொல்லிவிட்டு  எழுந்து போய்விட்டார். அர்த்தநாரி  விடுவாரா. நேராக வேங்கடசுப்பையர்என்பவர்   எங்கே இருக்கிறார் என்று கேட்டு அறிந்து  தேடி அவரிடமிருந்து சேஷாத்திரி ஸ்வாமிகள் படம் ஒன்றை வாங்கி பூஜையில் வைத்துக் கொண்டார்.  அந்த படம் ஒன்று தான் இத்துடன் இணைத்துள்ள  பிரபலமான  ஸ்வாமிகளின் படம்.
++

சிருங்கேரி சாரதா தரிசனத்துக்கு  குடும்பத்தோடு  டி .கே. ராமபத்ர சர்மா புறப்பட்டார்.  வழியில் திருவண்ணாமலையில் இரவு  கிருஷ்ணய்யர் ஹோட்டலில்  சாப்பிட்டுவிட்டு அங்கே தங்கினார். இரவு.  நேரமாகி விட்டதே.

 அப்போது தான் அவருக்கு தனது சகோதரிக்கு   ஆரணிப் பட்டியில் பிரசவ காலமாயிற்றே.   பிரசவம் ஆகிவிட்டதா இல்லையா என்று தெரியவில்லையே?.   எப்படியிருக்கிறாளோ?, நேரே போய்  பார்த்து விட்டு  சிருங்கேரி  செல்லலாமா. எப்படி செல்வது? என்று கவலை வந்தது.  அந்த நேரம் பார்த்து இருட்டில்  யாரோ கதவைத்  தட்டும் சத்தம் கேட்டது.   அறையின் கதவைத் திறந்து வெளியே வந்த சர்மா எதிரே  சேஷாத்திரி ஸ்வாமிகள்  நிற்பதை கண்டு வெலவெலத்து விட்டார். பக்தி ஆச்சர்யம் இரண்டு கலந்து அவரை ஆட்டுவித்தது.  கை கூப்பி  வணங்கினார். பேச்சு வரவில்லை.  'சுவாமி''  என்று மட்டும் தான் வார்த்தை கஷ்டப்பட்டு வெளியே வந்தது.

'பிரசவம் ஆயிடுத்து. புள்ள,  புள்ள தாண்டா.  கவலை எதுக்கு?''.
சொல்லிக்கொண்டே  சென்ற ஸ்வாமிகள் இருளில் கலந்தார்.

சர்மாவின் நிலை என்ன என்பதை நான் எழுதுவதை விட   நீங்களே யோசித்தால்  பொருத்தமாக இருக்கும்.

++

இது ஒரு வேடிக்கை சம்பவம். திருவண்ணாமலை மலை மேல்  அப்போது ரமணர் தங்கி இருந்தார்.   ஒருநாள் கீழே கோபுர வாயிலில் சேஷாத்திரி ஸ்வாமிகள் உட்கார்ந்து இருந்தார். அவரைக் கடந்து சென்றாள்  ஒரு பெண், அவள் பெயர் திருமங்கலம் தேனம்மாள்.  ரமணாஸ்ரமத்தில் வேலை செய்பவள். ரமணருக்கு கொடுப்பதற்கு  என்று வாழைக்காய் வறுவல் பண்ணி எடுத்துக்கொண்டு  மலைக்கு போய் கொண்டிருந்தாள்.

 கோயில் வாசலில் கீழே,  ஸ்வாமியை அவள் கடக்கும்போது ''ஹா ஹா'' என்று சிரித்த அவரை வணங்கினாள்.

 'வாழக்கா வறுவலா.. . ம்ம்...    கொண்டுபோய் கொடு.  யார் சாப்பிட்டா என்ன? ''என்று சொன்னார். அவள் கொஞ்சம் எடுத்துக்  கொடுக்க முயற்சிக்கும் முன்பே  அங்கிருந்து நழுவி விட்டார் மஹான்.

++

சூணாம்பட்டு திருவேங்கட முதலியார் ஒருநாள் சாயந்திரம்  பஞ்சாக்ஷர மந்திரத்தை மனதுக்குள் ஜபித்துக் கொண்டு அன்ன சத்திர திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஸ்வாமிகள் உள்ளே நுழைந்தவர்  அவர் அருகில் சென்று முதுகில் தட்டி  ''இப்போ  ராம ராம  என்று ஜபம் பண்ணு'' என்று தானாகவே உபதேசம் செய்தார்.  பஞ்சாக்ஷர மந்திரம் அவர் மனதில் இருந்து எப்படி சேஷாத்திரி ஸ்வாமிகள் காதுக்கு எட்டியது?

அடுத்து இன்னும் சில ருசிகர தகவல்கள்  சொல்கிறேன்..

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...