Saturday, July 23, 2022

VADAPAZHANI


 நேற்று  ஆடி கிருத்திகை. -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 


வடபழனி முருகன் 

கார்த்திகை   கிருத்திகை  என்றால்  உடனே கண் முன் தோன்றுபவன்  கார்த்திகேயன் எனும் சுப்ரமணியன் எனும் முருகன். என் வடபழனி முருகன்.

27 நக்ஷத்திரங்களில் மூன்றாவது  கிருத்திகை. முருகனுக்கு உகந்த நாள். அதிலும் ஆடி கிருத்திகை ரொம்ப விசேஷம்.  ஆடி கிருத்திகை விரதம் எத்தனையோ பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.  ஏகாதசி போல் கிருத்திகை அன்றும் விரதம் இருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.  அன்று சாப்பிட்டாலும் உப்பு சேர்த்துக் கொள்வதில்லை.

கார்த்திகை பெண்களால் வளர்ந்தவன் அறுமுகனான கார்த்திகேயன்., உயர்வாகவும் கருதப்படுகிறது.
ஆடி கிருத்திகை அன்று அறுபடை வீடுகளிலும் சிறப்பு மிக்க மற்ற  முருகன் ஆலயங்களிலும் பக்தர்கள் திரள் வார்கள். நான் வாழ்ந்த கோடம்பாக்கம் வடபழனி யில்  முருகன் கோவிலில் நிற்க இடமிருக்காது.  சுந்தர  குருக்களின் இனிமையான அர்ச்சனை குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது.

வடபழனி முருகனை நினைக்கும்போது  என்  பால்ய வாழ்க்கை ஞாபகம் வருகிறது.

1944-45ல்  வட பழனியாண்டவர் கோவில் ஒரு சிறிய குடிசை  க்ஷேத்ரம் கோவிலுக்கு கதவு ஓலைத்தட்டி. ட்டி. உள்ளே ஒரு பெரிய அழகான முருகன் படத்தில்  தரிசனம் தருவான். அதை இணைத்தி ருக்கிறேன். இந்த ஒரு கோவிலில் விசேஷம் பழனி ஆண்டவன் பாத ரக்ஷையுடன் தாமரை இதழ்மேல் நின்று அருள் பாலிப்பது தான்.  வலது பாதம் சற்று முன்னால் வைத்திருப்பார். நான்கு ஐந்து வயதில் எனக்கு இது தெரியவில்லை. ஸ்தல விருக்ஷம் அத்திமரம்.
கிராம நிர்வாகிகள் பிள்ளைமார்களுக்கு என் அப்பா J. கிருஷ்ணய்யரை ரொம்ப பிடிக்கும். நிறைய படித்தவர். அவர்களுக்கு விஷயங்களை வாரி வழங்குவதில் பிள்ளைமார் குடும்பங்கள் திருப்தி அடைந்து எங்களை ஆதரித்து வந்தனர்.

இப்போது லேக் ஏரியா எனப்படும் வள்ளுவர் கோட்டம் பகுதி அப்போது கிடையாது. எங்கும் மண் பாண்டம் சட்டி பாத்திரங்கள் செய்பவர்கள் நிறைந்து காணப் படுவார்கள். லயோலா காலேஜ் இருந்தது. புஷ்ப நகர் பகுதியெல்லாம் ஒரே தோட்டம் வயல்கள். மின்சார ரயில் வண்டிகள் கோடம்பாக்கம் விட்டால் அடுத்து சேத்துப்பட்டில் தான் நிற்கும். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் பிறக்காத  காலம். கோடம்பாக்கம் ரயில் நிலையத்தருகே  ரயில் பாதையில் ஒரு இரும்பு  கேட்  லெவல் கிராஸ்ஸிங். ரெண்டு பெரிய கேட்களை மணி அடித்ததும்  இழுத்து   மூட  ரெண்டு பேர்.  ரயில் வண்டிகள் கடந்தவுடன் பச்சை விளக்கு எரியும் போது திறந்து விடுவார்கள். அரைமணி நேரமாகவாவது ஆற்காட் சாலையின் இரு பக்கமும் அடைபட்டு, வண்டிகள், போக்குவரத்துகள் காத்திருக்க வேண்டும்.
 ஆற்காடு ரோடு ஒன்று தான் நேர் வழி. தெரு மேடாக இருக்கும். பாதையின் ரெண்டு பக்கமும் பள்ளம்.  டு. பள்ளங்கள் மாட்டு வண்டிகள் குதிரை வண்டிகளின்  சக்கரங்கள் ஏற்படுத்தியவை.  நுங்கம்பாக்கத்தில் நாகேஸ்வரராவ் கட்டிடம் என்று பெயர் தாங்கிய கார்ப்பரேஷன் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் எங்கள் தகப்பனார் சரித்திரம், ஆங்கில பாடங்கள் சொல்லிக்கொடுப்பார். இன்னும் அந்த பள்ளிக்கூடம் இருக்கிறது. நுங்கம்பாக்கம் போகும்போது அதை பார்க்கும்போது பழைய சின்ன வயது ஞாபகம் வருகிறது.

என் அண்ணாக்கள் ரத்தினம் அய்யர் (இபோது 89+)  எனக்கு நடு அண்ணா  ஜம்புநாதன் இப்போது இல்லை.  நாங்கள் மூவரும்  அந்த பள்ளியில் படித்தவர்கள். அப்பாவோடு     தினமும்  வடபழனியிலிருந்து நுங்கம்பாக்கத்துக்கு  காலை எட்டரை மணிக்கு  நடந்து  சென்றவர்கள்.

வடபழனி முருகன் கோவிலில் தான் நாங்கள் விளையா டுவோம். பின்னால் நிறைய மரங்கள் நந்தவனமாக இருந்தது. பூக்களை பறித்து படத்துக்கு போடுவோம். என்னை வடபழனி ஆண்டியாக்கி விபூதி பூசி கோவணத் தோடு கையில் ஒரு கொம்பை கொடுத்து (அது தான் வேல்) வெகுநேரம் நிற்க வைத்து தலையில் அட்டையில் கிரீடம் அணிவித்து அலங்கரித்து விளையாடுவார்கள். எனக்கு இப்படி ஒரு பாக்யம் சின்ன வயசில் கிடைத் ததா?

பிறகு தான் நான் பாக்கியசாலி என்பதை புரிந்து
கொண்டேன்.

ஊர்க்காரர்கள் சொல்வதைக்  கேட்டு அம்மா  சொல்லி தான் எனக்கு   வடபழனி முருகன் சரித்திரம் தெரிந்தது.  அண்ணாசாமி நாயக்கர்  தீவிர முருக பக்தர். மஹான்.  அவருக்கு  தீராத வயிற்றுவலி. எப்போதுமே சிவ ,முருக, பக்தர்களுக்கு வயிற்று வலி ஒரு காரணமா?  இறைவ னின் சோதனை என்பார்கள். திருநாவுக்கரசருக்கு
வந்தமாதிரி  நாயக்கருக்கும்   சூலை நோய். நாயக்கர் எங்கெல்லாமோ அலைந்து பல கோவில்களுக்கு சென்று வேண்டினார். ஹுஹும். வயிற்று வலியால் துடித்தார். தீரவில்லை.

பழனிக்கு சென்றபோது  முருகன் வலி தீர்த்தான். நாயக்கர் நன்றிக்கடனாக தனது நாக்கை அவன் முன்னால் துண்டித்து பேச்சிழந்தார். நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுப்பதற்கு பாவாடம் என்று பெயர்.

பழனி முருகன் கோயிலை  ஒட்டிய  கடைகளில் ஒன்றில் அண்ணாசாமி நாயக்கர் கண்ணில் ஒரு முருகன் படம் தென்பட்டு  காந்தமாக அது அவரை ஈர்க்க அதை வாங்கினார். அது தான் என் மனதில் பதிந்த இன்றும் வாழும் வடபழனி முருகன்.   அந்த படத்தை தலையில் சுமந்துகொண்டு  கோடம்பாக்கம் புலியூர் வந்தார். அப்போது வடபழனி ஏரியாவுக்கு புலியூர் கோட்டம் என்று பெயர்.

அண்ணாசாமி நாயக்கருக்கு ஒரு வீடு விஸ்தாரமாக இருந்தது. அதில் ஒரு கீற்றுக் கொட்டகை நிர்மாணித் தார். அதில் அந்த படம் ஜம்மென்று வீற்றிருந்த இடம்  வடபழனி முருகன் கோவில் ஆனது. அதில் தான்  விளையாடியிருக்கிறேன்.

அண்ணாசாமி நாயக்கம் கொண்டுவந்த முதல் வடபழனி முருகன் படம்  இன்றும் வடபழனி முருகன் சந்நிதியில் உள்  ப்ரஹாரத்தில்  வடக்கு மண்டபத்தில் இருக்கிறது

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...