Tuesday, July 19, 2022

pesum deivam

 #பேசும்_தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


''கொய்யாப்பழம் கொண்டுவந்தியா?''

வானத்தில் தெரியும் நக்ஷத்ரங்களை ஒருவேளை எண்ணமுடியலாம், ஆனால் மஹா பெரியவா பக்தர்கள் எத்தனைபேர் என்று எவருக்குமே  கணக்கு தெரியாது.  ஏன், என்ன காரணம் ?   இதோ இந்த பதிவின்  தலைப்பு தான் காரணம். அந்த மஹா யுகா புருஷர் ஒரு பேசும் தெய்வம். நடக்க முடியாத, நம்ப முடியாத அதிசயங்க ளை சர்வ சாதாரணமாக  விளம்பரம் இல்லாமல் தனக்கு சம்பந்தமில்லாதது போல் நடத்திக்காட்டிய  ப்ரத்யக்ஷ தெய்வம். 

அவர் காலத்தில் வாழ்ந்த நாம் தான் புண்யசாலி கள்.  

ரெண்டு  சகோதரர்கள், ஒருவர் சூரியகுமார், இன்னொரு வர் ரவிக்குமார். இந்த குமார் சகோதரர்கள் மஹா பெரியவா பக்தியில்  ஒரே மனம் கொண்ட ரெட்டை யர்கள்.     

நடந்த ஒரு சம்பவம் இது, அதை அறிந்தபோது அதில் கண்ட பெயர்களே  தான் இவை. மாற்றப்படவில்லை, கற்பனையில்லை. 

விஜயலக்ஷ்மி சூர்ய குமார் தம்பதிகளுக்கு  புத்ர பாக்யம் தட்டிக்கொண்டே போயிற்று. மயிலாப்பூரில் ஒரு பள்ளி ஆசிரியை விஜயலக்ஷ்மி பல டாக்டர்கள், கோவில்கள், ஆன்மிகர்கள் எல்லோரையும் பார்த்தும் இன்னும் பயனில்லை.  சூரியகுமாரின்  மஹா பெரியவா பக்த நண்பர் ஒருவரிடம் மனக்குறையை சொன்னபோது அவர் ‘‘

''நீ  பெரியவாளை வேண்டிக்கோ,  அவரைச் சரணடைந் தால்  நடக்காதது எதுவுமில்லை''

என்று சொன்னபோது  சூரியகுமார் மனதுக்கு பாந்தமாக இருந்தது.   அன்றிலிருந்து மஹா பெரிய வாளை விடாமல்  வேண்டிக்கொண்டே இருந்தார் சூரியகுமார்.  ஒரு மாதகாலம் ஓடிவிட்டது.

பொங்கல் சமயம்  புதுவருஷம் ஜனவரி. விடிந்தால்  மகர சங்கராந்தி.  அன்றிரவு ஆச்சர்யமாக  சூரியகுமாரின் கனவில் மஹா பெரியவா. 

 ‘எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும்.. கொண்டு வருவியா?'' 

கனவில் கேட்டது  மஹா  பெரியவா. .தூக்கம் கலைந்தது.உடல் துணுக்குற்றது. வியர்த்தது.  விஜயா வை எழுப்பினார்.  

''விஜயா,  மஹா பெரியவா  வந்தா.  என் கிட்டே  கனவில் கொய்யாப்பழம்  வேணும் கொண்டு வருவியா? னு கேட்கிறாரே. விடிஞ்சதும் தேடி கண்டு பிடிச்சு கொய் யாப் பழத்தோடு காஞ்சிபுரம் போவோமா?''

பொங்கல் அன்று கிளம்ப முடியவில்லை, வீட்டில் பூஜை, நிறைய  சொந்த பந்தம் விஜயம். ஆகவே  அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்  அன்று காலையிலேயே  சென்னை நகரம் முழுதும் தேடி அலைந்தார். கொய்யாப்பழ சீஸன்  இல்லை. சூர்யாவின் ரவிகுமாரிடம் காணவைப் பற்றி சொன்னபோது அவர்  கொத்தவால் சாவடி முழுவ தும் அலைந்து  ஒரு கடையில் சில கொய்யாப்பழங் களை பிடித்துவிட்டார். 

சூர்ய குமார் விஜயா தம்பதியர் ரவிக்குமார்  குடும்பத் தோடு  மாட்டுப் பொங்கல் அன்று காலை காஞ்சிபுரம் புறப்பட்டார்கள்.   

கொய்யாப்பழத்தை  போய் எப்படி பெரியவாளுக்கு கொடுப்பது. கனவை நம்பமுடியுமா?   

வழக்கமான  மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி திராக்ஷை  பழங்களோடு கொய்யாப் பழங்களையும்  சேர்த்து  ஒரு பையை  கையில் வைத்திருந்தார். 

பொங்கல் விடுமுறை என்பதால்   வழக்கத்தை விட அதிகம்  காஞ்சி மடத்தில் பக்தர்கள் கூட்டம்.  பெரிய நீண்ட  ஹனுமார்  வால்  க்யூவில்  காஞ்சிபுரம் பஸ்  நிலையம் வரை கும்பல். எவ்வளவு நேரம் ஆகுமோ? பார்க்கமுடியுமோ  முடியாதோ?  மஹா பெரியவா தான் அனுக்கிரஹம் பண்ணனும்.   சூர்ய  குமார் வேண்டிக் கொண்டு நின்றார். போலீஸ்  வரிசையை ஒழுங்காக  உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தது.  மூணு நாலு மணி நேரம் நின்றாலும் தரிசனம் கிடைக்குமா?

அப்போது அவர் அருகே  மடத்தில் பெரியவா தொண்ட ராக பணிபுரியும் தெரிந்தவர் ஒருவர் வந்தார். '

'என்ன இன்னிக்கு பார்த்து  வந்திருக்கே, ரொம்ப கூட்டமாச்சே '  என்கிறார் தொண்டர்.
 
''பெரியவா தரிசனம் பண்ண தான் இன்னிக்கு அவசர அவசரமா வந்தோம்.''
'அப்படி என்ன அவசரம்?''
‘‘பெரியவா நேத்து என் கனவில் வந்தா, ''கொய்யாப் பழம்  கொண்டு வருவியா?'' ன்னு கேட்டார். அதான் வாங்கிண்டு வந்திருக்கோம். பெரியவாகிட்ட அதைக் கொடுத்துட்டு ஆசிர்வாதம் வாங்கணும்’’ என்றார்.‘

‘தோ பாருப்பா '' நீ என்  நண்பன் தான். அதுக்காக, பெரியவாளை உடனே பாக்கணும்கறதுக்காக ‘என் கிட்ட கொய்யாப் பழம் வாங்கித் தரச் சொன்னார்.  பலாப் பழம் கேட்டார். மெட்ராஸ்லேர்ந்து வாங்கிண்டு
வந்திருக்கேன்’னு பொய்யெல்லாம் சொல்லாதே’’ -- 

சற்று  கோபமாகவே  அந்த  தொண்டர் பதிலளித் தார். ரவிகுமாரும் சூரியகுமாரும் அதிர்ந்தார்கள்.

''பொய்  இல்லை, சத்யம்,  பெரியவா நிச்சயம் என் கனவிலே வந்தாப்பா, அவா கேட்டதால் தான் தேடிப்பிடிச்சு கொய்யாப்பழம் வாங்கிண்டு வந்திருக்கேன்''

தொண்டர்  துளியும் காதில் இதைப் போட்டுக் கொள்ளவே இல்லை. முகம் கடுகடுத்தது.

''மறுபடியும் சொல்றேன். பொய்  சத்யம் லாம் வேண்டாம். பெரியவாளை உடனே தரிசனம் பண்ணிட்டுப் போகணும்கறதுக்காக கனவில் வந்தார்… கொய்யாப்பழம் கேட்டார்… அப்படி இப்படின்னு எல்லாம் காதுலே பூ  சுத்தாதே. இது மாதிரி நிறையபேர்  இப்போ  ஆயிட்டா.  வேறே எங்கேயும்   யாருகிட்டேயும் கிடைக்காம,  கொய்யாப்பழம் வேணும்னு உன்னைப் பாத்து  கேட்டாரோ பெரியவா?''

இளக்காரமாக சிரித்துவிட்டு மடத்துக்குள் போய் விட்டார் அந்த தொண்டர்.   

''''எத்தனை நேரம் ஆனாலும் இன்னிக்கு மஹா பெரிய வாளை வரிசையில் நின்னு, இந்தக்  கொய்யா வை பெரியவாகிட்ட சமர்ப்பிச்சுட்டுத்தான் மெட்ராஸ் கௌம்புவோம் ''  என்று தீர்மனித்தார் சூரியகுமார்.''
பயபக்தியுடன்  கொண்டுவந்திருந்த இன்னொரு புது சின்ன பையில் கொய்யா வை போட்டுக்கொண்டு  மற்ற பழங்களை  பெரிய பையோடு  ரவி  குமார் கையில் கொடுத்துவிட்டார்  சூர்யா. 

கூட்டம்  வேகமாக  தான் நகர்ந்தது.  காலை  பத்தரை மணிக்கு  நின்றவர்கள் மத்தியானம் ஒண்ணரை மணி வாக்கில் பெரியவா தங்க பொம்மை மாதிரி   தூர உட்கார்ந்திருப்பதைப்பார்க்க முடிந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக அருகே வந்துவிட்டார்கள்.  களைப்பு  நீங்கி விட்டது.

''ஆஹா  மஹா பெரியவாளை தரிசிக்க போகிறோம், ஆசிர்வாதம் பெறப்போகிறோம் என்ற சந்தோஷம்  அதிகரித்துக் கொண்டே வந்தது.   விடாமல்  ஹர ஹர  சங்கர, ஜயஜய சங்கர கோஷம் வானைப்  பிளந்தது.
சர்வேஸ்வரனான  பரப்பிரம்மம் தள்ளாத வயதிலும்  துளியும் களைப்பே இல்லாமல்  ஆர்வத்தோடு பக்தர்களை ஆசிர்வதித்துக் கொண்டே காட்சி தந்தது. சிலரிடம்  பேச்சு. 

களைப்பு  கவலை, பாரபக்ஷம், வேண்டும் வேண்டாம் எல்லாமே நம்மைப் போல  சாதாரண மனிதர்களுக்கு தானே.  பகவானுக்கு  ஏது!

எதிரே வந்து நமஸ்காரம் பண்ணியாச்சு. பெரியவா தன் வலக் கையை உயர்த்தி, தன் முன்னால் நின்று கொண்டி ருக்கும்   குமார் சகோதர்களை பார்த்து புன்னகையோடு ஆசிர்வதித்தார்.  கண்களில் வாத்சல்யம்.  கொய்யாப்
பழங்கள் இருந்த பையைக் கையில் எடுத்தார் சூர்ய குமார்.

எப்படி சொல்வது  கனவு கண்டதை?  பேசாமல் கைகட்டி, வாய் பொத்தி பவ்யமாக அவரது திருமுகத் தையே ஏக்கமாகப்  பார்த்தபடி நின்றனர் சூரியகுமார் தம்பதிகள்.  பக்திப் பரவசத்தில் கண்களில் ஜலம் . சூர்யாவுக்கு பேச்சே வரவில்லை. பின்னல் பெரிய கூட்டம். 

‘‘பெரியவாளை எப்படியும் இன்னிக்கு தரிசனம் பண்ணியே ஆகணும்னு ஒரு சங்கல்பம்..அதான் குடும்பத்தோட புறப்பட்டு வந்துட்டோம்’’

நாத்  தழுதழுக்க  சூரியகுமார் ஒருவாறு பேசினார். 

‘‘கொய்யாப்பழம் கேட்டேனே… கொண்டுவந்தியோ?’’  என்று சர்வ சாதாரண மாக  பெரியவா கேட்டார். 

ஆயிரம் வாட்  மின் சக்தி தாக்கியது. கண்கள் இருந்தது. அந்த மண்டபமே கண்ணுக்கு வேகமாக சுற்றுவது போல் ஆகி  அருகிலே ஒரு கம்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்  சூரியகுமார்.  ரவிகுமாரும் விஜய லக்ஷ்மியும்  இதயத்துடிப்பு நின்றுபோகும்படி  ஆடிப் போனார்கள்.  குடும்பமே  விதிர்விதிர்த்துப் போனது.

சூரியகுமார் கையில் இருந்த மஞ்சள் துணிப்பை  பையில்  6 கொய்யாபழம்  இருப்பது உலகத்தில் யாருக்குமே தெரியாதே.  எல்லாவற்றையும் விட   அதிக ஆச்சர்யம்   சூர்யாவின் நண்பர்,  பெரியவா அருகே  சேவை செய்த்துக்கொண்டிருந்தவர் காதிலும் பெரியவா கேட்டது விழுந்தது. திடுக்கிட்டார். முகம் இருந்தது. கைகால் நடுங்கியது.

''ஹாஹா,   இதை  சூர்யா சொன்னபோது  நான் நம்பாமல் போனேனே.  பொய்  சத்யம் சொல்லாதே என்று கடிந்துகொண்டேனே. மஹா பாபி நான் '' என்று  கண்ணீர் வடித்தார்.    

''சூர்யா  ‘என்னை மன்னிச்சிடுப்பா’ என்று வாய் பேசாமலேயே கண்ணால் கெஞ்சினார். கையெடுத்து சூர்யாவை கும்பிட்டார் தொண்டர்.

''உடனே போய் வாங்கி கொண்டு வந்திருக்கேன் பெரியவா''   

 மெஷின் மாதிரி  பரபரவென்று  துணிப்பையில் இருந்த கொய்யாப்பழங்களை  அதி வேகமாக எடுத்து பெரியவா எதிரே  மூங்கில் தட்டில் வைத்தார்.

 ‘‘இதை அலம்பிட்டியோ?’’ – கொய்யாவைக் காட்டி சூரியகுமாரிடம் கேட்டார் பெரியவா.

‘‘கௌம்பற அவசரத்துல கொய்யாவை அலம்பறதுக்கு மறந்துட்டோம் பெரியவா. இதோ, இப்ப… இப்பவே அலம்பிடறோம்’’ என்று கொய்யாப்பழங்களைக் கையில் எடுத்துக்கொண்டு சுற்றும்முற்றும் தண்ணீர் இருக்குமா என்று கண்ணால் தேடினார். 

அதற்குள், பெரியவாளின் கைங்கர்யத் தொண்டன் ஒருவன் பித்தளைச் சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தான். அங்கேயே ஒரு ஓரமாகப் போய் கொய்யாப்
பழங்களை தண்ணீர் விட்டு அலம்பினார் சூரியகுமார். ஈரம் சொட்டச் சொட்ட அந்தப் பழங்களை உதறியபடி எடுத்து வந்து, பழையபடி மூங்கில் தட்டில் வைத்தார்.

அங்கிருந்தவர்கள்  எல்லோர் கண்களும் பெரியவா, மூங்கில் தட்டு, ஈர கொய்யாப்பழத் தையே மாறி மாறி பார்த்தது.

பரப்பிரம்ம சொரூபி மூங்கில் தட்டைப் பார்த்தார். பிறகு, அதில் இருந்து ஒரு கொய்யாவைத்  தன் கையில் எடுத்தார். பச்சையும்  மஞ்சளுமாக  நல்ல பழுத்த பழம்.  கொய்யாப்  பழத்தை . தன் வலது உள்ளங்கையில் அதை வைத்துக்கொண்டு இடது உள்ளங்கையால் அதன் மேல் ஒரு அழுத்து  அழுத்தி னார். அவ்வளவுதான். கொய்யாப்பழம் ‘பொளக்’கென இரண்டு சரி பாதியாக உடைந்தது.

வினாடி நேரத்தில் ஒரு பாதியைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்ட  மஹா பெரியவா  இன்னொரு பாதியை   சூரிய குமாரிடம் கொடுத்து  ''நீயும் உன் ஆம்படையாளும் இப்பவே  இதை சாப்பிடுங்கோ'' என்று தந்தார். 

சூர்யா  பயபக்தியோடு  அந்த  பாதி கொய்யாவை  பெரியவா தந்த  பிரசாதமாக  வாங்கி  பிட்டு வாயில் போட்டுக்கொண்டார்கள். 

 ''என்ன திடீரென்று பெரியவாளுக்கு  கொய்யாப்பழம் வேண்டுமென்று ஒரு எண்ணம்?'' என்று யோசித்து நின்றவர்களுக்கு  சூர்ய குமார் ரொம்ப புண்யம் 
பண்ணியவர் என்பதால் இந்த  ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆச்சர்யம்.  அப்போது தான் மஹா பெரியவா கொய்யாப்பழத்தை சிறப்பை, மஹிமையைப் பற்றி  எல்லோருக்கும் விளக்கி விட்டு தனது ஓய்வெடுக்கும் அறைக்கு திரும்பினார்.  

மதியம்  ஸ்ரீமடத்திலேயே போஜனத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பினர் குமார் தம்பதியருக்கு  சில மாதங்களில் பெண்ணாக பிறந்த   மதுராம்பிகா  ஒரு இன்ஜினீயராம்  இப்போது. ஒருவேளை இப்போது இந்த பதிவை கண்ணுற்றால் அந்த பாக்கியசாலி இஞ்சினீயர்  தன்னுடைய  போட்டோவை நமக்கு அளித்தால் அவரை தரிசிக்கும் பாக்யம் நாம் பெறலாம்,  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...