Friday, July 8, 2022

AINDHAM VEDHAM

 ஐந்தாம் வேதம்  -   நங்கநல்லூர்  J  K  SIVAN 


ஜயத்ரதன் அஸ்தமித்தான்

என்னுடைய  ஐந்தாம் வேதம் புத்தகத்தில் ஒரு காட்சி.
''நேரம் ஆகிவிட்டதே. இன்னும் சில மணித்துளிகளில் சூரியன் அஸ்தமனம் ஆகிவிடுவான். இறக்கப்போவது ஜெயத்ரதனா அல்லது அவனைக் கொல்ல முடியாத அர்ஜுனனா?
கிருஷ்ணன் மனதில் இந்த கேள்வி எழுந்ததை அவன் முகம் காட்டியது. வேகமாக தேரைச் செலுத்தினான். அர்ஜுனனோ ஒரு இயந்திரம் போல் கௌரவ வீரர்களையும் தேர்களையும், யானை, குதிரைப் படைகளையும் எதிர்த்து தாக்கிக்  கொன்று வழி பெற்று, பலத்த காவலில் வைக்கப் பட்டிருந்த ஜயத்ரதனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.

''அர்ஜுனா என் பாஞ்சஜன்யத்தை நான் இப்போது ஒலிக்கிறேன். நீ தாக்குதலை மும்முரமாக தொடர்ந்து நடத்து'' என்றான் கிருஷ்ணன். 
கௌரவ சேனை இந்த சப்தத்தை கேட்டதும் அரண்டது . அம்புகள் இரு புறத்திலிருந்தும் பாய்ந்தன.
துரோணர் பாண்டவர்களை மும்முரமாக தாக்கி எப்படியும் யுதிஷ்டிரனை உயிரோடு சிறை பிடிக்க துரிதமாக யுத்தம் புரிந்தார். அவருக்கும் அன்று மாலைக்குள் யுதிஷ்டிரனை கைப்பற்றி துரியோதனன் முன் உயிரோடு நிறுத்தினால் யுத்தம் முடிந்த மாதிரியே அல்லவா? அந்த எண்ணம் நிறைவேறாமல் தடுத்தவன் சாத்யகியும் அந்த அவனுக்கு துணையாக த்ரிஷ்ட த்யும்னனும்.
ரிஷியஸ்ரிங்கருக்கு அலம்புஷன் என்று ஒரு ராக்ஷஸ மகன் உண்டு. அவன் மாயாஜாலங்களில் கை தேர்ந்தவன். பலவான். அவன் பாண்டவ சேனையை வதைக்கிறான். பல பேர் முயன்றும் அவனைத்  தடுக்க முடியவில்லை. பாண்டவ சேனையின் வீரன் கடோத்கஜன் அவனோடு மோதி வெகு நீண்ட யுத்தத்துக்கு பிறகு அவனைக் கொல்கிறான். அலம்புஷன் மறைவு கௌரவ சேனைக்கு ஒரு பெரிய நஷ்டம்.
சாத்யகியை வெகு நேரமாக எதிர்த்த துச்சாதனன் தாக்கு பிடிக்க முடியாமல் பின் வாங்கி செல்கிறான். கர்ணன் சல்லியன்ஆகியோர் சேர்ந்து  எய்த அம்புகளை தடுத்து நொறுக்கு கிறான்பாண்டவ சேனா வீரன்  சாத்யகி.

' சஞ்சயா, சூரியன் மறைய இன்னும் எத்தனை நாழி இருக்கிறது? அர்ஜுனன் என்ன செய் கிறான், பார்த்து சொல்'' என்கிறான் திருதராஷ்டிரன்.

''அரசே, ஜெயத்ரதனைக் காப்பாற்றிய பெருஞ் சேனையை தகர்த்துக் கொண்டு கிருஷ்ணனின் தேர் முன்னேறுகிறது.. இரு கைகளாலும் அர்ஜுனன் அம்புகளை செலுத்தி கௌரவ சேனையைச் சிதறடிக்கிறான். அவனை அவந்தி அரசர்கள் விந்தன் அனுவிந்தனின் சேனை எதிர்க்க சற்றே நேரத்தில் அவர்கள் சேனையை அழித்து இருவரையும் அர்ஜுனன் கொன்று முன்னேறுகிறான். ஜெயத்ரதன் இன்னும் கண்ணில் படவே இல்லை.

''துரியோதனன் உன் முன்னே தென் படுகிறான். முடிந்தால் இவனைக் கொன்றுவிடு" என்றான் கிருஷ்ணன்.
''நான் கொன்றால் பீமன் சபதம் என்னாவது. முடிந்தவரை இன்னும் கொஞ்ச நாள் துரியோதனன்  மூச்சு விடட்டுமே''. என்றான் அர்ஜுனன். எனினும் இவனை சும்மா விடப் போவதில்லை என்று அவன் மீது சரங்களை எய்தபோது அவை பயனற்று திரும்பி கீழே விழுந்தன. கிருஷ்ணனுக்கு ஆச்சர்யம்!
'என்ன அர்ஜுனா உன் காண்டீபம் பலமற்றுப் போய்விட்டதா. அல்லது உனக்கு சக்தி இல்லையா?? அர்ஜுனன் யோசித்தான். திடீரென்று அவனுக்கு ரகசியம் புரிந்தது.
''கிருஷ்ணா, துரியோதனன் துரோணரிடம் கவச மந்திரம் பெற்று அவர் அணிவித்த கவசத்தால் உயிர் தப்பினான். அந்த மந்திரம் எனக்கும் ஆச்சாரியார் உபதேசித்திருக்கிறார்'' என்றான் அர்ஜுனன்.
நேரமாகிக் கொண்டே வந்தது. ''அர்ஜுனா நான் பாஞ்சஜன்யத்தை ஒலிக்கிறேன். நீ கௌரவ சேனையை தாக்கிக் கொண்டே ஜயத்ரதனை நெருங்கு'' என்றான் மீண்டும் கிருஷ்ணன்.
துரோணரின் நோக்கம் யுதிஷ்டிரனைப் பிடிப்பது. அதற்கு அவர் சேனை உழைத்தது.

க்ஷேமத்ருதி த்ரிகர்த்தர்களில் ஒருவன்.பெரிய வீரன். அவன் சாத்யகியைத் தாக்கி யுதிஷ்டிரனை நெருங்க வ்ரிஹத்க்ஷகன் அவனை தடுத்து போரிட்டு அவனை கொன்றான்.
விரதன்வன் எதிரே எதிர்த்து வரும் திருஷ்டகேதுவை தடுக்க இருவருக்கும் யுத்தம் நடந்தது. இரு யானைகள் மோதுவது போல் போரிட்டனர். ஒரு கதாயுதத்தால் விரதன்வனின் மார்பை பிளந்து அவனை திருஷ்டகேது கொன்றான். சகாதேவன் த்ரிகர்தன் நிரமித்திராவை கொன்றான்.

யுதிஷ்டிரனுக்கு கவலை வந்து விட்டது. 'காலையில் சென்ற அர்ஜுனன் திரும்பவில்லையே. தனியே கௌரவ சேனைக்கடலில் கலந்து மறைந்துவிட்டான். எண்ணற்ற அதிரதர்கள் சூழ்ந்து கொண்டு அவன் ஒருவனை தாக்குகிறார்கள். அவர்களை மீறி எப்படி அவன் ஜயத்ரதனை அடைந்து கொல்வான்? ஒருவேளை அர்ஜுனனைக் கொன்றுவிட்டார்களா?, கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய நாதம் கேட்டதே, அது அபாய அறிவிப்பா?

'' சாத்யகி, நீ என்னை காத்தது போதும். நானே என்னை காப்பாற்றிக் கொள்கிறேன். நீ உடனே அர்ஜுனனைத்  தேடிச்செல். அவனுக்கு உன் உதவி தேவையாயிருக்கும். இந்த நேரத்தில் அவனைக்  காக்க வேண்டியது உன் கடமை. நீயும்  கிருஷ்ணனுமாக விருஷ்ணி குலத்தில் எங்களை இதுவரை காத்தவர்கள். இந்த நேரம் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய்'' என்றான் யுதிஷ்டிரன்.

'அரசே, ஜயத்ரதனைக் கொன்று திரும்பும் வரை யுதிஷ்டிரனை காப்பது உன் கடமை'' என்று சொல்லி எனக்கு கட்டளை இட்டு . அர்ஜுனனும் கிருஷ்ணனும் சொன்னதை நான் எவ்வாறு மீற முடியும்'' என்றான் யுயுதானன் என்ற பெயர் கொண்ட சாத்யகி.

''இல்லை, சாத்யகி அவர்கள் கட்டளையை விட என் கட்டளை உயர்ந்தது. நீ உடனே அர்ஜுனனைத் தேடிச் செல்.''

' உங்களை சிறைப் பிடிப்பதாக துரியோதனனுக்கு வாக்களித்து துரோணர் உங்களை அடைய யுத்தம் செய்யும் நேரத்தில் நான் எப்படி உங்களை விட்டு அகல முடியும்? '' என்றான் சாத்யகி,

' அது என் கவலை, நீ உடனே செல்'' என்று ஆணையிட, சாத்யகி பொறுப்பை பீமனிடம் ஒப்படைத்துவிட்டு அர்ஜுனன் பின்னால் போகிறான்.

ஜலசந்தன் எதிர்த்து தடுக்க கடும் போருக்கு பிறகு சாத்யகி ஜலசந்தனைக் கொன்றுவிட்டு முன்னேறுகிறான். துரோணரின் சேனை, யவனர்கள், காம்போஜர்கள், த்ரிகர்த்தர்கள், கர்ணன், துச்சாதனன், துரியோதனன், சல்லியன், காந்தாரர்கள் இத்தனை அரசர்கள் படைகளையும் பிளந்து அர்ஜுனனை நெருங்கிவிட்டான் சாத்யகி.   அர்ஜுனனோ அழிவின் அவதாரமாக கௌரவ சேனைகளை அழித்துக்கொண்டு ஜயத்ரதனைக்  கொல்ல மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தான். இன்னும் ஜயத்ரதன் எதிரே கண்ணில் தென்படவில்லையே.

துரோணரை எதிர்த்த கேகய அரசன் வ்ரிஹத்க்ஷத்ரன் கடைசியில் அவரால் கொல்லப் படுகிறான். அவரை திருஷ்டகேது தொடர்ந்து எதிர்க்கிறான். சிசுபாலன் மகனான அவனும் துரோணரின் அம்புகளால் தாக்குண்டு மாண்டான். தொடர்ந்து எதிர்த்த ஜலசந்தன் மகனும் உயிரிழக்கிறான். பாண்டவ சைனியத்தை துரோணர் அழித்துக்கொண்டே யுதிஷ்டிரனை நெருங்குகிறார். பாஞ்சாலன் க்ஷத்ரதர்மன் துரோணரை எதிர்த்து தன் உயிரை விடுகிறான்.

''துரோணரை எதிர்த்த பீமனை, அரசே, உன் மக்கள் வ்ரிந்தாரகன், அபயன், சுஷேணன், தீர்க்கநேத்ரன், துர்விமோசனன் ஆகியோர் சூழ்ந்து தாக்க, பீமன் பலமாக அவர்களைத் தாக்குகிறான். முடிவில் உன் பிள்ளைகள் வ்ரிந்தாரகன், அபயன் பவுத்ரகர்மன், சுதர்சன், துர்விமோசனன் ஆகியோரை பீமன் கொல்கிறான். மற்றவர்கள் உயிர்தப்பி ஓடுகிறார்கள். பீமன் அர்ஜுனனை நெருங்கி விடுகிறான். பீமனும் அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் அறிந்ததை உரத்த குரலில் சப்தமிட, கிருஷ்ணனும் சேர்ந்துகொள்கிறான். இந்த மூவரின் குரல் யுத்த களத்தில் அங்கே யுதிஷ்டிரனுக்கு கேட்க அவன் அவர்கள் உயிரோடிருப்பதை அறிந்து மகிழ்கிறான். ரத்தம் பெருகி ஆறாக ஓட, பிணங்களாக இருபக்க வீரர்களும் சைன்யங்களும் மலையாக கண்ணை மறைக்க, நேரம் ஆக ஆக யுத்தம் மும்முரமடைகிறது.

''ஐயோ சஞ்சயா, எனக்கு அர்ஜுனனிடம் கூட பயம் இல்லை. பீமனின் நினைவு தான் என்னை எப்போதும் வாட்டுகிறது. என் மக்களை பீமன் நான் பயந்தபடியே ஒவ்வொருவராக கொல்கிறானே. விதியே அவன் உருவில் வந்து நிற்கிறதே. என் குல நாசம் நெருங்குகிறதே'' என்று கதறுகிறான் திருதராஷ்டிரன்.
துரியோதனன் கர்ணனும் வில்லிழந்து தேரிழந்து தடுமாறுவதை கண்டதும் நேராக துரோணரிடம் ஓடுகிறான்.
.''குருவே, அர்ஜுனன், பீமன் சாத்யகி ஆகியோர் கடைசியாக நின்ற கர்ணன் படையையும் பிளந்து ஜெயத்ரதனை அடைந்து விட்டார்களே. . உடனே நீங்கள் திரும்பி வந்து அவனைக் காப்பாற்றுங்கள் '' என்று அழைக்க யுதிஷ்டிரனை கைப்பற்றும் முயற்சியில் இருந்து துரோணர் விடுபடுகிறார்.
''கர்ணனை, பீமன் பலமுறை தேரையும் வில்லையும் இழக்கச் செய்து கடைசியில் அவனுக்கு துணையாக வந்த உன் மகன் துர்ஜயனையும் கொன்று விட்டான். துரியோதனன் கோபம் கொண்டு இன்னொரு சகோதரன் துர்முகனை பீமனைத் தாக்கும்படி ஏவ பீமன் துர்முகனையும் கொல்கிறான் . 

''திருதராஷ்டிரா. தொடர்ந்து எதிர்த்த உமது பிள்ளைகள், சித்ரன், உபசித்ரன் , சாருசித்ரன், சித்ரவர்மன், சரசன் எல்லோரும் கூட பீமனை எதிர்த்து போரிட்டு அவனால் யம பட்டணம் சென்று விட்டார்கள்'' என்கிறான் சஞ்சயன்.

துரியோதனனால் மேலும் அனுப்பப்பட்ட மற்ற ஏழு சகோதரர்கள் கர்ணனுக்கு உதவ பீமனோடு மோதுகிறார்கள். அவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்த பீமன் அரசே, உன் பிள்ளைகள் அந்த ஏழுபேரையும் அந்த பலசாலி பீமன் கொன்றான். இறந்தவர்கள் யார் தெரியுமா? சத்ருஞ்சயன், சத்ருஸாஹன், சித்ராயுதன், திரிதன், சித்ரன், சித்திரசேனன், விகர்ணன். ' இதில் விகர்ணன் ஒருவனே பீமனால் மதிக்கப் பட்ட நல்லவன்.

பீமனின் கர்ஜனை யுதிஷ்டிரனுக்கு கேட்கிறது. மகிழ்கிறான். கர்ணனும் பீமனும் சளைக்காமல் யுத்தம் புரிந்தாலும் கடைசியில் கர்ணனும் குந்திக்கு கொடுத்த வாக்கை நினைவு கூர்ந்து பீமனைக் கொல்லாமல் அங்கிருந்து நகர்கிறான்.

''கிருஷ்ணா, எதற்கு சாத்யகி என்னைத்  தேடிக்கொண்டு வந்தான்? யுதிஷ்டிரனுக்கு பாதுகாப்பாக இரு என்று சொல்லியும் துரோணரின் எதிர்ப்புக்கு அவரை ஆளாக்கி விட்டு வந்ததால் நாம் ஜெயத்ரதனைக் கொல்லும் முயற்சியோடு இவனையும் காக்க வேண்டும், யுதிஷ்டிரர் போதுமான பாதுகாப்பு இன்றி இருப்பதால் அவரையும் இங்கிருந்தே த்ரோணரிட மிருந்து காக்க வேண்டுமே. சூரியன் சற்று நேரத்தில் மலை வாயில் விழும் நேரம் ஆகிவிட்டதே' என்று அர்ஜுனன் சொல்லும்போதே பூரிசிரவஸ் படையோடு சாத்யகியை தாக்க நெருங் கினான்.
மஹா வீரர்களும் சம பலசாலிகளுமான பூரிச்ரவஸும் சாத்யகியும் துவந்த யுத்தம் புரிந்தனர். திடீரென்று பூரிசிரவஸ் இடது கையில் சாத்ய கியின் சிரத்தை பிடித்து வலதுகையில் ஒரு வாள் ஏந்தி கொல்ல முயன்றபோது கிருஷ்ணன் ''அர்ஜுனா, அதோ பார், நமது நண்பன் சாத்யகியை பூரிசிரவஸ் கொல்லப் போகிறான் உடனே சாத்யகியைக் காப்பாற்று ''என்று சொல்ல அர்ஜுனன் ஒரு அஸ்திரத்தால் பூரிஸ்ரவஸின் வாளேந்திய வலது கரத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் துண்டிக்கிறான்.
''உன்னைத் தாக்காத போது, உன்னிடம் நேரடியாக யுத்தம் செய்யாதபோது என்னை பேடித் தனமாக எப்படி தாக்கினாய்? என்று கேட்ட பூரிஸ்ரவஸிடம் அர்ஜுனன் யுத்த நெறிகளை அறிவிக்கிறான். எனக்குதவ வந்தவனை மற்றவன் தாக்கும்போது நான் அவன் உயிர் காக்க வில்லை என்றால் அது பாபம். மேலும் நிராயுதபாணியாக உன்னுடன் யுத்தம் புரிந்த சாத்யகியை  நீ வாளால் வெட்ட முனைந்ததே அதர்மம் தானே? அபிமன்யுவை உன்னோடு சேர்த்து ஆறு அதிரதர்கள் நிராயுத பாணியாக இருந்த சிறுவனைக் கொன்றீர்களே அது எந்த தர்மம்? மேலும் யுத்தம் என்று வந்தால் ஒருவரை தாக்கும்போது அவரோடு உள்ள மற்றவர் களையும் அழிப்பது தர்மமே என்கிறான் அர்ஜுனன். பூரி ஸ்ரவஸ் கிருஷ்ணனை இகழ் கிறான்.சாத்யகி பூரிஸ்ரவஸை அதே வாளால் வெட்டி கொன்றான்.

ஜெயத்ரதனின் பாதுகாவல் சேனை தளர்ந்து விட்டது. 
''கிருஷ்ணா இன்னும் சில நிமிஷங்கள் தான் உள்ளன. ஜெயத்ரதனிடம் தேரைக் கொண்டு செல்'' என்றான் அர்ஜுனன்.
''கர்ணா, அங்கே பார் அவசரமாக அர்ஜுனன் ஜயத்ரதனை நெருங்குகிறான். எப்படியாவது அஸ்தமன காலம் வரை ஜயத்ரதனை நாம் உயிரோடு காப்பாற்றி விட்டால் சபதத்தில் தோற்ற அர்ஜுனன் தானே தீ மூட்டி மாண்டு விடுவான். அது நமக்கு வர பிரசாதம் '' என்றான் துரியோதனன். கர்ணன் விரைந்தான். கிருபர், அஸ்வத்தாமன், சல்லியன், சகுனி, துரியோ தனன் சேனைகள் அனைத்துமே ஜயத்ரதனை சூழ்ந்து கொண்டன. அர்ஜுனன் வேகமாக இரு கைகளாலும் அம்புகளை செலுத்த எண்ணற்ற தலைகள் கீழே உருண்டன.

மேற்கே அடிவானத்தை நோக்கி சூரியன் சிவந்த உருண்டையாக இறங்க முயன்றான். பலர் செலுத்திய அம்புகள் மூடு பனியாக அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் முழுசாக மறைத்தன. அதையும் மீறி அவன் அம்புகளை செலுத்தி அவற்றை தடுத்தும் உடைத்தும் செயல் புரிந்தான். தேர்கள் யானைகள் தடையாக எதிரே வரிசையாக வேறு நிறுத்தப்பட்டு அர்ஜுனனை அணுக வொட்டாமல் செய்தன. ரத்த ஆறு வெள்ளமாக ஓடி அதன் போக்கில் உடைந்த தேர்களும், இறந்த யானை குதிரைகள், சிதைந்த மனித உடல்களுமாக மேலே செல்லமுடியாமல் தடையாக காட்சியளித்தது. இதோ, அர்ஜுனன் எதிரே ஜயத்ரதனை கண்டு விட்டான். அவனது அம்புகள் மழையாகப் பொழிந்தன. ஜெயத்ரதனின் தேரோட்டியின் தலை விரைவில் கீழே உருண்டது. தேர் குதிரைகள் தறிகெட்டு ஓடின. தேர் குடை சாய்ந்தது, குடை ஒடிந்து ஜயத்ரதன் ஓடிச் சென்று எங்கோ மறைந்துவிட்டான். கௌரவ சேனை சூர்ய அஸ்தமனத்துக்குள் ஜெயத்ரதன் உயிரோடு இருக்க ஆவலாக எதிர் நோக்கினார்கள்.

''சற்றே நேரம் தான் இருக்கிறது. அர்ஜுனா, நான் சொல்வதை கேள். உன்னால் ஜயத்ரதனை நெருங்க முடியாமல் அனைத்து அதிரதர்களும் சூழ்ந்து அவன் அவர்களுக்கு நடுவே ஒளிந்து கொண்டிருக்கிறான் . நான் த்யான யோகத்தில் மாய இருளை வரவழைக்கிறேன். அவர்கள் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று தைரியமாக ஜெயத்ரதனை வெளியே விடுவார்கள் அந்த நேரம் பார்த்து ஜயத்ரதனை தவறாமல் கொன்றுவிடு. இது ஒன்று தான் நீ உயிர் தப்ப கடைசி வழி'' என்றான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா, நீ சொல்வதை செய்பவன் நான் '' என்றான் அர்ஜுனன்.
கிருஷ்ணனின் யோக மாயையால் மேகங்கள் சூழ்ந்து சூரியன் அஸ்தமனமாகிவிட்டதாக தோன்றியது. கௌரவர்கள் மகிழ்ந்தார்கள். ஆடி ஓடினார்கள். ''அர்ஜுனன் தோற்றான் இனி அவன் மரணம் நிச்சயம்'' என்று ஆரவாரித்தார்கள்.

ஜயத்ரதன் உயிர் தப்பிய சந்தோஷத்தில் வெளியே வந்தான். எல்லோரும் அவனை தூக்கிக் கொண்டாடினார்கள். ஜெயத்ரதன் தலையை உயர்த்தி மேலே சூரியன் மறைந்ததை உயிர் தப்பினோம் என்ற ஆர்வத்தோடு பார்த்தபோது  ஜெயத்ரதன்  தலை தெரிந்தது அர்ஜுனனுக்கு.
'அர்ஜுனா கொல் அவனை'' என்றான் கிருஷ்ணன். தயாராக இருந்த அர்ஜுனனின் அம்புகள் சீறிப் பாய்ந்து துரியோதனன், கர்ணன், கிருபர் , அஸ்வத்தாமா ஜெயத்ரதன் அனைவரையும் தாக்கின. அர்ஜுனனின் தாக்குதலை எதிர்பார்க்காத கௌரவ சேனை சிதறியது. ஜயத்ரதன் மீதுள்ள பாதுகாப்பு தளர்ந்தது. அர்ஜுனன் மந்திரங்கள் உச்சரித்து செலுத்திய அம்பு ஜெயத்ரதனின் தலையை உடலிலிருந்து துண்டித்தது.

இங்கு ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்க வேண்டும்.
ஜயத்ரதன் பிறக்கும்போது அவன் தந்தை வ்ரிதக்ஷத்ரனிடம் அசரீரி ஒன்று ''உன் மகன் ஒரு சிறந்த வீரன். க்ஷத்ரிய அரசன் ஆவான். அவனை தெய்வீக சக்தி கொண்ட புகழ் மிக்க ஒரு க்ஷத்திரியன் ஒருவன் தான் கொல்ல முடியும். வேறு யாராலும் அவனை வெல்லமுடியாது. '' விரிதக்ஷத்ரன் உடனே அதை தொடர்ந்து ஒரு வரம் கேட்டு பெற்றான்

''தெய்வமே என்மகனை அப்படிப்பட்ட ஒரு வீர க்ஷத்திரியன் கொன்று என் மகனின் தலை எவனால் பூமியில் விழுகிறதோ அவன் தலை உடனே நூறு சுக்கலாக வெடிக்கவேண்டும் '' . இந்த வரத்தின் மூலம் தனது மகனைக் கொன்றவன் பழிவாங்கப் படுவான் என்று தந்தை நினைத்தான்.

''அப்படியே ஆகுக'' என்றது அசரீரி தெய்வம். ஜயத்ரதன் அரசனானவுடன் அவன் தந்தை வ்ரிதக்ஷத்ரன் வானப்ரஸ்தம் மேற்கொண்டு கானகத்தில் தவம் செய்யப் போய்விட்டான். இன்னும் இருக்கிறான்.   இது கிருஷ்ணனுக்கு ஞாபகம் வந்தது.

''அர்ஜுனா ரொம்ப ஜாக்கிரதை. ஜயத்ரதன் தலை கீழே விழுந்தால் உன் தலை நூறு சுக்கலாக உடனே வெடிக்கும். எனவே வ்ரிதக்ஷத்ரன் இங்கே தான் குருக்ஷேத்ரம், சமந்தபஞ்சகம் அருகே வனத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறான். ஜயத்ரதன் தலையை ஒரு தகுந்த வாயு அஸ்திரத்தால் காற்றில் தூக்கிச் சென்று வ்ரிதக்ஷத்ரன் மடியில் சென்று விழச்செய்'' என்றான் கிருஷ்ணன். 
ஜெயத்ரனின் தலையை சுமந்த அஸ்திரம் அதை தவம் செய்து கொண்டிருந்த விரிதக்ஷத்ரன் மடியில் தொப்பென்று போட்டது. அதை ஏதோ ஒரு மரத்தின் காயோ கனியோ என்று சரியாகக் கூட கவனிக்காமல் கீழே தள்ளிவிட்டான் தந்தை. ஜெயத்ரதனின் தலையை அவன் கீழே விழச் செய்ததால் வ்ரிதக்ஷத்ரன் தலை அவன் வேண்டிய வரத்தின் படியே நூறு சில்லுகளாக சிதறி வெடித்து அவன் மாண்டான்.

ஜயத்ரதன் உயிரிழந்த கணமே இருண்டிருந்த வானம் பளிச்சென்று மீண்டும் சூரிய பிரகாசத்தில் சிவந்து காணப்பட்டது. இந்த குறைந்த இருட்டு நேரத்தில் எட்டு அக்ஷ்வுணி சைன்யத்தை அர்ஜுனன் அழித்தான். கிருஷ்ணனின் பாஞ்ச ஜன்யம் கம்பீரமாக ஒலித்தது. அர்ஜுனனின் தேவதத்தமும் சேர்ந்து ஒலித்தது.

சூரிய வெளிச்சத்தில் ஜெயத்ரதனைக் கண்ட கௌரவசேனை அவன் தலை இன்றி இறந்திருந்ததை கண்டு நடுங்கியது. வெற்றி சங்கநாதம் எங்கோ யுதிஷ்டிரனின் காதிலும் விழுந்து அவன் ஜயத்ரதன் மாண்டான் என அறிந்தான். துரியோதனன் சிலையாக நின்றான். எதிரே நின்ற துரோணர், கர்ணன், கிருபர் அஸ்வத்தாமன், மற்றோரையெல்லாம் ஒரு துரும்பாக பார்த்தான்.

திருதராஷ்டிரன் மூர்ச்சையடைந்தான் சஞ்சயன் அவனை ஆஸ்வாஸப் படுத்திக் கொண்டிருந்தான். 

சூரியன் மெதுவாக அஸ்தமித்தான்.ஆனால் ஜயத்ரதன் அதற்கு முன்னமே அஸ்தமித்து விட்டானே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...