Tuesday, July 26, 2022

KALIYUGAM

 அப்போதே சொன்ன சுகர்:   நங்கநல்லூர்  J K  SIVAN 


 கலிகாலம் இப்படித்தான்.

ஸ்ரீமத் பாகவதத்தில் பன்னிரெண்டாவது காண்டம் 2ம் அத்தியத்தில் இருக்கிறோம்.  முழுதும் அல்ல. சில அற்புத பகுதிகளை மட்டும்.   நான்  ஜவந்திப்பூ மாலையை  கழுத்தில் போட்டுக்கொண்டு  சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து உரக்க கதை சொல்லும் பௌராணிகன் இல்லை.  உங்களில் ஒருவன்.

சுகதேவரால் எப்படி கலிகாலத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கப்போகிறது என்று அறிய முடிந்தது என்று கேட்டால்  உடனே பதில் ''ஞான திருஷ்டி'' என்று சொல்லிவிடலாம். நமக்கு பகலிலேயே  எதிரே வரும் தண்ணீர் லாரி  கண்ணுக்கு தெரியவில்லையே.

இதைச்  சொன்ன சுகதேவரை விட எதிர்கால கவலையில் கேள்விகேட்டு அவரை துளைத்து இதைச் சொல்ல வைத்த பரீக்ஷித் மகாராஜாவுக்கு தான் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.  அவன் இத்தனை கேள்விகளை ஏழு நாளில் கேட்டு  ஏழு ஜன்மத்துக்கு நமக்கு போதுமான  விஷயங்களை  சுகப்ரம்மத்திடமிருந்து  பெற்றுத் தந்திருக்கிறானே.

''நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எழுதி இன்னும் பெரிதாக எழுதுங்கள்'' என்று சில நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.  

''ஐயா,  சுருக்கி எழுதும்  இதைப்  படிக்கவே ஆளில்லை.   ஆன்மீக கட்டுரைகள் படிப்பதை விட  அவரைக்காய் பொரிச்ச குழம்பு  எப்படி  பண்ணுவது பற்றி  தெரிந்து கொள்ள  விரும்புவர்கள் தான்  அதிகம்.

அவனவன் ஆபிஸ் போகும்போது,  ட்ரெய்னிலும் பஸ்ஸிலும் , ஆட்டோவிலும்  காதில்   ஒயரை   ear phone  wire  செருகிக் கொண்டு பயணிக்கும்போது  படிக்க ஒரு எண்ணம் வந்து பத்து நிமிஷம் செலவழித்தால்   அவன் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணவன்.  அந்த நேரத்தில் அவனைப்  பிடிக்க சிறிசாக சுருக்கி எழுதினால் தான் உண்டு. இல்லையேல் அலமாரியில் பரிமேலழகர், நாலடியார், திரிகடுகம்,  திவ்ய பிரபந்தம்,  பெரிய புராணம் பக்கத்தில் என் புத்தகமும் அமர்ந்து கொள்ளும்  என  அறிவேன்.

மொபைல் போன்,  வாட்சாப் வந்தாலும் வந்தது, மூணு மணி நேரம் கதை சொல்கிறவர்கள் கூட மூணு நிமிஷத்தில் மொபைலில் சுருக்கிக்கொண்டு சொல்கிறார்கள். யு ட்யூப், கட்சிக் கொடி பூசல் பற்றி கூட சுகருக்கு தெரிந்திருக்கும் போல் இருக்கிறது. முழுதும் தேடினால் பாகவதத்தில் ஏதோ ஒரு ஸ்லோகத்தில் பிடித்துவிடலாம்.

 விவரமாக  படிக்க இங்கே யாரும் இல்லை. அவசரமாக பார்க்க, நுனிப்புல் மேய, பொம்மைகளால் பதில் சொல்ல மட்டுமே முடிகிறது. மீம்ஸ்  memes  என்பது  வடிவேல் சுவாமிகளால்  உயிர்பெற்று ஊரெல்லாம் கொரோனா போல் பரவி இருக்கிறதே. யார்  சுகப்ரம்மம் படிப்பார்கள்?

சுகர் பரிக்ஷித்துக்கு எந்த தேசத்தில் எந்தராஜாவுக்கு அப்புறம் எவனைக் கொன்று எவன் வருவான் என்று சரித்திர பக்கங்களை அது எழுதப்படுவதற்கு முன்பே சொல்கிறார்.

vittam eva kalau nrnam  janmacara-gunodayah dharma-nyaya-vyavasthayam karanam balam eva hi  

''பரீக்ஷித்,  கலியுகத்தில் மனிதனின் குணத்தை பணத்தை வைத்து தான் சொல்வார்கள்.  கையில் காசு நிறைய இருப்பவன் (நேர்மையாக கணக்கு காட்டினால்   அவ்வளவு எப்படி  கையில்  வைத்துக் கொள்ள முடியும்?) ''குணத்தை''  , சமூக அந்தஸ்தை, பதவி  நாற்காலியில் அமர்வதை அவனால் தான் அடைய முடியும். ,அவனால் எதுவும் செய்ய முடியும்''  
எப்படி  சுகர் இதை அப்போதே  தெரிந்துகொண்டிருக்கிறார்?.

அப்போதெல்லாம் சாஸ்திரம் வேதம் கற்ற அரசர்கள் ஆண்டார்கள். நீதி நியாயம், நேர்மை தெரிந்திருந்தது. ஆள்வதற்கு ஒரு குலம் க்ஷத்ரியர் என்று இருந்தது. கலிகாலத்தில் அப்படி கிடையாது. குலம் அப்புறம் ''கும்பல்'' ஆகிவிடும் என்கிறார். ஐந்தாவது  வரை  படித்தாலே  போதும் . அதுவே  அதிகம் நாட்டை ஆள'' என்கிறார். எந்த கூட்டம் பலம் மிக்கதோ நீதி நியாயம் எல்லாம் அது சொல்வது தான்  நியாயம், நேர்மை,  உண்மை  என்கிறார். காசே  தான் கடவுளடா,  அதுவே   எதையும் சாதிக்கும் என்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...