Friday, October 5, 2018

RADHA KRISHNA



 கிருஷ்ண  பசியும் தாகமும்.  J.K. SIVAN 


தலைகீழாக  நின்று  தவம் செய்து  என்னதான் ப்ரயத்தனப்பட்டாலும்  எவ்வளவு படித்திருந்தாலும், எழுதி இருந்தாலும்,  கேட்டாலும், பேசினாலும்,  ராதா--கிருஷ்ணன்  பிரேம பந்தம் விளக்க முடியாதது. புரிந்து கொள்ள  புரியாது.  புரிய வைக்கவும் முடியாது.   பாதம்  ஹல்வா  என்று  அதன்  படத்தை  பல விதத்தில்  வண்ணத்தில்  பிரசுரித்தாலும்,  நாள்கணக்கில்  அதன் ருசியை  பற்றி  எடுத்துரைத்தாலும்,  அதன்  செய்முறை  பக்குவம் பற்றி  எழுதினாலும், அதன்  உண்மையான  ருசி  தெரியப்போவதில்லை. ஒரு  விள்ளல்  வாய்க்குள்  போனால்  அன்றி  ருசி  அறியமுடியாது.  பாதம் ஹல்வா  ருசியாக  இனித்தது என்று எழுதினால் அதன் ருசி  தெரியவா போகிறது?.

இது போல் ராதா-கிருஷ்ண பிரேமையை  மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு  கண் மூடி  ரசித்தால் மட்டுமே  அதன் ருசி புரிபடும்.   நாமே  ராதாவாக மாறி   கண்ணனை நேசிக்க வேண்டும்.  அப்போது தான் அன்பு பாசம்  நேசம்  என்றால் என்ன  என்று தெரியவரும். இது அவரவர் அனுபவிக்க வேண்டியது. உனக்காக  நானோ எனக்காக நீயோ  அனுபவிக்க முடியாது.  அளவில்லாமல் எண்ணற்ற இன்ப அனுபவங்கள் பிரவாகமாக  ஒவ்வொரு மனத்திலும் வெவ்வேறாக உருவாகும் போது தான் பக்தி என்பதன் உள்ளர்த்தம் புரியும்.  அப்போது தான் நெருப்பு என்று சொன்னால் அதன் உஷ்ணம் புரியும்.

கடவுளிடம்  எதாவது ஒன்று நமக்கு தேவை என்ற போது  மட்டும் வேண்டிக் கொண்டால்   அவர்  எப்படி  இதை   நிறைவேற்றுவார?   எங்கு, என்றைக்கு, எவர் மூலம், என்ற  எண்ணம்  கூடவே எழுந்தால் அந்த எதிர்பார்ப்பு  முழு மனதுடன், நம்பிக்கையுடன்  கடவுளை  வேண்டுவது  ஆகாது.   கடவுளை நாம்  சந்தேகிப்பதைத்தான் அது தெரிவிக்கிறது.

ராதா  கண்ணனை  முழுமையாகதன்னுடைய உயிர் மூச்சாக   நம்பினாள்,  தானே  கண்ணன். அவன் வேறு தான் வேறு என்ற  எண்ணம் எழவில்லை.   அவள் எண்ணத்தில் அதனால் கண்ணன் பிரதிபலித்தான்  சரணாகதியின்  உச்ச  நிலை  இது.  மீராவின்  பாடல்களிலும்  இந்த த்வனி எதிரொலிக்கும்

ராதை எப்போதும்  தன்னை மற்ற  கோபியர்களை விட உயர்ந்தவள், சிறந்தவள்,  தலைவி,  எனக் கருதவில்லை.   கோரவில்லை.  அப்படி ஒரு நினைப்பு  எழவே இல்லை .  அவளது  கிருஷ்ண பக்தியும்  பிரேமையும் தானாகவே  மற்ற  கோபியரை  அவளை  வணங்கச் செய்தது.  அடி தொட்டு  பின்பற்றசெய்தது.

ஒரு சிறு வேண்டுகோள்.      எந்த காரணத்தைக்  கொண்டும்  நம்மிடையே   உலவுகின்ற   சில படங்களில், நாட்டி யங்களில், நாடகங்களில்,  தொலைக் காட்சிகளில்,  கதைகளில், கவிதைகளில்,  சினிமா பாடல்களில் வர்ணிக்கப்படுகின்ற  ராதாவை ரசித்து விட்டு   இது தான் , '' ராதா  கிருஷ்ணன்  காதலா , பிரேமையா , அப்பட்டமாக  இது தானா'?'' என்று எடை போட வேண்டாம்.

உங்கள்  மனதில்  நீங்கள்  போடும்  எடை   உங்களுடையதாகவே இருக்க வேண்டும்.  மற்றவரிடம்  கடன் வாங்கிய  கருத்தாக அமைய வேண்டாம். அதாவது மேலே  சொன்ன, படம் கதை, பாட்டு, நாடகம், நாட்டியம்  இத்யாதி இத்யாதி...

விரகத்தை விரசமாக்க கூடாது.  புனிதம்  கெட்டுவிடும்.  பெருமை  மங்கிவிடும். உயர்ச்சி  தாழ்ந்து விடும். ஆங்கிலத்தில்  ஒருவர்  எழுதின  RADHA   என்கிற  எழுத்தை  திருப்பிப்போட்டால்   ARADH  என்று  வருகிறதே  ஓஹோ  ராதா என்ற சொல்லே கிருஷ்ண  ஆராதனை யின்  பிரதிபலிப்போ, தத்துவமோ? ADHAR   என்று  வருவதால்  கிருஷ்ணனுக்கு  ராதா  தான்  ஆதாரமா?   ராதா   ஒவ்வொரு செயலிலும்  சொல்லிலும்  எண்ணத்திலும்  கண்ணனையே ''ஆராதி''த்தவள்,  'ஆதார'' மாக  கொண்டவள்  என்று  இப்படி கூட  அறிய முடிகிறதே.  இப்படி தான்  சிந்திக்கவேண்டும்.  அப்போது தான்  உங்கள் மனதில் ராதா க்ரிஷ்ணன் பிரேமை ஒருவாறு  அஸ்திவாரம்  பெறும். ராதாவை உண்மையாக  உணரமுடியும்.

ஒரு குட்டிக்கதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும்.

ராதா  ஏதோ  ஒரு  கிராமத்துக்கு நடந்து போனாள் .  நேரம்  ஆக ஆக  சுடு  மணலில் நடந்து  கொண்டிருந்த ராதாவிற்கு எங்காவது  ஒரு  மர  நிழலில்  சற்று  இளைப்பாறலாமே  என்று  தோன்ற எங்குமே  மரமோ  நிழலோ  எதுவுமே  இல்லை.  அவள்  விடுவிடுவென்று சுடு மணலில்  மேலும் நடந்தாள். அவள் ஏன்  கண்ணனை அப்போது   நினைக்கவில்லை? கண்ணனை நினைத்தால் கால் சுடாதே.  ஏன் அப்படிச் செய்யவில்லை?   காரணம் தெரியுமா?

'' மாட்டேன், மாட்டவே   மாட்டேன், அவனை  நினைத்தால்  அவன்   இங்கு என்னோடு  வந்து  பாவம் அவனும் இந்த சுடுமணலில் வாடுவான். இது  என்னோடு  போகட்டும்.  நிழலில் சென்று  அங்கே அவனை நினைக்கிறேன்.  அவனோடு இளைப்பாருகிறேன்''   -   இது ராதா. .

''கண்ணா  நீ  என்  கண்ணின்  பாவை.  என்னுள்ளே  இருப்பவன். உன்னை  உணர  நீ  என்னெதிரே தோன்றிய சிறு குழந்தை என்று  வைத்துக்கொண்டால்,  என் விழியின் சக்தியின்றி,  கண்ணில்  பாவையின்றி,  பார்வை இன்றி, உன்னை  எவ்வாறு காண்பேன்? சிறு குழந்தையாக நிற்கும் உன்னை  எவ்வாறு  கண்டு ரசிப்பேன்? எனக்கு  பார்வையும்  நீ,  நான்  பார்க்கும்  காட்சியும்  நீ.
 உன்னுடைய  மனித உருவை  எனக்கு  காட்டுகிறாயா? ''    ராதா  இவ்வாறு காண  ஏங்கும்போது  அவன்  மதுராவில் அன்றோ  இருந்தான்.   ஆனாலும்  அவள் இவ்வாறு எண்ணி  கண்ணை மூடி திறந்தாள். எதிரே கண்ணன்  தோன்றினான்.

'கோபாலன்  வந்தான்  கோவிந்தன்  வந்தான்''  என்று எப்போது  கோபியர்   ஆடிப்பாடினாலும்  ராதை  அவன்  வந்ததை   பரிபூர்ணமாக உணர்ந்தாள். அவனை   வழக்கமாக சந்திக்கும்  மதுவனத்துக்கு  ஒரே  ஓட்டம் ஓடினாள்.  கண்ணன்   இருந்த இடம்,  அவன்  இன்னும்   அங்கேயே இருப்பான்  என்று  காலமெல்லாம்  யமுனையின்  சுடுமணலில்,  கொட்டும் மழையில் நின்றாள் . வனங்களில்  அலைந்து தேடினாள். பறவைகளையும்  பசு   கன்றுகளையும் நீங்கள்  கண்ணனைக் கண்டீர்களா  என்று  வினவினாள் .

நம்மால் முடியுமா.   முயற்சிக்கிறோமா. முயற்சி திருவினை ஆக்குமே,  கண்ணன்  தோன்றுவானே!

அவனை  நினைக்கும்போது  ஒரு  புத்துணர்ச்சி என்னுள்  உணர்கிறேனே. ராதாவை  நெஞ்சில்  நிரப்பிக்கொண்டு இருக்கிறேனே.

''ராதா, உனக்கு என்ன  வேண்டும்  சொல்''  என்றான்  கிருஷ்ணன்.
''நீ. உன்  நினைவு கண்ணா. அது போதும் '   என்றாள்  ராதா.

அவள்  பாடினாள்.  பாடிக்கொண்டே  இருந்தாள்.  கிருஷ்ணா  உனக்கு  நினைவிருக்கிறதா?  நீ  அந்த  காளிங்கன் பாம்பின்  மீது நர்த்தனம்  ஆடினாயே,  நீ  ஆடிய  ஆட்டத்தில்  உன் காலில்  நீ  அணிந்திருந்த  தண்டை  கொலுசு  ஜிங்  ஜிங் என்று  ஒலித்ததே   அதை இன்னொரு முறை  கேட்கவேண்டுமே?

அடுத்த கணமே    ராதையின் காதில்  அந்த ''சலங் சலங்''  ஒலி மீண்டும்  கணீர் என்று கேட்டது.  நாம்  இப்போது  எதற்கெடுத்தாலும்  '' தேங்க்ஸ்''  என்கிறோம். நமது தேங்க்ஸ்  குட் மார்னிங், ஈவினிங் நைட் இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை.  உண்மையில் அப்படி  வாழ்த்த மனதில் எண்ணம் உண்டா...எந்த அர்த்தம் தெரிவிக்க அதை உபயோகிக்கிறோம்?. யோசித்து பாருங்கள்.   ராதையின் தேங்க்ஸ்  அவள்   பேசாமல் உகுத்த ஆனந்தக்  கண்ணீர்.  தனை  மறந்த  நிலை யில் கண்ணனை அனுபவித்தாள்.. .

ராதாவை  உணர  அவளுக்கிருந்த கிருஷ்ண ''பசியும் தாகமும்''  நமக்குள் இருக்க வேண்டும்.  அவள்  பக்தியும்  பிரேமையும்  எவ்வாளவு ஆழம் என்பதை  நாமும்  மூழ்கினால்  தான்  புரியும். '

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...