Friday, October 19, 2018

PESUM DEIVAM


ஒரு உண்மை. எழுத்துக்கு வயதில்லை. எழுதுபவன் கிழவனாகலாம். எழுத முடியாமல் போகலாம். ரெண்டு வருஷம் முன்பு நான் எழுதியது இன்று என் கண்ணில் பட்டது. எத்தனையோ ஆயிரம் கட்டுரைகள் எழுதியாகி விட்டது.
03.11.2016 அன்று எழுதியது. அட ரெண்டு வருஷம் ஓடிவிட்டதே!

''என்னை தப்பு கணக்கு போட்டுட்டியே''
J.K. SIVAN

''ரெண்டு நாளைக்கு முன்பு ஒரு அன்பர் என்னைத் தேடி வந்தார். ''பேசும் தெய்வம்'' என்று நான் தொகுத்த மஹா பெரியவா புத்தகம் கேட்டார். கொடுத்தேன். அவர் எனக்கு அப்போது ஒரு அழகிய பெரியவா திருவடி அதோடு சேர்த்த அவர் அழகிய சிறு திருவுருவம் அளித்தார். அதன் புகைப்படம் இத்துடன் இணைத்திருக்கிறேன்.

அன்று இரவு ஸ்ரீ ரமணி அண்ணா எப்போதோ சக்தி விகடனில் ஒரு சம்பவத்தை வர்ணித்திருந்ததை ஆங்கிலத்தில் படித்தேன். ரொம்பவே என்னை ஈர்த்தது. எனவே அந்த அம்ருத அனுபவத்தை உங்களுடன் சேர்ந்து ருசிக்க அதன் சாராம்சத்தை எனக்கு தெரிந்த தமிழில் கொடுக்கிறேன். அண்ணாவின் தமிழ் கிடைக்கவில்லை.

சித்திரை மாதம் என்று சொல்லும்போதே உடல் வியர்க்கும். உஷ்ணம் தஹிக்குமே தமிழ் புது வருஷம் அன்று. காலை வெயிலே சுரீர் என்று இருந்தாலும் அதைக் கொஞ்சமும் லக்ஷ்யம் பண்ணாமல் காஞ்சி மடத்தில் பெருங்கூட்டம். பெரியவா என்ற குளிர்ந்த மாமலையின் அருகே வெயில் தெரியவா போகிறது?. பாம்பு போல் நெளிந்து வளைந்து வரிசையாக பக்தர்களுக்கு நடுவே ஒரு பதினாறு வயது பையன். அவன் வரிசையில் நத்தையாக நகர்ந்து பெரியவா எதிரில் செல்லும்போது காலை பத்து மணியாகிவிட்டது. பசி. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினான் பையன்.

'எழுந்திரு'' . எழுந்தான். இரு கையும் சிரத்தின் மேல். கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.
''கிட்டே வா'' - பெரியவா கையால் ஜாடை காட்ட அருகே கை கட்டி நின்றான்.
''உன் பேர் என்ன. எங்கிருந்து வரே ?''
''என் பேர் பாலகிருஷ்ண ஜோஷி. குஜராத்தி பிராமணா. மெட்ராஸ்லே தான் இருக்கோம்.'' வாயை கையால் பொத்தி பதில்.
''எந்த இடத்திலே?''
''ஹனுமந்தராயன் கோயில் கிட்டே சுவாமி''
''என்ன படிச்சிருக்கே?''
''எட்டாவது பெரியவா''
''ஓஹோ. இன்னிக்கு புது வருஷம் எங்கிறதாலே காஞ்சிபுர கோவில் தரிசனம் எல்லாம் பண்ண வந்தியோ?''
"இல்லை. பெரியவா தரிசனத்துக்காக''
''அபச்சாரம், அபச்சாரம். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எங்கேயாவது போனா, முதல்லே சிவன், விஷ்ணு கோவில் தான் போகணும். நான் அப்பிடித்தான் எங்கே போனாலும் பண்றேன். அப்புறம் தான் என் வேலை. புரியறதா? '' சிரித்துக்கொண்டே தெய்வம் சொல்லியது.
''புரியறது பெரியவா''
"சரி. பிரசாதம் வாங்கிண்டு கோவில்களுக்கு போ. அப்புறம் மெட்ராஸுக்கு பஸ் ஏறணும். என்ன?'' அழுத்தமாக சொன்னார் மகா பெரியவர்.
''பெரியவா சொன்னமாதிரியே எல்லா கோவிலும் போய்ட்டு மடத்துக்கு வந்து பெரியவா அனுக்கிரஹம் வாங்கிக்கிறேன்'' தைரியமாக சொன்னான் பாலகிருஷ்ண ஜோஷி.
''ஓஹோ கோவில்கள் தரிசனத்துக்கு அப்புறம் மடத்தில் சாப்பாடா? அப்பறம் பஸ். சரி சரி. பிரசாதம் தரேன் ''
'பாலகிருஷ்ண ஜோஷி ஏதோ சொல்ல தயங்கினான். கண்களில் நீர்.
''என்ன விஷயம் சொல்லு''
''இங்கேயே கொஞ்சகாலம் தங்க........''
''இங்கன்னா என்ன அர்த்தம். புரியலே''
''பெரியவாளோடு மடத்தில்'' பவ்யமாக சொன்னான்.
''என்ன இந்த மடத்திலேயா? இது சன்யாசிகளுக்குடா, உன்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு இங்கே என்ன வேலை. போய் ஸ்வாமிதர்சனம் எல்லாம் முடிச்சுண்டு ஊர் போய்ச் சேரு''
ஜோஷி நகரவில்லை. மீண்டும் நமஸ்கரித்தான்.
''பெரியவா அப்படி சொல்லக்கூடாது. என்னுடைய ஆசை இந்த மடத்தில் உங்களுக்கு சேவகம் பண்ணிண்டு இருக்கணும்னு தான்''
பெரியவா அவனை புரிந்து கொண்டார். அவனது தீர்மானம், பவ்யம் அவருக்கு பிடித்தது.
''எனக்கு பணிவிடை பண்ண ஏற்கனவே நிறையபேர் இருக்கா. இன்னொருத்தன் நீ எதுக்கு? பேசாம மெட்ராஸ் போ''
ஜோஷி நகர்ந்தான். மடத்தை விட்டு போகவில்லை. சாப்பிட்டான். பெரியவா சிரம பரிகாரம் பண்ணும் அறைக்கு வாசலில் ஒரு மூலையில் அமர்ந்தான்.
சாயந்திரம் பெரியவா ஸ்னானம் முடித்து வெளியே வந்தார். ஜோஷியை பார்த்தார் ஒன்றும் பேசவில்லை. கைகட்டி நின்ற ஜோஷியை கடந்து சென்றார். நான்கு நாட்கள் வைராக்கியமாக ஜோஷி அவர் பார்வையில் பட்டுக்கொண்டு நின்றான்.
ஐந்தாம் நாள் அதிகாலை மஹாஸ்வாமி காமாக்ஷியம்மன் கோயில் புஷ்கரணியில் உஷஸ் கால ஸ்நானம் செய்ய கிளம்பியவர் குளத்திலிருந்து கரை ஏறும்போது ஜோஷி நின்றதைப் பார்த்தார்..
''என்னடா நீ இன்னும் மெட்ராஸ் போகலையா?''
''இல்லை பெரியவா. என் சங்கல்பம் முடியற வரை திரும்பலை ''
''அப்படி என்னடா சங்கல்பம்?'' -- தெரியாதது போல் கேட்டார் மகா பெரியவா.
''பெரியவா திருப்பாதங்களுக்கு பணிவிடை சிலகாலம் செய்யணும் '' தயங்கியவாறு சொன்னான் ஜோஷி.
''சாத்தியமில்லாத சங்கல்பத்தாலே என்ன பிரயோஜனம்?'' பெரியவா போய்
விட்டார். காமாக்ஷி தர்சனம் செய்து விட்டு ஜோஷியும் மடத்துக்கு திரும்பி வழக்கம்போல் பெரியவா அறைக்கு வெளியே தரையில் அமர்ந்தான். பெரியவா வெளியே பக்தர்களுக்கு தரிசனம் தர வந்தபோது அவன் மீது பார்வை பட்டது. அவன் வைராக்கியம் தெய்வத்துக்குப் பிடித்தது.
''இங்கே வா. உன்னோட அப்பா ஏதாவது ஆபிஸ்லே வேலையா இருக்காரா. வியாபாரமா?''
''வைர வியாபாரம், பெரியவா''
''ஓஹோ. உன் குணத்தை பார்த்தா நீயும் பெரிய வைர வியாபாரி ஆயிடுவே போல இருக்கு. அப்போ நாணயமானவன்னு பேர் எடுக்கணும் சரியா. இப்போ மடத்துலே சில பசங்க இருக்கா அவாளோடு சேர்ந்துண்டு எனக்கு நீயும் ஏதாவது பணிவிடை செய் போ ''

ஜோஷிக்கு பரம சந்தோஷம். அவன் எண்ணம் கை கூடிவிட்டதே. நாலைந்து பையன்கள் இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டான். ரெண்டு நாள் பெரியவாளுடன் தரிசனத்தில் இருந்தான். சொன்ன வேலையை செய்தான். அந்த ரெண்டுநாளும் அந்த பையன்களோடு படுக்கை. அதுவும் பெரியவா எங்கே தங்கினாளோ அந்த அறையில் ஒரு மூலையில். இதை ஒரு வரப்பிரசாதமாக கருதினான் ஜோஷி.

மூன்றாம் நாள் இரவு படுக்கும் முன்பு ''ஜோஷி '' பெரியவா கூப்பிட்டார்கள். நமஸ்காரம் பண்ணிவிட்டு கைகட்டி வாய் பொத்தி நின்றான் அவர் ஏதிரே.

''இதோபார் ஜோஷி, நீ என்ன பண்றே, நாள் முழுக்க அந்த பையன்களோடேவே நீயும் எனக்கு சிச்ருஷை பண்ணு. ஆனா ராத்திரியிலே இங்கே தூங்கக்கூடாது. ''
அதிர்ந்து போன ஜோஷி ''பெரியவா எனக்கு இப்படி ஒரு தண்டனை தரக்கூடாது. மத்த பசங்களோடே நானும் இங்கே இருக்கேனே''
''இதோ பாரடா, ஒரு காரணமா தான் சொல்றேன். சொல்றதைக் கேளு''
''சரி பெரியவா சொல்றபடி நடக்கிறேன்''
''அப்படி சொல்லு'' .
சிரித்துக்கொண்டே பெரியவா சொன்னார்: ''நேரா சமையல் கட்டுக்குள் போனாக்க அங்கே கோட்டை அடுப்புக்கு பக்கத்திலே ஒரு பென்ச் இருக்கு. அதிலே படுத்துண்டுட்டு விடிகாலம்பற எழுந்து உன் கடமையெல்லாம் முடிஞ்சு, குளிச்சு, அப்புறம் என் கிட்டே வா. என்ன புரியறதா?''

மற்ற பையன்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க ஜோஷி கண்ணைத் துடைத்துக் கொண்டே பெரியவா சொன்னபடி ஜோஷி செய்தான். போகும் வழியில் ஒரு பையனிடம் கேட்டான் :
''ஏண்டா பெரியவா உங்க யார்கிட்டேயாவது இப்படி சமையல்கட்டு அடுப்பு கிட்ட பெஞ்சுலே போய் படுன்னு சொல்லியிருக்காளா?''
''இல்லேயே அப்படி யார் கிட்டேயும் சொல்லலியே'' என்றான் அவன்.

வருத்தத்தோடு சென்றான் ஜோஷி. இரவு பத்து மணி. ஒன்றும் ஆகாரம் சாப்பிடவில்லை.அடுப்பருகே பெஞ்சில் படுத்தான். மனது வாடியது. சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க இரவெல்லாம் தூங்கவில்லை. பொழுது விடிந்தது. மடத்தில் அன்றாட நியதிகள் துவங்கியது. வேத பாராயணம் பஜனை ஒலித்தது.விடுவிடுவென்று எழுந்து, காலைக் கடன்கள் முடிந்து குளித்து காமாட்சி அம்மன் சந்நிதி சென்றான். மடம் செல்ல மனம் இடம் கொடுக்க
வில்லை.

நடுப்பகல் சமயம் மடத்துக்கு வந்தான். சாப்பிட்டான். காமாட்சி கோவில் சென்றுவிட்டான். இரவு அடுப்படி படுக்கை. ரெண்டு நாள் இப்படி மஹா பெரியவாளை பார்க்கவில்லை.

மூன்றாம் நாள் காலை. பெரியவா மற்ற பையன்களை கேட்டார்.

''எங்கேடா அந்த பயல் ஜோஷி. ரெண்டு நாளா கண்ல படலையே . எங்கே போனான். என்கிட்டே சொல்லாம மெட்ராஸ் போயிட்டானோ?''
''இல்லை பெரியவா. இங்கே தான் மடத்தில் இருக்கான்''
''ரெண்டு நாளா காணோமே''
''தெரியலே பெரியவா''
இன்னொருத்தனையும் கேட்க அவனுக்கும் காரணம் தெரியவில்லை.
' சரி பார்த்தா அவனை இங்கே அழைச்சுண்டு வா'
கை கட்டி வாய் புதைத்து தலை குனிந்து அவர் எதிரில் ஜோஷி நின்றான்.
''என்னடா குழந்தே, உடம்பு சரியில்லையா. ரெண்டு நாளா உன்னை இங்கே காணோமே''
பதில் இல்லை.
''என்னடா சும்மா இருக்கே. என்ன துக்கம். ஒருவேளை என்மேலே கோவமோ?''
''அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ பெரியவா'' . மனசு உடைஞ்சுபோய் வருத்தம் வாய் குழற மெதுவாக சொன்னான்.

''அப்படி என்னடா வருத்தம். நான் தெரிஞ்சுக்க கூடாதா?'' -- எல்லோரும் ஆச்சர்யத்தோடு நடப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கீழே தடாலென்று விழுந்து வணங்கிய ஜோஷி

''ஒண்ணுமில்ல பெரியவா. முதல் ரெண்டு நாள் மட்டும் மத்த பேரோடு உங்க அறையிலே படுக்க விட்டேள். அப்புறம் அடுப்படியில் எங்கேயோ போய் படுன்னு சொல்லிட்டேள். அவாள் எல்லாம் ப்ராமண தமிழ்க்காரா நான் குஜராத்தி பிராமணன்ங்கிறதாலேயோ'' ன்னு மனசிலே உறுத்தித்து.'' அழுது கொண்டே பதிலளித்தான் ஜோஷி.

ஒரு நிமிஷ அமைதியில் அவனை பார்த்தார் பெரியவா. மற்றவர்களை அனுப்பி
விட்டு அவனிடம்

''ஏண்டா பாலக்ரிஷ்ணா , நான் உன்னை அடுப்படிலே படுக்கச் சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தமா? நான் அந்த எண்ணத்திலே சொல்லலை. நீ சின்னப் பயல். தப்பா புரிஞ்சுண்டுட்டே. உக்காரு இங்கே''

தரையில் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்தான் .
''இங்கே பாரு'' மஹா பெரியவா தொடை வரை தனது காவி வஸ்திரத்தை உயர்த்தி காட்டினார். சிவப்பு சிவப்பாக நிறைய கொசுக்கடி அடையாளங்கள் அந்த தெய்வத்தின் ரோஜா நிற கால்களில்.

''இங்கே ராத்திரி எவ்வளவு கொசுக்கடி பார்த்தியா. நான் சந்நியாசி. பொறுத்
துப்பேன். நீ குழந்தே. ரெண்டு நாளா நீ கொசுக்கடியிலே துடிக்கிறதை பார்த்துட்டு தான் ரோஜா நிறத்தில் இருக்கிற சின்ன குழந்தை கொசு வராத ஒரே இடம் சூடான அடுப்படி. அங்கே போய் படு ராத்திரிலே ன்னு சொன்னேன்.நீ என்னமோ பத்தி தப்பா கணக்கு போட்டுட்டே''. மஹா பெரியவா சிரித்தார். ஜோஷி அடக்கமுடியாத அழுகையால் ஓவென்று கதறினான்.

''பெரியவா, என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. உங்க கருணையை புரிஞ்சிக்காத முட்டாள் ஏதோ உளறிட்டேன்''

பெரியவாளின் அபய ஹஸ்தம் உயர்ந்தது.

''நீ பெரிய வைர வியாபாரியாயிடுவே. நாணயமா, ஞாய விலைக்கு வியாபாரம் பண்ணு''. பெரியவா ஆசி கிடைத்தது ஜோஷிக்கு.



சில வருஷங்கள் ஓடியது. பாலகிருஷ்ண ஜோஷி பெரிய தர்ம கைங்கர்யம் செய்யும் பிரபல வைர வியாபாரி பெரியவா பக்தர் என்று எல்லோரும் போற்றினர். பெரியவா சமாதி அடையும் வரை மடத்துக்கு வந்து தரிசனம் செய்தவர் சில வருஷங்களில் பெரியவா திருவடிகளை சேர்ந்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...