Sunday, October 7, 2018

KUNTHI PRAYERS




குந்தியின் பிரார்த்தனை 5 J.K. SIVAN

குந்தி விசித்ரமானவள். ஒரு பக்கம் கிருஷ்ணனை சொந்த மகனாக நேசித்தாள் . அதே நேரம் அவனை ஈடிணையற்ற சக்திமானாக, பகவானாக, ஆபத் பாந்தவனாக வழிபட்டவள். கிருஷ்ணன் அவள் மூச்சில் கலந்தவனாக இருந்தான். கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறி துவாரகை திரும்பும் சமயம் எல்லோரிடமும் விடைபெறும்போது குந்தியிடமும் சென்று வணங்கி ''நான் செல்கிறேன் விடைகொடு அத்தை'' என்று சொல்லும்போது அவள் பிரார்த்திப்பதை வியாசர் அற்புதமாக ஸ்லோகங்களாக இயற்றியிருக்கிறார். அவற்றில் இதுவரை சிலவற்றை ரசித்தோம். மேற்கொண்டு அவை இனி தொடர்கின்றன

जन्मैश्वर्यश्रितश्रीभिरेधमानमद: पुमान् ।
नैवार्हत्यभिधातुं वै त्वामकिञ्चनगोचरम् ॥९॥ 8.26

9.Janmai aiswarya srutha sri bhiredhamana madha pumaan,
Naivaar hathyabhidhaathum vai thwama kinchana gocharam.

செல்வம் மட்டும் எதிர்பார்த்ததற்கு மேல் சேர்ந்து விட்டாலோ, அல்லது, எதிர்பாராமல் ஒருவனிடம் திடீரென்று சேர்ந்து விட்டாலோ, ஆஹா, அடுத்த கணம் அவன் குணம் மாறிவிடும். அவன் கர்வம் தலைக்கேறி விடும். கடவுளா யார் அது?, என்னைவிடவா அவன் புத்திசாலி, சக்திமான்? என்று அகம்பாவம் இவனுக்கு மட்டும் அல்ல இவனுக்கு முன்பே பல ராவணர்களுக்கு, கம்சர்களுக்கு, துரியோதனர்களுக்கு இருந்தது தானே. செல்வம் மட்டும் அல்ல, பக்தியற்ற கல்விக்கூட ஒருவனை மண்டை பெருக்கச் செய்துவிடும். நாம் தான் பார்க்கிறோமே படிக்கிறோமே தினமும், ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும், பேசுவதை.

கிருஷ்ணா உன் பேரைச் சொல்லும் பாக்யம் இழந்தவர்கள் அவர்கள். எதுவுமே தனதில்லை, தனக்கில்லை என்று உணர்ந்தவனிடம் தான் நீ இருப்பவன்.

नमो sकिञ्चनवित्ताय निवृत्तगुणवृत्तये ।
आत्मारामाय शान्ताय कैवल्यपतये नम: ॥१०॥ 8.27

10.Namo akinchana vithaya , nivrutha guna vruthaye,
Aathmaramaya santhaya kaivalya pathaye nama.

நமஸ்காரம் கிருஷ்ணா, ஒன்றோ ரெண்டோ சொன்னால் போதாது. வாழ்நாள் பூரா, அடுத்து வரும் ஜென்மங்களில் எல்லாம் விடாமல் சொல்லவேண்டும். பரம தாரித்ரியத்தில் இருந்த எங்களை வாழவைத்த தெய்வமே. எங்கள் மீது அன்பு கொண்ட பக்த வத்சலா, பேரானந்த ஸ்வருபனே, சாந்த மூர்த்தி, ஆபத் பாந்தவா, உன்னை தாள் தொட்டு வணங்குகிறேன் அப்பா. ஏழை பங்காளா. இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன், எதிலும் விருப்பு வெறுப்பற்றவனே, பரமானந்த மூர்த்தி உன்னை நமஸ்கரிக்கிறேன்.

मन्ये त्वां कालमीशानमनादिनिधनं विभुम् ।
समं चरन्तं सर्वत्र भूतानां यन्मिथ: कलि: ॥११॥11

11 Manye thwaam kaala meesana manadhi nidhanam vibhum,
Samam charantham sarvathra bhoothanaam yanmidha kali.

அழகிய நீல வண்ணா, நீ ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதி. காலகாலன். சர்வ வியாபி. ஓயாமல் ஒழியாமல் உதவும் ஏழை பங்காளன். நீ காலத்தால் மாறாத ஸாஸ்வதன். புருஷோத்தமன். ஆதி அந்தமில்லாதவன். சர்வவியாபி. காருண்ய மூர்த்தி. அஞ்சேல் என அடியோர்க்கு அடைக்கலம் கொடுப்பவன். எங்கும் எதிலும் நிறைந்தவன். எங்களைப்போன்று உணர்ச்சிகளால் உந்தப்படாதவன் '' குந்தி வாழ்த்திக்கொண்டே போகிறாள் ......

கிருஷ்ணன் குந்தியைப் பார்த்து ரசித்துக் கொண்டே நிற்கிறான். அவளோ கடல்மடை போன்று உணர்ச்சி வெள்ளத்தில் கண்ணன் செய்த உதவிகளை வரிசைப்படுத்தி சொல்லி பிரிய மனமில்லாமல் அரற்றுகிறாள். இனி ஹஸ்தினாபுரத்திற்கு கண்ணன் வரப்போவதில்லை. குந்தியும் இனி கண்ணனை காணப்போவதில்லை என்ற எண்ணம் அவளை வாட்டுகிறது.


न वदे कश्चद्भगवंश्चिकीर्षितं तवेहमानस्य नृणां विडम्बनम् ।
न यस्य कश्चिद्दयितो sस्ति कहिर्चिद् द्वष्यश्च यस्मिन्विषमा मतिर्नृणाम् ॥१२॥ 8.29

Na vadhe kaschidbhagawasi keershitham thweha manasya nrunaam vidambanam,
Na yasya kaschid dayitho asthi karhichid dweshyascha yasmin vishamaamathirnrunaam.

நீ சாதாரணனாக தோன்றினாலும், அறிவுக்கெட்டாதவன். வேண்டியது வேண்டாதது இல்லாதவன். ஆனால் என்போல் வேண்டுபவர் கட்கெல்லாம் அருள்பவன். காண்போர்க்கு கண்ணிறைந்து காணும் கண்ணன் .

''கிருஷ்ணா, நீ செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும், சொல்லும் வார்த்தைக்கும் எத்தனையோ அர்த்தங்கள், காரணங்கள் இருக்கிறது. நீ எவருக்கும் உடந்தை அல்ல, விரோதியும் இல்லை. சர்வ ஜீவன்களிடமும் அன்பு கொண்ட ரக்ஷகன் நீ. எனக்கு நன்றாக உன்னை தெரியும். பார்ப்பவர்களுக்கு நீ தவறு செய்பவனாகவோ, தவறுக்கு உடந்தையாக இருப்பது போலோ, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பக்ஷபாதம் உள்ளவன் போலவோ தெரிவாய். அவர்கள் உன்னை அறியாதவர்கள் . அஞ்ஞானிகள். நீ எதுவும் எவரிடமும் தேவையற்றவன். பரம்பொருள். என் மனம் நீ அறிவாய், உன்மனம் நான் அறிவேன்.

जन्म कर्म च विश्वात्मन्नकस्याकर्तुरात्मन: ।
तिर्यङ्नृषिषु याद: स तदत्यन्तविडम्बनम् ॥१३॥ 8.30

janma karma ca viśvātmann
ajasyākartur ātmanaḥ
tiryaṅ-nṝṣiṣu yādaḥsu
tad atyanta-viḍambanam

கிருஷ்ணா, பிரபஞ்சத்தின் காரணனே. பரம ஆத்மாவே, எனக்கு தலை சுற்றுகிறது. நீ ஒரு புதிர். புரிபடாதவன். ஏன் தெரியுமா? உனக்கு என்று எந்த காரியமும் இல்லை. ஆனால் எல்லா காரியத்தையும் நீ செய்பவனாக இருக்கிறாய். ஜனன மரணம் இல்லாதவன் நீ என்றாலும் நீ எல்லாவற்றிலும் தோன்றி மறைகிறாய். மரமாகவும், மன்னிக்கவும், மாந்தராகவும், மக்களாகவும் , மஹரிஷிகளாகவும், மலர்களாகவும் உன்னை காண்கிறேனே.''

குந்தி கண்ணனை வார்த்தைகளால் அபிஷேகம் செய்கிறாள். அர்ச்சனை புரிகிறாள், கேட்போம் இன்னும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...