Tuesday, October 16, 2018

LIFE LESSON



தவறும்  திருத்தமும் -   J.K. SIVAN

ஒரு விஷயம் தெரியுமா.  நாம் வாழ்வில் எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். அதால் என்ன நடக்கிறது?  ஒன்று நாம் அதிர்சமாக குமைந்து குலைந்து போகிறோம்.  நமது சிந்தனா சக்தியை சீர் குலைத்து  அதற்கு பதில் நிறைய பயம் சேர்த்துக்கொள்கிறோம்.    ஆனால்  துன்பம் வந்தால் கலங்காமல்  சிலருக்கு அதுவே  மேலே செல்ல படிக்கட்டு. இன்னும் என்ன வந்தாலும் சமாளிப்போம்  என்கிற தைர்யம் அவர்களை  வளர்க்கிறது.  ''தலைக்கு மேலே  வெள்ளம் போனால் சாண்  என்ன முழமென்ன?''   பாடுகிறான். அவன் தைரியவான்.  வெற்றிசாலி. நமக்கு  துன்பம் நேர்வதற்கு உண்மையான காரணம் நம்மை நல்வழிப் படுத்துவதற்காக தான்.  செய்த பழைய தப்பு இனி வேண்டாம். போனதெல்லாம் போகட்டும். நிறைய எதிர்காலம் காத்திருக்கிறதே. முன்னேறுவோம் என்று புரிந்துகொள்ள கடவுள் தந்த பரிசு. இது புரியாமல் நாம் செய்த தவறுகளுக்கு  கடவுளை திட்டுகிறவர்கள் எத்தனையோ பேர். 
பிரச்னைகள் துன்பங்கள் வருவதே நம்மை மாற்ற என்று சொன்னேனே. ஒரு புது வழி காண. மாறுவது கஷ்டம் தான் யார் இல்லை என்று சொன்னது. ஆனால் மாறினால் வழி உண்டு என்றால் மாற மனது ஒத்துழைக்க வேண்டும். 

நீ செய்தது தவறில்லையா? இனியுமா தொடர்ந்து அதை செய்து கொண்டே போவாய்? என்று கிருஷ்ணன் கேட்பது காதில் விழுவதில்லை. உன்னை நீ பரிசோதித்துக் கொள்ள  தான் இந்த பிரச்னைகள், துன்பங்கள் எல்லாமே.
ஒரு அருமையான உதாரணம்.  சின்னதாக ஒரு பேப்பர் பையில் டீத்தூள் போட்டு தருகிறார்கள். கொதிக்கும் வெந்நீரில் நூல் கட்டிய அதை மூழ்கடிக்கிறோம்.  அதிலுள்ள டீ  கொதிக்கும் வெந்நீரில் நமக்கு சுகமான  டீ  ஆகிறது.   நாம் அத்தனைபேரும்  அந்த தேயிலை பேப்பர் பைகள். நம்முள் இருப்பது நமது கஷ்டத்தில், துன்பத்தில் தான் வெளிப்படும். நாம்  யார்  எப்படிப்பட்டவர்கள்  என்று நாமும் அறிவோம். பிறரும் அறிவார்கள். துன்பம்  நம்முள் அமைதியை, பொறுமையை,  உண்டாக்கும். தன்னம்பிக்கையையும்,  பக்தியையும்   வளர்க்கும்.

துன்பங்கள் பிரச்னைகள் தான் நாம் செய்த தவறுகளின் பூதக்கண்ணாடி.     மறுபடியும் அதை செய்யாது தடுக்க உதவுபவை. ஒருதடவை சூடு பட்டவன் அடுத்தமுறை கொதிக்கும் பாத்திரத்தை  கிடுக்கி, துணி இன்றி தொட்டு கை  சுட்டுக் கொள்வானா?.

ஒருவன்  தனது முதலாளி ஒரு தவறான காரியத்தை, தப்பை, செய்யச்  சொல்லியபோது  அப்படி செய்ய மறுத்ததால்  வேலை போய்விட்டது. சில மாதங்கள் வேறு வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டான்.  முதலாளி வேறு ஒருவனை கொண்டு அந்த தவறான காரியத்தை செய்து முடித்து  சில நாட்களில்  காவல் துறை,  அரசு  அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, ரெண்டு பேருமே பல வருஷங்கள் ஜெயிலில் இருக்கிறார்கள்.  பிரச்னை எப்படி கொஞ்சம்  கஷ்டம் கொடுத்தாலும் தவறு செய்ய மறுத்தவனை காப்பாற்றியது என்று புரிகிறதா? இதோ அவனுக்கும் நல்ல வேலை ஒன்று கிடைத்து நிறையவே சம்பளம் வாங்குகிறான். அவனுக்கு வந்த பிரச்னை நல்லதை தானே செய்தது? 

தவறு செய்து பிரச்னைகளில் சிக்கி வெளிவந்தவன் திருந்துகிறான். இது கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டிய நேரம். அவன் இனி எந்த சிறிய தவறும் செய்யாத அளவு மனப் பக்குவம், குணம் அமைந்து விட்டது. நன்றி கிருஷ்ணா என்று சொல்கிறான்.

நமது ஒவ்வொருநாள் வாழ்விலும் நமது ஒவ்வொரு செயலிலும் நம்மோடு இருந்து  நம்மை நல்வழிப்படுத்துகிறான் கிருஷ்ணன். ''இப்படி செய்யாதே,  அப்படி செய் '' என்று அவனது மெல்லிய குரல் நம்முள் கேட்டாலும், நாம் செவிடர்களாக இருந்து தவறு செய்து கஷ்டப்பட்டாலும்  மீட்கிறான். ஒவ்வொரு தவறும், பிரச்னையும் கூடவே ஒரு நல்ல பாடம், படிப்பினை தருகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...