Monday, October 8, 2018

NALA CHARITHRAM



ஐந்தாம் வேதம்  J.K. SIVAN
நள சரித்திரம் 


             
 இவன் என் கணவனா?

''மகரிஷி  எனக்கு தாங்கமுடியவில்லை,  இந்த துக்ககரமான சம்பவத்தை கேட்கும்போதே.  பாவம் நள  சக்ரவர்த்தி எப்படித்தான்  தன் கண்ணெதிரே தனது மனைவி  தான் அழைத்துக்கொண்டு பங்கேற்க செய்த ருதுபர்ணணை அவள்  ஸ்வயம்வரத்தில் ஏற்பதை சகித்துக்கொண்டாரோ....!!


''ஜனமேஜயா, பொறுமையாக கேள். துன்பமும் இன்பமும் என்றும் நிலைத்து நிற்பதில்லை. மாறி மாறி வாழ்க்கையில் அமையும்.    விதர்ப ராஜ்யத்தில் நடந்ததைச் சொல்கிறேன் ''.

''ருதுபர்ணன்  கணக்கில்,  சமயோசிதத்தில்,   கெட்டிக்காரன், அதேபோல்  பகடைக்காய்  விளையாட்டிலும்  சரியான எண்ணை  முன் கூட்டியே கணக்கிட்டு  சொல்பவன்.  போகும் வழியில்  ஒரு மரத்தில்  எத்தனை காய்கள், எத்தனை இலைகள்  என்று  உன்னால் சொல்லமுடியுமா என்று தேரோட்டி  நளனை கேட்கிறான் 

என்னால் எண்ணாமல் எப்படி சொல்லமுடியும், அவ்வளவையும் எப்படி உடனே எண்ண யாரால்  முடியும்?

''என்னால் முடியும். நான் சொன்ன தொகை சரியா என்று உனக்கு வேண்டுமானால்  நீயே  எண்ணிப்பார்'' என்கிறான் ருதுபர்ணன். 

ஒரு கணத்தில் அந்த மரத்தை பார்த்து விட்டு எண்களை  சொல்கிறான்.   நளன்   தேரை நிறுத்திவிட்டு இறங்கி  அந்த மரத்தின் மீது ஏறி ஒன்று விடாமல்  காய்கள் இலைகளை எண்ணுகிறான்.  இலையும், காயும் எண்ணிப்பார்க்க  அது  ருதுபர்ணன்  சொன்ன  எண்ணிக்கையிலேயே இருந்தது.  ஆச்சர்யத்துடன்  

''அரசே, உங்களால்  எப்படி அவ்வளவு துல்லியமாக  சொல்ல முடிந்தது?
'' எனக்கு  அந்த  ரகசியம், பகடைக்காய் எண்  என்ன விழும் என்று  போடும் கணக்கில் தெரியும்'' என்கிறான்  ருதுபர்ணன். 

 அவனுக்கு  நளன்  தனது அச்வ சாஸ்த்ரத்தை கற்றுக்கொடுத்து  சூதாட்டத்தை சரியாக வெற்றிகரமாக  ஆட அதற்கு பதிலாக  கற்றுக்கொள்கிறான். 

நளன்  சூதாட்டத்தை  வெற்றியாக ஆட கற்றுக்கொண்டபோது  கலி அவன் உடலை விட்டு வெளியேறினான்.

''நளா , என்னை மன்னித்துவிடு.  தமயந்தி  இட்ட சாபத்தில், கார்கோடகன் உன்னுள்  வைத்த விஷச் சூட்டில்,  எரிச்சலில், நான்  இதுவரை பட்ட பாடு போதும்.  இனி உன்னை நெருங்கமாட்டேன்.  நீ  நன்றாக  பழையபடி பேரும்  புகழும் பெற்று வாழ்வாய்'' என்றான். கலி  நீங்கி விட்டான்  என்றாலும் நளன்  இன்னும் தனது சுய உருவை எடுக்கவில்லை. 

தேர் விதர்பா ராஜ்யம் வந்துவிட்டது. 
விதர்ப ராஜாவின் அரண்மனை வாசலில் நின்றது. மேலே உப்பரிகையில் தமயந்தி ஆவலாக காத்திருந்தாள். பார்த்தாள். எப்படியும் நளன் வருவான் என்று தெரியும். ருதுபர்ணன் தேரிலிருந்து இறங்கினான். கார்கோடகனால்  உருமாறியிருந்த தேரோட்டி நளனின் பெயர் இப்போது வாஹு கன்.  தேரை நிறுத்தி குதிரைகளை ஒரு ஓரமாக கட் டிக்கொண்டிருந்தான். அவனைத் தான் யாரும் அடையாளம் காண முடியாதே. கார்க் கோடகனால் உரு மாறி விட்டானே. நளனைக் காணாது மனம் வெதும்பினாள் தமயந்தி.  அவள் போட்ட  திட்டம்  வீணாகிவிட்டதா? . ஆனால்  இவ்வளவு வேகமாக  தேரை நளனைத்தவிர வேறு யாரும் ஓட்டமுடியாதே?  தேரோட்டியைப் பார்த்தால் நளன்  போல் இல்லையே?

வாசலில் வந்து பீமராஜன் அயோத்ய  மன்னன் ருதுபர்ணணை வரவேற்றான். உண்மையிலேயே பீமராஜனுக்கு தனது மகள் தமயந்தி  அன்று அவன் வீட்டில் ஸ்வயம்வரம் என்ற செய்தி அனுப்பியது தெரியாது. ஒரு விசேஷமும் இல்லையே? . எதற்கு அயோத்யா ராஜா அழைப்பு இல்லாமல் வந்திருக்கிறான் என்று யோசித்தான். ருது பர்ணனும் நாலாபக்கமும் பார்த்தான். வேறு யாருமே காணோமே, இங்கேயா ஸ்வயம்வரம்? ஏன் ஒரு ராஜாவும் வரவில்லை? எங்கே தவறு நடந்திருக்கிறது?

போதாதற்கு பீமராஜன் வேறு ''வரவேண்டும் வரவேண்டும் மன்னா, தங்கள் வரவு நல்வரவாகுக. எங்கே என்னை மதித்து கௌரவிக்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று வேறு கேட்டுவிட்டான்?
மென்று விழுங்கினான் ருதுபர்ணன். வேக வேகமாக ரதத்தில் ஒரே நாளில் 100 யோசனை தூரம் ஸ்வயம்வரத்துக்கு ஓடிவந்தவன் அல்லவா?

 ''பார்த்து வெகு காலம் ஆயிற்றே என்று தான் இந்த பக்கம் வரும்போது உங்களையும் காண வந்தேன் '' என்று ருதுபர்ணன் சமாளித்தான்.  இரு அரசர்களும் உள்ளே சென்று  வேறு ஏதோ பேசிக் கொண்டி
ருந்தார்கள்.

தமயந்தியோ எங்கே நளனைக் காணோமே என்று பரிதவித்தாள்.

தாதி கேசினியை அழைத்து அதோ அந்த தேரோட்டியிடம் சென்று அவனைப் பற்றிய விவரங்களை அறிந்து வா என்று அனுப்பினாள்.

தாதியும் வாஹுகனாக அமர்ந்திருந்த நளனிடம் ''நீங்கள் என்ன காரணமாக வந்துள்ளீர்கள் என்று அரசி தமயந்தி அறிந்துவர சொன்னாள்'' என்றாள் .

''இங்கு இன்று தமயந்திக்கு இரண்டாவது ஸ்வயம்வரமாமே ''

''ஆமாம். அப்படித்தான் செய்தி அனுப்பியது. உங்கள் அருகில் நிற்பது யார்?''

''வர்ஷ்நேயன் , என்னைப்போல் அவனும் ஒரு தேரோட்டி. நளனிடம் வேலை பார்த்தவன்.''

''உங்களைப் பற்றி சொல்லுங்கள் ''

''நான் வாஹுகன். வேகமாக தேரோட்ட தெரிந்தவன், நன்றாக சமைப்பேன் என்பதால் எனக்கு ராஜாவின் அரண்மனையில் வேலை கிடைத்தது..

''அது சரி. நளன் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் ''

''என் நண்பன் வர்ஷ்நேயன் தமயந்தி சொற்படி குழந்தைகளை அழைத்துக்கொண்டு விதர்பா சென்றான். பிறகு நடந்தது எதுவும் என்ன சொல்வது. எங்கே, எப்படி இருக்கிறான் என்று நளனுக்கு மட்டுமே தெரியும். உரு மாறி இருக்கிறான். ''
"காதலியை கானகத்தில் காரிருளில் கைவிட்டு.... என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னீ ர்களாமே, அதை இன்னொரு தடவை சொல்ல வேண்டும் . என் ராணி கேட்கவேண்டுமாம்''

''நளன் கண்களில் நீர் தேங்கியது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...