Thursday, May 3, 2018

UTHTHAVA GITA



உத்தவ கீதா: -- J.K. SIVAN தத்தாத்ரேயரின் 24 குருமார்கள் இனிமேல் வருவது யது மகாராஜாவிடம் தத்தாத்ரேயர் தனது குருமார்கள் யார் யார் என்று விவரித்த சம்பாஷணை. 1 . என் முதல் குரு - பூமி. அகழ்வாரையும் இகழாது தாங்குவது. பொறுமையின் சின்னம். இன்னா செய்தாலும் நன்மை செய்தல், பொறுமை எல்லாவற்றையும் இது தான் கற்றுக்கொடுத்தது. ''குருவே, நீங்கள் சொன்னதற்குப்பிறகு தான் யான் யோசிக்கிறேன். ஆம் முதல் குரு எல்லோருக்குமே பூமாதேவி தான். '' 2. தண்ணீர் தான் உலகத்துக்கே ஆதாரசுருதி - உயிர் நிலைஅல்லவா.. நீரின்றி அமையாது உலகம் என்பது உனக்கு தெரியுமே. உயிர் கொடுப்பதுடன் பரிசுத்தப்படுத்துவதும் நீரே. தேங்கி நிற்கும் நீர் அல்ல. எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் நதியின் நீர் தான் பரிசுத்தமானது. எனக்கு ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்க சொல்லிக்கொடுத்தது நதி நீர் தான். தேங்கினால் அசுத்தம் சேர்கிறது. மனதில் எதையும் சேர விடக்கூடாது என்று இந்த ரெண்டாவது குரு நதி நீரிடம் கற்றுக்கொண்டேன். ''ஆஹா ஆச்சர்யம் மகரிஷி'' 3. நெருப்பு என்னுடைய மூன்றாவது குருவாக அமைந்தது. சத்தை, ஈரம், உளுத்தது, புதுசு, பழசு, பெரிசு சிறிசு எதை அதனிடம் போட்டாலும் அதை எரித்து ஒளியும் ஜ்வாலையும் தரும் நெருப்புதான் எதையும் சமமாக பாவித்து ஒளியை வீச எனக்கு கற்றுத்தந்தது. இது மட்டம் இது பரவாயில்லை, இது நல்லது என்று எல்லாம் பாகுபாடு அறியாத எனது மூன்றாவது குரு நெருப்பு. ''அடடா, இப்படி ஒரு விளக்கமா நெருப்புக்கு. உண்மையிலேயே நெருப்பு குருவே தான்'' அவதூதர் தத்தாத்ரேயருக்கு மற்றும் யார் யார் குருமார்கள் என்பதையும் அவர் வாய்மூலம் அறிவோம். அந்த அடர்ந்த வனம் மஹாராஜா யதுவுக்கு ஸ்வர்கபுரியாக தோன்றியது. கையைக் கட்டிக்கொண்டு தத்தாத்ரேயர் எதிரே அமர்ந்து அடுத்து அவரது நான்காவது குரு யார் என்று அறிய ஆவலோடு இருந்தான். நம்மைப் போல. 4 ''அப்பனே, இதைக்கேள். வேடிக்கையாக இருக்கும் உனக்கு. எனது அடுத்த குரு காற்று. எதன் மீது பட்டாலும் , எதோடு, எவரோடு தொடர்பு கொண்டாலும், அதனால். அவர்களால் பாதிக்கப்படாமல், அவர்கள் உற்சாகத்தையே, புத்துணர்ச்சியே பெற உதவ காற்றாகிய அந்த 4ம் குருவிடம் தான் கற்றுக்கொண்டேன். முள்ளும், மலரும், நல்லவரும், கெட்டவரும் எல்லாருமே சமம் என்று உணர உதவியது அந்த குருவே. ''அபாரம் மகரிஷி'' 5. அடுத்தது என்னுடைய ஐந்தாவது குரு யார் என்று கேட்கப்போகிறாய்? நீ கேட்கும் முன்பாகவே நான் சொல்கிறேன். கேள். பஞ்ச பூதம் உனக்கு தான் தெரியுமே. நீர், நிலம், காற்று, தீ, ஆகாசம். இதில் ஆகாசம் எனது 5வது குரு ஆகும். எரிக்கும் சூரியனோ, குளிர்ந்த சந்திரனோ, நக்ஷத்திரங்களோ எல்லாமே தன்னுள் அடக்கம் கொண்டது பரந்த ஆகாசம். இன்னும் எதுவந்தாலும் எவ்வளவு தான் வந்தாலும், அதற்கும் தன்னிடம் இடம் உண்டு என்று அமைதியாக எந்த சந்தர்ப்பத்திலும் தன்னிலை இழக்காத எதையும் வித்தியாசமின்றி பரந்த நோக்குடன் ஏற்றுக்கொள்ளும் தன்மையை ஆகாசம் கற்றுக்கொடுத்தது. ''சுவாமி, இப்படி கற்றுக்கொடுக்கும் குரு கிடைப்பது துர்லபம். வெகு ஆச்சர்யம் சுவாமி.'' 6. ''என்ன ஆச்சர்யம் இதில்?. எனது அடுத்த குருநாதன் பற்றி தெரிந்து கொண்டால் சந்தோஷப்படுவாய். என் 6வது குரு ச ந்திரன். பதினைந்து நாள் வளர்ந்தாலும் தேய்ந்தாலும், தனது மொத்த உருவில் குறைவில்லாமல் ஒரே நிலையில் உள்ள சந்திரன். பதினைந்து நாள் வளர்பிறையில் வளர்கிறான். பிறகு பதினைந்து நாள் தேகிறான். இதே மறுபடியும் தொடர்கிறது. அலுப்பில்லாமல் அமைதியாக இதை செயகிறானே. எனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் குறைபட்டாலும் மீண்டும் மீண்டும் நிறைவு பெற ஒரே நிலையில் இருக்க கற்றுக்கொடுத்த ஆறாவது குரு இந்த சந்திரன் தான்.'' என்கிறார் தத்தாத்ரேயர். 7.யதுவுக்கு ஆர்வம் எல்லை கொள்ளவில்லை. ''சுவாமி உங்களுடைய ஏழாவது குரு யாரோ?'' ''வேறு யாராக இருக்க முடியும்? சூரியன் தான். அவனைப்பார். உதயம் முதல் அஸ்தமனம் வரை எதையும் எவரிடமும் எதிர்பாராமல் விடாமல் ஒரே சீராக பிறர்க்கென உழைப்பவன். சகல நீர் நிலையிலும் உள்ள நல்ல, சுத்த, அசுத்த, சாக்கடை, கங்கை, எந்த நீரையும் வித்தியாசமின்றி ஆவியாக்கி, மேகமாக்கி, குளிர்ந்த சுவையான நீராக முன்னிலும் அதிக பயனுள்ளதாக பாரபட்சமின்றி அனைத்துலகுக்கும் கிடைக்க வழி வகுப்பவன் சூரியன் தானே. அவன் தான் எல்லோரிடத்திலும் உள்ள, எதிலும் நல்லது கெட்டதை எடுத்துக்கொண்டு நல்லதையே அவர்களுக்கு பாரபட்சமின்றி அளிக்க எனக்கு கற்றுக்கொடுத்த ஏழாவது குரு. புரிகிறதா?'' 8. ''சுவாமி எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் ரொம்ப நேர்த்தி. . மேலும் உங்கள் குரு யார் யார் என்று அறிய ஆவலாக இருக்கிறதே.'' எனக்கு அடுத்து குருவாக வந்தது ஒரு புறாக்கூட்டம். ஒரு புறா, வேடன் வலையில் சிக்கிக்கொண்டதை கவனித்த மற்ற புறாக்கள் தாமும் அந்த வலையில் சிக்கி அதை மீட்க பார்த்தன. முடியாது என்று தெரிந்த போதும் அந்த ஒன்றிற்காக அனைத்துமே உயிரிழந்தன. ஒருவருக்காக மற்றவர் தானாக தன்னுயிரையும் தியாகம் செய்யவேண்டும் என்று நான் தெரிந்து கொள்ள வைத்த அவையே எனது 8வது குரு. 9. மேலும் கேள். எனது 9வது குரு ஒரு மலைப்பாம்பு. என்ன சுவாமி இது? ''ஓஹோ, மலைப்பாம்பு ஒரு குருவாகுமா என்று யோசிக்கிறாயா? சொல்கிறேன் கேள். மலைப்பாம்பு ஒரு இரையைப் பிடித்து உண்டபின் பல நாட்கள் இரை தேடாமல் ஒரு இடத்தில் முடங்கிக் கிடப்பதைப் பார்த்திருப்பாயே? நானும் ஒருநாள் அப்படி ஒரு காட்டில் போகும்போது ஒரு மலைப்பாம்பை பார்த்தேன். கவனித்தேன். சட்டென்று எனக்கு அப்போது தான் ஞானோதயம் ஆயிற்று. தனது செயகையால் இந்த மலைப்பாம்பு என்ன சொல்லித் தருகிறது? தேவைக்கு மேல் தேடாதே. விலகி இரு என்று. எவ்வளவு உன்னதமான உபதேசம் இது. ஆகவே தானப்பா, மலைப்பாம்பு என்னுடைய ஒன்பதாவது குரு . '' குருமஹாராஜ், கண்ணிருந்தும் குருடு என்கிறார்களே அது என் விஷயத்தில் நூற்றுக்கு ஆயிரம் மடங்கு சரியானது. கண்ணெதிரே தோன்றும் இத்தனை குருமார்களை நாம் வணங்கி இந்த அருள் உபதேசம் பெறவில்லையே என்று வருந்துகிறேன். மேலே சொல்லுங்கள் சுவாமி'' என்றான் யது . 10.மேற்கேயும் கிழக்கேயும் தெற்கேயும் இந்த பூமியை சுற்றி கடல் இருக்கிறதே அதுவும் அருமையான ஒரு பாடம் சொல்லிக்கொடுத்தது. எங்கெங்கோ இருந்தெல்லாம் நீர் அதில் கலந்தாலும் ஒரு நாளும் அவை கரை மீறியதில்லை. அனைத்தையும் சமமாகவே பாவித்து தன்னுள் அடக்கம் செய்து கொண்டது. அதனிடம் தான் நல்லது கெட்டது பிடித்தது பிடிக்காதது எல்லாவற்றையும் சமமாக பாவிக்க கற்றுக்கொண்டேன். எனவே தான் சமுத்திரத்தை எனது பத்தாவது குருவாக ஏற்றுக் கொண்டேன். அடுத்து ஸ்வாமிகள் தனது பதினோராவது குரு யாரென்று அறிவிக்க காத்திருந்தான். இதோ தத்தாத்ரேயர் சொல்கிறாரே. ++

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...