Thursday, May 24, 2018

KALABAIRAVASHTAKAM.



                     கால பைரவாஷ்டகம்.  J.K. SIVAN

சிவபெருமானை தரிசிக்கும் முன்பு  ஸ்ரீ பைரவரை தரிசிக்கவேண்டும். அவரை அதனால் தான் க்ஷேத்ர பாலர்  என்பது.  பைரவர் என்றாலே  நடுங்க வைப்பவர் என்று அர்த்தம் என்று பாட்டி சொல்வாள். சிவனிடமிருந்து பெற்ற சக்தியால் நம்மை  காப்பாற்றும்  தெய்வம் கால பைரவர்.  யமதர்மன் காலன்  என்ற பெயருடையவன். அவனையே சம்ஹாரம் செய்த மூர்த்தி காலசம்ஹார மூர்த்தியான சிவன், காலகாலன்.  கால பைரவர் சிவனின் அம்சம்.



காலம் வேகமாக நழுவக்கூடியது. அதை நல்ல முறையில் நாம் பயன்படுத்த உதவும் தெய்வம் காலபைரவர். 

 சென்னைக்கு அருகே சிங்கப்பெருமாள் கோவில் பக்கம் உள்ள தெருவின் வழியாக சுலபத்தில் திருவடி சூலம் செல்லலாம். அங்கே அற்புதமாக ஒரு பைரவர் கோயில் இயற்கை சூழலில் தங்க நிறமாக ஜொலிக்கிறது. அமைதி ததும்பும் அந்த பைரவர் கோவிலுக்கு ரெண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன்.

 உள்ளே சிவலிங்க உருவத்தில் பன்னிரண்டு படிகள் ராசிகளை காட்டுகிறது. எல்லா ராசிக்காரர்களுக்கும் பாதுகாப்பளிப்பவர் பைரவர் இல்லையா?  உச்சியில்  க்ஷேத்திரபால பைரவர் கம்பீரமாக நிற்கிறார் சூலம் தாங்கி.

படி இறங்கினால்  அஷ்ட பைரவர்கள்,  சப்த ரிஷிகள், சப்த கன்னிகைகள் தரிசனம் தருகிறார்கள்.  
இந்த கோவிலில் ஒரு அதிசயம். பக்தர்கள் ஆளுக்கு ஒரு பிடி ''வாய்க்கரிசி'' சமர்ப்பிக்கலாம்.  நமக்கு கடைசி ''காலம்'' எப்படி அமையுமோ, அப்போதைக்கு இப்போதே  ''வாய்க்கரிசி'' பைரவருக்கு சமர்ப்பித்தால், முடிவை உபாதை இல்லாமல் செய்பவர் பைரவர் அல்லவா?

கால பைரவர்  சர்ப்பங்கள், கையில் ரத்தம் சொட்டும்  பிரமனின்  ஐந்தாவது சிரம்,  நீலகண்டம்,  முக்கண்,   கபால மாலை, நாய் வாகனம் சகிதமாக தரிசனம் தருபவர்.  பாதகமான சந்தர்ப்பங்களை சாதகமாக்கி தருபவர் பைரவர்.

''பை ''  உலக ஈர்ப்புகள்.  ''ர '' என்றால் அழிப்பது, எதிர்மறைகளை நிர்மூலம் செய்வது, ''வ''  சாதகங்களை அளிப்பது  என்பார்கள்.  ஒவ்வொருநாளும் பலமுறை பைரவா  என்று வேண்டினாலே போதும்.  அந்த சப்தமே நம்மை காக்கும் சக்தி உடையது என்று நம்பிக்கை.  

கால பைரவர் மஹிமையை காலபைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்கள் மூலம் இனி சொல்கிறேன்.

பைரவரை அஷ்டமிஅன்று பிரசித்தமாக உபாசிப்பார்கள்.  மஹா கால பைரவாஷ்டமி என்று பௌர்ணமிக்கு அடுத்த எட்டாம் நாள் அஷ்டமி அன்று வழிபடுவது வழக்கம்.  திருவண்ணாமலையில்  அருணாச்சலேஸ்வரர் கோவில் பைரவர் சந்நிதி மிகவும் ஸ்ரேஷ்டமானது.   எல்லா சிவன் கோவில்களிலும் பைரவர் சந்நிதி உண்டு. காசியில் காலபைரவர் ப்ரசித்தமானவர். அவரே ருத்ரன்.

மிருகங்களில் நம்மை காப்பதற்கு நாம் வளர்ப்பது புலியோ சிங்கமோ, அல்ல  நாய். செல்ல பிராணி.  அதையே வாகனமாக கொண்டவர் நம்மை காக்கும் காலபைரவர்.

                                                                                                                             



காலபைரவாஷ்டகம்    1

காலம்   யாருக்காகவும்  காத்து  நிற்பதல்ல.   ஓடிக்கொண்டே  இருப்பதே காலம்.   அதன் ஒட்டத்தில்  நாமும்  கடத்திச் செல்லப்படுகிறோம்.  ஒவ்வொரு  நிமிஷத்தையும்  நாம்  அதனால்நமது  உலக வாழ்வை  பயனுள்ளதாக  மாற்றிக்கொள்ள காலபைரவரை  வணங்குகிறோம்.   கால பைரவர்  என்று  நாம்  சொல்லும்போதே  அவர் காலத்தை   கடக்க  நமக்கு  வழி காட்டுபவர்  என்ற  அர்த்தம்  கிடைக்கிறது.    காலத்தை  வெல்லும  சக்தி கொண்டவர்   கால பைரவர்.. கால பைரவர்  சிவ பெருமானே.  காலனுக்கே  காலனானவர் அல்லவா.

காலபைரவரை  க்ஷேத்திர  பாலகன்  என்று  சொல்வதுண்டு.  கோவில்களை மூடுவதற்கு  முன்பு  சாவிகளை அவர்  சந்நிதியில் வைத்து விட்டு  தான்  கதவு சாத்துவது வழக்கம்.  அதேபோல்  காலை அவர் சந்நிதியில்  வைத்து  சாவி வாங்கிக்கொண்டு தான் கதவுகளை  திறப்பார்கள்.

நமது முன்னோர்கள்  எங்கு  பயணம்  போகும் போதும்  இரவுப்  பிரயாணம்  செல்லும்போதும்  நிறைய  முந்திரிபருப்புகளை மாலையாக்கி காலை பைரவருக்கு  அணிவித்து வணங்குவார்கள்.  ஜோதி விளக்குகள்  ஏற்றுவார்கள். ''காலபைரவா,   எங்கள் பயணம்  நிர்பயமாக  நிறைவேற உன் அருள்  வேண்டும்''  என்று  வேண்டிக்கொள்வார்கள்.

காலபைரவரின்  வாகனம்  நாய்.  நாய்களை பராமரித்தும்   அவற்றுக்கு  உணவளித்தும்  நிறைய  காலபைரவரை  வணங்குகிறார்கள்.  கால பிரவ  அஷ்டமி  டிசம்பர்/ஜனவரி மாதம்  வரும் அன்று  காலபைரவர்  சந்நிதியில்  பூஜைகள்  நடைபெறும். முக்கால்வாசி  சிவன் கோவில்களில்  காலபைரவர்   சந்நிதிகள் இருக்கும்.  திருவண்ணாமலை  காலபைரவர்  சந்நிதி  மிக  பிரசித்தி  வாய்ந்தது. காசியில்  உள்ள  காலபைரவர்  சந்நிதி  முக்யத்வம்  கொண்டது.  ஆதிசங்கரரின்  கால  பைரவ அஷ்டகம்  காசி  பைரவர்  மேல்  பாடப்பட்டது.  அதை தான்  இன்று  இப்போது  படிக்கப்போகிறோம்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...