Monday, May 21, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J.K. SIVAN 

                                                   
                                              
                                                          34      பாஞ்சால பிரவேசம்

 ''ஜனமேஜயா,  இனி  நான்  உனக்கு  ஏக சக்ரபுரத்தில் பிறகு நடந்தவை என்ன  என்பதை  சொல்கிறேன் கேட்கிறாயா?

''வைசம்பாயனரே, வெகு ஆவலாக  காத்திருக்கிறேன்  சொல்லுங்கள் மகரிஷி''

''இரவு ஓடியது.  ஒருவருமே தூங்கவில்லை.  பிராமணன் குடும்பத்தில் ஆச்சரியமும் குதூகலமும், ஒருபுறம், நமக்காக பாவம் அந்த முதியவள் தனது ஒரு பிள்ளையை பலி கொடுக்கிறாளே  என்ற துக்கம், அவளிடம் நன்றி உணர்ச்சி ஒரு புறம்''

பாண்டவர்களுக்கோ இதில் நிச்சயம்  பீமனுக்கு  ஒரு ஆபத்தும்  வரப்போவதில்லை என்ற தைர்யம் ஒருபக்கம். பீமன் உயிரோடு உள்ளான் என்கிற தகவல் பரவி ஹஸ்தினாபுரம் அடையக்கூடாதே என்ற ஒரு சங்கடம். பீமனோ ஒன்றுமே நடக்காத மாதிரி நன்றாக தூங்கினான்.

பொழுது விடிந்தது.  ஒரு  மாடும் வண்டியும் தயாராக  உணவுகளோடு பிராமணன் வீட்டு வாயிலில் வந்து நின்றது. பீமன் அதில் ஏறி உட்கார்ந்தான். அனைவரும்  பயத்தோடும் கவலையோடும் அவனைப் பார்க்க அவன்  ஒரு கவலையுமின்றி வண்டியை காட்டுப்பாதை நோக்கி ஓட்டிச் சென்றான்.

அடர்ந்த காட்டின் மத்தியில் சாப்பாட்டு வண்டியை  நிறுத்தி   ''ஏ, பகாசூரா, இங்கே வாடா, உனக்காக நான் வந்து காத்திருக்கிறேன்''  என்று உரத்த குரல் கொடுத்தான்.

ஒரு மலை,  சிவந்த கண்கள், அகண்ட வாயுடன் அவனை நெருங்கியது. அச்சமூட்டும் உருவம். இதற்குள் பீமன் வண்டியி லிருந்த உணவில் பாதிக்கு மேல்  அவனே சாப்பிட்டு விட்டான். அமைதியாக மீதியையும் உண்டு கொண்டிருந்தான்.

 'ஹே  முட்டாளே, யார்  நீ?  என் இடத்துக்கு வந்து என் உணவை உண்பவன்?''

பீமன் லட்சியம் செய்யாமல்  கருமமே கண்ணாயிருந்தான்.  முக்கால் வாசி உணவு உள்ளே சென்றுவிட்டது. அசுரனைப் பார்க்க கூட விரும்பவில்லை  பீமன்.   இருகைகளையும் தூக்கியவாறு  அங்கேயே  பீமனைக் கொல்ல  ராக்ஷசன் ஓடி வந்தான். ஒரு  பேரிடி போன்ற சப்தத்துடன்  பீமன் முதுகில் ஒரு  அறை  அறைந்தான். பீமன் திரும்பிக் கூட பார்க்கவில்லை. உணவை சாப்பிட்டு முடிப்பதில் குறியாக இருந்தான்.

 எதிரி பலசாலி என்று உணர்ந்த பகாசுரன் ஒரு பெரிய  மரத்தை வேரோடு பிடுங்கினான். பீமன் மீது ஆக்ரோஷத்தோடு வீசினான்.  ஒரு மலையையே தரை மட்டமாக்கும் பலத்தில் அது பீமனை நெருங்கியது. இடது கையால் அதை தடுத்து நிறுத்திய பீமன் அதை அசுரன் மீதே திருப்பி எறிந்தான்.  கோபம் கொண்டு அசுரன்  பல மரங்களை வேரோடு பிடுங்கி அம்புகளென பீமன் மேல் எய்தான். எளிதில் பீமன் அவற்றை தடுத்து அவன்மீதே  திருப்பி வீசியதால் பல மரங்கள் காட்டில் அழிந்தன.

 அசுரன் பீமன் மீது பாய்ந்து தாக்கினான். பீமனும்  பதிலுக்கு தாக்கவே  வெகுநேரம் கழிந்தது. அசுரன் களைத்தான். பசி வேறு அவனுக்கு. பீமன் அவனைத் தூக்கி தரையில் அடித்து, அவன் முதுகில் கால் ஊன்றி அவன் கழுத்தை நெரித்தான். அவன் கால்களையும் தலையையும் வட்டமாக  வளைத்து ஓடித்தான். ராக்ஷசன் ரத்தம் கக்கினான்.  .பகாசுரன் சில கணங்களில் மாண்டான். அவன் மரண ஓலம் கேட்டு அவனைச் சேர்ந்த சில ராக்ஷசர்கள் ஓடி  வந்தார்கள்

''நில்லுங்கள்,  உங்களுக்கும் இதே கதி வேண்டுமா. உயிர் தப்புவதற்கு ஒரு வழி. ஒரே நிபந்தனை. இனி எந்த மனிதனையும் கொல்லக் கூடாது. சம்மதமா, சாகிறீர்களா?''

பகாசுரன் இறந்து கிடந்த பரிதாபத்தை பார்த்து பயந்து நடுங்கி  அவர்கள் ''இல்லை',  இனி எந்த மனிதனையும் தொடக் கூட மாட்டோம்'' என்று வாக்களித்தனர்.  ராக்ஷசர்கள் அந்த காட்டை விட்டே ஓடி விட்டனர்.

 ஏக சக்ரபுர நகர நுழை வாயிலில் ஒருவரும் கவனிக்காதபடி பகாசுரன் உடலை கிடத்திவிட்டு பீமன் வீடு திரும்பினான்.

 மறுநாள் காலை  ஊர் மக்கள்  ராக்ஷசனின் ரத்தம் தோய்ந்த உடலை கண்டு  நடுங்கினார்கள். ஆச்சர்யமும் அடைந்தார்கள். முதல் நாள்  உணவு கொண்டு சென்ற பிராமணன் வீட்டில் என்ன நடந்தது என்று அறிய ஆவலாக கூடினார்கள்.

 யாரோ ஒரு பிராமணர் எங்கிருந்தோ வந்தவர்  எங்கள் குடும்ப கஷ்டத்தை கேட்டு மந்திர சக்தி கொண்ட அவர் தானே உணவெடுத்து சென்றார். அவரது மந்திர சக்தியால் இது நிகழ்ந்திருக்கலாம்.

 பீமனும் அதற்குள் நடந்தை யுதிஷ்டிரனிடம் சொல்லியிருந்தான்.  ஊர்மக்கள்  சந்தோஷம் அடைந்து வீடு திரும்ப ஏக சக்ரபுரத்தில் ஒரு கவலையுமின்றி அனைவரும் களித்தனர்.

ஒரு சிலநாளில் ஒரு பிராமணர் பல இடங்களுக்கு  யாத்திரை சென்றவர், அங்கு வந்தார். அவருக்கு உபசாரம் செய்த பிராமணின் குடும்பம் யுதிஷ்டிரனுக்கும்  அவரை அறிமுகம் செய்து வைக்க, அவரிடமிருந்து நாட்டு நிலவரங்களை அறிந்தான்.

 பாஞ்சால தேசத்தில் துருபத ராஜாவுக்கு திருஷ்ட த்யும்னன் என்கிற மகனும் ஹோம அக்னியில் கிருஷ்ணா என்ற ஒரு பெண்ணும் பிறந்து வளர்ந்து வருவதாக பாண்டவர்கள் அறிந்தனர்.

யுதிஷ்டிரன்  அந்த பிராமணனிடம்   எப்படி   ஹோம யாக  அக்னியில்  திரிஷ்ட த்யும்னன் பிறந்தான்?  எப்படி  ஹோம  யாக குண்டத்தில்  கிருஷ்ணா  பிறந்தாள்?  எப்படி  துருபதனுக்கும்  துரோண ருக்கும் இருந்த பால்ய  நட்பு  உடைந்தது ?  என்று  வினவ   அந்த  பிராமணர்  அப்பாவியாக  பண்டவர்களிடம்  பாரத்வாஜ ரிஷி யில் ஆரம்பித்து  சகல விஷயங்களையும்  கூறுகிறார்.

கடைசியில்  எப்படி  துருபதன் துரோணனைக் கொல்ல  ஒரு மகன் வேண்டி  இரு சக்திவாய்ந்த ரிஷிகள்   யஜா, , உபயஜா வை அழைத்து  யாகம் செய்து அந்த தீயில் திருஷ்ட த்யும்னன் பிறந்ததை சொல்கிறார். அந்த யாகத்தில் பிறகு தோன்றிய  கிருஷ்ணா என்ற  கரு நிற  பெண்ணால் அநேக க்ஷத்திரியர்கள்  அழிவார்கள்.  இந்த பெண்ணால் கௌரவ வம்சம் அழியும் என்றும் அந்த ரிஷி துருபதனிடம் சொன்னார் ''   என்று யாத்ரிக பிராமணர் சொல்லி முடித்தார்.

பிராமணர் சொன்ன விஷயங்கள்  பாண்டவர்களை அமைதி இழக்கச் செய்தது.  ஹஸ்தினாபுரத்தில்   ஏக சக்ரபுர பகாசுரனின்  துர்மரண  செய்தி  பரவி விடும்.     அந்த  செய்தி அறிந்ததும்  சந்தேகத்தோடு  யாரென தங்களைத்  தேடி  ஏகசக்ரபுரத்துக்கு  ஹஸ்தினாபுர  ஒற்றர்கள்  வரலாம் என்றும்  யுதிஷ்டிரன் ஊகித்தான்.

''இந்த ஊரில் நாம் வெகுநாள் இருந்தாகி விட்டது. ஒரே இடத்தில் வெகு காலம்  வாழ்வதும் நல்லதல்ல.  இனி பாஞ்சால தேசமே செல்வோம் என்று குந்தி சொல்ல தாய் சொல்லைத் தட்டாத, பிராமணர்களாக  மாறுவேட த்தில் வாழ்ந்த, பாண்டவர்கள்  பாஞ்சாலம் செல்ல திட்டமிட்டனர்.   தாங்கள் தங்கியிருந்த பிராமண குடும்பத்திடம் விடை பெற்று  அவர்கள் புறப்படும் சமயம்  வியாசர்  அங்கே  வருகை தந்து அவர்களை சந்தித்தார்.

''வாருங்கள் தாத்தா'' என்று  வியாசரை  பாண்டவர்கள் கூப்பிய கைகளுடன்  வரவேற்றதும்  அவர்களைக் கண்டு மகிழ்ந்த வியாசர் அவர்களுக்கு  ஒரு சம்பவத்தை  விவரிக்கிறார்.

''ஒரு ரிஷி அழகிய மகளை பெற்றார். அவளது பூர்வ ஜன்ம பலனாக அவளுக்கு திருமணம் ஆகவில்லை, கணவன் வாய்க்க வில்லை. எனவே அவள் சிவ பெருமானை நோக்கி தவம் செய்து அவரிடம் ஒரு வரம் பெறுகிறாள்.

''உனக்கு வேண்டிய வரம் என்ன கேள்'' என்கிறார் சிவன்.

  ''எனக்கு ஒரு கணவன் எல்லா தகுதிகளும் ஒரு சேரப் பெற்றவனாக வேண்டும்''
  ''பெண்ணே உனக்கு ஐந்து பேர் கணவனாக அமைவார்கள்''
  ''சுவாமி நான் ஒரு கணவனைத்தானே வேண்டினேன்''
  '' நீ  ஐந்து முறை எனக்கு கணவன் எப்படி இருக்கவேண்டும் என்று வேண்டியதால் அடுத்த பிறவியில் உனக்கு நீ வேண்டியபடி சக்தியும்  குணங்களும் கொண்ட ஐந்து கணவர்கள் தான் அமைவார்கள்.இதை மாற்ற முடியாதே'' என்றார் சிவன்.

''அந்த ரிஷியின் பெண் இந்த பிறவியில் துருபதன் மகளாக பிறந்திருக்கிறாள். அவள் பெயர் கிருஷ்ணா, துருபதன் மகளாக வளர்க்கப் படுவதால்  துரௌபதி. அவள் வேண்டிய குணம், சக்தி உங்கல் ஐவரிடம் மட்டுமே இருப்பதால், உங்கள் ஐவருக்கும் அவள் தான் மனைவி. நீங்கள் பாஞ்சால தேசம் சென்று அங்கு வாழ்ந்து அவளைப் பெறுவீர்கள்'' என்றார்  வியாசர் பாண்டவர்களிடம்.

பாண்டவர்கள்  இரவும் பகலுமாக நடந்து பாஞ்சாலம் நோக்கி செல்கிறார்கள்.  பொழுது விடியும் முன்னே பின்னிரவில் கங்கையை கடக்க முயலும்போது அங்கே  பாகிரதி நதிக்கு உரிமை கொண்டாடி அங்கார பர்ணன் என்ற ஒரு கந்தர்வன் தனது மனைவிகளோடு ஜலக்ரீடையில் உல்லாசமாக இருக்கிறான்.

மனிதர்கள் நெருங்காத கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள் மட்டுமே உபயோகிக்கும் என்னுடைய பெயரில் அங்காரபர்ணா என்று விளங்கும் இந்த  நதியை எப்படி நீ நெருங்கலாம் என்று கந்தர்வன் அர்ஜுனனை தடுக்கிறான்.

''ஹே  கந்தர்வா,  கங்கை சிவன் சிரசிலிருந்து பூமியில் பாபங்களை தீர்க்க வந்த புண்ய நதி எல்லோருக்கும் சொந்தமானது. இதில் எவர் எப்போது வேண்டுமானாலும் ஸ்நானம் செய்யலாம். தடுக்க நீ யார்?''என்கிறான் அர்ஜுனன்.  (நமது காவேரி பிரச்னை போல் அந்த யுகத்திலும்  கங்கை பிரச்னை இருந்ததோ?)

கோபம் கொண்ட கந்தர்வன் சரமாரியாக அம்புகளை  அர்ஜுனன் மீது பொழிய அவற்றை லாகவமாக  தடுக்கிறான் அர்ஜுனன். கடைசியில்  துரோணர் கொடுத்த பிரம்மாஸ்திரத்தை எய்த உடன் கந்தர்வன் மயங்கி கீழே விழுகிறான். அவனைப் பிடித்து இழுத்து  யுதிஷ்டிரன் அருகே கொண்டு சென்று அங்கே அவனைக் கொல்ல  முயலும்போது கந்தர்வன் மனைவி கும்பினசி ஓடிவந்து யுதிஷ்டிரனிடம் கணவனுக்கு உயிர்ப்பிச்சை கேட்க, யுதிஷ்டிரன் உத்தரவில் அர்ஜுனன் அவனை ''ஓடு பிழைத்துப் போ'' என்று  உயிர் தப்ப விடுகிறான்.

''வெல்லமுடியாதவன் என்று இதுவரை இறுமாப்புடன் இருந்த என் கர்வம் நீக்கி என்னை சுலபத்தில் வென்று, என் உயிர் காத்த, தபத்யா,  உனக்கு என்னுடைய  கந்தர்வ ஜால வித்தைகளை அளிக்கிறேன். சக்ஷுசி என்ற பெயர் கொண்ட விச்வாவசு
விடமிருந்து பெற்ற அந்த மந்திரத்தை உனக்கு கற்பிக்கிறேன்''

''என்னை எதற்கு தபத்யா என்று  அழைத்தாய்? என்று அர்ஜுனன் கேட்க,

''அர்ஜுனா  அதற்கு ஒரு காரணம் உண்டு.  விவஸ்வான் ஒரு மகளைப் பெற்றான். அவள் அழகி. தபதி என்று பெயர் கொண்டவள்.  அவளை  சூர்யனுக்கு மணமுடிக்க விருப்பம் கொண்டவன். ஆனால் அவள் மீது  சம்வர்ணன் என்கிற ஒரு அரசன் காதல் கொள்கிறான். அவளும்  அவனது வீரத்திலும் அழகிலும் மனம் இழந்து சம்வர்ணனை மணக்க தனது தந்தையிடம் அனுமதி கேட்க சொல்கிறாள்.  சம்வர்ணன் விவச்வானிடம் அனுமதி பெற்று அவளை மணந்து குரு என்கிற மகன் பிறக்கிறான். உங்களது குரு வம்சம் அவனால் தோன்றியது.தபதி மூலம்  வந்தவர்கள் ஆகையால் உன்னை தபத்யா  என்பதும் பொருத்தம்''

''வைசம்பாயனரே, எனக்கு வசிஷ்டர் என்கிற  ரிஷியைப் பற்றி நிறைய சொல்லவேண்டும் என்கிறான் ஜனமேஜயன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...