Thursday, October 12, 2017

உத்தவ கீதை

உத்தவ கீதை - J.K. SIVAN

1. இனி யது வம்சமோ துவாரகையோ
இல்லை..
மத் பாகவத புராணத்தில் பதினோராவது ஸ்கந்தமாக அமைந்துள்ளதுதான் உத்தவ கீதை. உத்தவ ரிஷி கிருஷ்ணனின் பக்தர் மட்டுமல்ல, அமைச்சர், சித்தப்பா மகனும் கூட. கிருஷ்ணன் மாதிரியே இருப்பார் பார்ப்பதற்கு. நிறைய கிருஷ்ணன் என்று அவரைப் பார்த்து ஏமாந்து போயிருக்கிறார்கள். இன்னொரு கிருஷ்ணன் இருக்கமுடியுமா??

இந்த பூலோகத்தை விட்டு கிருஷ்ணன் தனது அவதாரம் முடிந்து விண்ணுலகம் செல்லுமுன்பு உத்தவருக்கு உபதேசித்தது தான் உதவ கீதை. பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்த மாதிரியே இந்த உதவ கீதையும் அமைந்திருக்கிறது ரொம்ப ஆச்சர்யமான விஷயம். கொஞ்சம் கொஞ்சமாக தினமும் உங்களுக்கு இதை கொடுக்க என் மனம் விழைகிறது.

பகவத் கீதை அளவுக்கு இந்த உத்தவ கீதை நிறைய பேருக்கு தெரியாதே என்பதால் தான் இந்த முயற்சி. இதில் நான் வெற்றி பெற நீங்கள் பிரார்த்திப்பது மட்டும் போதாது. இந்த மாதிரி விஷயங்களை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் நீங்கள் பரப்ப வேண்டும். நமது பாரம்பரிய பொக்கிஷங்களை இப்படி தான் எல்லோரும் அனுபவிக்க நாம் செய்யும் சிறிய காரியம் இது.

உத்தவ கீதை, 1367 சுலோகங்களுடன், முப்பத்தி ஒன்று அத்தியாயங்கள் கொண்டுள்ளது. ஏழாவது அத்தியாயம், சுலோகம் 19 முதல் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அருளிய உபதேசம் தொடங்குகிறது. உத்தவ கீதை மூலம், ஸ்ரீகிருஷ்ணர் 125 ஆண்டுகள் வரை வாழ்ந்தார் என அத்தியாயம் ஆறு, சுலோகம் 25 மூலம் தெரியவருகிறது.

பூமியின் பாரம் குறைய, ஸ்ரீகிருஷ்ணர், விசுவாமித்திரர், கண்வர், துர்வாசர், பிருகு, ஆங்கிரசர், கசிபர், வாமதேவர், அத்ரி முதலிய முனிவர்களை கடற்கரை நகரான பிண்டாரகம் என்ற பிரபாச நகருக்கு அனுப்பி வைத்தார்.

விநாச காலம் வந்தால் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரண சம்பவம்.
கிருஷ்ணன் மகன் சாம்பன் மற்றும் அவன் நண்பர்கள் சிலர், துவாரகை அரண்மனைக்கு வந்த துர்வாசர் விஸ்வாமித்ரர் போன்ற சில முனிவர்களிடம் விளையாட்டுக்காக அவர்கள் சக்தி அறியாது அவர்களின் யோக சக்தியை பரிசோதிக்க விரும்பினார்கள்.

கிருஷ்ணன் மகன் சாம்பனை கர்ப்பம் தரித்த பெண் வேடமிட்டு முனிவர்களிடம் கொண்டு சென்றார்கள்.
பிரசவ வலி வந்தது போல் சாம்பன் நடித்தான். நண்பர்கள் முனிவர்களை வணங்கினார்கள்.

''என்ன வேண்டும் உங்களுக்கு எதற்கு எங்களிடம் வந்தீர்கள்?'' என்கிறார் துர்வாசர். கோபமே உருவான ரிஷி.

முனிவரே இந்த கர்ப்பஸ்திரீக்கு வயிற்றில் என்ன குழந்தை இருக்கிறது. எப்போது பிறக்கும் என்று உங்கள் தவ சக்தியால் கூறி உதவ வேண்டும் என்றனர் வாலிபர்கள்.

துர்வாசருக்கு தபோசக்தியால் இது கேலி, விளையாடுகிறார்கள் இந்த வாலிபர்கள் என்று புரியாமலா இருக்கும்

''பிள்ளைகளே, இதோ இந்த பெண் வயிற்றில் உதிக்கப்போகும் ஒரு இரும்பு உலக்கை உங்கள் யாதவ குலத்தையே அழிக்கப்போகிறது. சுகப்பிரவசம் ஆகும். சென்று வாருங்கள்'' என்கிறார் துர்வாசர்.

விஷயம்த யாதவ குல அரசன் உக்ரசேனன் காதுக்கு எட்டிவிட்டது. கவலை கொண்டான். ரிஷி சொன்னமாதிரி சாம்பன் வயிற்றிலிருந்து ஒரு பெரிய இரும்பு உலக்கை வெளிவந்தது. அந்த உலக்கையை பொடிப்பொடியாக்கி கடலில் வீசி எறிந்தார்கள்.

சில நாட்களுக்குப் பின் உலக்கையின் இரும்புத்தூள்கள் கடற்கரையை அடைந்து நீண்ட மிக உறுதியான கோரைப் புற்களாக மாறின. கடலில் கரைத்த இரும்புத்துகள்களில் ஒன்று மீன் உண்டது. அந்த மீன், ஒரு மீனவன் வலையில் சிக்கியது. மீன் வயிற்றில் இருந்த இரும்புத் துண்டை மீனவனிடமிருந்து ஒரு வேடுவன் வாங்கிக் கொண்டு, அதை தன் அம்பு நுனியில் பொருத்திக் கொண்டான். அவன் தான் ஜரா. கிருஷ்ணனின் அவதார முடிவுக்கு காரணமானவன்.

கிருஷ்ணனுக்கு நடக்கப்போவது எது, என்ன, அது எப்போது நடக்கும் என்று நிச்சயமாக தெரியும்.எதையும் தனது மாயையின் சங்கல்பமாக எடுத்துக் கொள்பவன் அல்லவா.
யது குலத்தவர்கள் ப்ரபாஸ க்ஷேத்ரத்துக்கு குடியேறினார்கள். செல்வம் கொழிக்கும் இயற்கை வளமிக்க துவாரகை வைகுண்டம் போல அல்லவா காட்சி அளித்தது.

சுகதேவ கோஸ்வாமி சொன்னதை நினைவு கூர்வோம். ப்ரம்மா துவாரகைக்கு வந்து விட்டார். தனியாக அல்ல. தேவர்கள் உப தேவதை பரிவாரங்களோடு .சிவனும் சிவகணங்களோடு. இந்திரன் திக் தேவதைகளோடு ஆஜர். சகல லோகத்தவரும் குழுமியாகிவிட்டது.

கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். அனைவரும் கிருஷ்ணனை கண்ணாரக் கண்டார்கள். மலர் மாலைகள் சூட்டினார்கள். போற்றி புகழ்ந்து பாடினார்கள்.
ப்ரம்மா கிருஷ்ணனை வணங்கி அனைவர் சார்பாகவும் பேசினார்:
''ப்ரபோ, எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி பூமியில் அவதாரம் செயது பூமியின் பாரம் குறைத்தீர்கள். நீங்கள் தோன்றிய யதுவம்சம் பிராமணர்கள் சாபத்தால் சுருங்கப்போகிறது. நூற்றி இருபத்து ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டது. இனி இங்கே நீங்கள் புரியவேண்டிய கடமையோ நிறைவேறாத எங்கள் வேண்டுகோளோ எதுவும் பாக்கி இல்லை. தாங்கள் வைகுண்டத்துக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகிறோம்.எங்களுக்கு நீங்கள் அங்கே தேவை.
'''வாஸ்தவம் ப்ரம்மதேவா, யதுகுல வீரர்கள் தங்கள் பலத்தினால், என் ஆதரவால் கொடுமைகளும் தீய சக்திகளும் செய்ய வலுத்து விட்டார்கள் என்பதால் இந்த ஏற்பாடு. அவர்களையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அவர்களை ஒடுக்கியாகி விட்டது. எனக்கு இங்கே புரிய வேண்டிய பணி எதுவும் இனி இல்லை. வெகு விரைவில் திரும்பிவருவேன். நீங்கள் சந்தோஷமாக செல்லலாம்.'' என்கிறார் கிருஷ்ணன்.
துவாரகையில் கிருஷ்ணன் எதிர்பார்த்தது போலவே நடந்தது. யதுகுல வீரர்களை தலைவர்களை அழைத்தார்.

''உயிர் நண்பர்களே, பெரியோர்களே, நமது யது வம்சத்தை பிராமணர்கள் அழிந்து போக சபித்து விட்டனர் என்பது உங்களுக்கு தெரியும். இதை தடுக்க வழியில்லை. அதன் விளைவாக எங்கும் விநாசம் தலை விரித்தாடுகிறது. உயிர் வாழ வேண்டும் என்றால் இனியும் நாம் யாரும் இங்கு வசிக்க வழியில்லை. துவாரகையை விட்டு எல்லோரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் செல்வோம். நேரம் கடத்தக் கூடாது'' என்கிறார் கிருஷ்ணன். .
யாதவர்கள் அவ்வாறே மூட்டை முடிச்சுகளுடன் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு துவாரகையை விட்டு வெளியேறுகிறார்கள். ப்ரபாஸ க்ஷேத்ரம் நோக்கி செல்கிறார்கள்.

உத்தவர் கிருஷ்ணனின் தாசர். அவரை பக்தியோடு பின்பற்றுபவர்.ஏன் எல்லோரும் துவாரகையை விட்டு வெளியேறுகிறார்கள் என்று அறிந்து திடுக்கிட்டனர் கிருஷ்ணரை அணுகி தனியே சந்திக்கிறார். சாஷ்டாங்கமாக கிருஷ்ணன் தாள்களை வணங்குகிறார்.
''ப்ரபோ, தாங்கள் யது வம்சத்திற்கு முடிவு நிச்சயம் என்று அறிவித்து தாங்களும் விடைபெறுவீர்கள் என்று அறிகிறேன். யோகீஸ்வரா, தங்கள் சக்தி நான் அறிவேன். சர்வ வல்லமை பொருந்திய தாங்கள் பிராமணர்களின் சாபத்தை விலக்க முடியாதா? அதை சக்தி இழக்க செய்ய இயலாதா? இதனால் தங்கள் பூவுலக யாத்திரையும் அல்லவா முடிவுக்கு வரும். நீங்கள் இல்லாமல் யார் இங்கு வாழ முடியும் ப்ரபோ? உங்களை பிரிவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே. எங்கள் செயல், எண்ணம் எதுவுமே உங்களால் அல்லவோ நடைபெறுகிறது. உங்களது ஒவ்வொரு அசைவையும் கண்ணால் கண்டு ரசித்த பக்தர்கள் இதை எவ்வாறு ஜீரணிப்பார்கள்?
கிருஷ்ணன் புன்முறுவல் செய்தார். உத்தவரை அன்போடு பார்த்தார்.

''என் பிரியமான உத்தவா, என் முடிவை நீ சரியாகவே உணர்ந்திருக்கிறாய். நான் வைகுண்டம் திரும்பும் நேரம் வந்து விட்டது. ப்ரம்மா சிவன், இந்திராதி தேவர்கள் அனைவருமே என்னை மீண்டும் அங்கே அடைய காத்திருக்கிறார்கள். நேரம் அதிகமாகவே எடுத்துக் கொண்டுவிட்டேன். நூற்று இருபத்து ஐந்து ஆண்டுகள் ...! அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவே இங்கே பலராமனோடு வந்தேன். என் வேலையும் அவர்கள் விருப்பமும் நிறைவேறி விட்டதே. நான் மீண்டும் என் இடத்துக்கு செல்லவேண்டாமா.?
இதைக் கேள் உத்தவா. யது குலத்தினர் தங்களுக்குள் தாங்களே போரிட்டு அனைவரும் மடியபோகிறார்கள். எவரும் மிஞ்சப் போவதில்லை. இன்றிலிருந்து சரியாக ஏழாம் நாள் சமுத்திரம் பொங்கும். இந்த துவாரகை கடலில் மூழ்கும். துவாரகை நகரத்தில் எதுவும் தப்பாது. நான் இந்த உலகை விட்டு அகல்வேன். கலி முழுதுமாக உலகை ஆக்கிரமித்து விடும். நான் மறைந்த பிறகு நீயும் இங்கு இருக்க வேண்டாம். கலியில் அதர்மம், அநீதி, பாப காரியங்கள் பெருகும். நீ அதில் சிக்க வேண்டியதில்லை. உன் பந்த பாசம், பற்று அனைத்தையும் நீக்கி என்னை நினைப்பாயாக. சம நோக்கோடு என் மீது உன் சிந்தையை செலுத்தி பூமியில் எங்கும் செல்வாயாக. ஏனென்றால் காண்பது, கேட்பது, செய்வது, தோன்றுவது நிகழ்வது அனைத்தும் மாயை, அநித்யமானது, என்று அறிவாய். ஐம்புலன்களையும் வென்று மாயைக்கு அடிமையாகாமல் ஆத்ம சிந்தனையோடு என்னை உன்னில் கண்டு ஆனந்தமாக இரு.
தயை, கருணை, அன்பு சம தர்சனம் இவற்றோடு எல்லோரையும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்பவன் என்னை அடைகிறான். எல்லாவற்றிலும் எல்லோரிலும் என்னையே காண்பான். ஜனன மரணம் அவனை அணுகாது.


''பகவானே எனக்கு இன்னும் அவசியம் உபதேசம் செய்யுங்கள் என்கிறார் உத்தவர். கண்ணன் தொடர்கிறான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...