Saturday, October 28, 2017

சித்தர்கள்-

சித்தர்கள்- J.K. SIVAN

இன்று கொஞ்சம் பாம்பாட்டி சித்தர் பின்னால் போவோம்.

சித்தர்கள் இறைவனால் அவ்வப்போது உருவாக்கப் படுபவர்கள். இதற்கு குலம் , கல்வி, உயர்குடி தாழ்குடி பாகுபாடு, வயது, ஆண் பெண் வரைமுறை கிடையாது. அப்படி தோன்றியவர்களுள் ஒருவர் பாம்பாட்டி சித்தர். அவரது பிழைப்பு பாம்புகளை காட்டில் தேடித் பிடித்து பழக்கி ஆட்டுவித்து அதன் மூலம் ஜீவனம். பாம்பின் விஷத்தை பிரித்து மூலிகையாக்கி, மருத்துவ சிகிச்சை செய்பவர்.

அந்த காட்டில் ஒரு வயதான நாகம் தலையில் மணியோடு இருக்கிறது அதை பிடிக்கலாமே என்று எவரோ சொல்ல அதை தேடி போகும்போது குருநாதர் ( அவரும் ஒரு சித்தர்) தரிசனம் கிடைத்து அருள் பெற்று பாம்பாட்டி ஒரு சித்தராகிறார். அஷ்ட சித்திகளும் கைவரப் பெற்றாலும் சித்தர்கள் செல்வத்தை நா
டி, சுகத்தை நாடி சென்றவர்கள் அல்ல. அரசன் இறந்த அரசி அழுகிறாள். சித்தர் அரசன் உடலில் புகுந்து அரசன் பிழைத்து உள்ளிருக்கும் சித்தரால் ஞானப் பாட்டுகள் பாடுகிறான். அரசிக்கு கணவன் இறந்து மீண்டும் பிழைத்தபோது முற்றிலும் மாறுபட்ட ஞானியாகியதை கண்டு சந்தேகித்து வேண்டுகிறாள். பாம்பாட்டி சித்தர் தான் அவன் உடலில் இருப்பதை தெளிவித்து வணங்கப்படுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள் அற்புதமானவை. ஏற்கனவே நிறைய கொடுத்திருக்கிறேன். மேலும் சில இன்று.


சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே.

ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது. படிப்பு படிப்பு என்று உருப்போட்டு மனப்பாடம் செய்த கல்வியால் என்ன பயன். படிப்பதை உள் வாங்கி அதில் ஞானம் தேடி அதை மனதில் நிறுத்திக் கொண்டால் மட்டும் போதாதே. அதன் பொருள் அறிந்து பின்பற்றினால் அல்லவோ பயன். இதை தான் நான் வேதம், ஆறு சாஸ்திரம், புராணம், அறுபத்து காலை ஞானம் , நிறைய புத்தகங்கள் எந்த பலனும் தராது. கிலோ எட்டு ரூபாய். பேரம் பேசி தான் குப்புசாமி பத்து ரூபாய் தருவான் என்று ஆடு பாம்பே. என்கிறார் சித்தர்.


''தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்
தாக்கிய சிரசின்மேல் வைத்த பாதம்
சற்குருவின் பாதமென் றாடாய் பாம்பே.''

ஏ பாம்பே, உனக்கு நான் எனக்கு நீ. வேறு யாருமே தேவையில்லையே. உனக்கு நான் கண்ட ஒரு அதிசய காட்சி சொல்லட்டுமா. உன்னெதிரே கண் மூடி தியானித்தேன். பளீர் என்று ஒளி என்னுள் மனக்கண்ணில் தெரிந்தது. அட இது என்ன கண் கூசும் வெளிச்சம் என்று உற்று நோக்கினால் எங்கும் பரந்த வெளி. கண்ணுக்கெட்டாத அளவற்ற மேல் கீழ் அக்கம் பக்கம் எல்லாம் ஒரே அமைதியான அசைவற்ற பர ஒளிமயம். அதில் இரு சிறு அசைவு. கொஞ்சம் கொஞ்சமாக என் முன்னே வந்தது. யாரோ ஆடுவது போல் இருக்கிறதே ? நீ யா பாம்பே ? இல்லையே நீ என்று நினைத்து பார்த்தால் '' ஆனந்த நடேசன். தில்லை அம்பல நடராஜன்'' தூக்கிய திருவடி என் சிரசின் மேல் பதிய நான் எத்தனை ஜன்மத்தில் தவம் செய்து இருக்கவேண்டும். அந்த திருவடி என் சற்குருநாதன் திருவடி என்று நான் பாடுகிறேன் நீ அதற்கேற்ப ஆடு என் நல்ல பாம்பே! - எப்படி சித்தர் கற்பனை?

+++
ஹஸ்தாமலகர் என்று ஆதிசங்கரர் சிஷ்யர் ஒருவர். ஹஸ்தம்: உள்ளங்கை . ஆமலகம்: நெல்லிக்கனி.
கையைத் திற என்ற போது உள்ளங்கையில் ஒரு நெல்லிக்காய் இருந்தால் பளிச்சென்று தெரியும் அல்லவா. அப்படி தெள்ளத் தெரிந்த ஞானம் கொண்டவர் அவர். அதுபோல் எந்த தத்துவத்தையும் நீதி சாஸ்திர நூலையும் தெளிவாக சந்தேகமற கற்று பொருள் உரைக்க வல்லவன் தான் குரு. என் சட்டை முனியை அப்படிப்பட்ட குருவாக கண்டுகொண்டேன்.அந்த ஆனந்தத்தில் திளைத்து பாடுகிறேன் நீ அதற்கேற்ப ஆடு பாம்பே..

''உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே.

++
இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச் சூளை
அரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே.

இந்த வேலையில் ஆணும் பெண்ணுமாக ரெண்டு பேர் ஈடுபட்டார்கள். மண் பிசைந்தார்கள். அதில் அவள் அந்த மண் கலவையை பத்து மாதம் சுமந்தாள். களிமண் சூளையில் சூடேறி கெட்டி பட்டது. அற்புதமாக ஒரு சட்டி உருவானது. ஹாஹா ஏன் சிரிக்கிறேனென்று பார்க்கிறாயா பாம்பே, இவ்வளவு கஷ்டப்பட்டு அவர்கள் உருவாக்கிய அந்த மண் சட்டி அரையணா கூட மதிப்பு பெறாது என்று பாடுகிறேன் நீ ஆடு பாம்பே.

+++
வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்றுவமை வைத்துக் கூறுவார்
கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்
கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே.


முட்டாள்கள். பெண்ணின் முன்னழகு பின்னழகு என்று இன்று மஞ்சளாக இருந்து நாளை கறுத்து போகப்போகும் தோலை அல்லவோ தேடி ஓடுகிறார்கள். வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்கள். மலை மீது ஏறி பள்ளத்தில் விழுந்து தற்கொலை ஏனப்பா செய்ந்துகொள்கிறீர்கள். புத்தி கெட்டவர்களே, விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார் என்று துணிவாக சொல்லி ஆடு நீ என்று சாடுகிறார் பாடுகிறார் பாம்பாட்டி சித்தர். அதற்கேற்ப பாம்பு ஆமாம் ஆமாம் சித்தரே நீர் சொல்வது சரியே என்று தலையை ஆட்டி ஆட்டி ஆடுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...